இதுவரை நாளிதழ்களீல் வார இதழ்களில் வந்துள்ள தீர்வுகள் மேலோட்டமானதாகவே படுகின்றன. அப்படியானால் உண்மைநிலை என்னவாக இருந்தால் தீர்வு கிடைக்கும்?

எல்லோருமே 11000 கோடி பின்னலாடை ஏற்றுமதி...  4 லட்சம் தொழிலாளருக்கான‌ வேலை வாய்ப்பு என்று மட்டுமே பார்க்கிறார்கள். இதற்காக இயற்கை இழந்துள்ளவைகளை யாருமே பட்டியல் இட மறுக்கிறார்கள்..

1) ஏரி கருப்பராயன் என்று ஏரியால் அடையாளமிட்ட சாமி உள்ளது ஏரியைக் காணவில்லை

2) ஜம்மனை துணை ஆற்றைக் சாயக்கழிவுநீர் ஆக்கிரமித்து உள்ளதால் அதனால் எந்தப் பலனும் இல்லாமல் நாசமாகி உள்ளது. பன்றிகளூக்கான வசிப்பிடம் ஆனால் நீரைப் பன்றி கூட குடிக்காது

3) நல்லாறு 20 வருடத்திற்கு முன் குளிக்க, குடிக்க பயன்பட்ட நதி.. இன்று சாயநீரின் தாக்கத்தால் எதற்கும் பயன்படாத.. முள் செடிகள் வளர்ந்துள்ள - நாய் கூட குடிக்க இயலாத சாய‌நீர் ஓடும் சாக்கடையாகிவிட்டது.

4) திருப்பூர் நகரை தன் கரையில் தாங்கியுள்ள நொய்யல் நதி - இதற்கும் நல்லாற்றின் கதிதான். தன் வரலாற்றுப் புகழை இழந்து கொண்டிருக்கிறது.

5) ஜம்மனை, நல்லாறு ஆகியவற்றை துணை நதிகளாகக் கொண்டு விவசாய வளம் கொடுத்த நொய்யலின் நீரைத் தடுத்து, 90 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை.. விவசாய வளர்ச்சி கருதி கட்டப்பட்ட ஒரத்துப்பாளையம் அணை சாயநீரின் தாக்கத்தால் இரசாயன நீர்குண்டாக மாறி விட்டது மட்டும் அல்லாமல், விவசாயிகளின் வாழ்வை நாசமாக்கி, விவசாயத்தையே துரத்திவிட்டு விட்டது..

6) இது மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்றால்.. மறுபடியும் சுத்தமான நீர் குறைந்தது 100 ஆண்டுகளுக்கு ஓடவேண்டும்.

இன்னொரு கணக்கு:

90 ஆயிரம் ஏக்கர் நிலம் நன்றாக இருந்து விவசாயம் ந்டைபெற்று இருந்தால்..

ஒரு ஏக்கராவுக்கு குறைந்தது 5 பேர் வேலைவாய்ப்பு பெற்றால்.. மொத்தம் 4.50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

ஒரு ஏக்கர் விளைச்சல் குறைந்தது 20 பேருக்கு சாப்பாடு கிடைக்கும் என்றால், வருடம் 18 லட்சம் பேருக்கு சாப்பாடு கிடைக்கும்.

பணப் பயிரோ அல்லது உணவுப்பயிரோ அது இயற்கையைக் காப்பாற்றி இருக்கும்..

குடிக்க, குளிக்க, இன்னும் பல உபயோகத்திற்கு ஆற்று நீரும் பயன்பட்டு இருக்கும்..

பல கோடிகளை முதலீடு செய்துள்ளோம்; பல ஆயிரம் கோடி ஏற்றுமதி வணிகம் கொடுக்கிறோம்; பல லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கொடுக்கிறோம்.. என்று வாதம் புரியும் பின்னலாடை மற்றும் சாயஆலை உரிமையாளர்களால் இயற்கை மற்றும் நதியின் அழிவால் ஏற்படும் உணவுத்தேவையை நீர்த் தேவையை மக்களுக்கு கொடுக்க முடியுமா?

நேற்று ஜம்மனை; இன்று நல்லாறு, நொய்யலாறு என்று நாசமாக்கும் சாயத்தொழில் காவேரியையும் நாசமாக்காது என்று உறுதியாய்ச் சொல்வார்களா?

