தேவயானி கோப்ரகடே - இவர் அமெரிக்காவிற்கான முன்னால் இந்திய துணைத்தூதர், இந்நாள் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர இந்திய பிரதிநிதி, உலகிலேயே அமெரிக்காவின் விசுவாச அடிமைகள் என்று வர்ணிக்கப்படும், இந்திய ஆட்சியாளர்களின் தேசபக்திக்கு ஆதாரமாக விளங்குபவர். இந்திய செய்தி ஊடகங்களின் தாகம் தணிக்கும் ஊற்றாகவும், மொத்தத்தில் இப்போதைய நிலையில் இந்திய மக்களால் அதிகமாக அறியப்பட்டவராகவும் திகழ்பவர் இவர்தான்.

இப்படி இந்தியாவிலுள்ள அனைவருக்கும் பரிச்சயமானவராக தேவயானியை ஆக்கிய பெருமை அமெரிக்காவையே சேரும். தனது வீட்டுப் பணிப்பெண்ணுக்கு விசா பெற்றதில் முறைகேடு செய்தார், பணிப்பெண்ணுக்கு உரிய சம்பளத்தை அளிக்கவில்லை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் தேவயானியை அமெரிக்க போலிசார் நியூயார்க் கடைத்தெருவில் வைத்து கைவிலங்கிட்டு கைது செய்தனர். காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட தேவயானியை நிர்வாணமாக்கி சோதனை செய்த அமெரிக்க போலிசு, பின்னர் போதைப்பொருள், பாலியல் குற்றச்சாட்டுக்காக சிறை வைக்கப்பட்டிருக்கும் பெண் கைதிகளோடு சிறையில் சேர்த்து அடைத்தனர்.

"துணைத்தூதர் தேவயானியின் மீதான குற்றச்சாட்டு எதுவாயினும் அவரை கைது செய்த அமெரிக்காவின் நடவடிக்கை ஏற்புடையதல்ல. வெளிநாட்டு தூதர்களுக்கு வழங்கப்படும் சட்டப் பூர்வ உரிமையை அவருக்கு அமெரிக்கா அளிக்காதது தவறு. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தேவயானியை மட்டுமல்ல இந்தியாவையே அவமதிக்கும் செயலாகும்.

எனவே துணைத்தூதர் மீதான வழக்கை அமெரிக்கா கைவிடுவதோடு மன்னிப்பும் கோரவேண்டும்" என இந்திய அரசு பகிரங்க கோரிக்கை வைத்தது.

இந்தியாவின் இந்தக் கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கா தேவயானிக்கு தூதர்களுக்கு உரிய சலுகையை வழங்க முடியாது; அவர் மீது அமெரிக்க சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியது.

இந்தப் பிரச்சனை இந்தியப் பாராளுமன்றத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அனைத்து அரசியல் கட்சியினரும் ஒருமித்த குரலில் அமெரிக்காவின் ஆணவமிக்க நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதன் அடுத்த கட்டமாக இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து சிறப்பு சலுகைகளையும் இந்தியா திரும்ப பெற்றது. இதன் உச்சக்கட்டமாக அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு இந்திய அரசு வழங்கியிருந்த சிறப்பு அனுமதி அட்டைகளையும் திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதோடு, அமெரிக்க தூதரகத்திற்கான சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் திரும்பப் பெற்றுக்கொண்டது.

இந்தியாவின் இந்த பதிலடிக்குப் பின்னரும் கூட அமெரிக்கா தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.

இதனால் வேறுவழியின்றி தேவயானிக்கு அமெரிக்க சட்டத்திலிருந்து விலக்கு பெறுவதற்கு ஏதுவாக ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரத் தூதராக அவருக்கு பதவி உயர்வு அளித்தது இந்திய அரசு. ஆனாலும் இந்த சலுகையை அளிக்கும் அதிகாரம் ஐநாவுக்கு இல்லை என்றும் இதை அமெரிக்க அரசாங்கம்தான் தர வேண்டும் என்றும் ஐநா கைவிரித்துவிட்டது.

அதே நேரத்தில் அமெரிக்காவோ தேவயானி செய்துள்ள குற்றம் கடுமையானது; அதிலிருந்து வியன்னா ஒப்பந்தத்தின் அடிப்படையில் விலக்கு அளிக்க முடியாது, தூதரக விவகாரங்களில் மட்டுமே இந்த விலக்கு வழங்கமுடியும் என்று இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்து விட்டது.

ஆனாலும் இந்திய, அமெரிக்க அதிகாரிகள் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வுகாண முயற்சித்து வருவதாக இந்திய வெளி உறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அறிவித்துள்ளார்.

சரி, அப்படி என்னதான் அமெரிக்க சட்டத்திற்கு புறம்பாக தேவயானி செயல்பட்டார் என்பதை இனி பார்ப்போம்.

