“செக்ஸ் கல்வியை இந்தியப் பள்ளிகளிலிருந்து தடை செய்ய வேண்டும்” இப்படியோர் பொன்மொழியை உதிர்த்தவர் நம் நாட்டின் மத்திய சுகாரதாரத்துரை அமைச்சர் ஹர்ஷவர்தன் அவர்கள்தான்... இந்தக் கருத்து சரியா, தவறா? என்ற விவாதம் எழுவதற்கு முன்பு, இங்கே எந்த பள்ளியில் பாலியல் கல்வி போதிக்கப்படுகிறது? என்ற கேள்விதான் முன்னே நிற்கிறது... “செக்ஸ்” என்றால் வெளிப்படையாக பேசக்கூடாத, அருவருக்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிற நம் நாட்டில், பாலியல் கல்வி என்பதும்கூட பாலைவனத்து சுனைநீர்தான்...

sexual abuseமக்கள் தொகையில் விரைவில் சீனாவை முந்த இருக்கிறோம், பாலியல் நோய்களின் பாதிப்பில் சீனத்தையும் விஞ்சிவிட்டோம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளில் உலகில் முதலிடம், பதின்வயது கருத்தரிப்பில் தொடர்ந்து முன்னிலை... இப்படி நம் நாட்டின் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம், என்றாலும் கூட பாலியல் கல்வி கூடாதென்பதில் கொஞ்சமும் சமரசம் செய்துகொள்ள விரும்பவில்லை...

முதலில் பாலியல் கல்வி என்றால் என்ன? என்ற கேள்விக்கே பலரிடத்திலும் சரியான புரிதல் இல்லை.. ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் இணைவதைத் தாண்டியும் பாலியல் கல்வி இருக்கிறதென்பதை பலரும் உணரவே இல்லை.. ஒரு குழந்தையின் மூன்று வயதிலேயே, அக்குழந்தையின் உடலமைப்பைப் பற்றி அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.. வேறு யாரேனும் தன்னை பாலியல் ரீதியாகக் கையாளுகிறார்களா? என்பதை அவர்களின் தொடுதலை வைத்தே குழந்தை உணரும் அளவிற்கு, இயல்பான தொடுதல் (Good touch), வக்கிர தொடுதல் (Bad touch) பற்றி புரிய வைக்க வேண்டும்...

“குழந்தையிடம் போய் இதுபற்றியல்லாம் பேசலாமா?” என்று யோசிக்கும் கனவான்கள் ஒரு புள்ளிவிவரத்தை அறிய வேண்டும்... 5 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளில், 53% சிறுவர்கள் இந்தியாவில் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகிறார்கள்... அப்படிப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானவர்கள், அத்தகைய நிகழ்வுகளைப் பற்றி தத்தமது பெற்றோரிடத்தில் கூட பகிர்வதில்லை.. நிஜத்தில் அப்படிப்பட்ட விஷயங்களை பகிரும் அளவிற்கு பெரும்பாலான பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கித் தருவதில்லை என்பதுதான் நிதர்சனம்... பெரும்பாலும் குழந்தைகளை அப்படி கையாளுபவர்கள் உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும்தான் என்பது கூடுதல் அதிர்ச்சி...

பருவ வயதை எட்ட இருக்கின்ற பெண் குழந்தைகளுக்கு, அவர்களுக்கு இயற்கையாய் நிகழ்கின்ற மாதவிடாய் பற்றி தெளிவு பெறச் செய்யவேண்டும்... கிட்டத்தட்ட 50% கிராமப்புறத்தில் வாழ்கின்ற பருவ வயதை எட்ட இருக்கின்ற சிறுமிகளுக்கும், 6% நகரத்து சிறுமிகளுக்கும் “மாதவிலக்கு” என்கிற வார்த்தைக்கே பொருள் தெரியவில்லை... மிகக்குறைவான சிறுமிகளுக்கு மட்டுமே, அது ஓர் இயற்கையான உடலியலின் நிகழ்வு என்பது புரிந்திருக்கிறது... என்னைக் கேட்டால், மாதவிடாய் என்பது பெண்கள் மட்டுமே தெரிந்திருக்க வேண்டிய விஷயம் அல்ல, ஆண்களுக்கும் இதுபற்றிய புரிதல் வேண்டும்... தன் சகோதரிக்கு, தாய்க்கு இப்படியோர் உடலியல் மாற்றம் மாதமொருமுறை நிகழ்வதை ஒவ்வொரு ஆணும் தெரிந்துகொள்ள வேண்டும்... ஆகையால் குறைந்தது பன்னிரண்டு வயதிலாவது மாதவிலக்கு பற்றி இரு பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கும் புரிதல் ஏற்படும்படி பாடத்திட்டம் அமையப் பெற வேண்டும்.

