உறவினரும் நீயும்

யாவரின் கேள்விக்கும்
உதடு குவித்த புன்னகையை
மட்டுமே பதிலாக்கியிருந்தாய்
பேதங்கள் பாராது
உன் முத்த மழையில்
நீட்டுவோர் முகமெல்லாம்
எச்சில் படுத்தினாய்
உன்னை அரவணைப்பதாய்ச்
சொல்லிக் கொண்டு யாவரும்
உன் அரவணைப்பில்
தம் இளமை காத்தனர்
உன் பிஞ்சுக் கரங்களில்
முத்தமிட்டு கனத்த நெஞ்சோடே
அவரவர் வீடு நோக்கிய
பிரயாணம் அழுது வடிகிறது.

குழந்தையும் நீயும்

தன்னை டீச்சராக்கிக் கொண்டு
உனக்கு ஏபிசிடி சொல்லிக்
கொடுத்துக் கொண்டிருந்தாள்
நீ முட்டைகளையும் கோடுகளையும்
தரையில் வரைந்து கொண்டிருந்தாய்
கோபப்பட்டு அவள் வீடு
செல்ல முற்படுகையில்
அவள் கைகள் கோர்த்து
அவளது வீட்டிற்குச் செல்ல
தயாரானாய்
உன் ஏபிசிடியை அவளது
தம்பிக்குச் சொல்லிக் கொடுக்க.

- சோமா

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.