எதிர்ப்பைக் கண்டு மகிழ்பவர்!

சிங்கப்பூர்,பாரிஸ்டர். கே.பி.கேசவமேனன் அவர்கள் (1939)

periyar anna 500நானும், தோழர் நாயக்கரும் ஒரே அரசியல் கட்சியில் சேர்ந்து, ஒரே மாதிரி கொள்கைகளைப் பின்பற்றி, ஒரே மாதிரி போராட்டங்களில் ஈடுபட்டு, ஒரே துறையில் பங்கெடுத்துக் கொண்டு, ஒரே விதமான கஷ்டங்களை அனுபவித்து வந்த காலமும் ஒன்றிருந்தது. அதாவது, இந்திய சரித்திரத்திலேயே முன்பு எப்போதும் இருந்திராத அத்துணை பலத்துடனும், வேகத்துடனும் தேசீயமென்னும் பேரலையானது, இந்தியாவெங்கணும் திரண்டு எழுந்த காலம் 15– ஆண்டுகளுக்கு முன்பாகும். இந்திய அரசியல் நிலைமையைச் சிக்கற்படுத்திப் பல காரியங்கள் அதிலிருந்து நடந்து வந்திருக்கின்றன.

காங்கிரசுடன் முற்றிலுமே நேச பாவத்துடனில்லாத ஒரு பிரச்சாரத்தை நடத்திவரும் இக்கட்சிகளில் ஒன்றின் ஸ்தாபகரும், தலைவருமாய் இருந்து, தோழர் நாயக்கர் சென்ற 20– வருஷ காலமாகத் தமது பொது வாழ்விற்குச் சிறப்பளித்த அதே வேகத்துடனும், உற்சாகத்துடனும், சக்தியுடனும் இன்றும் வேலை செய்து வருகிறார்.

தோழர் நாயக்கர் பெயருடன் தொடர்பு கொண்டுள்ள கட்சியின் கொள்கைகளையும், வேலைத் திட்டங்களையும் பற்றி ஆதரித்தோ அல்லது குறைவுபடுத்தியோ கூறுவதற்காக நான் இங்கு வரவில்லை. அவருடைய அபிப்பிராயங்களுடன் நான் பூரண உடன்பாடு கொள்ளுவதென்பது அசாத்தியமாயிருக்கலாம். நாங்கள் துரதிர்ஷ்டவசமாக, தற்சமயம் வேறுபாடான – எதிரியாயுங்கூட உள்ள அரசியல் கோஷ்டியைச் சேர்ந்தவர்களாய் இருந்து வருகிறோம். ஆனால், நான் தற்சமயம் ஏற்றிருக்கும் (பெரியாரின் 61– வது ஆண்டு விழாக் கூட்டத்திற்குத் தலைமை) ஸ்தானத்தை ஏற்காதபடி அது என்னைத் தடை செய்யவில்லை. பின்வாங்காத வீரத்தையும், கொள்கைகளில் வழுவாத நம்பிக்கையையும், ஸ்தாபன சம்பந்தமாக ஓர் அபூர்வ நிபுணத்துவத்தையும், ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் நன்மையில் ஓயாதொழியாது நாட்டத்தையும் கொண்டுள்ள ஒருவருக்கும், அவரது குணத்திற்கும் நான் எனது தாழ்மையான பாராட்டுதலைச் செலுத்துகிறேன். இத்தகைய குணாகுணங்களே தென்னிந்தியாவில் அவரது பொதுவாழ்விற்கு ஒரு பெரிய செல்வாக்கான ஸ்தாபத்தை அளித்துள்ளது.

20– வருஷ காலத்திற்கதிகமாக எனக்குத் தோழர் இராமசாமி நாயக்கரைத் தெரியும். அரசியல் தோழர் என்று மாத்திரமல்ல, ஓர் அந்தரங்க நண்பர் என்ற முறையிலும் நான் அவரை அறிவேன். இத்தகைய நீண்ட காலத்திலும் 20–வருஷத்திற்கதிகமானதொரு காலத்திற்கு முன், அவரை நான் ஈரோடு இரயில்வே ஸ்டேஷனில் முதன்முதலாகச் சந்தித்ததையும் நான் நினைவிற்குக் கொண்டுவரக்கூடும். அடர்ந்து சுரண்டு அடங்காது நிற்கும் அவரது கூந்தலும், தடித்துப் பருத்த மீசையும், தன்னம்பிக்கை நிரம்பித் ததும்பும் ஒரு வதனமுங் கொண்ட தோழர் நாயக்கர் என்னை வரவேற்க வந்தார். இன்று அவர் பொதுவாழ்வில் விளங்குவதுபோல் அன்று அத்துணை பிரதான புருடராய் இல்லை. அன்று நாங்கள் இருவரும் ஒருவருடன் ஒருவர் கொண்ட பரிச்சயமானது, இன்று பழுத்துக் கனிந்து நேசமாகிவிட்டது. அந்நேசமானது அரசியலில் எங்களுக்குள்ள வேற்றுமைகளையும் பொருட்படுத்தாது, இன்றுங்கூட உறுதியுடன் இருந்து வருகிறது.

நான் இந்தியாவில் இருந்தபோது, நானும் அவரும் ஈடுபட்டிருந்த சில பொதுநல அலுவல்களை முன்னிட்டு அவருடன் நெருங்கிய நேசத்துடன் தொடர்பு கொள்ளும் ஒரு சந்தர்ப்பமும் எனக்குக் கிடைத்தது. நான் இந்தியாவை விட்டுப் புறப்பட்டு இந்நாட்டிற்கு வந்த பிறகு, அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சண்டமாருதங்களையும், பெருஞ்சுல்களையும் வெகு ஊக்கத்துடன் கவனித்து வருகிறேன். வெகு ஆச்சரியத்துடனுங்கூட கவனித்து வருகிறேன். உணர்ச்சி ததும்ப ஒரு வேகத்தையூட்டும் மாபெருந்தலைவராக இன்று அவர் விளங்குகிறார்.

ஆயிரக்கணக்கானோர், அவரையும் அவரது கட்சியையும் கடுமையாக எதிர்த்து வந்தனர். ஆனால், இப்போது ஒருவரும் அவரை நிராகரித்துவிட முடியாது. தென்னிந்தியாவின் அரசியல் அரங்கத்தில் பிரதான நடிகர்களில் ஒருவராய், அவரது பொதுவாழ்வானது தெளிவும், அங்கீகாமும் பெற்ற ஒரு ஸ்தானத்தை இன்று பெற்று விளங்குகிறது.

இத்தகைய அவரது அரும்பெரும் சிறப்பின் ரகசியம் என்ன? இத்தகைய விடாப்பிடியான ஒரு சக்தி பொருந்திய தன்மையை அவர் எப்படி அடைய முடிந்தது? அவர் ஓர் இணையற்ற தலைவராய் எப்படி அடைய முடிந்தது? அவர் ஓர் இணையற்ற தலைவராய் எப்படித் தம்மைத்தாமே செய்து கொண்டார்? இன்று அரசியலில் குறிப்பிட்டுக் கூறத்தக்க ஒரு சக்தியுள்ள தோழர் நாயக்கராக அவரைச் செய்த அபூர்வ குணங்களின் சேர்க்கையைப் பற்றி எனக்கு ஏற்பட்ட இக்குறுகிய கால அளவிற்குள் நான் எடுத்துக் கூறுவது அசாத்தியமாகும். ஆனால், ஒரு பொதுஜன சேவையாளர் என்ற முறையில், தோழர் இராமசாமி நாயக்கரின் சிறப்பு வாய்ந்த அருங்குணங்கள் என எனக்குத் தோன்றுவனவற்றை நான் உங்களுக்கு ஒரு நிமிஷத்தில் எடுத்துக் கூறிவிட முடியும். தமது கொள்கையில் அசைக்கமுடியாத ஒரு நம்பிக்கையில்லாமல் ஒருவரும் ஒரு கட்சியை நடத்திச் செல்ல முடியாது. மனித சமாஜத்தைச் சீர்திருத்தப் பிரயத்தனப்படுவோர்கள், தாங்கள் தேடுவது தங்களது நாட்டார்களின் நன்மைக்கும், இன்பத்திற்கும், அவசியமும், துணைபுரியக்கூடியவையுமாகும் என்பதை உணரவேண்டும்.

தோழர் நாயக்கருக்கு இந்த உணர்ச்சி ஏராளம் உண்டு. நீங்கள் அவர் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளலாம்; அல்லது ஏற்றுக் கொள்ளாமலிருக்கலாம். ஆனால், முன்னிலையில் நீங்கள் இருக்கும் போது, தமது கொள்கையின் நேர்மையில் நம்பிக்கையுள்ள ஒரு மனிதர் இருக்கிறார் என்பதை மாத்திரம் உங்களால் மறுக்க முடியாது. அவரது சேவைகள் அனைத்திற்கும் ஊற்றுக்கண்ணாய் விளங்கும் அவரது திருத்தூதின் பரிசுத்தத் தன்மையில் உள்ள அளவு கடந்த நம்பிக்கையும் இதுதான். அவரது சொந்த வீரத்தின் துணை ஆதரவில்லாமலிருந்தால், இதுமாத்திரம் அவரை வெகுதூரம் எடுத்துச் சென்றிருக்க முடியாது. தாம் சிரமும், விரும்பத்தக்கதுமெனக் கருதிய கொள்கைகளுக்காக ஒருமுறைக்கதிகமாகவே சிறைக்கோட்டம் நண்ணும்படி அவரைச் செய்ததும் அந்த வீரந்தான். தமது பொதுமக்களின் இரட்சண்யத்திற்காக வேறுபாடான மற்றொரு வழியில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது என அவர் கண்டபொழுது பழைய தொடர்புகளையெல்லாம் உதறித்தள்ளி, ஒரு புதுக்கட்சியைச் சிருஷ்டிக்கச் செய்ததும் அந்த வீரந்தான்.

ஒரு கோழை மனிதன், ஒரு பொழுதும் தலைவனாக விளங்க முடியாது. தனது ராணுவத்தை வெற்றிகரமாய் நடத்திச் செல்வோன் பயமற்ற ஒரு தளகர்த்தன்தான். அகத்தின் அழகு முகத்தில் தெரியுமானால், தோழர் நாயக்கர் சண்டையைக் கண்டு பயப்படுபவரல்ல என்பதை, ஒருவர் அவருடைய முகத்திலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

அவரது வெற்றிக்கு மிகுதியும் துணைபுரிந்த மற்றொரு குணாகுணங்களும் அவரிடம் உண்டு. அதாவது, அடக்கி ஒடுக்க முடியாதபடி அவருக்கு வாய்த்துள்ள சர்வானுகூல மனோபாவந்தான். இது ஒரு தலைவருக்குள்ள மகாபிரதானமான குணமாகும். தோழர் நாயக்கர், மனச்சோர்வோ அல்லது அதைரியமோ அடைந்திருப்பதை நீங்கள் பார்ப்பது வெகு அருமை. அவர் இன்பம் ததும்ப விளங்குபவர். உற்சாகத்துடன் விளங்குபவர். நம்பிக்கை ஜோதியுடன் விளங்குபவர்.

தமது சிஷ்யர்களிடையில் உற்சாகத்தை எழுப்பிவிடக்கூடியவர். அதிக எதிர்ப்பு இருப்பினும், அவர்கள் செயல்களில் இறங்கும்படித் தூண்டக்கூடியவர். இதற்குத் துணைபுரிவது, தமிழ்மொழி மீது அவர் செலுத்தும் ஆச்சரியகரமான ஆக்கினையாகும். தமது நாவன்மையினால் அம்பொழி மீது அவர் ஆக்கினை செலுத்துவதைப் போன்றே, தமது பேனாவினாலும், அதன் மீது தமது அதிகாரத்தைச் செலுத்தி வருகிறார். தமக்கு எதிர்ப்பேற்பட்டால், அவர் மகிழ்வுறுகிறார். தமக்கு எதிரிகளுக்கு ஆத்திரமூளும்படிச் செய்ய, அவருக்கு விபரீதமான சக்தியொன்றுண்டு. ஒரு பூணர குணம் வாய்ந்த பிரசாகருக்குரிய ஒவ்வொரு சாத்தியமான ஆயதத்தையும் அவர் உயோகிப்பார். வேடிக்கை, வினோதம், ஏளனம், வாக்குச் சாதுர்யம் அனைத்தும் அவருடைய பேச்சில் நிரம்பியுள்ளன. விஷயத்திற்குத் தகுந்த சொந்தமான கற்பனை அலங்காரங்களால், அவரது விரோதியை முறியடித்து விரட்டிவிடும் சக்தியும் அவரிடமுண்டு. சண்டையில் தோற்றுவிட்டாலுங்கூட உடனே எழுந்து வெற்றியினது பக்கமே இருப்பதாக வெற்றிக்குறிதோன்றும் முகத்துடன் தோழர் நாயக்கர் தமது எதிரியை எதிர்ப்பார்.

அவரது குணங்களிலெல்லாம் மகா பெரியதும், கண்ணியம் வாய்ந்ததும் என நான் கருதும் ஒன்றை, உங்களுக்குக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. அதாவது, அவரது அந்தரங்க சுத்தியும், தன்னல மறுப்புமாகும். மற்றத்தேசத்தில் மற்றத்தேசங்களில் இருப்பதைப்போல் நாமும் நமது தேசத்தில் பற்பல நோக்கங்களுடன் பொதுவாழ்வில் ஈடுபடுகிறவர்களைப் பெற்றிருக்கிறோம். தங்களது சுய விளம்பரத்தில் அளவு கடந்த மோகமுள்ளதால், சிலர் பொது வாழ்வில் இறங்குகின்றனர் அல்லது அதிகாரத்திலுள்ள கண்ணியமற்ற ஆர்வத்தாலும் சிலர் ஈடுபடுகின்றனர். சிலர் பொதுவாழ்வில் ஈடுபட்டிருத்தலின்றித் தனித்திருக்க முடியாததால், அதில் ஈடுபடுகின்றனர். அவர்களது உணர்ச்சியானது அவர்களை அப்படிச் சேரும்படிச் செய்கிறது. அவர்களது மனோ வேகமானது. அதில் இழுக்கிறது.