அதைப்போல குழந்தை உருவாவது பற்றியும், உடலுறவு, பாதுகாப்பான உடலுறவு போன்ற சிக்கலான விஷயங்கள் பற்றியும் அவர்களுக்குப் புரியும் வகையில் எடுத்துரைக்க வேண்டும்.. “இதல்லாம் தப்பு, மேற்க்கத்திய நாடுகளில் வேண்டுமானால் இது சாதாரணமா இருக்கலாம்.. செக்ஸ் பற்றியல்லாம் சிறுவர்களிடம் பேசுறது, நம்ம கலாச்சாரத்துக்கு ஒத்துவராது... இப்படி சின்ன வயசுல இதல்லாம் சொல்றதால, அவங்க கெட்டுப்போக நிறைய வாய்ப்பிருக்கு”ன்னு சிலர் சொல்லும் வாதம், மேலெழுந்தவாரியாக சரியாகப்பட்டாலும், ஆழமாக யோசித்தால் அடிப்படையற்ற வாதமென்பது புரியும்...

இந்தியாவில் கருத்தரிக்கும் 1000 பெண்களில், 62 பேர் பதின்வயது சிறுமிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது... இந்த விகிதம் என்பது அமெரிக்காவைவிட இரண்டு மடங்கு அதிகம், இங்கிலாந்தை விட மூன்று மடங்கு அதிகம்... பாலியல் கல்வி பாடத்திட்டத்தின் வழியே போதிக்கப்படுகிற அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளைவிட பதின்வயது கருத்தரிப்பு என்ற பிரச்சினை இந்தியாவில் இவ்வளவு அதிகமானதற்கு காரணம் என்ன?... எச்.ஐ.வி முதலாக சகலவித பாலியல் நோய்களின் தாக்கமும், கலாச்சாரம் காக்கும் நம்நாட்டில்தான் அதிகம் என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகணும்... 56% இந்தியர்களுக்கு தங்களை எச்.ஐ.வி முதலான பாலியல் நோய்களிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வதென்ற வழிமுறைகள் தெரியவில்லை என்கிறது ஆய்வு முடிவு... விளைவுதான் அப்படிப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு ஆட்பட்ட நபர்களின் எண்ணிக்கையில் நம்மை முதலிடத்திற்கு கொண்டு சேர்த்துள்ளது.

பள்ளியில் படிக்கும் காலத்திலேயே முறையான பாலீர்ப்பு பற்றிய தகவல்களை பிள்ளைகளுக்கு கொண்டு சேர்ப்பிக்க வேண்டும்... சமபால் ஈர்ப்பு, இருபால் ஈர்ப்பு போன்ற பாலீர்ப்புகளும் பலரிடத்திலும் காணப்படுவதுண்டு என்பதையும், அதுவும் ஓர் இயற்கையான மாற்றுப்பால் ஈர்ப்புதான் என்பதையும் உணரச் செய்தல் வேண்டும்... “எதற்காக அப்படிப்பட்ட பாலீர்ப்பு பற்றியல்லாம் சொல்லி, மாணவர்களை திசைதிருப்பனும்?” என்ற கேள்வி இங்கிலாந்தில் பாடத்திட்டத்தில் பாலீர்ப்பை பற்றிய தகவல்களை சேர்த்தபோது, மதவாதிகளால் எழுப்பப்பட்டது... “நெருப்புன்னு சொன்னால் சுட்டுவிடாது... ஒரு விஷயத்தை தெரிந்து கொள்வதனால் குழந்தை திசை திருப்பப்படுகிறதென்றால், அதனைப் பற்றி புரிய வைக்கவில்லை என்றால் எந்த அளவிற்கு அவர்கள் குழப்பத்திற்குள் உள்ளாவார்கள்? என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்” என்ற பதில் அந்நாட்டு அரசால் முன்வைக்கப்பட்டது... அந்த வாதம் நூறு சதவிகிதம் உண்மை என்பதை நம்மால் எளிதாக அறியமுடியும்...

