ஜல்லிக்கட்டு என்ற இந்து - ஆணாதிக்க - ஜாதி ஆதிக்கப் பண்பாட்டுவிழாவை உச்சநீதி மன்றம் தடை செய்தது தொடர்பாக, மே 17, இளந்தமிழகம் ஆகிய அமைப்புகள் எடுத்த நிலைப்பாட்டில் உள்ள பார்ப்பனச் சார்புத்தன்மையைச் சென்ற இதழில் விளக்கினோம். தொடர்ச்சியாக, ஏ1 பால். ஏ2 பால் என்ற அடிப்படையில் ஒரு போலி அறிவியல் கருத்து பரப்பப்பட்டு வருவதைப் பார்ப்போம். முதலில் இந்த போலி அறிவியலாளர்கள் கிளப்பிவிட்ட அறிவியல் கரடியைப் பற்றிப் பார்ப்போம்.

A1பால் - A2 பால் - BCM7

“பால்… குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் கால்சியம், புரதச் சத்து, விட்டமின் ‘ஏ’வையும் கொடுக்கிறது. ஆனால் பாலில் இருக்கும் கேசின் புரதம் நீரிழிவு நோயை தூண்டக் கூடியது. இந்த கேசினில் ஏ1, ஏ2 என்று இரண்டு வகை இருக்கிறது. பாஸ் இன்டிகஸ் இன மாடுகளில்( திமில் உள்ளது, நாட்டு மாடுகள்) ஏ2 அதிகமாகவும், பாஸ் டாரஸ் ( திமில் அற்றது, ஹெச்.எப், ஜெர்சி போன்ற அயல்நாட்டு இனம்) மாடுகளில் ஏ1 கேசின் மட்டும் இருக்கின்றன. ஏ1 கேசின் இருக்கும் பாலைக் குடித்தால்… அது குடலில் செறிக்கப்படும் போது BCM7 (beta-caso-morpine-7)ஆக மாற்றமடைந்து, நீரிழிவு, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சியைப் பாதித்தல் (ஆடிசம்) போன்ற வியாதிகளை உண்டாக்கு வதாகக் கண்டுபிடித்துள்ளார்கள். “ஏ2 கேசின் உள்ள பாலைக் குடித்து அது செறிக்கப்படும் போது, உடலுக்கு தீமை செய்யாமல் உடலைக் காப்பாற்றுகிறது” என்கிறார் ஏ1, ஏ2 பாலைப் பற்றி…ஆய்வு செய்த பேராசிரியர் ‘பாப் எலியாட். இவர் 1990-ம் ஆண்டு வாக்கில் ஆக்லாந்து பல்கலைக் கழகத்தின் குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவைச் (childeren’s medicine at aucklanad university) சேர்ந்த பேராசிரியர்.       

- வினவு தளம் 21.11.2012

இந்தியாவில் 2009 லேயே இந்தக் கருத்துப்பரவல் தொடங்கிவிட்டது. பார்ப்பன இந்து முன்னணிகள், ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள், கோசாலைகள். கோமடங்கள், சில தமிழ்த்தேசிய அமைப்புகள் போன்றவை நாட்டுப்பசு மாடுகளைக் காப்பாற்ற இதுபோன்ற கருத்துக்களைப் பரப்புவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் பார்ப்பன எதிர்ப்பைப் பேசும் ம.க.இ.க வும் இந்த வேலையைப் பார்ப்பது மிகவும் தவறான, கண்டிக்கத்தக்க போக்கு.

1 பால் - ஏ 2 பால் என்றால் என்ன?

kaattaaru mar16பாலில் 209 வகையான அமினோ அமிலங்கள் உள்ளன. அவற்றில் 67 வது இடத்தில் Proline என்ற அமினோ அமிலம் அதிகமாக இருந்தால் ஏ 2 பால். அதே 67 வது இடத்தில் Histidine என்ற அமினோ அமிலம் அதிகமாக இருந்தால் ஏ1 பால். ஆனால் இந்த 209 அமினோ அமிலங்களில் மேற்கண்ட இரண்டுமே இருக்கும். இதுதான் வேறுபாடு. 67 வது இடத்தில் உள்ள Proline அளவை மரபணு மாற்றத் தொழில்நுட்பம் வழியாக உயர்த்தலாம். மாற்றலாம். இதில் ஏ 1 தீங்கானது. ஏ 2 நல்லது என்ற போலியான அறிவியல் கருத்தைப் பரப்பியது பன்னாட்டு நிறுவனங்களில் வணிக வெறி.