அமெரிக்காவில் தனது வீட்டில் வேலை செய்வதற்காக சங்கீதா என்ற பெண்ணை மாதம் ரூ 30,000/- சம்பளத்திற்கு அமர்த்தியுள்ளார் தேவயானி.

ஆனால் அமெரிக்க விசா விதிகளின் படி சங்கீதா சார்பில் விசா விண்ணப்பத்தை 2012 அக்டோபர் மாதத்தில் தேவயானி அனுப்பியுள்ளார். இந்த விண்ணப்பத்தில் பணிப்பெண் சங்கீதாவுக்கு மாத சம்பளம் 4500 டாலர் வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தாராம்.

இந்த விண்ணப்பத்தின் படி சங்கீதாவை நவம்பர் – 1 ம் தேதி நேர்முகத்தேர்வுக்கு வருமாறு அழைத்த அமெரிக்க அதிகாரிகள் தேவயானியும், சங்கீதாவும் செய்து கொண்ட பணி ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்டனர்.

இந்த பணி ஒப்பந்தத்தில் சங்கீதாவுக்கு வேலை நேரம் வாரம் 40 மணி நேரம் என்றும் ஒரு மணி நேரத்திற்கு சம்பளம் 9.75 டாலர் என்றும் குறிப்பிட்டிருந்ததாம். மேலும் வாரம் ஞாயிறு விடுமுறை நாள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததோடு, அமெரிக்க பணியாளர் நலன் சட்டப்படி சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாட்கள், மருத்துவ விடுமுறை நாட்கள், ஆண்டு விடுமுறை ஆகியவையையும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த பணி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட அமெரிக்கா, சங்கீதாவிற்கு நவம்பர் 14-ம் தேதி விசா வழங்கியது. நவம்பர் 24- ம் தேதி சங்கீதாவை நியூயார்க் அழைத்துச் சென்றுள்ளார் தேவயானி. அன்றிலிருந்து சங்கீதா 2013 ம் ஆண்டு ஜீன் மாதம் வரை 7 மாதம் தேவயானி வீட்டில் வேலை செய்துள்ளார்.

ஜீன் மாதம் தேவயானியின் வீட்டிலிருந்து வெளியேறிய சங்கீதா, நியூயார்க் போலிசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் இம்மாதம் டிசம்பர் 12-ம் தேதி தேவயானியை அமெரிக்கப் போலிசு கைது செய்துள்ளது.

தேவயானி, சங்கீதா சார்பில் விண்ணப்பித்த விசா விண்ணப்பத்தில் மோசடி செய்தார். ஒப்பந்தப்படி சங்கீதாவுக்கு சம்பளம் அளிக்காததுடன் கூடுதலாகவும் வேலை வாங்கியுள்ளார் என்பது தேவயானி மீது அமெரிக்கா சாட்டியிருக்கும் குற்றச்சாட்டாகும்.

அமெரிக்கப் பணியாளர் சட்டத்தை தேவயானி மட்டுமல்ல இந்தியாவிலிருந்து வீட்டு வேலைகளுக்காக பணியாட்களை யார் அழைத்துச் சென்றாலும் அவற்றை நிறைவேற்ற முடியாது. இதன் காரணமாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு பணியாளர்களை அழைத்துச் செல்பவர்கள் அனைவரும் குற்றவாளிகள்தான். இந்த அடிப்படையில் விசாவிற்காக விண்ணப்பிக்கும் போதே அந்த விசாவை அமெரிக்கா நிராகரித்துவிட முடியும். பணியாளர்கள் புகார் அளிக்கும் வரை காத்திருக்கத் தேவையில்லை..

அப்படியானால் இப்படிப்பட்ட விசாக்களை அமெரிக்கா அளிப்பதற்கான காரணம் உள்நோக்கமுடையது. தனக்கு தேவைப்படும்போது அமெரிக்கா விசா முறைகேட்டை பயன்படுத்திக் கொள்கிறது என்பதுதான் இதில் புதைந்திருக்கும் உண்மையாகும்.

சங்கீதா சார்பில் விசா விண்ணப்பம் அளித்த தேவயானி பணிப்பெண்ணுக்கு மாத சம்பளம் 4500 டாலர் என்று குறிப்பிட்டிருந்தார் என்றும் இது மோசடி என்றும் இப்போது கூறுகிறது.

அமெரிக்கா துணைத்தூதர் தேவயானியின் மாத சம்பளமே 4500 டாலர்கள்தான். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ2,70,000/- . இப்படி இருக்கும்போது தனது பணியாளருக்கு அவர் மாத சம்பளமாக ரூ2,70,000/- குறிப்பிட்டிருந்தது எப்படி சாத்தியம் என்பது அப்போதே அமெரிக்காவுக்கு தெரியதா? இது தவறானது, மோசடியானது என்று அப்போதே அந்த விண்ணப்பத்தை அமெரிக்கா நிராகரிக்காதது ஏன்?

