நெருங்கிய நண்பன் சிவாவை
அழைத்து இருந்தேன்.
தொடர்ந்து முழுக்க ஒலித்த
அலைபேசி எடுக்கப்படாமலே
நின்று போக
மீண்டும் முயன்றேன்.
அவனது அம்மா இம்முறை எடுத்து
அவன் தூங்கிக் கொண்டிருக்கிறான் என்றார்.
பரவாயில்லை எழுப்புங்கள் என்றேன்.
பெருமதிப்புக்குரிய தமிழ் அய்யாவை
அழைத்திருந்தேன்
அவர் மகன் எடுத்து
அப்பா தியானத்தில் இருக்கிறார்
அவசியம் தரணுமா என்றார்.
பரவாயில்லை கலையுங்கள் என்றேன்.
அன்புக்குரிய தோழியை அழைத்திருந்தேன்
அவள் தங்கை எடுத்து
தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கிறாள்
படிப்பு கெட்டுவிடுமே என்றாள்
பரவாயில்லை கொடு என்றேன்.
இம்முறை அக்கா கணவரை
அழைத்திருந்தேன்
அக்கா எடுத்து
அவர் நித்யாக் குட்டியோடு
விளையாடிக் கொண்டிருக்கிறார்
இப்பவே பேசணுமாடா என்றாள்!?
வேண்டாம்..
அவர் அப்படியே விளையாடட்டும் என்று
அழைப்பை துண்டித்தேன்.!
- எம்.ஸ்டாலின் சரவணன்
RSS feed for comments to this post