2 பாலின் சர்வதேச வணிகப் பின்னணி

இன்று நேற்றல்ல; 1980 லிருந்தே இந்த சர்ச்சை தொடங்கிவிட்டது. அப்போதிருந்து ஏ1 ஏ2 பால் பற்றிய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 1994 ல் இந்த ஏ 2 பால் உற்பத்திமுறையை New Zealand Dairy Board என்ற கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனம் காப்புரிமைச் சட்டங்களின் படி (New Zealand patent application 295774, 1994) பதிவு செய்துவிட்டது.

நியூசிலாந்து கூட்டுறவு பால் உற்பத்தியாளர் நிறுவனத்தில் Howard Patterson என்ற மிகப்பெரும் கோடீசுவரரும் உறுப்பினராக இருந்தார். அவரது வணிக மூளை இந்த ஏ 2 பால் வணிகம், அது தொடர்பான காப்புரிமைப் பதிவு என்பவை பெரும் ஆசையைக் கிளப்பிவிட்டது. 1994 ல் நியூசிலாந்து பால் கூட்டுறவு நிறுவனம் பதிவு செய்திருந்த காப்புரிமையை அவர் விலைக்கு வாங்கிவிடுகிறார்.

அதன் பிறகு இந்த ஏ 2 முறையை வைத்து வணிகக்கொள்ளையைத் தொடங்குவதற்காக 2001 ல் A2 Corporation என்ற நிறுவனத்தைத் தொடங்குகிறார். 2012 ல் உலகம் முழுவதுக்கும் ஏ 2 பாலுக்குரிய உற்பத்தி முறை, ஏ 2 பாலிலிருந்து கிடைக்கும் உபபொருட்கள் தயாரிப்பு முறை, அது தொடர்பான வணிகம், ட்ரேட் மார்க் உள்பட அனைத்து உரிமைகளையும் A2 Corporation நிறுவனம் பெற்றுவிடுகிறார்.

அறிவியல் உண்மை அல்ல

1994 ல் நியூசிலாந்து காப்புரிமையைப் பெற்றது முதல், ஏ 2 பால் தொடர்பான ஏராளமான ஆராய்ச்சிகளுக்கு ஏ 2 நிறுவனம் பெரும் தொகைகளைச் செலவழித்தது. சர்வதேச அளவிலான காப்புரிமை பெற்ற பிறகு இது தொடர்பான ஆய்வுகள் ஏராளமாக நடந்தன. ஆனால் அந்த ஆய்வுகள் எவையும் ஏ 1 பால் தீங்கானது என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி நிருபிக்கவில்லை. ஏ 2 நிறுவனம் நடத்திய போலி அறிவியல் மோசடியை 2005 லேயே நேச்சர் இதழே அம்பலப் படுத்தியது.

ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி பல்கலைக்கழகத்தின் உயிர் வேதியியல் துறைப் பேராசிரியர்AS Truswell ( Department of Biochemistry, Human Nutrition Unit ) தலைமையில் நடைபெற்ற விரிவான ஆய்வு “ஏ 1 பால் தீங்கானது, ஏ 1 பாலின் புரதம் நீரிழிவு நோயை உருவாக்கும், இதய நோய் உருவாக்கும், குழந்தைகளுக்கு ஆட்டிசம் போன்ற நோய்களை உருவாக்கும் என்பது போன்ற கருத்துக்கள் தவறானவை. அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்படாதவை” என அறிவித்தது. இந்த ஆய்வு.The A2 milk case: a critical review AS Truswell - என்ற தலைப்பில் Nature குழுமத்தின் European Journal of Clinical Nutrition (2005) என்ற ஏட்டில் வெளியானது.  

அதன்பிறகு, ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு நிறுவனமான EFSA என்ற அமைப்பு 2009 ல் Ivano De Noni, Richard J. FitzGerald, Hannu J. T. Korhonen, Yves Le Roux, Chris T.Livesey, Inga Thorsdottir, Daniel Tome, Renger Witkamp ஆகிய அறிவியல் அறிஞர்களைக் கொண்டு ஏ1, ஏ2 பற்றி ஒரு விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டது.

அந்த ஆராய்ச்சிக்குழு. “ஏ 1 பால் தீங்கானது என்பதற்கு அடிப்படையாகக் கூறப்படும் கருத்துக்கள் அனைத்தும் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்படாதவை. ஆதாரமற்றவை. அது தொடர்பாக நடந்த ஆராய்ச்சிகள் அறிவியல் அடிப்டையில் நடந்தவை அல்ல. அவற்றை உறுதிப்படுத்தும் விதமாக இதுவரை எந்த ஆதாரமும், எந்த அடிப்படை அறிவியல் உண்மையும் இதுவரை வெளிவரவே இல்லை. இவை முற்றிலும் தவறான கருத்துக்கள்” என்று தெளிவாக அறிவித்து விட்டன. 2009 ஆம் ஆண்டு ஜனவரி 29 ல் இந்த ஆய்வு வெளியிடப்பட்டது.