 2005ல் நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை செயல்படுத்தாத மாசுக்கட்டுப்பாட்டுவாரியம், லஞ்ச லாவண்யம் இல்லாமல் நேர்மையாக செயல்பட்டு உள்ளது என்று உறுதியாக யாராவது கூறும் அளவிற்கா நொய்யல் உள்ளது?

இன்றைய தேதியில் கூட (22..02..2011) நல்லாறிலும் நொய்யலிலும் 2100 டிடிஎஸ் உப்புத் தன்மைக்குமேல் தண்ணீர் போய்க்கொண்டு உள்ளது. நீதிமன்றத்தடை திருப்பூருக்கு மட்டுமே பொருந்தும் நீங்கள் ஈரோட்டிலோ நாமக்கல்லிலோ வேறு ஊரிலோ சாய ஆலை திறந்தால் அது கட்டுப்படுத்தாது என்று சாயஆலைத் தொழிலை ஊக்கப்படுத்தாமலா  சாய ஆலைகள் வெளியூரில் ஆரம்பிக்கப்பட்டன‌… என்றால் மாசுக் கட்டுப்பாட்டுத்துறை ஊழலற்றது என்று எப்படி நம்புவது?

ஊழலற்ற நேர்மையான முறையில் மாசுகட்டுப்பாட்டு வாரியம் செயல்படுவது உண்மையானால்.. திருப்பூரில் நதிகளுக்கும் விவசாயத்திற்கும் அழிவுப் பாதையாக உள்ள சாய ஆலையை வேறு ஊர்களில் செயல்பட அனுமதிக்காது.

ஈரோடும் நாமக்கல்லும் பவானியும் சேலமும் வேறு நாட்டிலா உள்ளது?

திருப்பூரில் 4500 உப்பு தன்மையுள்ள மாசு நீரை வெளியேற்றும் சாய ஆலைகள் அங்கு 2100 க்கு குறைவான சுத்தகரிக்கப்பட்ட உப்பு நீரையா வெளீயிடுகின்றன?

சாயஆலையில் படியும் ஸ்லெட்ஜ் திடக்கழிவை வெளியூர் சாயஆலைகள் என்ன செய்கின்றன?

காவேரிப்படுகையில்.. அள்ளப்பட்ட மணல் குழிகளில்... சாயஆலைகளின  திட மாசுகள் தேங்கி.. காவேரியை நாசப்படுத்தும். அதனால் திருச்சி முதல் நாகை வரை உள்ள விவசாயம் நாசமாகாது என்று தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உறுதியாய் கூறமுடியுமா?  சொல்ல மாட்டார்கள் ஏனென்றால் ஊழல் வாயை மூடிக்கொள்ளவே வைக்கும்..

அமெரிக்காவிலிருந்து வரும் கோக்கோகோலா என்ற பானத்தின் தயாரிப்பிடம் அமெரிக்காவில் இல்லை...

கோக்கோகோலா தயாரிப்பு என்பது இராசயனம் சம்பந்தப்ப்ட்ட மாசுவை வெளியேற்றும் தொழில் என்பதால், அது விவசாயத்தை நாசப்படுத்தும் என்பதால், அந்த தொழிற்சாலையை தேசபக்தி கொண்ட அமெரிக்க தொழில் அதிபர்கள் தங்கள் நாட்டிற்குள் நடத்தவில்லை என்பதை சாய ஆலை,  பின்னலாடை உரிமையாளர்கள் கவனிக்க வேண்டும்.

மேலை நாடுகளின் தேவைக்காக இந்தியாவை விவசாயம் அழிந்த ஒரு குப்பைக்கூடையாக மாற்றலாமா?

முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்ற இயற்கையை நமது வாரிசுகளுக்கு விட்டுச் செல்லவேண்டாமா?

பனியன் உற்பத்திக்காக பலப் பல இயந்திரங்களை தயாரிக்கும் மேற்குலக நாடுகள் ஏன் பனியனை தயாரிக்க முன்வருவதில்லை.. பின்னலாடை சாய ஆலை உரிமையாளர்கள் பதில் சொல்ல வேண்டிவரும்

தையல் பயிற்சி பெற்றவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பின்னலாடை தொழிலை முதலில் திருப்பூரைச் சுற்றியுள்ள விவசாயிகள் ஆக்கிரமித்தனர்.