மனித சமூகத்தின் ஒவ்வொரு தவறும், நீதியும் அவர்களை நேரிலேயே தூண்டி செய்கையில் ஈடுபடும்படிச் செய்கிறது. எங்குப் பார்த்தாலும் கஷ்டங்களையும், ஆக்கிரமிப்புகளையும் காணும் அவர்களால் செயலற்றுக்கிடக்கவா, சோம்பித்திரியவோ அசாத்தியமாகிவிடுகிறது. உலகமே தனது விடுதலைக்காகவும், அபிவிருத்திக்காகவும் இத்தகைய மனிதர்களிடம் கடன்பட்டிருக்கிறது. தன்னலமற்ற பணியாளர்களாகிய இக்கண்ணியமான கூட்டத்தையே தோழர் நாயக்கரும் சேர்ந்தவராவார். அதிகாரஞ் செலுத்த அவரிடம் ஒன்றுமில்லை. ஆனால், பணி செய்து கிடக்கவே அவர் விரும்பியுள்ளார்.

தோழர் இராமசாமி நாயக்கரின் அருங்குணங்களைப்பற்றிய பூரணமானதொரு ஜாபிதாவை, உங்களுக்குக் கொடுத்துவிட்டதாக நான் பாவனை காட்டவில்லை.

**************************************************************************************

தீமைக்குத் தலை குனியாதவர்!

பினாங்கு 'தேசநேசன்' ஆசிரியர், அ.ந.பு.ஹமீதுக் களஞ்சியம் அவர்கள் (1939)

தமிழர்களிலே, நம் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களைத் தெரியாதார் இல்லை என்றே கூறிவிடலாம். தியாகத்தின் அருட்கனியாய், உழைப்புக்கு ஓர் உதாரணமாய், மக்கட்குச்சுயநலமோ, ஆடம்பரமோ அற்ற பணிபுரிதலையே தம் வாழ்க்கையின் லட்சியமாய்க் கொண்டு உழைத்துவரும் ஈரோடு இராமசாமிப் பெரியார் அவர்களின் பிறந்த தினத்தை, எவ்வித வித்தியாசமுமின்றிக் கொண்டாடி மகிழ்வது மிகவும் பொருத்தமானது – அத்யாவசியமானதுகூட என்பதே எனது அபிப்பிராயம்.

பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள், இம்மலேயாவுக்கு விஜயம் செய்திருக்கிறராரென்பதை உங்களில் அநேகர் மறந்திருக்கமாட்டீர்கள். சமத்துவ சமூதாய வாழ்வு, உலகில் பரிணமித்துப் பெருகி வளர வேண்டும் என்ற நோக்கத்தைச் சமாதானத்திலிறுத்தி உழைத்து வரும் அன்பர்களுக்கு, அப்பெரியார் இந்நாட்டுக்கு விஜயம் செய்த அந்நன்னாள் ஒரு சுபதினமாக என்றும் ஞாபகத்திலிருந்து வரும். பெரியாரின் இந்நாட்டு விஜயம் இங்குள்ள தமிழர்களிடையே ஒரு புதிய ஊக்கத்தையும், உற்சாகத்தையும், சொல்ல முடியாத அளவு விழிப்பையும் ஏற்படுத்திற்று. இங்குள்ள தமிழர்கள் தங்களது சக்தியை உணர்ந்தனர்; கடமையை அறிந்தனர். தங்கள் சமூக வாழ்வில் அட்டை போல் கவ்விப் பிடித்துக் கொண்டு, தங்களை முன்னேறவிடாது தடுத்துக் கொண்டிருக்கும் கோரமான குறைகள் இன்னதென்பதை யுணர்ந்து, அவைகளைக் களைந்தெறிய வீறுகொண்டு உழைக்க முன்வந்தனர். இங்குப் பெரியார் செய்த வீர கர்ஜனைப் பிரசங்கங்கள், மின்சாரம் போல், உயர்ந்தோர் முதல், சமூகத்தில் தாழ்ந்தோர் எனக் கருதப்பட்டவர்கள் வரையில் அனைவரது உள்ளத்திலும் தாக்கி அவர்களைத் தன் நிலையுணரச் செய்து சமூதாய முன்னேற்றத்திற்குரிய சரியான பாதையில் செல்லுமாறு அவர்களை ஊக்கியது என்பதை யாராவது மறுக்க முடியுமா?

1928-1929 ஆம் ஆண்டில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் இந்நாட்டிற்கு வந்தார். பேரா மாகாணத்திற் சிறந்த நகரான ஈப்போவில் அவ்வமயம் நடந்த அகில மலேயா தமிழர் மாநாட்டைத் திறந்து வைத்ததோடு, பின்னர் இந்நாட்டின் பல இடங்களுக்குச் சென்று ஆங்காங்கு அரும்பெரும் சொற்பொழிவுகளை நிகழ்த்தித் திரும்பிச் சென்றார். இவர் தமிழ்நாட்டையே தமது உடலாகவும், தமிழர் பணியையே தம் சுவாசமாகவும் கொண்டு, தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தமிழகத்துக்கும், தமிழ்மொழிக்கும் அர்ப்பணம் செய்துள்ளார். உடல் தளர்ந்து, நரை மிகுந்து, கம்பளிப் போர்த்து கைத்தடி தாங்கிய இன்றைய நிலையிலும் அளப்பருந் தொண்டுகள் செய்த கர்ம வீரராய் விளங்கிவரும் இவரைக் கண்டு உலகமே பிரம்மிப்பதில் வியப்பில்லை.

பெரியாரின் வாழ்க்கை நெடுகப் பெரும் போராட்டங்களுக்கே நிலைக்களனாக உள்ளதாகும். எவ்வகையில் போராட்டம்? தீமையிலிருந்து நன்மையைக் காப்பாற்றலும், பொய்மையிலிருந்து உண்மையைப் பாதுகாத்தலும், கொடிய பழக்கங்களையொழித்து நல்வழக்கங்களை ஏற்படுத்தலும், சுயநலக் கும்பல்களின் திருவிளையாடல்களிலிருந்து – அவற்றிற்கிலக்கான மக்களைத் தற்காத்தலும், சமூதாயத்தின் காலில் அகப்பட்டு நசிந்து போய்க் கிடக்கும் ஜனங்களைக் கைதூக்கிவிடலுமாகிய மகா பயங்கரமான போராட்டங்களே, நம் பெரியாரின் வாழ்நாட்களை அலங்கரித்து வந்திருக்கிறது.

அறியாமையாலும், கொடிய வழக்கங்களாலும் பலவித இன்னல்களுக்காளாகி, இந்த இன்னல்களுக்கெல்லாம் தங்கள் 'விதி' தான் காரணம் என, அந்த விதி என்ற ஒன்றைச் சிருஷ்டித்து அதன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு – தன் நிலையுணராது காலத்தைக் கடத்தி வந்த நம் இந்திய நாட்டின் ஒரு பெரும் பிரிவு மக்களை அதீதமான விழிப்படையச் செய்தது யார்? பெரியார் ஈ.வெ.ரா. அவர்களல்லவா? இது என்ன சாமான்யமான காரியமா? என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். பெரியாரவர்களின் தொண்டின் திறன் இன்னதென்பது விளங்கும்.

இன்று தமிழ்நாட்டில் சுதந்திரம், சமத்துவம், தாழ்த்தப்பட்டோருக்கு ஆலயப்பிரவேசம் என்றெல்லாம் முழங்கப்படுகிறதே, அவைகள் இன்றைய தினம் அசையாத உரம் பெற்று மிளிர அக்காலத்தில் பேரூழைப்புக் கொண்ட மூலபுருடர் யார் என்பது பற்றிச் சரித்திரக்காரர்கள் எழுதுகையில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களையே திட்டவட்டமாகக் குறிப்பிடுவார்கள்.

அரசியல் வாழ்விலே வெளி வேஷங்கள் போட்டுப் படாடோபமாய் வாய்ப்பந்தல்கள் இட்டு நடிப்பதற்கும், பெரியார் ஈ.வெ.ரா.வுக்கும் வெகுதூரம். தன்னடக்கமும், வைரம் பாய்ந்த நெஞ்சும், கலக்கமற்ற உள்ளமுங் கொண்ட பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள், மேற்கண்ட விதம் நடக்கும் நடக்கும் மக்கள் உண்மை நிலையுணராது செய்யப்பட்டு விடுவதைக் கண்டு மனம் புழுங்குகிறார். ஈ.வெ.ரா. அவர்களின் கொள்கை, போக்கு ஆகியவைகளைப்பற்றி, அவரது எதிரிகளால் பலவாறு கூறப்படுகிறது. அவைகறையெல்லாம் இங்கு விவரித்துக் கொண்டிருப்பது உசித்தமல்ல. ஆனால், ஒன்றை மட்டும் நான் இங்குக் கூறுவது என் சம்பந்தப்பட்டவரையில் என் கடமையென நான் உணர்கிறேன். நோய்க்குத் தகுந்த மருந்து கொடுத்தால் தான், நோய் சொஸ்தமாகுமென்பதை நீங்கள் அறிவீர்கள்.

பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள், பொது வாழ்வு என்னுந்துறையில் பழுத்த அனுபவமிக்க வைத்தியர். எனவே எந்தெந்த விஷயத்துக்கு எவ்வளவு கடுமையான முறையில் "ஒளடத"ப் பிரயோகம் செய்ய வேண்டுமென்பது அவருக்கு நன்கு தெரியும். நீண்ட நாட்கொடிய நோயை நீக்குவதற்கு, கடுமையான "ஒளடத"ப் பிரயோகம் செய்தால் தானே குணமேற்படும்? இந்த நிலையில் அவர் தம் காரியங்களை அயராது செய்து கொண்டு போவதால் தான் அவரை நன்கு உணர்ந்து கொள்ளத் திறமையற்ற அவரது எதிரிகள் பலவாறு கூற முற்படுகின்றனர் என எண்ணுகின்றேன். நல்லது எங்கு உண்டோ, அதைப் போற்றும் அருங்குணம் அவர்பால் அமைந்து கிடக்கிறது. சத்தியமார்க்கமாம் இஸ்லாத்தைப் பற்றி அவர் போற்றுவதற்குக் காரணம், அதன் உயர்ந்த தத்துவங்களும், நற்போக்கும் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களை வசீகரித்திருப்பதால்தான்.

தீமைக்குத் தலைகுனியும் பலஹீன குணம், பெரியார் ஈ.வெ.ரா.அவர்களிடம் சிறிதளவும் காணமுடியாது. இப்பெரும் போக்கு, அவரது இளமை முதலே அவரது உதிரத்தில் கலந்து போய் நிற்கிறதென்பதை, அவரது வாழ்க்கைச் சரிதையிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.

தோழர் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள், 1879-ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 17-ந் தேதி ஈரோட்டில் பிறந்தார். இவர் 6- வயதில் திண்ணைப் பள்ளிக்கூடம் சேர்ந்து, 10-வயதில் வெளிப்பட்டுவிட்டார். தம் தந்தையின் மளிகைக் கடையில் சேர்ந்துழைத்தார். இதில் வளர்ந்தவர் பொதுத் தொண்டில் ஈடுபட முற்பட்டுக் காங்கிரசில் சேர்ந்தார். சிறு வயதிலேயே சமூகக் கட்டுப்பாடுகளை மூடவழக்கங்களென வெறுத்து வந்ததனால் இவருக்குத் திருமணம் செய்துவிட்டனர். இவர் இதிலும் படியாதவராகிக் காங்கிரஸ் தொண்டில் முற்பட்டுப் பெரும் பணிகள் ஆற்ற முற்பட்டதனால், இன்று சென்னை மாகாணக் காங்கிரஸ்வாதிகளில் மிகப் பழைய காங்கிரசினர் எனக்கருதப்படவும் இடமேற்பட்டுள்ளது.

முதல் முதலாக, இவர் மதுவிலக்குப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. முதல் முதலாக இவர் மதுவிலக்குப் பிரசாரத்தில் ஈடுபட்டுழைக்க முற்பட்டதில், சிறைவாசத்திற்குள்ளானார். வெளிவந்ததும் தீண்டாமை ஒழிப்பிற்காக வைக்கம், சுசீந்திரம் என்னும் மலையாள வைதீக நகரங்களிற் சென்று, தீண்டாதாருக்கு அங்குத் தெருப்பிரவேச உரிமை பெறச் சத்தியாக்கிரகம் செய்ய முற்படவே, திருவாங்கூர் சமஸ்தானம் சிறைவாசம் அளித்தது. அதை அனுபவித்து, சென்னைக்கு வந்து கதர்ப்பிரச்சாரத்திலீடுபட்டு ஆற்றிய சொற்பொழிவுகளில் இராஜத்து வேஷம் இருந்ததெனக் குற்றம் சாட்டப்பட்டுச் சிறைவாசம் செய்யச் சென்றார். அதிலிருந்து வெளிவந்ததும் நாகை தென் இந்திய இருப்புப் பாதைத் தொழிலாளர் ஊதியக்குறைவிற்கென வேலை நிறுத்தம் செய்ய முற்பட்ட சமயம் அரசாங்க உத்தரவை மீறியதற்காகச் சிறைக்கோட்டம் சென்றார். வெளிவந்ததும், சமூக சீர்திருத்தத்தையும் நாட்டு உரிமையையும், காங்கிரசின் வாயிலாக அடையலாமென்ற நம்பிக்கையில் உழைத்தார். இதில் மன விகற்பங்களும், வேறுபாடுகளும் சிறிது சிறிதாக வளர ஆரம்பித்தன; முடிவாகக் காங்கிரசை விட்டு விலக நேர்ந்தது.