அதன் பிறகும் சர்வதேச அளவில் அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடும் பல ஆய்வு இதழ்கள் கடந்த 2014 வரை இந்த ஏ 1. ஏ 2 தொடர்பாக வெளியான மோசடியான அறிவியல் கருத்துக்களை அம்பலப்படுத்தி வந்துள்ளன. அவற்றைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல், எந்தப் பதிலும் சொல்லாமல், ஏ 2 நிறுவனம் தனது வணிகத்தை விரிவு படுத்தி வருகிறது.

A 2 என்ற பன்னாட்டு நிறுவனத்தின் அறிவியல் & வணிக மோசடி வரலாறு

1.நியூசிலாந்து

அறிவியல் அறிஞர்கள் ஏ2 பால் உயர்வானது, ஏ 1 பால் தீங்கானது என்ற கருத்தை 2005 மற்றும் 2009 ல் முறியடித்துவிட்டனர். அதற்கு முன்பே 2001 லிருந்தே, அந்த மோசடியான அறிவியல் கருத்தை அடிப்படையாக வைத்து, தனது வணிகக் கொள்ளையை உயர்த்த துடித்த A2 Corporation நிறுவனம் பல நாடுகளிலும் தனது முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

நியூசிலாந்தில் Fonterra Co-operative Group Limited என்ற கூட்டுறவு நிறுவனம் இருக்கிறது. அந்த நாட்டின் ஒட்டு மொத்த பால் உற்பத்தியாளர்களும் இணைந்த கூட்டுறவு நிறுவனம்அது. நியூசிலாந்தின் பால் வணிகம் அந்நிறுவனத்தின் கையில்தான் உள்ளது. நியூசிலாந்தின் பால் வணிகத்தை கைப்பற்றத் துடித்த A2 Corporation நிறுவனம், தனது ஏ 2 பால் என்ற பால் பொருளை ஒரு மருந்துப்பொருள் என்றி பிரிவில் பதிவுசெய்தது. பிறகு, Fonterra Co-operative Group Limited மீது 2001 ல் நியூசிலாந்து உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தது.

“Fonterra விநியோகிப்பது பால் ஏ 1 பால். அது குழந்தைகளுக்குத் தீங்கானது, நீரிழிவு, ஆட்டிசம், இதய நோய்களை உருவாக்கும். எனவே அந்தப் பால் விற்பனையைத் தடுக்க வேண்டும். அல்லது அதன் பால் பாக்கெட்டுகளிலும், விளம்பரங்களிலும் மேற்கண்ட தகவல்களை அச்சிட வேண்டும்” என வழக்குப் போட்டது.

அந்த வழக்கின் தீர்ப்பில் நீதிபதிகள் A2 Corporation நிறுவனத்தைக் கடுமையாக எச்சரித்தது. அதாவது, “நீங்கள் கூறிய தகவல்களுக்கு எவ்வித அறிவியல் ஆதாரத்தையும் நீங்கள் சமர்ப்பிக்க வில்லை. அறிவியல்ரீதியாக உறுதிப்படுத்தப்படாக தகவல்களைக் கொண்டு எந்தப் பொருளையும் தடுக்க முடியாது. மேலும் இந்த ஏ2 என்ற பால் பொருளை, ஒரு மருந்துப்பொருளாகவும் பதிவு செய்துள்ளீர்கள். இது பெரும் மோசடி ஆகும்” என அந்நிறுவனத்திற்கு எச்சரிக்கையும் விடுத்தது.

2. ஆஸ்திரேலியா

அதன் பிறகு ஆஸ்திரேலியாவின் பால் வணிகத்தைக் கைப்பற்ற Denniston என்ற குழுவுடன் ஒப்பந்தம் போட்டு, அங்கும் தனது ஏ2 பால் என்ற மோசடி அறிவியல் கருத்தை பரப்பத் தொடங்கியது. ஆஸ்திரேலிய நீதிமன்றம் ஏ 2, டென்னிசன் ஆகிய இரு நிறுவனங்களையும் ஆதாரமற்ற தகவல்களைப் பரப்ப வேண்டாம், மக்களைத் தவறாக வழிநடத்த வேண்டாம் எனக் கடுமையாக எச்சரித்து, 50,000 டாலர் அபராதமும் விதித்தது. மேலும் A2 Corporation, Denniston ஆகிய இரண்டு நிறுவனங்களின் லைசன்களையும், ஒப்பந்தங்களையும் ரத்து செய்தது.