மோசடியான விசா விண்ணப்பத்தை நிராகரிக்காத அமெரிக்கா, அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் சங்கீதாவை நேர்முகம் கண்டுள்ளது. இந்த நேர்முகத்தில் அமெரிக்க பணியாளர்கள் நல சட்டப்படி பணி ஒப்பந்தத்தை சங்கீதா அளித்துள்ளார். அந்த ஒப்பந்தத்தில் வாரம் 40 மணி நேரம் வேலை நேரம் என்றும், ஒரு மணி நேர வேலைக்கு 9.75 டாலர் சம்பளமாக வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார் என்றும் இப்போது அமெரிக்கா கூறுகிறது. ஒரு மணி நேரத்திற்கு 9.75 டாலர் என்றால் ஒரு மாதத்திற்கு 1560 டாலர்கள் சம்பளமாக ஆகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ.93,600/- ஆகிறது.

விசா விண்ணப்பத்தில் பணியாளர் மாத சம்பளமாக ரூ 2,70,000/- என்று குறிப்பிட்டுவிட்டு, நேர்முகத்தில் அளித்த பணி ஒப்பந்த நகலில் மாத சம்பளம் ரூ93,600/- குறிப்பிடப்பட்டுள்ளது, எனவே இந்தத் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளதால் விசா வழங்க முடியாது என்று விண்ணப்பத்தை அமெரிக்க அதிகாரிகள் அப்போதே நிராகரித்திருக்கலாம். ஆனால் அதற்கு மாறாக விசா வழங்கப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கு ரூ2,70,000/- சம்பளம் வாங்கும் ஒருவர் தனது பணியாளருக்கு ரூ93,600/- சம்பளமும், வீட்டு வாடகை, மருத்துவச் செலவு, உணவு உள்ளிட்ட சலுகைகளையும் வழங்கினால் குறைந்தது ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலாக மாத சம்பளமாக வழங்க வேண்டும். இது நடப்பது சாத்தியம் இல்லை என்பது அமெரிக்க அதிகாரிகளுக்கு மிக நன்றாகவே தெரிந்திருக்கும்.

எனவே தேவயானி மீதான அமெரிக்க நடவடிக்கை முற்றிலும் சட்டப்படியானது என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரமாக காட்டுபவர்களின் வாதத்திற்குப் பொருந்துவதாக இல்லை.

மேற்கண்ட தகவலோடு, சங்கீதாவின் குடும்பத்தினரை அவசரம், அவரசரமாக இலவசமாக அமெரிக்கா அழைத்துச்சென்று அவர்களை இலவசமாக மீண்டும் அனுப்பிவைத்தார்கள் போன்ற தகவல்களும் அமெரிக்காவின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்தும் செயலாகவே உள்ளது.

அமெரிக்க அரசின் நடவடிக்கை மட்டுமல்ல, இந்திய அரசின் நடவடிக்கைகளும் உள்நோக்கமுடையதாகத்தான் இருக்கிறது.

தேவயானிக்கு முன்பே அவரை விட உயர் பதவிகளில் இருந்துள்ள இந்திய குடியரசுத் தலைவர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரை எல்லாம் அமெரிக்கா அவமதித்தபோதெல்லாம் வாய் மூடி மவுனியாக இருந்த இந்திய அரசு, இப்போது தேவயானி விவகாரத்தில் அமெரிக்கா மன்னிப்பு கோரும்வரை ஓயமாட்டோம் என்று கொக்கரிப்பது தேசபக்தியைப் போன்று தோன்றினாலும், உண்மை அதுவல்ல.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அண்மை ஆண்டுகளில் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டது. தமது குடிமக்களின் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் குட்டிநாடான இலங்கையின் செயல் இந்திய ஆட்சியாளர்களின் தேசபக்தியைத் தூண்டவில்லை. ஆனால் தேவயானி மீதான அமெரிக்காவின் கைது நடவடிக்கை இந்திய ஆட்சியாளர்களிடையே தேசபக்தியைத் தூண்டிவிட்டதாக கருதுவது கேழ்வரகில் நெய் வடியும் கதைதான்.

அமெரிக்காவும், இந்தியாவும் ஒருவருக்கு எதிராக ஒருவர் எதிர்ப்பதைப் போன்று காட்டிக்கொண்டாலும், இவைகள் நம்மை உசுப்பிவிடுவதற்கான நாடகமேயன்றி வேறல்ல.

இந்த நாடகத்தில் இருவரின் குரல்களும் வெவ்வேறாக தோன்றினாலும், இருவரின் நோக்கமும், இலக்கும் ஒன்றுதான். அது இந்திய மக்களாகிய நம்மை ஏய்ப்பதுதான். நமது இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையிடுவதற்கு கதவை அகல திறந்துவைக்க எஞ்சியுள்ள தடைகளையும் உடனடியாக அகற்றிவிட வேண்டும் என அமெரிக்க கோருகிறது.