காங்கிரசிலிருந்து விலகியதும் 1925–ஆம் ஆண்டில் 'குடிஅரசு' வாரப்பத்திரிக்கையைத் துவக்கிச் சுயமரியாதை இயக்கத்தையும் தோற்றுவித்தார். 1929- பிப்ரவரி 18–ல் செங்கற்பட்டில், முதலாவது சுயமரியாதை மாநாட்டை நிறுவினார். இவ்வியக்கத்தை எதிர்க்கச் சென்னை ஆஸ்திக சங்கம் என்று ஒன்று ஏற்பட்டது. இது சிறிதுகாலம் எதிர்த்து நின்று மறைந்தது.

இவர் 1931- டிசம்பரில் மேல்நாடுகளுக்கேகி, ருஷ்யா, பிரான்சு, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து 1932–ல் இந்தியா திரும்பி, 1933–ல் தம் மனைவியாரை இழந்து 1936–ல் தம் அன்னையையும் இழந்து, தமிழ்நாட்டில் உழைப்பிற்கஞ்சாதுழைத்து, வருங்காலத்தில் கட்டாய இந்திக் கல்வியைக் காங்கிரஸ் கவர்ன்மெண்ட்டார் ஏற்படுத்த, அதைத் தமிழகப் பெருமக்களுடன் சேர்ந்து எதிர்த்துப் போராடி தமிழ் மக்களில் ஓர் மாபெரும் எழுச்சியை உண்டாக்கி, அடக்குமுறை ஆட்சிக்குட்பட்டு, நோய்வாய்ப்பட்டுப் பல பரிதாப நிலைகளுக்குள்ளாகி விடுதலையடைந்து, மறுபடியும் இன்று அஞ்சாதுழைத்து வருகிறார்.

இத்தகைய இணையற்ற தொண்டுகளில் ஈடுபட்டுள்ள தமிழ்க்கிழவரின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதில், தமிழர்களாகிய நாம் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.
*******************************************************************************************

இருபதாம் நூற்றாண்டின் வில்லியம் மாரிஸ்!

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தினர், திரு. பெசில் மாத்யூஸ் அவர்கள்.

அந்த ஈரோட்டுத் தாழ்வாரத்தில், தோழர் ஈ.வெ.ராமசாமியைக் கண்டு என் வணக்கத்தைத் தெரிவித்தேன். நரைத்த தலையும், அழகிய தாடியும், அழுத்தமான மூக்கும், மொத்தமான உதடுகளும், ஒளிவீசும் கண்களும், படைத்த அந்தப் புரட்சிக்காரரைக் கண்டதும், என் தந்தையார் நான் பள்ளி மாணவனாயிருந்த போது வில்லியம் மாரிசின் பொதுவுடைமைச் சொற்பொழிவைக் கேட்பதற்காக என்னை அழைத்துச் சென்ற அந்தக்காட்சி நினைவிற்கு வந்தது. புறத்தோற்றத்தில் மட்டுமல்ல. உள்ளுணர்ச்சியிலும் தோழர் ஈ.வெ.ரா. வில்லியம் மாரிஸ் போன்றவரே என்பதை அவருடன் நான் பேசிக்கொண்டிருந்த இரண்டு, மூன்று மணிநேரத்திற்குள் கண்டுகொண்டேன். அர்த்தமற்ற எந்தப் பழைய சமூதாயக் கட்டுப்பாட்டுகளையும், அடியோடு தகர்த்தெறிய வேண்டும் என்னும் அந்தத் துடிதுடிப்பு காலத்திற்கு ஒவ்வாத பழக்கவழக்கங்களையும், பழமைப் பாசிபடர்ந்துவிட்ட கருத்துக்களையும் துடைத்தெறிய வேண்டும் என்னும் அந்த நெஞ்சழுத்தம், "புதியதோர் உலகு செய்வோம்" என்னும் அந்த உறுதிப்பாடு - இவை அத்தனையிலும் தோழர் ஈ.வெ.ரா. வில்லியம் மாரிஸே தான். ஆம்! அவர் இருபதாம் நூற்றாண்டின் வில்லியம் மாரிஸ்! மாரிசைப் போலவே, ஈ.வெ.ரா.வும் எளிய வாழ்க்கையே வாழ்கின்றார். புள்ளியிட்ட ஒரு நீலச்சட்டை, சாதாரணமான ஒரு கால்சட்டை. அழுத்தத்திருத்தமான ஒரு கடிகாரச் சங்கிலி என்ற இவ்வளவில் வில்லியம் மாரிஸின் ஆடை அணிகலன்கள் அடக்கிவிடுகின்றன. அதுபோலத் தான் இந்த இந்திய நாட்டுச் சிந்தனைச் சிற்பியும், பருத்தி நூலால் செய்யப்பட்ட சர்வசாதாரணமான வேட்டியும், சட்டையுமே அணிந்து கொண்டிருக்கிறார்.

தோழர் ஈ.வெ.ரா. நடத்துகின்ற ஆங்கில வார இதழ் இருக்கிறதே – அதன் பெயராகிய (Revolt) "புரட்சி" என்பதை அவருடைய வாழ்க்கை வரலாற்றிற்கே பெயராய்ச் சூட்டிவிடலாம். அது மிகப் பொருத்தமாகவும் இருக்கும்.

செல்வாக்குள்ள ஒரு குடும்பத்திலே பிறந்த கட்டுக்கடங்காத இளங்காளை அவர்! பல புரட்சி வீரர்களைச் சாதுக்களாக மாற்றி அமைத்த தோழர் காந்தி இருக்கிறாரே, அவரிடமிருந்து தான் பொது வாழ்க்கைப் பைத்தியம் இவருக்கு முதலில் தொத்திக் கொண்டது. ஈரோடு நகரசபைத் தலைவரானார். காங்கிரசில் சேர்ந்தார். காந்தியின் சீடரானார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரானார். 1921-இல் சட்டமறுப்பு இயக்கத்தில் பெரும்பங்கு கொண்டு சிறை புகுந்தார். காங்கிரஸ் இயக்கத்தில் உள்ளீடாய்ப் பரவிவிட்ட பார்ப்பன ஆட்சியை எதிர்த்து காங்கிரசை விட்டு செளியேறினார். ஜஸ்டிஸ் கட்சியில் ஓர் இடதுசாரித் தலைவரானார். ஆனால், அந்தக் காலத்தில், ஜஸ்டிஸ் கட்சி "மிகமிக மெதுவாய்"ப் போய்க்கொண்டிருந்த கட்சி. ஆகவே துடிதுடிக்கும் வாலிபர்களையும், அதிதீவிரக் கொள்கைகளையும் கொண்ட சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தார். பிராமண ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவதில் அவருக்கு ஏற்பட்ட ஊக்கம் பிறகு கிறித்தவ, இஸ்லாம் மதங்களையும், அதற்குப் பிறகு எல்லா மதங்களையுமே எதிர்க்கும் உணர்ச்சியை அவருக்குத் தந்துவிட்டது. அய்ரோப்பாவில் அவர் சுற்றுப்பயணம் செய்த போது, மாஸ்கோவில் அவருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. இரஷ்யப் பொதுவுடமைத் திட்டத்தில் மகிழ்ச்சி நிறைந்த நம்பிக்கை கொண்டவராகவும், மத எதிர்ப்புத் தத்துவத்தில் மேலும் பலமடங்கு ஈடுபாடு கொண்டவராகவுமே அவர் இரஷ்யாவினின்றும் திரும்பி வந்தார். மதங்களை அழிப்பதில் அவர் காட்டிய வீரர் வேஷமும், அவருடைய பொதுவுடைமைப் பிரச்சாரத்தின் வேகமும், பலமும் அவரை மீண்டும் சிறைக்கோட்டம் புகச்செய்தன.

அடுத்த நாள் அவரை அவருடைய அலுவலகத்தில் கண்டேன். அங்கே அவருடைய படம் ஒன்று மாட்டப்பட்டிருக்கக் கண்டேன். அதன் ஒரு பக்கத்தில் படமும், மறுபக்கத்தில் பெர்னாட்ஷாவின் படமும் இருக்கக் கண்டேன். சொந்த அச்சகத்தின் வாயிலாகவே சொந்தக் கருத்துக்களைப் பொது மக்களுக்கு உணர்த்துவது வில்லியம் மாரிசுக்கும், தோழர் இராமசாமி நாயக்கருக்கும் உள்ள வியக்கத்தக்க இன்னொரு ஒற்றுமை என்பதையும் கண்டேன்.

***************************************************************************************


கன்பூசியசுக்கு ஒப்பானவர்!

சீனப் பேராசிரியர், சி.எஸ்.ஸீ. அவர்கள் (1939)

இன்று தமிழகத்தில், சமூதாயத்துறையில் சிறந்த பணியாற்றிவரும் ஒருவர் உண்டானால், அவர் பெரியார் இராமசாமிதான் என்பதை நீங்கள் ஓப்புக்கொள்வீர்கள். அவரால் தமிழ்நாடு அடைந்துவரும் முன்னேற்றம் பெரிது; மிகப்பெரிது!

சீனதேசத்துச் சன்-யாட்-சென் என்பவரைப்பற்றி நீங்கள் கேட்டிருக்கலாம். அவருடைய குருவான கன்பூசியஸ் என்னும் பேரறிஞருடன் பெரியார் இராமசாமி அவர்களை ஒப்பிடலாம்.

மூடப் பழக்கவழக்கங்கள் மலிந்துகிடந்த சீனத்தை, மறுமலர்ச்சி பெறச் செய்த டாக்டர் சன்-யாட்-சென்னுக்கு வழிகாட்டிய பெம்மான் கன்பூசியஸ் அவர்களைப் போல, உங்கள் தலைவர் பெரியாரும், தமிழ்நாட்டிலிருந்து சாதி வேறுபாட்டை அடியோடு தொலைக்க மிகவும் பாடுபட்டு வருகிறார்.

கடந்த பத்து ஆண்டுகளாக மலாய் நாட்டில் வாழும் தமிழர்கள், அதிதீவிர முன்னேற்றம் அடைந்திருப்பதைக் கண்டு முதலில் வியப்படைந்தேன். பிறகு அதற்குக் காரணம் பெரியார் தான் என்று அறிந்தேன்; மகிழ்ந்தேன்.

1929-ல் பெரியார் மலாய் நாட்டில் சுற்றுப்பயணஞ்செய்து, மலாய்த் தமிழர்களைத் தட்டி எழுப்பினார் என்பதையும், அவர் அப்போது ஆற்றிய சீர்திருத்த உரைகளால், மலாய்த் தமிழர்கள் பழைய பழக்கவழக்கங்களைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டனர் என்பதையும், அவருடைய அரிய தொண்டின் விளைவாக மலாய்த் தமிழர்கள் கீழ்நாட்டின் சிறப்பை நிலைநாட்ட முன்வந்திருக்கிறார்கள் என்பதையும் நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

*************************************************************************************************


மனிதன் மனிதனாக வாழச் சீர்திருத்துபவர்!

புரொஃபசர், ரங்கா அவர்கள்.


"இந்தியாவில் மும்மணிகளாய் மூவர் திகழ்கின்றனர். தேசீயக்கிளர்ச்சி உண்டு பண்ணி மக்களிடையே சுதந்திர உணர்ச்சியை ஊட்டினவர் காந்தியடிகள். பொதுவுடைமைத் தத்துவத்தைத் தீர ஆராய்ந்து, அதன் உண்மையினை உணர்ந்து, அதன் நன்மையினை மக்கள் அடைய வேண்டுமென்று கூறினவர் ஜவகர். மதத்தினை ஆராய்ந்து மூடக்கட்டுப்பாடுகளை அறுத்து மனிதன் மனிதனாக உரிமையுடன் வாழச் சீர்திருத்த முயல்பவர், ஈரோட்டு வள்ளல் ஈ.வெ.இராமசாமிப் பெரியார் ஆவார்."

*******************************************************************************************

புரட்சிவாடை வீசச்செய்பவர்!

டெல்லி, இந்தியத் தொழிலாளர் மன்றப் பொதுச் செயலாளர், வி.பி.கார்னிக் அவர்கள்.(1944)

பெரியாரிடத்தில் எனக்குப் பெருமதிப்புண்டு. தென்னிந்தியாவில் உள்ள பாட்டாளி மக்களைப் பிணைத்திருக்கும் அடிமைத்தனங்களை உடைத்தெரிவதற்காக அவர் ஆற்றியுள்ள தொண்டின் திறத்தை நான் நன்கு அறிவேன். தென்னாட்டைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பார்ப்பனரல்லாத மக்களின் சமூக, பொருளாதார விடுதலைக்குத் தக்க பலம் பொருந்திய சிறந்த ஆயுதம் திராவிடர் கழகம் என்னும் பேரியக்கம். பெரியார் இராமசாமி தான் அந்த இயக்கத்தின் மாபெருந் தலைவர்.

என்னுடைய ஆசையெல்லாம், அந்தப் பலம் பொருந்திய இயக்கம் மேலும் மேலும் வலுப்பெற்றுக் கூடிய விரைவில் தன்னுடைய முழுச் சக்திகளையும் திரட்டி, உழைப்பாளி மக்களுக்கு உடனடியாக விடுதலை கிடைக்குமாறு செய்துவிட வேணடுமென்பது தான். பெரியாரின் தலைமையில் பாடுபட்டு வரும் திராவிடர் கழகமானது, உள்ளபடியே தென்னிந்திய அரசியல் வானில் புரட்சிவாடை வீசச் செய்து விட்டது. நான் கலந்து உழைத்து வரும் தீவிர ஜனநாயகக் கட்சியும், அதன் தலைவர்களும் பெரியார் இராமசாமியைப் பற்றியும், அவரது இயக்கத்தைப் பற்றியும் மிக உயர்ந்த மதிப்புக் கொண்டிருக்கின்றனர்.

**************************************************************************************************

அஞ்சா நெஞ்சன்!