அதன்பிறகு, ஆஸ்திரேலிய உணவுப் பாதுகாப்பு அமைப்புகளுடன் சுமுகப் போக்கை மேற்கொண்டு, பேச்சுவார்த்தைகளை நடத்தியது. A2Australia என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கி, உலகம் முழுதும் கிளை பரப்பியுள்ள Fraser & Neave என்ற நிறுவனத்துடன் இணைந்து தற்போது ஆஸ்திரேலியாவின் பால் வணிகத்தை முழுவதும் ஆக்கிரமித்துவிட்டது.

2003 ல் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தொடங்கிய ஏ2 பால் வணிகம், 2015 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் மட்டும் 3000 கோடி யூரோ அளவுக்கு வணிகம் நடத்தும் மிகப் பெரிய நிறுவனம் என்ற அளவுக்கு வளர்ந்துள்ளது.

3. அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா

 2003-லிருந்து அமெரிக்காவில் Ideasphere Incorporated என்ற நிறுவனத்துடன் இணைந்தும் 2005 லிருந்து Twinlab என்ற நிறுவனத்துடனும் இணைத்து அமெரிக்காவின் பால் வணிகத்தைத் தன் கட்டுக்குள் கொண்டுவந்தது.

2011 நவம்பரில் இங்கிலாந்து நாட்டின் மிகப்பெரும் தொழில் நிறுவனமான Muller Wiseman Dairies உடன் ஒப்பந்தம் செய்து இங்கிலாந்தில் பால்வணிகத்தையும் கைப்பற்றியது. தற்போது 2014 ல் சீனாவிலும் கால்பதித்துள்ளது. Tmall Global and JD Worldwide என்ற நிறுவனங்களுடன் இணைந்து சீனாவின் பால் வணிகத்தையும் தன்வசப்படுத்தியுள்ளது.

இப்படி ஒரு மிகப்பெரும் பன்னாட்டு நிறுவனத்தின் வணிகக் கொள்ளைக்கு இந்தியாவில் உள்ள அரசாங்கமும், அரசியல்வாதிகளும் பட்டுக்கம்பளம் விரிக்கத் தொடங்கி விட்டனர். ஆளும் பி.ஜே.பி யின் அடிப்படை அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ், இந்துமுன்னணிக் காவிக்கும்பல் நாட்டை A 2 Milk Corporation கம்பெனிக்காரனுக்கும் கொஞ்சம் பட்டாப் போட்டுக் கொடுக்கத் தயாராகிவிட்டது. அதன் அறிகுறியாகத்தான் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த ஏ 2 பால் பற்றிய வியாபார அறிவியல் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் 2016 - 17 வரவு செலவு அறிக்கையில் இந்த நாட்டுப்பசு மாடுகளை மேம்படுத்த 850 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வட பகுதியில் உள்ள கிர், காங்கிரேஜ், தார்பார்க்கர், சிந்து, சாஹிவால், தமிழ்நாட்டு இனமான காங்கேயம், பர்கூர் போன்ற கலப்பினமாக மாற்றப்படாத எந்த மாட்டில் இருந்தும் ஒரு லிட்டர் பால் கறந்தாலும் A 2 Milk Corporation நிறுவனத்துக்கு இராயல்டி கட்டப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

2 மில்க் நிறுவனம் வளர்ப்பது Holstein மாடுகள் தான்

இப்படி ஏ 2 பால் என்ற பெயரில் நடக்கும் பன்னாட்டுக்கொள்ளைக்கு ஆதரவாக வந்துள்ள அறிவியல் கருத்தின் தன்மை முற்றிலும் நேர்மையற்ற, ஆதாரமற்ற, பொய்ப்பிரச்சாரமாகவே இருக்கிறது.

“இந்தியாவின் நாட்டுப்பசு மாட்டிலிருந்து மட்டும்தான் இந்த ஏ 2 பால் கிடைக்கிறது. வெளிநாட்டு மாடுகளுக்கு வியர்வைச் சுரப்பிகளே கிடையாது. எனவே அவற்றின் வியர்வையும் பாலின் வழியாகத் தான் வரும். அந்த மாடுகளின் பால் சர்க்கரை நோயை உருவாக்கும். எனவே இந்திய நாட்டு மாடுகளை அந்நிய நாடுகளுக்குக் கொண்டு செல்வதற்காக ஜல்லிக்கட்டைத் தடுக்கிறார்கள்.”

என்று அரைகுறையாகத் தகவல்களைத் தெரிந்து கொண்டு ஆளாளுக்கு அறிவியலாளர்கள் போலக் கருத்துக்களைப் பரப்பி வருகிறார்கள்.

இந்திய நாட்டுப் பசு மாடுகளிடம் மட்டுமே ஏ 2 பால் கிடைக்கும் என்பது தவறான தகவல் என்பதை - ஏ 2 பால் என்பதை வணிகமயப்படுத்திய - உலகமயப்படுத்திய A2 Milk Corporation நிறுவனமே உறுதி செய்து விட்டது.

