ஜி-8 மாநாட்டை சீர்குலைக்க
வந்த தீவிரவாதிகளை
நீண்ட புலனாய்வுக்கு பிறகு
கண்டுபிடித்தார்களாம்.
உயர்பாதுகாப்பு அதிகாரி
செய்தியாளர்களிடம் சொன்னார்.
பிடிபட்டது மூன்று பேராம்.
நீண்ட கூரான ஆயுதங்கள்
மொத்தம் ஆறு வைத்திருந்தார்களாம்.
கண்டனம் தெரிவிக்க
கருப்புநிற ஆடைகள் அணிந்திருந்தனராம்.
குறிப்பாக தாடி வைத்திருந்தார்களாம்.
சந்தேகமே இல்லை. அவர்களேதான்.
மென்மையான விசாரிப்புக்குப் பிறகு
இரண்டுபேர் குற்றங்களை
ஒப்புக்கொண்டார்களாம்.
ஒன்று மட்டும்
இன்னமும் பிடிவாதமாக
மே..மே...மே... என்று கத்திக்கொண்டிருக்கிறதாம்.
- என். விநாயக முருகன்