திரு. நீல்கன் பெருமாள் அவர்கள்(1939)

ஈரோடு இராமசாமி நாயக்கர் அவர்கள் மிக முக்கியமான ஒருதலைவராவார். தமிழர் உள்ளத்தில் ஒரு சிறந்த தியாகியாக அவர் குடிபுகுந்திருக்கிறார். ஒத்துழையாமைக் காலத்தில் காந்தியாரின் படம் பல வீடுகளிலும் தொங்கவிடப்பட்டிருந்தது போலவே, இன்றைய தினம் ஈ.வெ.ரா. அவர்களின் படங்கள் மிக மதிப்போடு தொங்கவிடப்பட்டிருக்கின்றன. பார்ப்பனர்கள், காங்கிரஸ் பார்ப்பனரல்லாதாரை அடக்கி ஒடுக்கி அடிமை வாழ்வு வாழச் செய்கின்றனர்
என்பதைத் தெளிவாக உணர்ந்த ஒரே காரணத்தாலேயே அவர் காங்கிரசைவிட்டு வெளியேறினார். அதுமுதற்கொண்டு எல்லா வகுப்புக்களுக்கும் ஒத்த உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, அவர் பெரும்போர் விளைத்திருக்கின்றார். தம் வாழ்க்கையில் சுயநல உணர்ச்சியென்பதே சிறிதும் கலவாத ஓர் அஞ்சா நெஞ்சன் என்பதே, அவரைப் பற்றிய என்னுடைய கருத்தாகும்.

தம்முடைய மாகாணத்து முதல் அமைச்சாராக வரவேண்டும் என்பது போன்ற ஆசைகள் அவருக்குச் சிறிதும் கிடையாது. அப்படிப்பட்ட பதவிப் போட்டிகளுக்கும் அவருக்கும் வெகுதூரம்.

ஓர் அரசியல்வாதி என்கின்ற முறையில், தென்னாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் வகுப்புக்களுக்கும், பிரிவினருக்கும் ஒத்த உரிமைகளும், ஒத்த நீதியும் அளிக்கப்பட வேண்டுமென்பதே அவருடைய கொள்கை. இத்தகைய கண்ணியமான நோக்கங்களோடு, அவர் தம்முடைய சமூதாயம் - தமிழர் சமூதாயம் - முன்னேற மிகவும் பாடுபட்டு வருகிறார். இப்போது மக்களெல்லாம் அந்த ஈரோட்டுப் போர்வீரரை மேலும் மேலும் பாராட்ட முன்வந்து விட்டார்கள். தங்களைக் காப்பாற்ற வந்த ஒரு புண்ணிய புருஷராகவே, அவர்கள் அவரை எண்ணி வணங்குகிறார்கள். 'பெரியார்' என்றே, அவரை அன்போடு அழைக்கிறார்கள்.

*************************************************************************************************

ஏழை மக்களுக்குத் தொண்டு செய்பவர்!
M.R. ஜெயக்கர் அவர்கள்(1930)

சுயமரியாதை இயக்கம் ஏழைகள், கஷ்டப்படுகிறவர்கள், அநீதிக்கு உட்படுத்தப்பட்டிருப்பவர்கள், சமத்துசத்தை அடையாதவர்கள் ஆகியோர்களை முன்னேற்றுவதற்காகவே ஏற்பட்டது. நமக்கு எதிரிகள் சர்க்காராயினுஞ்சரி, மேல் ஜாதியாரெனப்படுவோராயினுஞ் சரி, அவர்கள் எதிர்ப்பை நாம் சிறிதும் பொருட்படுத்தக்கூடாது.

திரு.ஈ.வெ.இராமசாமியார் சட்டசபைகளைப் பற்றியோ, அரசாங்கத்தைப்பற்றியோ கவலை கொள்ளாதவர். அவர் ஏழைகளுக்குத் தொண்டு செய்வதே தமது பிறவியின் பயன் என்று கருதியிருப்பவர். இவர் உங்கள் இயக்கத்திலிருக்கிறார்!

உங்களுடைய இயக்கத்தில் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும், மகமதியர்களும் சேர்ந்திருப்பது விசேஷமாகும். மதத் தலைவர்களும், காங்கிரஸ் தலைவர்களும், செய்யமுடியாத காரியத்தை, நீங்கள் செய்து முடித்திருக்கிறீர்கள்.


************************************************************************************************

சுயநலக் கூட்டத்தை எதிர்க்க அவதரித்தவர்!

முதுபெரும் புலவர், அ.வரதநஞ்சையபிள்ளை அவர்கள்.(1944)

நான் சைவ சித்தாந்தக் கூட்டங்களிலும் கலந்து கொள்கிறேன். சுயமரியாதைக் கூட்டங்களில் கலந்து கொள்கிறேன். இதனால் என்னைச் சிலர் கொள்கையற்றவன், பச்சோந்தி என்று கூடச் சொல்வார்கள். அது தவறு. எனக்கும், பெரியாருக்கும் கொள்கையில் சில வேறுபாடுகளுண்டுதான். எனினும், பொதுமக்களுக்கு அவர் செய்த தொண்டு மிகப் பெரியது. அதனை நான் மதிக்கிறேன்; போற்றுகிறேன். யாகத்தின் பெயரால் பசுக்கொலை முதலிய கேடுகளை எதிர்க்கப் புத்தப் பெருமான் தோன்றினார்.... தமிழழையும், தமிழரையும் அடிமைப்படுத்தி வரும் சுயநலக் கூட்டத்தை எதிர்க்கப் பெரியார் அவதரித்துள்ளார். பெரியார் தோன்றியிராவிடில், நாம் மிகக் கீழான நிலையில் வெட்கமில்லாமல் "சூத்திரன்" என்று அழைத்துக் கொள்வதில் பெருமை கொள்ளும் பேதமையில் இருந்திருப்போம்.

தமிழனின் தன்மானக் குரல், புத்துணர்ச்சி, உள்ளக் கொதிப்பு, முன்னேற்றம் எல்லாற்றிற்கும் பெரியார் தான் காரணம். பெரியாருக்கு வயது 66. எனக்கு 67. இந்த முறையில், அவர் எனக்கு இளைய சகோதரர் தாம். எனினும், அவர் ஆற்றிவரும் அறிவுத் தொண்டினைப் பார்க்கும் பொழுது அவரை எனக்கும் பெரியாரென்றே நான் மதிக்கின்றேன்.

கடவுளை மறுப்பது என் கொள்கையல்ல. கடவுளின் பெயரால் அக்கிரமங்கள் நடப்பது கண்டுதான், கடவுளை மறுக்கிறார்கள். பாமர மக்கள் விழிப்புற வேண்டும். நான் சுயமரியாதைக்காரன். எனக்குச் சுயமரியாதை வேண்டாமா? ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை வேண்டும்!

***********************************************************************************************

தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்!

நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், M.A., B.L.,(1942)

"பெரியார் இராமசாமி அவர்கள், திராவிடருக்குப் பொதுவாயும், தமிழருக்குச் சிறப்பாயும், உரிமையும் பெருமையும் உண்டுபண்ண உழைக்கும் பெருந்தலைவர்; உள்ளொன்றுவைத்துப் புறமொன்று பேசும் போலிப் பெரியார் வரிசையில் சேராதவர். எண்ணிய எண்ணியாங்கு எய்தும் திண்ணிய முயற்சியுடையார். கிளைபகை கருதாமல், பொதுநலமொன்றையே பேணித் தம் உள்ளத்தாற் பொய்யாதொழுகும் நேர்மையாளர். புகழும், பழியுமிகந்து, அச்சமறியா உரனுடைய உள்ளத்தராய், என்றும் ஒன்று போல் நின்று உற்றாரிடத்துக் குறைகாணில் மறையாதுரைத்து, வலியார் மெலியாரை நலியாது எதிர்த்து, எளியவர் தோழராய்ப் போராடும் வீரர். தனக்கென வாழாப் பிறருக்குரியாளருள் தலையணி நிலையுடைத்தக்கார். அவரோடு கருத்து வேறுபாடையாரும், அவர் நேர்மையும், பகையற்ற உளப்பாங்கும், அஞ்சாமையும் பாராட்டும் தகவுடையார். வேடத்தால், விரகால் கடவுட் பெயரால் மக்களை மருட்டி வாழ்பவர் விரைந்து மறைய மெய்யுரைத்துத், தம் குற்றம் காண்கிற்கும் ஆள்வினையுடையார்."

"தற்காலத் தமிழகத்தில் தலைநின்று, ஒல்லும் வகை ஓயாது உழைத்து, தமிழர் வாழ்வு வுயர்வளம் சிறக்க உரிமைப் போர்த்தலையணியில் பொருதுவரும் ஒப்புயர்வற்ற தலைவர், இராமசாமிப் பெரியார். காந்தியடிகளாலும் பாராட்டப்பெற்றுப் பொதுநலம் பேணும் அறம் திறம்பா அருண் மறவரிவர். கலாநிலையக் கல்விப் பட்டங்கள் பெறாமலும், மானமிழந்து பிறர் பின் நின்று பதவி முதலிய வீண் பெருமைதேட விரும்பாமலும், ஊக்கமும், வாய்மையும், ஆக்கமனைத்தும் தரும் என்பதை நாள்தோறும் தாம் வாழ்ந்துகாட்டும் சால்புடையார். கல்வி வளம் செல்வம் போல் மிகுந்து மலிந்த ஆங்கில நாட்டில், கல்லூரிப் பயிற்சி மிக இல்லாமல், தன்னலமறந்து, பிறர் உரிமை பேண முயன்று, பெருமையும் புகழும் பெற்றுயர்ந்த 'பிராட்லா'வைப் போலவே, நமது பெரியாரும், தம் வாழ்வனைத்தும் தமிழர் உரிமை பேணும் அறப்போருக்குதவி, நல்லோர் மதிப்பும் அல்லோர் அழுக்காறும் நாளும் பெருக்குமியல்புடையார்.

*****************************************************

"என்றும் எதிரிகளாலும் மதிக்கப்படும் இயற் பெருமை வாய்ந்தவர். அதற்குக் காந்தியடிகளின் சூழ்ச்சித் துணைவரும், கூர்ந்த மதியும், கொண்டதை முடிக்கும் திறமும் மிகுந்த தமிழ்நாட்டுக்குக் காந்தி எனப் புகழ்பெற்ற வருமான சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி அவர்கள் வலிய வீட்டுக்கு வந்து நட்புறவை நாடிப் பாராட்டப் பெற்றார் பெரியார் என்பதே போதிய சான்றாகும். கட்டாய இந்தித் திமிரை மட்டம் தட்டிய தமிழர் படைத் தலைவராய்ப் பொருது, வென்றி விளைத்தவர் தீண்டாத தீமையை அறவே ஒழித்து ஆலயங்களை அனைவருக்கும் திறக்கப் பண்ண அரும்பாடுபட்டவர். வைக்கம் சத்தியாகிரகப் போரில் தனிப்பெரும் வீரராய், நாடு கடத்தவும், சிறை புகுத்தவும், தளராத தறுகண்மையோடு அறப்போர் புரிந்த மறவர். இவரோடு சில பல துறைகளில் கருத்து வேறுபாடு உடையவரும், இவர் தம் பல சிறந்த பண்புகளையும், பொதுநல ஆர்வத்தையும், சமூக சேவையையும் பாராட்ட விரும்புமாறு அரும்பல செயலாற்றிய புகழ்க்குரியார்."

********************************************************************************************************

தமிழ் மக்களைத் தட்டியெழுப்பியவர்!
செட்டிநாட்டுக் குமாரராஜா, திரு.ஏ.முத்தையச் செட்டியார் அவர்கள்(1938)

இருபது ஆண்டுகளுக்கு முன் நமது மாபெருந் தலைவர்களான தியாகராயர், பனகல் அரசர் ஆகியோர், நம் தமிழ் மக்களின் நன்மைக்காக, நமது நீதி இயக்கத்தை ஆரம்பித்தனர். நமது கட்சியின் உழைப்பால் தாழ்த்தப்பட்டோரும், சிறுபான்மையினரும், மற்ற மக்களுடன் சம நிலையுடன் வாழ வசதியேற்பட்டது. அவர்கள் உழைப்பால் பார்ப்பனரல்லாதார்கள் அளவிறந்த நன்மைகள் பெற்றனர். இடையில் நமது தலைவர்களின் மனவேறுபாட்டால், சென்ற தேர்தலில் தோல்வி பெற்றோம். ஆனால், நமது பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள், எந்தத் தலைவர்களின் தூண்டுதலுமில்லாது தாமே தனியாகத் தம்முடைய தோழர்களுடன், சென்ற ஒன்றரை ஆண்டுகளாகத் தமிழ்நாடு முழுமையும் சுற்றுப் பிராயணஞ் செய்து, சொற்பொழிவாற்றி தமிழ் மக்களைத் தட்டியெழுப்பினார்.

************************************************************************************************

நாட்டுப் பிரிவினைக்கு வித்திட்டவர்!

"லிபரேட்டர்" ஆசிரியர்,டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி, எம்.ஏ.,பி.எச்.,டி.,பார் - அட் - லா.

திரு.ஈ.வெ.ரா. இராமசாமி, அச்சம் என்பதையே அறியாத சமூதாய சீர்திருத்தவாதி. வர்க்கத்திற்கோர் வட்டாரம் என்ற முறையில் இனவாரியாக நாட்டைப் பிரிக்கும் கொள்கை கேலிக்கிடமானதாகக் கருதப்பட்ட அந்தக் காலத்திலேயே "திராவிடநாடு திராவிடருக்கே" என்று அவர் முழங்கி வந்தார். எல்லோரும் அந்தத்தத்துவத்தைக் குறைகூறிய காலத்தில், அவர் மட்டும் அழுத்தந்திருத்தமாய் அதை ஆதரித்துப் பேசினார். அவர் தம் இடைவிடாத பிரச்சாரத்தினால், தென் இந்தியா தனிநாடாகப் பிரிய வேண்டியது தான் என்பதைப் பாமர மக்களெல்லாங்கூட உணர்ந்து ஒப்புக்கொள்ளும்படிச் செய்து விட்டார். அவருடைய தொண்டின் பயனாகத் திராவிட நாட்டிற்கு விடுதலை தேவை என்பதை, இன்று பொது மக்கள் தெளிவாக அறிந்து கொண்டனர்.