இந்த A 2 Milk Corporation தனது பால் உற்பத்தித் திட்டங்களுக்கு எந்த வெளிநாட்டு மாடு களையும் பயன்படுத்துவதில்லை. ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்டு அந்த நாட்டுக்கு உள் நாட்டு மாடுகளான Holstein மாடுகளைத்தான் நம்பி இருக்கிறார்கள். இந்தியாவிலும் ஏராளமாகக் கிடைக்கும் இந்த Holstein தான் ஏ 2 பாலைத் தருகிறது என A2 Milk Corporation நிறுவனமே அறிவித்துவிட்டது. அந்நிறுவனத்தின் அனைத்துப் பண்ணைகளிலும் ஆயிரக்கணக்கான ஐரோப்பிய மேய்ச்சல் நிலங்களிலும் மேய்ந்து கொண்டிருப்பவை இந்த Holstein தான். இது தொடர்பான தகவல்கள் ஏ2 நிறுவனத்தின் இணையதளங்களிலும், சர்வதேச அளவிலான அறிவியல் ஆய்வு ஏடுகளிலும் விரிவாகக் கிடைக்கின்றன.

2 பாலைக் கொடுக்கும் வெளிநாட்டு மாடுகள்

இந்தியாவில் ஜெர்சி, ஹோல்ஸ்டியன் ஆகிய ஐரோப்பியப் பசுக்கள் ஏ 2 பாலைத் தராது எனத் தவறான பிரச்சாரம் நடைபெறுகிறது. இதையும் Nature என்ற சர்வதேச அறிவியல் இதழ் மறுத்துள்ளது. இந்தியாவின் கிர், சாஹிவால், தார்பார்க்கர், காங்கேயம் மட்டுமல்ல. ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள அனைத்து மாடுகளும் ஏ 2 வகைப் பாலைத் தான் தருகின்றன. ஆசியக் கண்டத்திலுள்ள எல்லா நாடுகளிலும் உள்ள அனைத்து வகை மாடுகளும் ஏ 2 பாலைத் தான் வழங்குகின்றன. குறிப்பாக, ஃப்ரான்சில் உள்ள Limousin, Charolasis, இங்கிலாந்தில் உள்ள Jersey, Guernsey, Alderney போன்ற மாட்டினங்களும் ஏ 2 பாலைத் தான் வழங்குகின்றன. 2005 ஆம் ஆண்டிலேயே இக்கருத்து வெளியிடப்பட்ட போதிலும் இங்குள்ள பார்ப்பன அறிவுஜீவிகளும் பார்ப்பன அடிமைகளும் இதைக் கண்டுகொள்ளவே இல்லை. இந்தியாவில் தவறான கருத்தை உருவாக்கியுள்ளனர்.

ஒட்டு மொத்தமாக மாட்டுப்பாலே மனிதனுக்குத் தீங்கானது

முக்கியமாக மாட்டிலிருந்து பெறப்படும் பால் அது எதுவாக இருந்தாலும் தீங்குதான் என சில புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சுவீடனில் உள்ள உப்சலா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் Susanna C. Larsson, Alessio Crippa,Nicola Orsini, Alicja Wolk Karl Michaëlsson ஆகியோர் இணைந்த குழுவினர், கடந்த 20 ஆண்டுகளாக பால் குடிப்பவர்கள் - பாலையே பயன்படுத்தாதவர்கள் என சுமார் 1 இலட்சம் மக்களிடம் ஆய்வு மேற்கொண்டு முடிவினை வெளியிட்டுள்ளனர். “Milk Consumption and Mortality from All Causes, Cardiovascular Disease, and Cancer: A Systematic Review and Meta-Analysis” என்ற தலைப்பில் சுவிட்சர்லாந்திலிருந்து வெளி வரும் உலகப்புகழ் பெற்ற அறிவியல் ஏடான ‘Nutrients’ இந்த ஆய்வை வெளியிட்டுள்ளது.

“தினமும் இரண்டு டம்ளருக்கும் அதிகமாக, அதாவது அரை லிட்டர் அல்லது அதற்கு அதிகமாக பால் குடிப்பவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு சீக்கிரமே உயிரிழப்பது தெரியவந்தது. பாலில் கலந்திருக்கும் 'லக்டோஸ் மற்றும் கிளாக்டோஸ்' என்ற பொருட்கள் (சர்க்கரை தன்மை) காரணமாக, பல்வேறு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது. குறைவாக பால் குடிப்பவர்களை விட அதிகமாக பால் குடிப்பவர்கள் விரைவாக உயிரிழப்பது உறுதி”

என்று தெரிவித்துள்ளார்.

