ஒலிகளை நிரப்பி

இரவினை அணைத்தபடி

பெய்து கொண்டிருந்தது

மழை.

மறுநாள் எழுந்து

பார்க்கையில் அவன்

காகிதங்களில்

எழுதிய காதல் கவிதைகள்

ஈரமாகி இருந்தன.

கோர்வையாக

ஒவ்வொரு வரியிலும்

ஈரத்துளிகள்.

யாரோ படித்துவிட்டு

போயிருக்கிறார்கள்.

 

0

 

“நீ தான் நான் காதலித்த

முதல் பெண்”

“எனக்கும் நீங்க தான்”

அன்னோன்யமாக

பேசிக் கொண்டிருந்தனர்

கடற்கரையில் ஒரு தம்பதி.

கரையைச் சேரும் அலைகள்

மொத்தம் இரண்டு.

கடலின் நடுவில் இறக்கும்

அலைகள் அவர்கள் கணக்கில் இல்லை.

 

0

 

கிளியைப் படத்தில்

பார்த்து மகிழ்ந்த பருவம்

கிளியை உண்டிக்கல்லில்

குறி பார்த்த பருவம்

கிளியை வாஞ்சையுடன்

வளர்த்த பருவம்

எல்லாம் முடிந்து

கிளியை நினைவில் நிறுத்தி

ஏங்கி

சிரித்து

மகிழும்

பருவம் தொடங்கியாயிற்று…

-

Pin It