இப்பொழுது நான் கூறியதெல்லாம் சில குறிப்புகள் தாம். விவரமானவையல்ல. தோழர் நாயக்கருடைய வாழ்க்கையில் வீரம், சுயேச்சை, தன்னலமற்ற வேலை ஆகியவற்றின் எடுத்துக்காட்டுகள் நிறைந்திருக்கின்றன.

நீடுழி வாழ்க!

*****

காஞ்சி, பரவஸ்து இராஜகோபாலாச்சாரியார். B.A.,(1939)

தமக்கென வாழாது பிறர்க்கே வாழ வேண்டுமென்பது, பண்டைத் தமிழரின் உயரிய கருத்தாகும். இச்சீரிய கருத்தைத் தம் வாழ்நாட்களில் கொண்டு, அதன்படி எல்லியும், காலையும் தூய தொண்டாற்றி, மக்கள் அனைவரும் மாய வலையில் சிக்காவண்ணம் அறிவு கொளுத்தி, "பிறப்பொக்கும்" என்னும் தூய மொழியை இம்மாநிலத்தில் நிலைநாட்டிய பேரறிஞருள், நம் ஈ.வெ.ராமசாமி அவர்கள் முதல்வர் என்றால், வேறு கூறவேண்டுமா?

இத்தகையார் வாழ்க்கையில், குறளில் கூறிய இயல்புகள் எல்லாம் தாமாகவே அமைதல் இயற்கையேயாகும். பெரியார் வாழ்க்கையும், தன்னலம் கருதாது பிறர்க்கே உழைத்து ஏழையானதும், தாய், தந்தை, தாரம், தமர் அனைத்தும் நோயெனக் கருதி, அவர்கள் பிரிந்த காலத்தும், இன்ப துன்பமில்லாமல் மனஅமைதியோடு "கருமே கண்ணாயினர்" என்பதற்கோர் இலக்கியமாகவும் விளங்கினார்கள். சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றி, அறிவு கேடர்க்குத் தம் சான்றாண்மையால் பகுத்தறிவூட்டி, ஏனைய தமிழர் வாழ்வுகண்ட தெள்ளியராவார். அரசியல் போரிலே மூண்டு முன்னிலையில் நின்று நாடு விடுதலைபெறச் சீரிய தவமியற்றும் சிங்கம் ஈ.வெ.ரா. அவர்கள் நீடுழி வாழ்க! என்று போற்றுவதல்லாமல் வேறு கூறுதல் மிகையெனக் கருதுவேன்.

******************************************************************************************************************

உண்மையிலேயே பெரியார்!
டி.கே.சிதம்பரநாத முதலியார் B.A., B.L.,(1929)

இராமசாமிப் பெரியார் உண்மையிலேயே ஒரு பெரியார் என்பதற்கும், ஒரு பெரிய சக்தி வாய்ந்தவர் என்பதற்கும் வேண்டிய ஆதாரங்கள் இருக்கின்றன. அதாவது ஓர் உண்மையான பெரியாருக்குவேண்டிய குணங்கள் மூன்று. அவையாவன:-

1- அவரைப் பற்றி உலகத்தார் - "தப்பபிப்பிராயம்" கொள்ள வேண்டும்.

2- அவரது கொள்கைகள் எங்கும் - கண்டிக்கப்பட வேண்டும்.

3- அவர் கடுமையாக வையவும், சபிக்கவும்பட வேண்டும்.


எனவே, இத்தகைய மூன்று தன்மைகளையும் பெற்றவர், நமது பெரியாராவார். தேசீய இயக்கத்தில் பெரிதும் ஈடுபட்டு மனப்பூர்வமாக உழைத்தவர். பல கஷ்டம் என்பதையும், அதற்காக நஷ்டங்கள் அடைந்தவர்கள் என்பதையும் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. சமூதாயத் துறையில் இறங்கி, வைக்கம் முதலிய இடங்களில் தாழ்ந்த மக்களுக்காகச் சத்தியாக்கிரகம் முதலியவை செய்து, அதற்காகச் சிறையும் சென்று தெருவில் நடக்கும் உரிமை முதலியவைகளை நிலை நாட்டியவர் நமது பெரியாரேயாகும்.

*************************************************

சுயமரியாதை உணர்ச்சியைத் தமிழ்நாட்டில் துவக்கிவிட்டவர் நாயக்கர் ஆவர். பார்பபனரல்லாத இயக்கத்திற்குப் புத்துயிர் அளித்த பெருமையும், அவருக்கே உரித்தானது. இன்று இம்மாகாணம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நமது இயக்கம் கொண்டாடப்படுகிறது. அம்மகத்தான பெருமைக்கு அருகர் நாயக்கரே! இதைப்பற்றி மேலும் கூறுவது மிகையே!

முதன் முறையில் அவர் பிரசங்கத்தைக் கேட்ட போது நான் பிரமித்துப் போனேன். அவருடைய பேச்சில் ஆற்றல் தொக்கி நிற்கிறது.

'குடி அரசி'ன் பெருமை மிக ஆகும். ஆடாததையெல்லாம் ஆட்டி வைத்த பெருமை 'குடிஅரசு'க்கே உரித்தானதாகும். இதற்குக் காரணம் பெரியாரின் சொல்லும் எழுத்தும் வன்மை கொண்டதாக இருந்ததே.

அவருடைய 'குடிஅரசு' பத்திரிக்கையில், மக்கள் மனதைக் கவரத்தக்க அளவு கடந்த சக்தி இருப்பதற்குக் காரணம் அழகான ஆராய்ச்சியா? தமிழா? இல்லை. தன் உள்ளக் கிடக்கையில் உள்ளதை அப்படியே எடுத்துச் சொல்வதுதான் உண்மையிலேயே, எத்தகைய கல்வியாளரும், கோடிக்கணக்கான ஜன சமூகமும் திகைக்கத்தக்க பத்திரிக்கையை, இவர் நமக்குக் கொடுத்திருக்கிறார்.

******************************************************************************************************

பேசியவாறே செய்து காட்டுபவர்!

முன்னால் அமைச்சர்,திவான் பகதூர். எஸ்.குமாரசாமி ரெட்டியார்.(1928)

எத்தகைய சமூக ஊழியம் நாயக்கர் அவர்கள் செய்திருக்கிறார் எனப் பேச முயல்வது பைத்தியக்காரத்தனமாகும். தோழர் இராமசாமி நாயக்கர் அவர்கள், கபடமற்றவர். மனதில் நினைப்பதைப் பேசியும், பேசியவாறே செய்தும் காட்டுபவர். இத்தகைய பெருந்தலைவரைப் பாராட்டுகிறேன்.

*******************************************************************************************

உயரிய உதவி செய்து வருபவர்!

கொச்சி, "யுக்திவாதி" ஆசிரியர்,எம்.சி.ஜோசஃப் அவர்கள்(1933)

"உங்கள் இயக்கத்தின் முக்கிய வெற்றிகளைப் பற்றிய எதிரொலி மேல்காத் மலைத் தொடரைத் தாண்டிவந்து எங்களுக்கு வியப்பையும், சந்தோஷத்தையும் அளித்ததுண்டு. உங்களுடைய மாபெருந்தலைவான தோழர் ஈ.வெ.இராமசாமியின் சேவைகளுக்காக, நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். வேளாவேளைகளில் அவர் எங்கள் நாட்டுக்கு வந்து பல கூட்டங்களில் பேசி, எங்களுக்கு உரிய உதவி செய்து வருகிறார்."

*****************************************************************************************************

இயற்கையின் புதல்வர்!

வ.ரா.அவர்கள்

"தேர் இல்லை, திருவிழா இல்லை, தெய்வம் இல்லை என்றார் நாயக்கர்; சுவாமியைக் குப்புறப்போட்டு வேட்டி துவைக்கலாம் என்கிறார். இவரைப் காட்டிலும் பழுத்த நாஸ்திகன் வேறு எவருமே இருக்க முடியாது. 'பாதகன்' என்று சிலர் உறுமுகிறார்கள். வீட்டைக் கட்டி வைக்கோலைத் திணிப்பகைக் காட்டிலும், வீடு கட்டாமலே வைக்கோலைப் போராய்ப் போடலாம் என்ற சிக்கன யோசனை சொல்வது தவறா? அழுகி அழுகிப் போய் புழு நெளியும் உடலுடன் இருப்பதைக் காட்டிலும், உயிர் விடுவது உத்தமம் என்று அபிப்பிராயம் கொடுத்தால் "சாகச் சொல்கிறான் பாவி" என்று திட்டுவதா?

கண்டவர்க்கெல்லாம் குனிந்து சலாம் செய்து மண்ணோடு மண்ணாய் ஒட்டிக் கொண்டு மார்பால் ஊர்ந்து செல்ல வேண்டாம் என்று சுயமரியாதை உணர்ச்சியை ஊட்டினால், "பாபி, நமஸ்காரத்தைக் கண்டிக்கிறான்" என்று அபத்தம் பேசுவதா? மனசாட்சிக்கும், தொண்டுக்கும் பக்தரான நாயக்கரை, நாஸ்திகன் என்று அழைக்கும் அன்பர்கள், நாஸ்திகம் யாது என்றே தெரிந்து கொள்ளவில்லை என்றே சொல்லுவேன்…

அநீதியை எதிர்க்கத் திறமையும், தைரியமும் அற்ற ஏழைகளாய்ச் சொரணையற்றுக் கிடந்த தமிழர்களின் உள்ளத்தை, அடி தெரியும்படி கலக்கிய பிரம்மாண்ட பாக்கியம், நாயக்கரைப் பெரிதும் சேர்ந்ததாகும். அப்பா! நாயக்கரின் அழகுப் பிரசங்கத்தை, ஆணித்தரமான சொற்களை, அணிஅணியாய் அலங்காரஞ் செய்யும் உவமானங்களை, அவரது கொச்சை வார்த்தை உச்சரிப்பை, அவரது வர்ணனையை ,உடல் துடிதுடிப்பைப் பார்க்கவும், கேட்கவும், வெகு தூரத்திலிருந்து ஜனங்கள் வண்டுகள் மொய்ப்பது போல் வந்து மொய்ப்பார்கள். அவர் இயற்கையின் புதல்வர்! மண்ணை மணந்த மணாளர்! மண்ணோடு மண்ணாய் உழலும் மாந்தர்களுக்கு, நாயக்கரின் பிரசங்கம் ஆகாய கங்கையின் பிரவாகம் என்பதில் சந்தேகமில்லை….

தயங்காமல் செய்ய வேண்டும் என்று தோன்றியதைத் தயங்காமல் செய்யும் தன்மை அவரிடம் காணப்படுவதைப் போல, தமிழ்நாட்டில் எவரிடமும் காணப்படுவதில்லை. தமிழ்நாட்டின் வருங்காலப் பெருமைக்கு, நாயக்கர் அவர்கள் முன்னோடும் பிள்ளை; தூதுவன். வருங்கால வாழ்வின் அமைப்பு அவர் கண்ணில் அரைகுறையாகப் பட்டிருக்கலாம். (எவர் கண்ணிலேனும் அது முழுமையாகப் பட்டிருக்கிறதாக யார் உறுதியாகச் சொல்ல முடியும்?) ஆனால், மலைகளையும், மரங்களையும், வேரோடு பிடுங்கி யுத்தம் செய்த மாருதியைப் போல, அவர் தமிழ்நாட்டின் தேக்கமுற்ற வாழ்வோடு போர் புரியும் வகையைக் கண்டு, நாம் வியப்படையாமல் இருக்க முடியாது.

***********************************************************************************************************

முற்றுமுணர்ந்த பேராசிரியர்!

"கல்கி"

சாதாரணமாக இராமசாமியாருடைய பிரசங்கங்கள் மூன்று மணி நேரத்திற்குக் குறைவது கிடையாது. இந்த அம்சத்தில் தென்னாட்டு ராமசாமியார் வடநாட்டுப் பண்டித மாளவியாவை ஒத்தவராவார். ஆனால், இருவருக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. பண்டிதரின் பிரசங்கத்தை, அரை மணி நேரத்துக்கு மேல் என்னால் உட்கார்ந்து கேட்க முடியாது. 'பஞ்சாப் படுகொலையைப் பற்றிய தீர்மானத்தின் மேல் பேசவேண்டுமென்றால், பண்டிதர், சுராஜ்உத்டௌலா ஆட்சியில் ஆரம்பிப்பார். 1885-ஆம் வருஷத்தில் காங்கிரஸ் மகாசபை ஸ்தாபிக்கப்பட்ட காலத்திற்கு வருமுன், பொழுது விடிந்துவிடும். ஆனால், இராமசாமியார் இவ்வாறு பழங்கதை தொடங்குவதில்லை. எவ்வளவு தான் நீட்டினாலும் அவருடைய பேச்சில் அலுப்புத் தோன்றுவதே கிடையாது. அவ்வளவு ஏன்? தமிழ்நாட்டில், இராமசாமியாரின் பிரசங்கம் ஒன்றை மட்டுந்தான் என்னால் மூன்று மணி நேரம் உட்கார்ந்து கேட்க முடியுமென்று தயங்காமல் கூறுவேன். அதிக நீளம் என்னும் ஒருகுறைபாடு இல்லாவிட்டால், ஈரோடு ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கக்குத் தமிழ்நாட்டுப் பிரசங்கிகளுக்குள்ளே முதன்மை ஸ்தானம் தயங்காமல் அளித்து விடுவேன். அவர் உலகானுபவம் என்னும் கலாசாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை. எங்கிருந்துதான் கலாசாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை. எங்கிருந்துதான் அவருக்கு அந்தப் பழமொழிகளும், உபமானங்களும், கதைகளும், கற்பனைகளும் கிடைக்கின்றனவோ நானறியேன்!