cow 339

ஆனந்த விகடனில் இயற்கை உணவு குறித்து சில ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகக் கட்டுரைகளை எழுதிவரும் மருத்துவர் கு.சிவராமன், தனது ஆறாம்திணையில்,

“'பால் சாப்பிட்டால் டாக்டர் செலவு குறையும்’ என்ற பிரசாரமே 'அக்?ஷய திருதியைக்குத் தங்கம் வாங்கினால் வீட்டில் வளம் கொழிக்கும்’ என்று தங்கம் விற்பவர்கள் செய்யும் உட்டாலக்கடி போலத்தான் என்கின்றன பால் மீதான சமீபத்திய ஆய்வுகள். தாய்ப்பாலுக்குப் பின் மனிதனுக்கு எந்தப் பாலும் தேவை இல்லை என்கின்றனர் மேற்கத்திய ஆய்வாளர்கள்.”

என்று கூறியுள்ளார். இவர் மட்டுமல்ல, இயற்கை மருத்துவத்தை மேற்கொள்ளும் பல மருத்துவர்கள் மாட்டுப்பாலைத் தவிர்க்கச் சொல்கிறார்கள். ஆட்டுப்பாலைப் பரிந்துரைக் கிறார்கள்.

மாட்டுப்பாலைவிட ஆட்டுப்பாலில் தான் ஏ 2 தன்மை அதிமாக உள்ளது

எல்லாவற்றையும் விட, மாட்டுப்பாலை விட ஆட்டுப்பாலில்தான் முழுமையாக ஏ 2 வகைப் பால் கிடைக்கிறது என பால் ஆராய்ச்சியாளர்கள் பல காலமாகச் சொல்லி வருகின்றனர். இந்தியாவில் Ishi Koshla என்ற ஆராய்ச்சியாளர் இதைப் பற்றி முழுமையாக ஆய்ந்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.

சென்னை கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பேராசிரியர்முனைவர் மீனாட்சிசுந்தரம் இதைப் பற்றி ஆய்வு செய்தவர். தமிழ் இந்து நாளிதழில் அவர் எழுதிய தாய்ப்பாலுக்கு மாற்று கட்டுரையிலிருந்து,

“ஆட்டுப்பாலானது, மாட்டுப்பாலைவிட தாய்ப்பாலை ஒத்த பண்புகளை அதிகம் கொண்டிருக்கிறது. ஆட்டுப்பாலில் உள்ள பீட்டாகேசின் புரத அமைப்பு தாய்ப்பாலில் காணப்படும் புரத அமைப்பு போன்றே இருக்கிறது. ஆட்டுப்பாலில் உள்ள ஒலிகோசேக்ரைடு என்னும் சர்க்கரையின் அமைப்பும் தாய்ப்பாலில் உள்ளது போன்றே காணப்படுகிறது.

மேலும் தாய்ப்பால், ஆட்டுப்பாலில் மாட்டுப்பாலைவிட அதிக அளவு செலினியம் காணப்படுகிறது. மேற்கூறிய காரணங்களால் பச்சிளம் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்குச் சிறந்த மாற்றாக ஆட்டுப்பாலே கருதப்படுகிறது.

ஒவ்வாமையை ஏற்படுத்தும் புரதமான ஆல்பா எஸ் 1 கேசினின் அளவு மாட்டுப் பாலில், அதிகமாக இருப்பதாலேயே இந்த ஒவ்வாமை ஏற்படுகிறது. ஆனால், ஆட்டுப்பாலில் தாய்ப்பாலைப் போலவே ஆல்பா எஸ் 2 கேசின் வகைப் புரதம் உள்ளதால், ஆட்டுப்பால் ஒவ்வாமையை ஏற்படுத்துவதில்லை. மாட்டுப் பால் அருந்துவதால் ஏற்படும் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட 93 விழுக்காடு குழந்தைகளில், ஆட்டுப்பால் அப்படிப்பட்ட ஒவ்வாமையை ஏற்படுத்தவில்லை என்பது ஆய்வுகளின் மூலம் உறுதியாகியுள்ளது.

பாலில் உள்ள லாக்டோஸ் என்னும் சர்க்கரையைச் செரிப்பதற்கு லாக்டேஸ் என்னும் நொதி மிகவும் இன்றியமையாதது. இந்த லாக்டேஸ் அளவு மிகக் குறைவாகவோ அல்லது முற்றிலுமாக இல்லாமல் இருப்பவர்கள் பாலைச் செரிக்க முடியாமல் லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாமையால் (lactose intolerant) அவதிப்படுகின்றனர். ஆட்டுப்பாலில் லாக்டோஸ் சர்க்கரையின் அளவு குறைந்து காணப்படுவதால் ஆட்டுப்பால் அருந்துபவர் களுக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாமை ஏற்படுவதில்லை...

