தமிழ் படிப்பாய்த் தூயத் தேனைச்
சுவைப்பது போலே – யாவும்
தமிழில் படிப்பாய்க் கனிகளைச்
சுவைப்பது போலே
தமிழைப் படிப்பின் அன்னைதன்
அன்பை உணர்வாய் - நின்
தந்தைதம் அறிவை வீரத்தை
செல்வமாய் சேர்ப்பாய்ச்
அயல்மொழி கற்றால் வயிறு
வளர்க்கக் கூடும் - உனது
அன்னை மொழிகற்றால் உயர்வை
வளர்த்துக் கூட்டும்
அன்னையும் தந்தையும் தெய்வ
மென்பார் முன்னோர் - உன்
அன்னையும் தந்தையும் பேசியது
தமிழன்றோ கண்ணே!
அன்புக்கு உண்மைப் பொருள்
தமிழில்தான் உண்டு – நல்
அறத்தை வளர்க்கும் நூல்பல
தமிழில்தான் உண்டு
அறிவைப் பெருக்கி மனிதம்
வளர்த்திடும் யாண்டும் – தமிழே
அறியாமை போக்கி அறிவியல்
சிந்தனை தூண்டும்
மானிடர் அனைவரும் மேதினில்
சமமென் றாக்கும் - தமிழே
வானும் வையமும் அனைவர்க்கும்
பொதுவென் றாக்கும்
பண்பை வளர்க்கும் நல்ல
ஒழுக்கத்தைக் காக்கும் - தமிழ்
உண்மை ஒன்றையே உள்ளத்தில்
என்றைக்கும் தேக்கும்
வன்மை வித்தது எண்ணத்தில்
வீழாது காக்கும் - தமிழ்
தன்மானம் குன்றாது பிறர்மானம்
மதித்திடச் செய்யும்
உன்னைநீ உணர்ந்தே உலகைப்
புரிந்திடச் செய்யும் - தமிழ்
நின்மனம் நினைத்து முயன்றது
கைக்கூடச் செய்யும்
நேர்மை நாணயம் நம்பிக்கை
பண்பினைக் கற்பிக்கும் - தமிழ்ச்
சீருளத்துச் சான்றோரை நட்புக்கு
அடையாளம் காட்டும்
இனமானம் மீட்டிட இனத்தோடு
கொண்டு சேர்க்கும் - விரைந்து
வினைமுடிக்க ஊக்க மீந்து
வெற்றியை நல்கும்
வாழ்க்கைத் துணையுன் விருப்பம்
போலவே வாய்ப்பார் - நின்
வாழ்வெலாம் காதலில் இல்லற
இன்பமே துய்ப்பார்;
மக்கள் செல்வங்கள் மாசறு
பொன்னெனப் பிறப்பார் – எட்டுத்
திக்கெலாம் காற்றெனப் புகழை
வீசியே வெல்வார்
முற்றிய கனியாய் முதுமைப்
பருவத்தில் பட்டறிவை – கற்று
உற்றார் ஊரார்; பயன்பட
நிறைவாக்கும் வாழ்வை
மறையாம் திருக்குறள் காட்டிடும்
முடிவுரை புரியும் – தொண்டால்
நிறைவாழ்வு வாழ்ந்த மகிழ்வுடன்
இன்னுயிர் பிரியும்.
- குயில்தாசன்