நாம் உபயோகிக்கும் சொற்கள் எல்லாம் செந்தமிழ்ப் பதங்கள்தாமாவென்று, நாயக்கர் சிந்திப்பதில்லை. எழுவாய், பயனிலைகள், ஒருமை - பண்மைகள், வேற்றுமையுருபுகள் முதலியவைகளைப் பற்றியும் அவர் கவலைப்படுவதில்லை. ஆனால், தாம் சொல்ல விரும்பும் விஷயங்களை மக்களின் மனத்தைக் கவரும் முறையில் சொல்லும் வித்தையை அவர் நன்கறிவார். அவர் கூறும் உதாரணங்களின் சிறப்பையோ சொல்ல வேண்டுவதில்லை.

இராமசாமியாரின் பிரசங்கம் பாமர ஜனங்களுக்கே உரியது என்று ஒரு சிலர் கூறக்கேட்டிருக்கிறேன். பாமர ஜனங்களை வசப்படுத்தும் ஆற்றல், தமிழ்நாட்டில் வேறெவரையும்விட அவருக்கு அதிகம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இதிலிருந்து அவருடைய பிரசங்கம் படித்தவர்களுக்கு ரசிக்காது என்று முடிவு செய்தல் பெருந்தவறாகும். என்னைப் போன்ற அரைகுறைப் படிப்புக்காரர்களேயன்றி, முழுதும் படித்துத் தேர்ந்த பி.ஏ., எம்.ஏ., பட்டதாரிகளுங்கூட அவருடைய பிரசங்கத்தைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறார்கள். அவருடைய விவாதத்திறமை அபாரமானது. "இவர் மட்டும் வக்கீலாகி வந்திருந்தால், நாமெல்லாம் ஓடு எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்" என்று ஒரு பிரபல வக்கீல், மற்றொரு வக்கீல் நண்பரிடம் கூறியதை நான் ஒரு சமயம் கேட்டேன்.

உபயோகமற்ற வாதங்களும், அவர் வாயில் உயிர் பெற்று விளங்கும். ஓர் உதாரணம் கூறி முடிக்கிறேன். அந்தக் காலத்தில் ஸ்ரீமான் நாயக்கர் மாறுதல் வேண்டாதவராக விளங்கியபோது சட்டசபைப் பிரவேசத்துக்கு விரோதமாகப் பல பிரசங்கங்கள் புரிந்தார். அப்போது அவர் கூறிய வாதங்களில் ஒன்று சட்டசபைப் பிரவேசத்தினால் வீண்பணச் செலவு நேரும் என்பது.

"ஒரு ஜில்லாவில் சுமார் 30,000- வாக்காளர்கள் இருப்பார்கள். அபேட்சகராக நிற்பவர், இந்த 30,000- 'கார்டாவது' போடவேண்டும். சர்க்கார் தபால் இலகாவுக்கு லாபம் இத்துடன் போகாது. இந்த அபேட்சகர் செத்துப் போய் விட்டதாக, எதிரி அபேட்சகர் ஒரு வதந்தியைக் கிளப்பிவிடுவார். நான் செத்துப்போகவில்லை. உயிருடன் தான் இருக்கிறேன் என்று மறுபடியும் 30,000- கார்டு போடவேண்டும்."

நாயக்கரின் இந்த வாதத்தில் அர்த்தமேயில்லை என்று சொல்ல வேண்டுவதில்லை. அதுவும், எழுத்தில் பார்க்கும்போது வெறும் குதர்க்கமாகவே காணப்படுகிறது. ஆனால், அப்போது - ஸ்ரீமான் நாயக்கர் கூறிவந்தபோது, நானும் இன்னும் 4,000- ஜனங்களும் ஒவ்வொரு வாக்கியத்துக்கு ஒருமுறை 'கொல்' என்று சிரித்து மகிழ்ந்தோம்.

(1931-ல் 'ஆனந்தவிகடன்' இதழில் எழுதப்பட்டது)

*************************************************************************************************************

புதிய சகாப்தத்திற்கு முதன்மையானவர்!
நாரண - துரைக்கண்ணன் அவர்கள்.(1939)

சோம்பேறித் திண்ணை வேதாந்தமும், வாய் வேதாந்தமும் பேசி, வீண் பொழுதாக்கி, அர்த்தமற்ற சாதி, சமயப் பேதங்களாகிய சகதியில் அழுந்தி, ஊக்கமும், முயற்சியும், தன்மதிப்பும், இன்றி, உறங்கிக் கிடந்த தமிழர்களைத் தட்டியெழுப்பிய தமிழ்நாட்டுத் தலைவர்களுள் ஈரோடு பெரியார் ஈ.வெ.ரா.இராமசாமி தலைச்சிறந்தவராவார் எனில் மிகையாகாது.

தமிழ்நாட்டில் முதன் முதலாக வந்தேமாதரக் கிளர்ச்சியை நடத்தித் தேசபக்தியுண்டாகச் செய்த தமிழ்மகனார் வ.உ.சிதம்பரம்பிள்ளை, அவர்களுக்குப் பின்னர் தமிழ்நாடெங்கணும் காங்கிரஸ் செய்தியைப் பரப்பி, மக்களிடையே சுதந்திர தாகமுண்டாகச் செய்தவர்களில் திரு.வி.கலியாணசுந்தர முதலியார், டாக்டர். வரதராஜீலு நாயுடு, ஈ.வெ.ராமசாமிப் பெரியார் ஆகிய மூவரை முதலில் குறிப்பிட வேண்டும்.

இரவு - பகலெனப் பாராது, வெய்யில் - மழையெனக் கருதாது இடைவிடாமல் சுற்றுப்பிராயணஞ் செய்து அம் மூம்மூர்த்திகள் செய்த வீரவுணர்ச்சி மிக்க பிரசகங்கள் தாம், பின்னர் நடந்த தேசீயப் போராட்டங்களில் எல்லாம் தமிழ் மக்களைப் பங்கெடுத்துக் கொள்ளும்படி தயார் செய்தன என்பதையும், இன்று காங்கிரஸ்காரர்கள் அரசாங்கப் பொறுப்பேற்று ஆட்சி செலுத்துவதற்கு மக்களின் பேராதரவை வாங்கித் தந்தன என்பதையும் யாரும் மறுக்க முடியாது.

குறிப்பாக, இராமசாமிப் பெரியார், காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமைப் போராட்டக் காலத்தில் செய்த தேச சேவையை யாரும் மறந்து விட முடியாது. நன்றியுள்ளம் படைத்த தமிழ்மகன், அவருடைய சேவையை என்றும் மறக்கமாட்டான். அதன் பின்னரும் பெரியார் தமிழ்நாட்டு மக்களுக்குப் புரிந்து வரும் தொண்டு அளவிடற்கரியது. அவர் காங்கிரசிலிருந்து கருத்து வேற்றுமை காரணமாக விலகிய பின், பொதுஜனசேவை செய்யும் விஷயத்தில் கொண்டுள்ள கொள்கைகள், கையாண்டு வரும் வேலை முறைகள், பேசும் பிரசங்கங்கள் சிலருக்குப் பிடிக்காமலிருக்கலாம். ஆனால், அவருடைய இலட்சியத்தைக் கவனிக்க வேண்டும். அவருடைய குறிக்கோள், மிகச் சிறந்தது; உயர்ந்தது. இலட்சியம் ஒன்றாயிருந்தால், அதை நிறைவேற்றி வைப்பதற்குரிய வேலைத்திட்டங்கள் பலவாயிருப்பதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. இலட்சியம் உயர்ந்ததாயிருப்பின், வேலைமுறை எவ்விதமாயினும் இருக்கலாம்.

சிலர் சொல்லுகிறார்கள், "அவர் இலட்சியம் எப்படியாயினும் இருக்கட்டும், அவருடைய பேச்சும், செயலும், ஆக்க வேலையைச் செய்வதாயில்லையே! அழிவு வேலையன்றோ செய்து வருகின்றன! இந்நிலையில் அவருடைய இலட்சியத்தை எப்படிப் பாராட்ட முடியும்?" என்று! அவர்களுக்கு நான் ஒன்று கூறுவேன்; அழிவு வேலைதான் ஆக்கத்தை உண்டு பண்ணும். சும்மாரத்திலிருந்துதான் சிருஷ்டி வேலை ஆரம்பமாகிறதென்ற தத்தவத்தை உணரவேண்டும். பெரியார் அழிவு வேலையை மேற்கொண்டிருக்கிறார் என்பது உண்மை. அதை எதற்காகக் கொண்டிருக்கிறார்? நம் சமூக, சமயங்களிலுள்ள ஊழல்களையும், சீர்கேடுகளையும் போக்கி, ஒரு நல்ல நிலையை ஏற்படுத்திப் புதிய சகாப்தத்தை உண்டு பண்ணவேயாகும். அவருடைய குறிக்கோளின்படி, நம் நாட்டில் நவயுகம் ஏற்படப்போவது நிச்சயம். நாம் மாறுதல் அடைந்துவரும் ஒரு சகாப்தத்தில் வாழ்ந்து வருகிறோம். இன்றுள்ள நிலைமை கூடிய சீக்கிரம் நாட்டில் சமூதாயப்புரட்சி ஏற்படக்கூடும் என்று உணர்த்தக் கூடியதாயிருக்கிறது. சமூதாயப் புரட்சிக்குப் பின், தமிழ் மக்கள் வாழ்வில் புதிய சகாப்தம் உண்டாகப்போகிறது. அப்புதிய சகாப்தத்தை ஏற்படுத்தப் போகிறவர்களில் இராமசாமிப் பெரியார் முதன்மையானவராய் இருப்பார் என்பது என் நம்பிக்கை.

*******************************************************************************************

அவர் தொண்டின் பயன்!
மலையாளம் தோழர் கே.அய்யப்பன் அவர்கள்.(1933)

தோழர் இராமசாமி அவர்கள் அடிக்கடி எங்கள் பிரதேசத்திற்கு வந்து, சுயமரியாதை இயக்கத்தைப் பற்றிப் பிரசாரம் செய்திருக்கிறார். அதன் பயனாக அங்குள்ள புரோகிதர்களுக்கும், அரச குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்கும், மதப் பற்றுடையவர்களுக்குந்தான் காரமாகப் பட்டிருக்கிறது என்று கூறலாம். சுயமரியாதை இயக்கமானது, உயர்ந்த கருத்துக்களைக் கொண்டது... லெனின் செய்துவந்த வேலைகளை அடிப்படையாகக் கொண்டு, நமது நாட்டில் காரியங்களைச் செய்வதற்குச் சுயமரியாதை இயக்கமே சிறந்ததாகும்.

*******************************************************************************************

தமிழ்நாட்டுத் தலைமைக்குத் தகுதியுடையவர்!

நாகர்கோயில், P.சிதம்பரம் பிள்ளை, B.A., B.L., M.L.A.,(1937)

சுயமரியாதை இயக்கம் ஒரு தனித்தமிழ் இயக்கம். நான் ஆதி முதற்கொண்டே இந்த இயக்கத்தில் கலந்திருப்பவன். மலையாளத்திலுள்ள ஒரு தமிழன் நான். என் அனுபவத்தையொட்டிக் கூறுவது என்னவென்றால், தமிழ்மொழிக்காக இந்த இயக்கத் தலைவர் தோழர் ஈ.வெ.ரா. அவர்களைப் போலப் பாடுபட்டவர்கள் வேறு ஒருவரும் இல்லை என்பது ஒன்று. இதைத் தமிழ்நாட்டுப் பண்டிதர்கள் அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள். தோழர் ஈ.வெ.ரா. அவர்களைப் போன்று தமிழ்நாடு முழுவதிலும் செல்வாக்குப் பெற்றிருப்பவர்கள் வேறு ஒருவருமில்லையென்பது மற்றொன்று. தமிழ்நாட்டில் ஒவ்வொரு தமிழ் ஜில்லாக்களில் அவர்களுக்கு அவ்வளவு செல்வாக்கு இருப்பதில்லை. ஆகையினால், தமிழ்நாடு முழுவதிலும் தலைமை வகிக்க உரியவர் தோழர் ஈ.வெ.ரா. அவர்களே.

மேலும், வைக்கம் சத்தியாக்கிகத்தை வெற்றி பெற நடத்தியதைக் கண்டிருப்பவர்கள், இந்த நெருக்கடியான காலத்தில் தமிழ்ப்பற்றுடையவர்கள் தமிழ்நாட்டுத் தலைவராகத் தோழர் ஈ.வெ.ரா. அவர்களைத் தவிர வேறு ஒருவரையும் நினைக்க முடியாது. இப்போது ஏற்பட்டிருக்கும் கிளர்ச்சியையும் பிரச்சனைகளையும் சரிவர நடத்த வேண்டுமானால், அதில் அனுபவமும், அறிவும் பெற்றிருக்கும் தோழர் ஈ.வெ.ரா. அவர்களைத் தவிர வேறு ஒருவரையும் காணோம். அன்றியும் இப்பொழுது இவ்வளவு சங்கடத்தில் தமிழர்களைக் கொண்டு வந்தவிட்ட தமிழ்ப்பற்றுடைய பார்பனர் தோழர் இராஜகோபாலாச்சாரியாரின் சூழ்ச்சி மனப்பான்மை குறிக்கோள் இவற்றை அறியவும் முறியடிக்கவும் வல்லமையுடையவர் தோழர் ஈ.வெ.ரா. அவர்களேயாகும்.

பார்ப்பனரல்லாதார் இயக்கம் இன்று எஞ்சி நிற்பது தமிழ்நாட்டில் மட்டிலுந்தான். அதுவும் சுயமரியாதை இயக்கத்தில் தான் அதுவும் மிகச் சிறப்பாகத் தோழர் ஈ.வெ.ரா. கையில் தான் அடங்கியிருக்கிறது.

சுயமரியாதை இயக்கமானது, "தன் அனுபவத்தினாலும், பகுத்தறிவினாலும், தமிழ் மக்களை ஒன்று சேர்க்க வேண்டும்; தமிழ் மொழியை வளர்க்க வேண்டும், தமிழ் மக்கள் சுயமரியாதையுடைய வீரர்களாக ஆக வேண்டும்" என்ற ஒரே எண்ணத்துடன் தாமாகவே தனித்து இவ்வியக்கத்தை ஸ்தாபித்த பெருமை தோழர் ஈ.வெ.ரா. அவர்களுக்கு மாத்திரம் உரியது.