சீரான ரத்த அழுத்தத்தைப் பராமரிக்க உதவும் பொட்டாசியம் ஆட்டுப்பாலில் அதிகம் இருப்பதால், ஆட்டுப்பால் அருந்துவதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்து, இதயத்தைப் பாதுகாக்கலாம்.

இயற்கை உரம் முகமூடியுடன் பார்ப்பன ஆதிக்கத்துக்கு உரம்

செயற்கை உரங்களுக்கு மாற்றாக இயற்கை விவசாயத்தைத் திறம்பட நடத்த இயற்கை உரம் தேவை. அதற்கு நாட்டுப்பசுக்கள் தேவை என்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. நாட்டு எருமையிலும் அதே தரமான எரு கிடைக்கிறது.

நாட்டுப்பசுக்களின் எருவைவிட ஆட்டுஎரு, பன்றி எரு, கோழி எரு ஆகியவை மிகச்சிறந்த இயற்கை உரங்கள். இவை எல்லாவற்றையும் விட மனிதக் கழிவு மிகச்சிறந்த எருவாகும். ஆடு, மாடு, கோழி, பன்றி எருக்கள் எவையாக இருந்தாலும், அவை தாவரங்களில் உடனடியாக மாற்றத்தைக் கொடுக்காது. மனிதக்கழிவு மட்டுமே பயிர்களுக்கு உடனடி ஊட்டம் கொடுக்கக் கூடியது.

கி.பி. 1880 களில் இங்கிலாந்து ராணி இந்திய விவசாயமுறை பற்றி அறிந்து அறிக்கை கொடுக்குமாறு ஒருவரை அனுப்பிவைத்தார். அவர் பெயர் ஜான் அகஸ்டன் வால்கர். அவர் ஓராண்டு இந்தியா முழுவதும் சுற்றி அலைந்து, ஆராய்ந்து ஒரு அறிக்கை கொடுத்தார். இந்திய விவசாய முறையின் பெருமைகளைப் பேசும் அந்த அறிக்கை முக்கியமாகச் சொன்னது இது.

“பயிர் சாகுபடியைப் பொறுத்தவரை ஒரே ஒரு குறைபாட்டைத்தான் பார்க்கிறேன். மனித மலத்தை எருவாகப் பயன்படுத்துவது இந்தியாவில் காண முடியவில்லை. அதற்குக் காரணம் உள்ளது. நிலம் மேல் ஜாதிக்காரனிடம் இருக்கிறது. கீழ்ஜாதிக்காரர்கள் தங்கள் நிலத்தில் மலம் கழிக்க மேல்ஜாதிக்காரர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அதனாலேயே மனித மலம் இன்னும் எருவாகப் பயன்படவில்லை.” என்கிறார்.

இன்று செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனங்கள் ஏராளமாக வந்துவிட்டன. வத்துக் கறவைப் பசு மாடுகளை வளர்த்து, நட்டப்பட வேண்டியதில்லை. ஒரு ஏக்கருக்கு ஒரு டேங்க் என தாராளமாகக் கொட்டலாம். அதுபற்றி இயற்கைக் காவலர்கள் யோசிப்பதே இல்லை.

பார்ப்பன வந்தனா சிவாவின் ‘நவதான்யா’, நம்மாழ்வாரின் ‘வானகம்’, சுற்றுச்சூழலுக்காக இயங்கும் ‘பூவுலகின் நண்பர்கள்’ உட்பட இந்த நாட்டில் இயற்கை விவசயாம், இயற்கை உரம் பற்றிப் பேசுபவர்கள் ஏராளமாக உள்ளனர். பார்ப்பன ‘பசுமை விகடன்’ உட்பட ஏராளமான ஏடுகள் உள்ளன. எந்த நிறுவனமும், எந்த ஏடும், எந்த இயற்கை ஆர்வலரும், பயிர்களுக்கு உடனடிப்பலனைக் கொடுக்கக்கூடிய இயற்கை எருவான, மனித மலத்தைப் பயன்படுத்துவது பற்றிப் பேசுவதுகூடக் கிடையாது.

பார்ப்பன அமைப்புகள் பேசாமல் இருப்பதற்கு, அவற்றின் இராமராஜ்ய அஜெண்டாக்கள் அடிப்படையாக இருக்கின்றன. பார்ப்பனர் அல்லாத இயற்கைக் காவலர்கள் இதுவரை அறியாமல்கூட இருந்திருக்கலாம். இனியாவது நாட்டு மாடுகளை வளர்த்து அதனாலும் பொருளாதார இழப்பைச் சந்திப்பதைவிட - மனித எரு, ஆடு, பன்றி, கோழி எருக்களை இயற்கை விவசாயத்துக்குப் பரிந்துரைக்க வேண்டும்.

