உனக்குப் பிடிக்காத வரிகளை

கவிதையிலிருந்து நானே அடித்து விடுவேன்

யாரைக் கொண்டு அடிக்க

உனக்குப் பிடிக்காத என்னை.

o

சாகத் துணிந்தவன்

கோழை கவிஞனென‌

சட்டை பிடிக்கிறான்

நண்பனொருவன்.

என் உயிர் உருவ

இன்னொருத்திக்கு உரிமை இருக்கும் பொழுது

என் உயிர் உருவி எறிய

எனக்கு உரிமையில்லையா என்ன.

o

புன்னகைகளால் கொன்றாய்

வார்த்தைகளால் கொன்றாய்

மெளனங்களால் கொல்கிறாய்

கொலை தேவதைகளின் குலத்தொழிலா?

o

நினைவுகள் பறக்கும் தேநீருடன்

உதடுகள் சுடும்

எதிரில் இல்லாத

உனது பெயர்

o

உன் பார்வை படாத இடத்தில்

இந்த கவிதைகள் எழுதி வைப்பதன்

காரணம் கேட்கிறாள்

நம்மைத் தெரிந்த தோழி ஒருத்தி

என் பார்வை போதாதா

இவைகளை உனக்குச் சொல்ல.

- லதாமகன்

 

Pin It