ஒரு சிலுவை போன்றதொரு
பாதைகளின் கூடலில்
நம் சந்திப்பு நிகழ்ந்தது.

தள்ளி நின்று நகம் கடித்தபடி
என்னை எங்கே சந்தித்தாய்
என உன் நினைவு அட்டைகளை
புரட்டிப்பார்த்து தோற்கிறாய்.

எதேனும் ஒரு சம்பவத்தின்
பின்னால் உள்நகர்ந்து என்னைக்
கண்டறியும் உன் உத்தேசங்களும்
பலன் தரவில்லை

என் பெயர் என்னவாயிருக்கும்
என நீ குழம்பித்தவிப்பதுவும்
எனக்குத் தெரிகிறது.

ஒற்றை நொடியில் எனக்குள்
உன் நினைவுகளெல்லாமும்
நான் மீட்டிருந்தேன்.

நீ குழப்பத்துடனேயே
கிளம்பிப் போனதைப்பார்த்தபடி.

உனக்கு உதவி இருக்க முடியும்.
ஒடோடி வந்து உன் பெயர் சொல்லி
என்னை நினைவுறுத்தி.

செய்பவனாயில்லை.

எப்பொழுதேனும் ஒரு விபத்து
போல நானுன் ஞாபகங்களை
இடறக்கூடும்.

அது நிகழாவரை,
எனக்கும் என்னை மறந்துவிட்டதாய்
பாவனை செய்யப்
பழகிக் கொள்கிறேன்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.