தமிழ்ப்பண்பாட்டைக் காப்போம், இந்தியப் பாரம்பரியத்தைக் காப்போம், ஜல்லிக்கட்டை ஆதரிப்போம், நாட்டுமாடுகளைக் காப்பாற்றுவோம், தற்சார்பு விவசாயத்தை உருவாக்குவோம், இயற்கை விவசாயத்தைத் காப்பாற்றுவோம், இயற்கை உணவுக்குத் திரும்புவோம் என்பது போன்ற முழக்கங்கள் மீண்டும் நம்மை 1000 வருடங்களுக்குப் பின்னால் இழுத்துச் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

மேற்கண்ட எந்த முழக்கத்துக்கும் நாம் எதிரானவர்கள் அல்ல. ஆனால் அந்த முழக்கங்களை முன்னெடுப்பவர்கள் அவற்றுக்குப் பின்னால் உள்ள பார்ப்பன நலன்களையும், பார்ப்பன ஆதிக்கப் பின்னணிகளையும் அக்கறையுடன் கவனித்துக் களைய வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அவை அனைத்தையும் எதிர்க்க வேண்டியது எமது கடமை.

ஆர்.எஸ்.எஸ்.கூறும் இந்து மதத்தில் காப்பாற்றப்பட வேண்டியவர்கள்

“பிராமணனையும் பசுவையும் காப்பாற்ற வேண்டியதுமே ஒவ்வொரு இந்துவின், இந்து மதத்தின் தர்மம்” - காஞ்சி சங்கராச்சாரியார் 10.03.1946 சேலம் பார்ப்பனர் மாநாட்டுக்கு அனுப்பிய செய்தி

முடிவுகள்

1. ஏ 1 பால் தீங்கானது என்பது அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட உண்மை அல்ல.

2. ஏ 2 பால் நல்லது என்ற கருத்து பன்னாட்டு நிறுவனங்களின் வணிகக் கொள்ளைக்குப் பயன்படுத்தப்படும் போலி அறிவியல் கருத்து.

3. ஏ 2 பால் இந்திய மாடுகளில் இருந்து மட்டுமே கிடைக்கின்றன என்பது தவறான கருத்து.

4. ஒட்டுமொத்தமாக மாட்டுப் பாலே மனிதனுக்குத் தீங்கு என ஆய்வுகள் வந்துவிட்டன.

5. தாய்ப்பாலின் தன்மையைக் கொண்டது ஆட்டுப்பால் மட்டுமே.

6. நாட்டுப்பசு எருவை விட, மனித, ஆடு, பன்றி, கோழி எருக்களே விவசாயத்துக்கு ஏற்றவை.

7. ஏற்கனவே நொடித்துப் போயுள்ள விவசாயிகளிடம், ஏ 2பால், இயற்கை உரம் போன்ற காரணங்களைக்கூறி நாட்டுப்பசு மாடுகளை வளர்க்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்வது முழுக்க முழுக்க பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் ஸின் திட்டம்.

பரிந்துரைகள்

1. குழந்தைப் பருவத்தைத் தாண்டிய பிறகு மனிதனுக்கு எந்த விலங்கின் பாலும் தேவையில்லை. ஏ2 பாலுக்காக பாலுக்காக நாட்டுப்பசுக்களை வளர்க்க வேண்டியதில்லை. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் மாட்டுப்பாலைத் தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால் ஆட்டுப் பாலைப் பயன்படுத்தத் தொடங்குங்கள்.

2. இயற்கை எரு நாட்டுப்பசு மாட்டைவிட மனிதக்கழிவில் தான் தரமாகக் கிடைக்கிறது. இயற்கை விவசாய ஆர்வலர்கள் மனித, ஆடு, பன்றி, கோழி எருக்களைப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும்.

சான்றுகள்:

1.EFSA Scientific Report (2009) 231, 1-107Review of the potential health impact of ß-casomorphins and related peptides - Report of the DATEX Working Group on ß-casomorphins

2. Milk Consumption and Mortality from All Causes, Cardiovascular Disease, and Cancer: A Systematic Review and Meta-Analysis - Nutrients 7(9):7749-63 · September 2015

3.The A2 milk case: a critical review AS Truswell - European Journal of Clinical Nutrition (2005) & 2005 Nature Publishing Group

4. www.thea2milkcompany.com/about-us/product-businesses/-www.a2milk.com.au/our-farms/perry-view/ 

5. vinavu.com, 21.11.2012, Indian Express 11.07.15, தி தமிழ் இந்து 24.06.2014

(காட்டாறு மார்ச் 2016 இதழில் வெளியான கட்டுரை)

- அதிஅசுரன்

Pin It