ஆகையால், தமிழ் மக்கள் அனைவரும் அற்ப சொற்ப அபிப்பிராய வித்தியாசங்களையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு, ஒன்று சேர்ந்து, தோழர் ஈ.வெ.ரா. அவர்களோடு ஒத்துழைப்பார்களேயானால், மேற்கண்ட லட்சியங்களில் வெற்றியடைவார்கள் என்பதற்கு யாதொரு தடையுமில்லை.

***************************************************************************************************

பின் சரித்திரங்களில் எழுதப்படும் தீரப்புருஷன்!

கைவல்ய சுவாமியார்.

"மதத்தாலும், மதகுருக்களின் போதனைக்குட்பட்ட கருணையற்ற ராஜாக்களின் கொடுமையாலும், முன்தோன்றின சீர்திருத்தக்காரர்கள் அழிந்தாலும், அவர்கள் சொன்னவை அழியவில்லை! அவற்றைச் சிறிது காலத்திற்கு முன்னிருந்த அறிவாளிகளும் சொன்னார்கள்; இப்பொழுதிருக்கும் அறிவாளிகளும் ஒத்துக் கொள்கிறார்கள். அவற்றையே இராமசாமிப் பெரியாரும் பிரசாரம் செய்கிறார். இவ்விருபதாம் நூற்றாண்டில் தென்தேசத்தில் உண்டான அறிவின் பயழனயெல்லாம் அனுபவிக்கச் செய்த தீரப்புருஷன் இராமசாமிப் பெரியாரே! என்பது, பின் சரித்திரங்களில் எழுதப்படும்!"

*************************************************************************************************************

பெரியார் எனது தலைவர்!

W.P.A. சௌந்தரப்பாண்டியன் அவர்கள் (1929)

சமதர்மக் கடனாற்ற ஆரம்பிக்கப்பட்ட பார்ப்பனரல்லாதார் இயக்கம் மெதுவாக முன்னேற்றமடைந்து வருங்கால், அவ்வியக்கத்திற்குத் திடீரென ஒரு நற்காலம் கிட்டியது. மக்களிடைச் செல்வாக்குப் பெற ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. அச்சந்தர்ப்பம் எது? அதுதான் தமிழ்நாட்டின் வீர கர்ஜனை புரிந்துவரும் சுயமரியாதை இயக்க ஆரம்பமாகும். மக்களுக்கு நலன் பல விளைத்து வருபவரான நமது மாபெருந் தலைவர் உயர்திரு ஈ.வெ.இராமசாமி நாயக்கர் அவர்களால் சுயமரியாதை இயக்கம் மக்களிடைப் பரவ ஆரம்பித்த புண்ணிய தினத்தையே, யான் இங்குக் குறிக்கிறேன்.

எனது தலைவர் திரு. நாயக்கர் அவர்கள் அனுபவசாலி; ஆராய்ச்சியாளர். அவர் நாடெங்கும் சுற்றி மக்களின் குணங்கள் யாவற்றையும் தீர உணர்ந்துள்ளார். இவ்விதப் பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட நமது இயக்கத்தின் சிறப்பை அதிகம் விவரித்துத் தற்பெருமை கொள்ள நான் விரும்பவில்லை.

*****

அஞ்சாமையை திறமையுடன் ஆள்பவர்!
நகைச்சுவை அரசர்N.S. கிருஷ்ணன் அவர்கள்(1947)

பகுத்தறிவுக்குக் கொஞ்சமும் பொருந்தாத பல கண்மூடி வழக்கங்கள், எப்படியோ நம் சமூகத்தில் வந்து புகுந்து, பல அக்கிரமங்களையும் புரிந்து, நாட்டையும், நாட்டு மக்களையும் பாழ்படுத்தின; பாழ்படுத்தி வருகின்றன. விதவா மணம் கூடாதாம்; சாஸ்திரத்தில் இதற்கு இடமில்லையாம்! ஆண்களுக்கொரு நீதி; பெண்களுக்கொரு நீதி. இன்னும் இம்மாதிரி எத்தனையோ மூடப்பழக்க வழக்கங்கள் தொட்ட இடத்திலெல்லாம் ஒரு தீய வழக்கம் வந்து குந்திக்கொண்டு, சமூக முன்னேற்றத்தைப் பார்த்துக் கேலிச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருக்கிறது. சில வேளை இந்த பழமைப் பாம்பு படுத்துறங்குகிறது; பல வேளை படமெடுத்தாடுகிறது. விஷத்தைக் கக்குகிறது; பேதாபேதம் கற்பிக்கிறது; கூடி வாழும் மனித வர்க்கத்தைப் பிரித்து வைத்து, கொலைகளுக்கு ஏதுவாக நின்று அது கண்டு மகிழ்கிறது. மதத்தின் பேரால் படுகொலைகள்! இந்த நாகப் பாம்பைத் தலையிலடித்துக் கொல்ல வேண்டும்.

சீர்திருத்த வீரர்கள் வீறுகொண்டெழுந்து இந்நற்றொண்டைச் செய்து வருகிறார்கள். நாட்டின் முன்னேற்றத்திற்கு இது முதல் தொண்டு; முக்கியமானத் தொண்டுங்கூட. இதற்கு விதை போட்டு வீறுகொண்டுழைத்தவர் நமது பெரியார் ஈ.வெ.ரா. இராமசாமி அவர்களென்பதை மறுக்கவோ – மறைக்கவோ எவராலும் இயலாது. இதற்காகப் பெரியார் அடைந்த இன்னல்கள் இகழ்ச்சிகள்….அப்பப்பா, செப்புந்தரமன்று!

பகுத்தறிவு தந்தையின் நாவன்மையும், எழுத்து வன்மையும் அபாரம். அதுமட்டுமா? அஞ்சாமையை வெகு திறமையுடன் ஆளும் திறமை பெற்றவர்!
பெரியார், எவ்வளவோ மகத்தான காரியங்களைச் சாதித்திருக்கிறார்.

உதாரணமாக ஒன்று சொல்லுகிறேன். தீண்டாமைக்கு – ஏன் - கண்ணாலும் பாராமைக்குப் பேர்பெற்ற 'தர்ம ராஜ்யம்' மலையாளம். மக்களில் ஒரு வகுப்பாரைப் பார்த்தாலே தீட்டாம். திட்டிவிடம் போலும். மலையாளத்தில் தீண்டாமையை முதன் முதலில் நீக்குவதற்கு உழைத்தவர் பெரியார் தான். வைக்கம் சத்தியாகிரகத்தைத் திறம்பட நடத்தி வெற்றி கண்ட வீரர்! பின்னர் நடந்த நிகழ்ச்சிகளுக்கு இதுதான் விதை.

பெரியாரின் பகுத்தறிவுத் தீ, நாடெங்கும் பரவியது. இன்று இளைஞர்கள் உள்ளத்தில் அது வேரூன்றி விருட்சகமாக வளர்ந்து விட்டது. வாழ்க பெரியார்! உலகப் பெரியார்!
***************************************************************************************************

தமிழ்ப்பண்டிதர் சாமி சிதம்பரனார் அவர்கள்(1939)

பெரியார் ஈ.வெ.ரா. அவர்களைப் பற்றி அறியாதவர்கள் ஒருவரும் இலர். ஒவ்வொரு துறையிலும் அவர் மிக முற்போக்கான கருத்துடையவர்….

மதம், சமூகம், அரசியல் ஆகிய மூன்றிலும் பெரியார் ஒரு புரட்சிக்காரராக விளங்குகிறார். பெரியார் ஒரு மிதவாதியாக இருந்து பின்னர் மதப் புரட்சிக்காரராக மாறவில்லை. ஒரு சமூகவாதியாக இருந்து பின்னர் சமூகப் புரட்சிக்காரராக மாறவில்லை. ஒரு முதலாளித்துவவாதியாக இருந்து, பின்னர் சமதர்மவாதியாக மாறவில்லை. பிறப்பிலேயே மதப் புரட்சிக்காரராகப் பிறந்தார்! சமூகப் புரட்சிக்காரராகப் பிறந்தார்! சமதர்மவாதியாகப் பிறந்தார்.

தம் கொள்கையை விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, இவரிடம் எப்பொழுதும் இருந்ததில்லை. தம் கொள்கைக்குப் பிறர் இணங்கி வர வேண்டும். பிறர் கொள்கைக்கு இவர் இணங்கவேமாட்டார். ஒரு சீர்திருத்தவாதிக்கு இருக்க வேண்டிய குணம் இதுவே. புத்தர், சாக்ரடீஸ், கன்பூஷியஸ், ஏசு கிறிஸ்து, முகம்மது நபி, போன்ற பெரியார்கள் தங்கள் கொள்கைகளில் வெற்றி பெற்றதற்குக் காரணம் இதுவே. அவர்கள் பகைவர்களால் பல துன்பங்களுக்கு ஆளாகியும் தங்கள் கொள்கைகளில் எள்ளளவும் விட்டுக் கொடுக்காத உறுதியுடையவர்களாயிருந்தனர். இன்றைய சீர்திருத்தவாதிகளில் இத்தகைய உறுதியுடையவர் பெரியார் ஒருவரே. ஆதலால், இவர் உலகப் பெரியாராவார்!

தோழர் ஈ.வெ.ரா. இன்று தமிழ்நாட்டில் இணையற்ற தலைவராக விளங்குகிறார்.வழிகாட்டியாகப் போற்றப்படுகிறார்; தளராத உழைப்புடைய தொண்டராகக் காணப்படுகிறார். இவருடைய பழம் பகைவர்களுங்கூட இவருக்குப் பொது மக்களிடம் இருக்கும் செல்வாக்கை மறுப்பதில்லை. பொதுமக்களைத் தன் சார்பாக்கும் வல்லமை படைத்தவர் என்பதைத் தடுத்துச் சொல்வதில்லை. சில ஆண்டுகளுக்கு முன் தூற்றியவர்களும் இன்று போற்றுகிறார்கள். தமிழ் மக்கள், இவர் சொற்கள் ஒவ்வொன்றையும் தங்கள் வாழ்க்கையை உயர்த்தும் செல்வங்கள் என்று கருதுகின்றார்கள்.

விவாதத்தில் இவரை யாரும் வெல்ல முடியாது. அடுக்கடுக்காகக் கேள்விகளைப் போடுவார். சொற்களின் பொருள்களை விளக்க வேண்டுவார். எதிரிகள் கேள்விகள் கேட்டால், அவர்கள் சொற்களைக் கொண்டே மடக்கி விடுவார். எத்தகையவரும் இவரிடம் அகப்பட்டுக் கொண்டு திக்குமுக்காடுவார்கள். இவ்வாறு வாதமிடும் தன்மை கிரீஸ் தேசத்து தத்துவ ஞானி சாக்ரடீசுக்கே இயற்கையில் அமைந்திருந்தது. நமது பெரியாருக்கும் இத்தன்மை இயற்கையில் அமைந்திருக்கிறது. ஆதலால், இந்தத் துறையில் இவரைத் "தமிழ்நாட்டுச் சாக்ரடீஸ்" என்று கூறலாம்.

நம்நாட்டு பழம் பெரும் வள்ளல் புத்தர், எந்தெந்தக் காரியங்களைச் செய்தாரோ, அவைகளையே பெரியாரும் செய்து வருகிறார். புத்தர் வேதங்களைக் கண்டித்தார்; பெரியாரும் வேதங்களைக் கண்டிக்கிறார். புத்தர் சாதி பேதங்களைக் கண்டித்தார்; இவரும் அப்படியே. புத்தர் புரோகிதத்தையும், யாகம் போன்ற சடங்குகளையும் ஒழிக்க முயன்றார்; இவரும் அப்படியே. புத்தரும் பார்ப்பனீயத்தை ஒழிக்கவே முயன்றார்; இவரும் பார்ப்பனீயத்தை ஒழிப்பதிலேயே கருத்தைச் செலுத்தி வருகிறார். ஆதலால், இவரை "தமிழ்நாட்டுப் புத்தர்" என்றே கூறிவிடலாம்.

"பர்னாட்ஷா" தம் மனதிற்பட்ட எதையும் பயப்படாமல் சொல்வார். அறிவுக்குச் சரியென்று தோன்றியதை வெளிப்படையாகக் கூறுவார். எவருடைய போற்றுதலையும், தூற்றுதலையும், பொருட்படுத்தாமல் பேசிவிடுவார். இப்படித்தான் பெரியாரும். தமக்குச் சரியென்றுத் தோன்றும் எவ்விதப் புதுக் கருத்தாயிருந்தாலும் பிறருக்கு எப்படியிருக்குமென்பதைச் சிறிதும் சிந்திக்காமல் மிகத் துணிவோடு கூறிவிடுவார். இவ்வகையில் இவரைத் தமிழ்நாட்டுப் பர்னாட்ஷா என்று கூறலாம்.

*************************************************

சாதாரணமாகப் பொது வாழ்வில் இருப்பவர்கட்கு, அடிக்கடி வெறுப்புத் தோன்றுவதுண்டு. மிகப் பெரிய பணக்காரர்களுக்குத் தோன்றும். உடனே தங்கள் தொழிலைக் கவனிக்கச் சென்று விடுவார்கள். பொது வாழ்விலேயே தலையிடுவதில்லை என்று சத்தியஞ் செய்து விடுவார்கள். பெரிய படிப்பாளிகள், பட்டதாரிகள் கூட இப்படித்தான்; திடீரென்று ஒருவிதமான "விரக்தி" ஏற்பட்டுவிடும்; பொது வாழ்வையே தலை முழுகிவிட்டதாக உறுதி செய்து கொள்ளுவார்கள்.

