தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகளின் நிலை மிகவும் கவலைகிடமாக இருக்கிறது. அங்கு படிக்கும் மாணவர்களின்நிலை மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. இதனால் இப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டுகுறைந்து கொண்டே வருகிறது. பல்வேறு பள்ளிகள் ஒற்றை இலக்க மாணவர்கள் எண்ணிக்கையோடு செயல்படுகிறது(?). தமிழகத்தில் தற்போது உள்ளதைப் போல தொடக்கப்பள்ளி கட்டமைப்பு (அருகாமைப் பள்ளி கட்டமைப்பு) வேறு எந்தமாநிலங்களிலும் இல்லை என்கிறார்கள் கல்வியாளர்கள். காமராசர் போன்ற அறம் வளர்த்த அரசியல் தலைவர்களாலும், நே.து.சுந்தரவடிவேலு போன்ற அதிகாரிகளின் அர்ப்பணிப்பான சேவையாலும் வளர்ந்த அரசுத் தொடக்கப்பள்ளிகளின் நிலைஇன்று அவலத்தின் உச்சத்தில் உள்ளது. தனியார் பள்ளிகளின் அசுரத்தனமாக வளர்ச்சியாலும், பெற்றோர்களின் தனியார்பள்ளி மோகத்தினாலும் வரக்கூடிய கல்வியாண்டுகளில் இன்னும் மாணவர்கள் எண்ணிக்கை குறையும் சூழல்தான்தற்போதுள்ள நிலைமை. இதனால் மாணவர் எண்ணிக்கையற்ற பள்ளிகளுக்கு மூடுவிழா(!) நடத்த வேண்டிய நிலைதான்தொடரக்கூடும்.அரசுத் தொடக்கப்பள்ளிகளுக்கு மாணவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த தீவிரமாக முயற்சிக்க வேண்டிய அரசுநிர்வாகமோ(!)...

  • போதுமான கழிப்பிட வசதியில்லாமலும், (தூய்மை இந்தியா?)
  • இருக்கும் கழிப்பறைகளின் நிலையோ அதைவிட மோசமாகவும், உள்ளே சென்று வரமுடியாதபடி கொடும் துர்நாற்றம்வீசும்படியும், (பல குழந்தைகளுக்கு சிறுநீரகக் கோளாறுகள் வருவதற்குக் காரணம் சரியான நேரத்தில் பள்ளிகளில் சிறுநீர்கழிப்பதில்லை என்பதும், அதற்கு காரணம் சுகாதாரமற்ற கழிப்பறைகளில் சிறுநீர் கழிக்க குழந்தைகள் விரும்புவதில்லைஎன்பதும் பல்வேறு ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது)
  • போதிய தூய்மைப் பணியாளர்களை நியமிக்காமலும், நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு உரிய சம்பளம்கொடுக்காமலும்,
  • பாதுகாப்பான குடிநீர் வழங்காமலும்,
  • ஆசிரியர் பற்றாகுறையோடு

பள்ளிகளை நடத்தி வருகிறது.

  • உடைந்துபோன தரைத்தளம்,
  • சுரண்டினால் உதிரும் சுவர்,
  • வெளுத்துப்போன கட்டிடங்கள்

இதுதானே அரசுத் தொடக்கப்பள்ளிகளின் அடையாளம்.

ஒவ்வொருவர் வாழ்விலும் தொடக்கப்பள்ளியும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும் அழிக்கமுடியாத செல்வங்கள். மொழியையும், எண்ணியியலையும், அடிப்படை அறிவியலையும் அறிமுகப்படுத்துவது ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள்தான்.ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்ப்பாலின் முக்கியத்துவம் கொண்டவர்கள் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள். ஒழுக்கத்தையும், பண்பையும் ஐந்தில் விதைப்பதில் பெரும் பங்கு வகிப்பவர்கள் இந்த ஆசிரியர்கள்தான். குழந்தைகள் பெற்றோர்களிடம்இருக்கும் நேரத்தைவிட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களிடம் இருக்கும் காலம்தான் அதிகம். தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைஇரண்டாவது பெற்றோர் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

  • கல்வி கற்பித்தல்,
  • உணவு சாப்பிடுவதைக் கண்காணித்தல்,
  • இடைவேளை நேரங்களில் மாணவர்கள் விளையாடுவதை கவனித்தல்,
  • மலம், நீர் கழித்தலை ஒழுங்குபடுத்துதல்,
  • கல்வியறிவற்ற பெற்றோர்களிடமும், வீட்டிலும் குழந்தைகள் எப்படி அறிவார்ந்து செயல்படவேண்டும் என்பதைசொல்லிக் கொடுத்தல்,
  • சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்துதல்,
  • கல்வியைத் தாண்டி கலைத்திறன் வளர்த்தல், விளையாட்டில் ஆர்வம் கூட்டுதல்

என தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பணி அளப்பரியது.

