உனக்குப் பிடிக்காத வரிகளை
கவிதையிலிருந்து நானே அடித்து விடுவேன்
யாரைக் கொண்டு அடிக்க
உனக்குப் பிடிக்காத என்னை.
o
சாகத் துணிந்தவன்
கோழை கவிஞனென
சட்டை பிடிக்கிறான்
நண்பனொருவன்.
என் உயிர் உருவ
இன்னொருத்திக்கு உரிமை இருக்கும் பொழுது
என் உயிர் உருவி எறிய
எனக்கு உரிமையில்லையா என்ன.
o
புன்னகைகளால் கொன்றாய்
வார்த்தைகளால் கொன்றாய்
மெளனங்களால் கொல்கிறாய்
கொலை தேவதைகளின் குலத்தொழிலா?
o
நினைவுகள் பறக்கும் தேநீருடன்
உதடுகள் சுடும்
எதிரில் இல்லாத
உனது பெயர்
o
உன் பார்வை படாத இடத்தில்
இந்த கவிதைகள் எழுதி வைப்பதன்
காரணம் கேட்கிறாள்
நம்மைத் தெரிந்த தோழி ஒருத்தி
என் பார்வை போதாதா
இவைகளை உனக்குச் சொல்ல.
- லதாமகன்