பள்ளியில் படிக்கும் காலத்திலேயே ஒரு மாணவருக்கு “சுயஇன்பம் செய்வது உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தாது... அது தவறான செய்கை அல்ல!” என்ற உண்மையை நாம் புரியவைக்காததன் விளைவுதான், “ஒரு சொட்டு விந்து, எட்டு சொட்டு ரத்தத்துக்கு சமம்... சுய இன்பம் செய்வதால் ஆண்மைக்குறைவு ஏற்படும்...” போன்ற பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு பல இளைஞர்களும் மனதளவில் குழப்பத்திற்குள் உள்ளாகிக்கொண்டு இருக்கிறார்கள்... இந்தத் தெளிவற்ற சூழலை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட சில சித்த வைத்திய ஜாம்பவான்கள், “சுய இன்பத்தால் இழந்த ஆண்மையை நாங்கள் மீட்டுத் தருகிறோம்!” என்று கொஞ்சமும் உறுத்தாமல் விளம்பரம் செய்து காசு பார்க்கிறார்கள்... இப்போதும்கூட அது ஒரு பொய் பிரச்சாரம் என்ற உண்மையை நம்மில் பலரும் பேசத் தயங்குவோம், காரணம் செக்ஸ் என்பது இங்கே பேசக்கூடாத ஒரு விஷயம்...

இப்படி நம் பிள்ளைகளிடம் பேசப்படாத விஷயங்கள், அவர்களுக்குத் தெரியாமலேயே போய்விடும் என்று நினைக்கிறீர்களா?.. ஒரு இளைஞனுக்கு பருவ வயதில் நிகழும் இயல்பான ஹார்மோன் மாற்றங்கள், அவனது செக்ஸ் பற்றிய தேடலை அதிகமாக்கும்... அந்தச் சூழலில் பாலியல் கல்வி முறையான வழியில் சொல்லித் தரப்படவில்லை என்றால், அவர்கள் மாற்றுவழிகளின் ஊடே அதனைப் பற்றிய தேடல்களில் இறங்குவார்கள்... மாற்றுவழி என்றால் என்ன?, இருக்கவே இருக்கிறதே இணையம்... நன்றாக யோசித்துப் பாருங்கள், அரைகுறை புரிதலோடும் தீராத ஏக்கத்தோடும் வரும் இளைஞனை, இணையம் எந்த வகையில் வழிநடத்திச் செல்லும் என்பது நாம் அறியாததா?

“நெருப்பு சுடும்” என்று நாம் சொல்லத் தவறியதின் விளைவு, வெளிச்சத்தைத்தேடி பறந்து நெருப்பின் மீது விழுந்து மடியும் விட்டில் பூச்சிகளாக நம் பிள்ளைகள் உருவாக்கப்படுகின்றனர். பாலியல் கல்வி என்பது இந்த அளவோடு நிறுத்திவிடக்கூடாது... அதனுள்ளே நமது சட்டங்கள் பற்றிய அம்சங்களும் அமையப் பெற வேண்டும், அப்போதுதான் அந்தக் கல்வி என்பது முழுமை பெறும்... பாலியல் ரீதியான குற்றங்களுக்கு என்னவிதமான தண்டனை? தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்யும் நபர்களை சட்டப்படி எப்படி தண்டிக்க முடியும்?, இதுவரை பாலியல் அடிப்படையிலான குற்றங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தண்டனைகள் என்னென்ன போன்ற விஷயங்களையும் தெளிவுபடுத்தினால் மட்டுமே, நாளைக்கு நம் பிள்ளைகளும் அப்படிப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.

சாதாரண தொடுதல் முதல் வன்புணர்வு வரை அத்தனையும் குற்றம்தான், வக்கிரப் பேச்சுகளும் கூட சட்டப்படி குற்றம்தான்... ஆகையால், நம் பிள்ளைகள் தங்களை தற்காத்துக்கொள்ளும் விதமாகவாவது பாலியல் கல்வி அமையப்பெற வேண்டும். ஒரு விஷயத்தை மூடி மறைப்பதன் மூலம்தான், அதன் மீதான ஆர்வம் நமக்கு அதிகமாகும்... “செக்ஸ்’ங்குறது இவ்ளோதாண்டா”ன்னு சொல்லிப்பாருங்க, அவனாகவே அதனை இயல்பான விஷயமாக பார்க்கத் தொடங்கி விடுவான். மேல்நாட்டில் பாலியல் குற்றங்கள் வெளிப்படையாக ஊடகங்களில் பேசப்படுவதால், அங்கே குற்றங்கள் நிறைய நடப்பது போலவும், இங்கே மூடி மறைக்கப்படுவதால் குற்றங்கள் குறைந்து காணப்படுவதாகவும் நினைப்பது அபத்தமான புரிதல்... நம் பிள்ளைகளின் எதிர்காலம் கருதியாவது பேசுவோம், பேசச்சொல்வோம்... “செக்ஸ்” பேசக்கூடாத வார்த்தை அல்ல, பேச வேண்டிய விஷயம்.

- விஜய் விக்கி

Pin It