குழந்தைகளின் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த ஆரம்பப் பள்ளியை அரசும், நிர்வாகமும் மிகவும் மோசமாக, படுகேவலமாக நடத்தி வருகிறது. பல்வேறு நலத்திட்டப் பொருட்களை வழங்குவதனால் மாத்திரம் பள்ளிப் பிள்ளைகளுக்குதேவையான வசதிகளை செய்து கொடுத்துவிட முடியாது என்றும், அதனால் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்திடமுடியாது என்பதைக் கூடவா அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் உணராமல் இருக்கிறார்கள்?

மென்மையான குழந்தைப் பருவத்தை கரடு முரடாக நடத்துகிறது அரசு.

100 மாணவர்கள், 5 வகுப்புகள், 3 ஆசிரியர்கள் இதில் 2 பேருக்கு பணியிடைப் பயிற்சி என்றால் பள்ளியின் நிலையைச்சொல்லவா வேண்டும்? பள்ளி மாணவர்களை தவிக்கவிட்டுவிட்டு அப்படி என்ன பயிற்சி கொடுக்கிறீர்கள்? இது அடிப்படைஅறிவற்ற செயல்திட்டம் அல்லவா? ஒரு ஆசிரியரால் ஐந்து வகுப்புகளை எப்படி பார்த்துக்கொள்ள முடியும். ஐந்து வகுப்புமாணவர்களையும் ஒரே வருப்பறையில் அமரவைத்தால் அவர்களுக்கு இட நெருக்கடி ஏற்படாதா? இந்த சிந்தனைத்தெளிவுகூடவா இருக்காது? அப்படியென்றால் அரசுப்பள்ளி மாணவர்கள் எக்கேடோ கெட்டுப்போகட்டும் என்றுதானேபொருள்?

தேர்தல் பணி, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, தடுப்பூசி கணக்கெடுப்பு, 5+ குழந்தைகள் கணக்கெடுப்பு, ஆதார் எண் சேர்ப்பு, அடையாள அட்டை சேர்ப்பு, ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொருவினாவுக்குமான வளர்ச்சி அறிக்கை தயாரிப்பு, பாடத்திட்ட அறிக்கை இதுபோதாதென்று ஒவ்வொரு கணக்கெடுப்பையும்எப்படிச் செய்வதென்ற பயிற்சி வகுப்பு, திறன் மேம்பாட்டுப் பயிற்சி என அரசு தரும் பயிற்சியோடு ஒவ்வொருஆசிரியருக்குமான தனிமனித தேவைகள் எல்லாவற்றுக்கும் காலத்தை ஒதுக்கிவிட்டு பள்ளியில் பிள்ளைகளுக்கு கல்விகற்றுக் கொடுக்க வேண்டுமானால் இப்பள்ளிகளை நடத்தவேண்டும் என்ற எண்ணத்தைவிட மூடிவிட வேண்டும் என்றஎண்ணத்திலேயே அரசு செயல்படுவதாகவே நம்மால் நினைக்கத் தோன்றுகிறது.

அரசுத் தொடக்கப்பள்ளிகளுக்கு வரும் குழந்தைகள் பெரும்பாலும் அடித்தட்டு ஏழை எளிய குடும்பத்திலிருந்துதான்வருகிறார்கள். கிழிந்த உடையோடும், கருத்த மேனியோடும், ஊட்டச்சத்தற்ற பொழிவு இழந்த உடலோடு வரும்இக்குழந்தைகளுக்கென்று கேட்பதற்கு நாதியில்லை என்பதால் எப்படிவேண்டுமானாலும் பள்ளிகளை நடத்தலாம் என்றஎண்ணத்தில் அரசும் நிர்வாகமும் செயல்படுவதாகவே தோன்றுகிறது.

  • பளபளப்பான தரைத்தளம்,
  • கண்களைக் கவரும் வண்ணத்தில் கட்டிடங்கள்,
  • வகுப்புக்கொரு கணினி,
  • நூலகம்,
  • பெரிய திரையுடன் கூடிய கணிணி கற்றல் வகுப்பறை

இவைகளை நீங்கள் தரவேண்டாம். வகுப்புக்கொரு ஆசிரியரை மட்டுமாவது நியமிக்க வேண்டாமா?

இனி வரும் காலங்களில் பள்ளி வேலை நாட்களில் ஆசிரியர்களுக்கு வேறு பணி கொடுக்கப்பட்டால் பள்ளிகள் முன்புபெற்றோர்களும் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த முற்போக்கு சக்திகளும் போராடினால் மாத்திரமே மக்கள் பள்ளிகளைமீட்டெடுக்க முடியும்.

- நா.வெங்கடேசன், ஆசிரியர், மெய்ச்சுடர்

Pin It