ஆனால், பெரியாரோ இதில் - இவர் இந்தியாவிலேயே பெரியார் தான். மனித இயற்கைக்கு மாறுபட்டவர். தோல்வி என்பது அவருடைய வீரத்தையும், அறிவையும் போட்டுக் காய்ச்சும் நெருப்பு. இத்தீயில் வைத்துக் காய்ச்சக் காய்ச்ச, அவருடைய இவ்விரண்டு பண்புகளும் உருசியில் அதிகப்பட்டுக் கொண்டே இருக்கும். இதைப் போலவே வெற்றி கிடைத்தாலும், அதற்கு மேல் செய்ய வேண்டியதைப் பற்றியும், அதனால் ஏற்பட்ட அதிகப் பொறுப்பைப் பற்றியும் தான் கவலைப்படுவார். சில இழி மக்களைப் போல் - வெற்றி மயக்கத்தால் கூத்தாடுஞ் சிறுமைக் குணம் அவரிடமில்லை. சுருங்கக் கூறினால், பெரியார் ஒரு பிறவிப் போர்வீரர். (A Born Soldier)

உலகத்திலேயே ஒரே ஒரு சாக்ரடீஸ்; ஒரே ஒரு புத்தர்; ஒரே ஒரு மார்ட்டின் லூதர்; ஒரே ஒரு அமானுல்லா; ஒரே ஒரு கெமால் பாட்சா; ஒரே ஒரு பர்னார்ட்ஷா, ஒரே ஒரு இராமசாமிப் பெரியார் தான் தோன்றுவார்கள்; தோன்ற முடியும்.

*****************************************************************************************************

பிறப்புரிமை உணர்த்தியவர்!

திருமதி. இந்திராணி பாலசுப்ரமணியம் அவர்கள்.

ஒரு காலத்தில் உன்னதமாய் வாழ்ந்து வந்த திராவிடர்கள் - தென்னாட்டிலுமல்லாமல், வடநாட்டிலும் சென்று பல அரசர்களைவென்று நாடாண்ட திராவிடர்கள், கிரேக்க, ரோம், ஈஜிப்ட், அபிசீனியா நாகரிகத்தை விட, மேலான நாகரிகம் படைத்த திராவிடர்கள் - "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்று வாழ்ந்து வந்த திராவிடர்கள், இன்று சீர்குலைந்து, கட்டுடைந்து, தம் நாட்டிலேயே, தாசர்களாய், அடிமைகளாய் அரசியலிலும், பொருளாதாரத்திலும், சமூகத்திலும் இருப்பதென்றால், இதை விட மானக்கேடான வாழ்க்கை வேறென்ன வேண்டியிருக்கிறது?

"அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி, அரும் பசி எவர்க்கும் ஆற்றி மனத்துள்ளே பேதாபேத"மின்றி வாழ்ந்து வந்த திராவிடரிடையே ஆரியம் புகுந்தபின், இந்துமதம் என்னும் நஞ்சால் மேல் பிறப்பு, கீழ்ப்பிறப்பு என்னும் பல்வேறு சாதிகளும், சமயங்களும் உண்டாக்கி நாடும், நாட்டிலுள்ள மக்களும், அவ்வாரியத்திற்கடிமையாக்கப்பட்டனர். இதைக் கேட்க – காண – மனந் துணியாத திராவிடரும் உண்டா?

மறப்பாலும், பிறப்பாலும், மதிப்பிழந்த திராவிடருக்குப் பிறப்புரிமை "திராவிடஸ்தான்" என்றுணர்த்திய நமது முடிசூடா மன்னராகிய பெரியார் இராமசாமியவர்கட்கு, நாம் என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.

******************************************************************************************************

தமிழ்நாட்டுச் சாக்ரடீஸ்!

கே.வி.அழகிரிசாமி அவர்கள்

'மேனாட்டில் அன்று பிறந்து வளர்ந்த சாக்ரடீஸ் என்ற ஓர் அறிஞரைப்பற்றிக் கேட்டோம்.' ஆனால், கண்டோமில்லை. இவ்விந்தியாவிலேயே அங்ஙனம் கண்டதாகக் கூறுவாருமில்லை. எனினும், இத்தமிழ்நாட்டில் இன்று அரும்பெரும் செயலாற்றும் ஒரு சாக்ரடீசைக் கண்டோம். அவர்தான், நம் ஈ.வெ. இராமசாமிப் பெரியார்.

அவரால் காணப்பட்ட நம் இயக்கமும், அவ்வியக்கத்தின் அழுத்தமான கொள்கைகளுந்தான் நான் மாற்றமடையாததற்கும், தன் மதிப்போடு விளங்குவதற்கும் முதற்காரணம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

***************************************************************************************************

அரிய பெரிய தொண்டு புரிந்தனர்!

வழக்கறிஞர், தி.பொ.வேதாச்சலம் அவர்கள்.

உலகத்திலேயே பலப்பல காலங்களில், பெரியார்கள் சிலர் தோன்றிப் பல கருத்துக்களைச் சொன்னார்கள். அக்கருத்துக்கள் வளர்ந்து நாளடைவில் பெரிய மாறுதலை உண்டாக்கின. ஃபிரெஞ்சு நாட்டில் ரூசோ, "பிறந்தபோது மனிதன் சுதந்திரனாய் இருந்தவன், எங்கும் - பின் விலங்குடன் காணப்படுகிறான்" என்றார். இந்த வாக்குப் பெரிய எண்ணங்களை எழுப்பி, அந்நாட்டு நிலையை முற்றிலும் மாற்றியது. அமெரிக்க நாட்டுத் தலைவரான லிங்கன் "மக்களுக்காக, மக்களால், மக்களைக் கொண்டு நடத்தும் அரசாங்கம்" என்று சொன்னார். ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவமாக உலகமெங்கும் விளங்குவது அதுதான். 18-ஆம் நூற்றாண்டில் பென்தாம் (Bentham) என்ற ஆங்கிலேயர், "பெரும்பாலான மகிழ்ச்சியே வேண்டற்பால" தெனச் சொன்னார். அந்த வாசகங்கள் மக்கட்குப் பல நன்மைகளைத் தந்தன. இந்த வாசகங்கள் சில; உண்டு பண்ணும் பலன்கள் மிகப் பல. அவை அதிகம் சொல்லாவிட்டாலும், எவ்வழி வாழ்க்கை நடக்க வேண்டுமெனக் கைகாட்டி போல் நிற்கின்றன.

சுமார் 20-ஆண்டுகளுக்கு முன், நம் அருமைத் தலைவரான பெரியார் "சுயமரியாதையே சுகவாழ்வு" என்று கூறினார். மனிதனை மனிதன் தொடக் கூடாதென்றும், தெருக்களிலும், குளங்களிலும், கோவில்களிலும், மடங்களிலும், வீடுகளிலும், மக்களைத் தொடக்கூடாதென்ற நிபந்தனைகளும் பல மக்கள் சாதியின் காரணத்தால் படிப்பின்றிக் கடின வேலை செய்து கூலி பெறுவதும், சில உயர்சாதி மக்கள் பட்டாடைகளும் தங்க – வைர நகைகளும் அணிந்து உல்லாச வாழ்க்கை நடத்துவதும், பெருங்கூட்டமான மக்கள் நாயினும் கஷ்டப்பட்டு நடத்தப்படுவதும் கோவில், கடவுள், மடம் இவைகள் பேரால் பெரும் செல்வங்கள் வீணாக மக்களுக்குப் பயன்படாத வகையில் செலவழிக்கப்படுவதும் இவ்வாறான பல்வேறு நியாயமற்ற செய்கைகளைக் கண்டு மனங் கொதித்து மக்களை நல்வழியில் திருப்ப எண்ணி நம் பெரியார் சுயமரியாதை இயக்கம் கண்டார்.

சுமார் 20-ஆண்டுகள் பத்திரிக்கை நடத்தியும், புத்தகங்கள் வெளியிட்டும், கிளர்ச்சிகள் பல செய்தும், பல சமயங்களில் சிறை சென்றும், தினந்தோறும் விடாமல் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும், திருமணங்கள் பல நடத்தியும், இயக்கத்தை வளர்த்துத் தமிழ் மக்களிடையே பகுத்தறிவு புகட்டி இளைஞர்கள் உள்ளத்தைச் செப்பனிட்டு மூடவழக்கங்களை ஒழித்து சாதிக் கொடுமைகளைப் பல வகையிலும் குறைத்து சுயமரியாதைச் சுடரொளி நன்றாகத் தீப்பிடித்து எரியும் வண்ணம் செய்துள்ளார்...... தமிழ் மக்கட்குக் குறிப்பாக அரிய தொண்டு புரிந்திருப்பவர், நம் அருமைத் தலைவர் பெரியாரேயாவர்!

*****************************************************************************************************

கல்கத்தாவிற்குக் கிடைத்த பேறு!

கல்கத்தா, பிரபல ஆங்கில இதழ், "Vanguard" (1944) எழுதியது.

இந்த மாநாட்டுக்கு வந்து, இதைச் சிறப்பிக்கப் போகும் மிக முக்கியமான பிரபலஸ்தர்களில் ஒருவர் தென்னாட்டுப் பழம்பெரும் கிழவனார் (The Grand Old Man Of the South) பெரியார் ஈ.வெ.ரா. இராமசாமி அவர்கள் ஆவார்கள். கீழ்சாதி மக்கள் தங்களை அடக்கி அழுத்தி வரும் பார்ப்பனீய ஆட்சியை ஒழித்துக் கட்டுவதற்காகச் செய்யும் முயற்சியும், பார்ப்பனரல்லாத சமூதாயம், புரோகிதக் கொடுமையை வேரோடு களைந்தெறிவதற்காக நிகழ்த்திவரும் புரட்சியுமே சுயமரியாதை இயக்கமாக உருக்கொண்டிருக்கிறது. இந்தச் சுயமரியாதை இயக்கத்தின் "சிருஷ்டிகர்த்தா"வும், அதன் தலைவரும் பெரியார் இராமசாமி தான். அவர் அதிதீவிரமான புரோகித ஒழிப்புக் கொள்கைகளையும், மத மறுப்புத் திட்டங்களையும், தென்னாட்டில் பிரசாரஞ் செய்து வருகிறார். தீப்பொறி பறக்கப் போசும் ஒரு வெண்தாடி வேந்தரைக் காணும் பேறு, கல்கத்தாவிற்குக் கிடைக்கிறது."

****************************************************************************************************

தனிப்பெரும் தர்க்கவாதி!

"சிங்கப்பூர், 'தமிழ்முரசு'(30-09-1940-ல் தீட்டிய தலையங்கக் குறிப்புகள்.)

"பன்னிரண்டு வயது பாலகன், கடைத்தெரு இராமநாத அய்யருடன் புரிந்த விதண்டாவாதங்கள் எல்லாம் திரண்டு, இன்று ஓர் பிரமாண்டமான இயக்கமாகி விட்டது! இந்திய சமூகங்களெல்லாம் மிரளும்படியாக அவ்வியக்கம், சமூகத்தையே தலைகீழாகப் புரட்டி வருகிறது."

அன்று பேசிப்பேசி 'வம்பன்' என்ற பட்டத்தைத் தேடிக் கொடுத்த அந்த நாவே, இன்று ஈடும், எடுப்புமில்லாப் பேச்சாளர் என்றும், தர்க்கத்தில் தலை சாய்க்காத ஒரு தனிப்பெருந் தர்க்கவாதியென்றும் புகழைத் தேடிக் கொடுத்துவிட்டது.

இந்தியத் தலைவர்கள் எவருங் காணா வெற்றியைக் கண்ட வீரன், அந்த ஈ.வெ.ரா.வே எனில் மிகையாகாது. இந்திய நாட்டில் சத்தியாக்கிரகத்தை நடத்திய எத்தலைவரும் காணா வெற்றியை வைக்கத்திலும், இந்தி எதிர்ப்பிலுங் கண்ட வீரனே- ஈ.வெ.ரா. என்ற உத்தமன்.

செல்வம் முதலிய மாயைகளை மறந்து, வறியோர் போல் எளிய உடை தரித்து, எளிய உணவு உண்டு, இரவு - பகல் ஓயாது தேசத் தொண்டிற்கே தமது வாழ்க்கையை அர்ப்பணஞ் செய்த பெரியாரின் பிறந்த நாள் மலாய் நாடெங்கணும் கொண்டாடப்படுகிறது. "பெரியார் வாரம்" நாடெங்கும் கொண்டாடப்பட்டிருக்கும் சிறப்பைக் கவனித்தால் பெரியாரின் கொள்கைகள் இந்நாட்டுத் தமிழ் மக்களிடையே எவ்வளவு ஆழம் வேரூன்றிவிட்டதென்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

தன் மதிப்பியக்க ஆரம்பத்தில் அவரை நிந்தித்த வாய்களெல்லாம், இன்று புகழ் மாலைகள் சூட்டுகின்றன. பெரியாரை அடிக்க நினைத்து ஓங்கிய கரங்களெல்லாம், இன்று கைக் கூப்பி நிற்கின்றன.

தன் மதிப்பியக்கத் தந்தை இன்று தமிழரியக்கத் தளபதியாய் நிற்பதைக் கண்டு, இந்நாட்டுத் தமிழகத் தோன்றல்கள் பெருமை பூண்டு உளம் பூரிக்கிறார்கள்."

******************************************************************************************************

இந்தியை எதிர்ப்பவர் யார்?

வங்காளத்திலிருந்து வெளிவரும்"மாடர்ன் ரெவ்யூ"

"..... தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு இயக்கமொன்று நடைப்பெற்று வருகிறது. அதன் தலைவர் தோழர் இராமசாமி ஆவார். இவர் தற்போதைய இந்திய கவர்னர் ஜெனரலின் ஒத்துழையாமை இயக்கக் காலத்திய தோழரும், சகாவும் ஆவார்.

மேற்படி இந்தி எதிர்ப்பு இயக்கத்துக்கு ஆரியத்தை எதிர்த்து நிற்கும் திராவிடஸ்தான் இயக்கத்தின் முழு ஆதரவும் இருந்து வருகிறது."

*****************************************************************************************************

------------------------------------

நூல்:- சாமி சிதம்பரனார் எழுதிய “தமிழர் தலைவர்” நூலிலிருந்து 9 ஆம் பதிப்பு  பக்கம் 218-252
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It