அதே திரையரங்கில்
மறு வெளியீடாக,
"உன்ன நினைச்சேன்
பாட்டு படிச்சேன்"
திரைப் படம் திரையிடப் படும்
இந்த நாளில்
நம்மைப் போலவே
யாரோ இருவர்
நாம் அமர்ந்த அதே இருக்கையில்
அமர்ந்து படம் பார்க்கலாம்....
அவர்களும் விரல் கோர்த்துக்
கொண்டு, தோள் மேல் தலை
சாய்ந்து பாடல் ரசிக்கலாம்...
திவானின் இறப்புக்கு
நம்மைப் போலவே
கண் கலங்கலாம்..

இடைவெளியில் இலைமறைகாயாக
ஒரே கூல்டிரிங்சை
மாற்றி மாற்றி குடிக்கலாம்....
அவ்வப்போது யாராவது
கவனிக்கிறார்களா என்று
சுற்றும் முற்றும் பார்க்கலாம்....
ஒரு முடிவுக்கு வந்தவர்களாக
படம் முடியும் முன்னே
வெளியே வரும் அவர்களுக்கும்
நம்மைப் போலவே படத்தின்
முடிவு தெரியாமலே போகலாம்...

- கவிஜி

Pin It