அரசின் தவறான போக்கினால் இயற்கைவளம் அழிக்கப்பட்டு மழை பொய்த்தபோது அவர்கள் தங்களுக்கான தொழிலாக பின்னலாடை தொழிலை தெரிவுசெய்து கொண்டார்கள். அப்போது அவர்கள் உரிமையாளர்கள் பார்வையில் கடுமையான உழைப்பாளிகளாகத் தோன்றினர்.

பின் தொழிலாளர்கள் உரிமைப் போராட்டம் நடத்தியபோது, தொழில் முன்னேற்றம் கண்டு கூடுதலாக தொழிலாளர்கள் தேவைப்பட்டபோது குறைந்த கூலியுடன் உரிமை கேட்காத திருச்சி மதுரை தர்மபுரி மாவட்ட தொழிலாளர்கள் கடுமையான நேர்மையான உழைப்பாளிகளாகப் பட்டார்கள்..

தற்போது அவர்களும் திருப்பூரின் வாழ்வாதார செலவின் தன்மைக்காக சம்பளம் கூடுதல் கேட்டபோது, வற‌ண்ட மாநிலமான பீகாரின் தொழிலாளர்கள் உழைப்பாளிகளாக கருதப்பட்டு.. தமிழ்நாட்டு தொழிலாளர்கள் சோம்பேறிகளாகப் பார்க்கப்படுகிறார்கள்...

பீகார் தொழிலாளர்களுக்கு 5 பேர் தங்க ஒரு அறை.. மூன்று நேர சாப்பாடு.. ஒரு டி.வி., 8 நேர மணி தூக்கம்.. வருடம் ஒருமுறை சம்பளம் போதும்.. என்னே திருப்பூர் முதலாளிகளின் தொழிலாளர் பாசம்..

 04..02..2011 & 22.02.2011 நடந்த வேலை நிறுத்தத்தில் பல பனியன் கம்பனிகள் கலந்துகொள்ளாமல் வேலை செய்தன..

ஏன் இப்படி என்ற விசாரணையில்….கேள்விப்பட்டது..

2005 க்கு முன்பாகவே விவசாயிகளுக்கு நட்ட ஈடு & தண்ணீர் சுத்தகரிப்பு நிலைய பணிக்கான செலவு என்ற வகையில் சாயப்பட்டறை முதலாளிகள் ஒரு கிலோ துணி சாயமிட ஏற்கனவே உள்ள கூலியுடன் ரூபாய் 25 வரை சேர்த்து வாங்கிவிட்டு.. எந்தச் செல‌வினங்களுக்காக வாங்கினார்களோ அதை முறையாகச் செய்யாமல், பல
சாயப்பட்டறை முதலாளிகள் தங்கள் அல்லது உறவினர்களின் பெயரில் வீடு, காடுகளை வாங்கிப் போட்டுள்ளார்கள்.

வாங்கிய பணத்தை முறையாக செலவு செய்திருந்தால் இன்றைக்கு இந்த நிலை வந்திருக்காது என்று சொல்கிறார்கள். உண்மையா என்பதை சுத்தகரிப்பு நிலைய கணக்குகளும், வருமான வரித்துறையும்.. விவசாயிகளும்தான் கூறவேண்டும்...

அரசும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறையும் நீதிமன்றமும் நேர்மையாக செயல்பட்டால், வரும் தீர்ப்பு விவசாய இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் ஒரு செயலாகவே இருந்து, அடுத்து வரும் தலைமுறையும் நல்ல உணவுடனும் சுகாதார வாழ்வுடனும் இருக்க வழி செய்வார்கள்...

ஏதோ ஒரு இடத்தில் லஞ்சம் விளையாடினாலும் அது முதலாளிகளுக்கு சாதகமான, இயற்கைக்கு எதிரானதாகவே அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

சாய ஆலை பிரச்சனைக்கான ஒரே தீர்வு.. 2100 டிடிஎஸ் மிகாத உப்புத்தன்மை வெளியிடும் சாயங்களை மட்டுமே துணிகளுக்குப் போடவேண்டும் என்பதுதான்.. அது முடியாதென்றால் சாய ஆலைகளை மூடிவிட உத்தரவு இடுவதைத் தவிர வேறு தீர்வே இதற்குக் கிடையாது..

பல பத்திரிக்கைகளில் பலர் அறிவு ஜீவிகளாக தங்களை நினைத்துக்கொண்டு எழுதுவதுபோல் விவசாயமும் வாழனும் சாய ஆலையும் இருக்கனும் என்பது சாத்தியமற்ற ஒன்று

 - காரை கதிரவன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It