“அதென்ன உனக்கு

என் மீது இது

உலகமகா இது,

எங்கே சொல், பார்க்கலாம்?”

“எனக்கு சொல்லத்தெரியாது

என்னோடு வா

வாழ்ந்துகாட்டுகிறேன்!”

“அட போடா!”

***********

“உனக்கு வேற வேலையே கிடையாதா?”

“கழுத்தில் இவ்வளவு பெரிய

அடையாள அட்டை போட்டிருக்கிறேன்

அதுவே உனக்கு தெரியவில்லை,

கண்ணுக்கு தெரியாத அந்த எதோ ஒன்றா

உனக்கு தெரியப்போகிறது?

அட போடி!”

**********

காத்திருந்தேன் நான்,

வாராத நதியில் படகு விடலாமென

அமாவாசையில் நிலா பார்க்கலாமென

குயிலொன்று கூடுகட்டுமென

மலட்டுப்பறவை முட்டையிடுமென

பீகார் ரயில் நேரத்திற்கு வருமென

தேர்தலில் பொதுஜனம் வெல்லுமென

நிவாரணகுழுவிற்கு பின் மறுவாழ்வு கிடைக்குமென

இதழில் இந்தக்கவிதை வருமென

உன் கண்ணில் நான் தெரிவேன் என

மஞ்சனத்தி பூ உதிரும் சாலைவழி

நீ வருவாயென…..

- ஜனா கே 

Pin It