என் கற்பனை வீடு
மிகவும் அலாதியானது.
ஆண்டுபல கடந்தும்
சுவர்களும் திரைச்சீலைகளும்
புத்தம்புதிதாய்
வெண்ணிறமாய்
தூய்மையாய்.
வீட்டின் அறை முழுவதும்
சோபா செட்டுகள்
புத்தகக் குவியல்
தொலைக்காட்சி
ஆங்காங்கே பொம்மைகள்
நானும்
என் மகளும்.
எங்கள் இருவரின்
பேச்சுகளும்
சுவாசங்களும்
அழுகைகளும்
சிரிப்புகளும்
தூக்கங்களும்
விழிப்புகளும்
சோம்பல்களும்
சுறுசுறுப்புகளும்
ஆங்காங்கே சிதறுண்டிருந்தன.
எவரின் குறுக்கீடுகளும்
ஆதிக்கமும் இன்றி
இயல்பாய் பயணித்தது
எங்கள் வாழ்க்கை
நேற்றுவரை.
இன்று
என் வீட்டின் கதவு திறந்த சப்தம்
கேட்கவே இல்லை.
என் படுக்கையில்
நீ உறங்கிக் கொண்டிருக்கிறாய்.

Pin It