அமெரிக்காவின் இந்த கோரிக்கையை ஏற்பதில் இந்திய ஆட்சியாளர்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் மாற்றுக் கருத்தேதும் இல்லை என்றாலும், உள்நாட்டில் நிலவும் சிக்கலான நிலைமைகளினால், அமெரிக்காவின் தேவையை இந்திய ஆட்சியாளர்களால் உடனடியாக நிறைவேற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். அதிலும் தற்போது மத்தியில் நிலவும் நிலையற்ற கூட்டணி ஆட்சி போன்றவைகள் இதற்கு அடிப்படையாக உள்ளன‌.

இப்படிப்பட்ட உள்நாட்டு நிலைமைகள் இந்திய ஆட்சியாளர்களுக்கு நிலவினாலும் அது அமெரிக்காவுக்குத் தேவையற்றது. பாராளுமன்றத்தில் காங்கிரசுக்குப் போதிய பலம் இல்லாத காரணத்தாலும் எதிர்க்கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்பந்தத்திற்கு பணிந்து உலகமயமாக்கலை தீவிரப்படுத்தாமல் அரைகுறையாகவும், மந்தமாகவும் செயல்படுத்துகிறது.

இப்படிபட்ட நிலையில் அடுத்த சில மாதங்களில் இந்தியப் பாராளுமன்றத்திற்கு தேர்தல் வரவிருக்கிறது. இந்தத் தேர்தலில் மோடி பிரதமராவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக 4 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த மோடியின் குஜராத் மாநிலம்தான் இப்போதைய நிலையில் உலகமயமாக்கலின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. மோடி பிரதமரானால் உலகமயமாக்கல் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதை அமெரிக்கா மிக நன்றாகவே அறியும்.

எனவே வரப்போகும் ஆட்சியாளர்களின் உலகமயமாக்கல் நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்தால் அப்படி செய்தவர்களுக்கு என்ன நேரும் என்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைதான் தேவயானி மீதான அமெரிக்க நடவடிக்கை.

ஆனால் இப்படிப்பட்ட உள்நாட்டு நிலைமைகள் இந்திய ஆட்சியாளர்களுக்கு இருந்தாலும் அவைகள் அமெரிக்காவின் நலன்களுக்கும், தேவைக்கும் எதிரானது. அதிலும் அமெரிக்காவில் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலைக்கு இந்திய நிலைமைகள் தேவையற்றவைகளாகும்.

எனவே இந்திய ஆட்சியாளர்களை, அதிகார வர்க்கத்தை எச்சரிக்கும் நடவடிக்கைதான் தேவயானியின் கைது நடவடிக்கையாகும்.

அமெரிக்காவின் விருப்பத்திற்கு ஏற்ப முழுமுற்றாக நடந்து கொள்ளாததன் எதிர்விளைவாக அமெரிக்கா இந்தியா மீது அரசியல், பொருளாதார ரீதியான நெருக்கடிகளைத் தந்தால் அதனால் ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரம்தான் பாதிக்கப்படும். தனிப்பட்ட முறையில் இந்திய ஆட்சியாளர்களுக்கோ, அதிகார வர்க்கத்திற்கோ இழப்பு எதுவும் ஏற்பட்டுவிடாது.

இதற்கு மாறாக இவர்களுக்கு தனிப்பட்ட முறையில் இழப்பையும், பாதிப்பையும் தன்னால் ஏற்படுத்த முடியும் என்பதைக் காட்டும் நடவடிக்கைதான் தேவயானியின் கைது விவகாரம்.

இப்படியான பாதிப்புகளை இவர்களுக்கு அமெரிக்க மண்ணில் வைத்துமட்டுமல்ல, இந்தியாவிலேயே அமெரிக்காவால் ஏற்படுத்த முடியும். அதற்குத் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் இந்தியாவிலேயே அமெரிக்க வைத்துள்ளது.

ஆகவே தேவயானி மீதான அமெரிக்காவின் கைது நடவடிக்கை இந்திய ஆளும் கும்பலுக்கும், தமக்கும் உள்ள முரண்பாடுகளை தீர்த்துக்கொள்வதற்கான அப்பட்டமான மிரட்டல் நடவடிக்கையாகும்.

உலகமயமாக்கல் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் உள்நாட்டில் தமக்குள்ள நெருக்கடிக்கு அடிபணிவதா அல்லது அமெரிக்காவின் எதிர் நடவடிக்கைக்கு ஆளாவதா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கத்தினரும் தள்ளப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை உண்மையில் தேவயானிக்கு மட்டுமே எதிரானது அல்ல. இந்தியாவின் வாங்கும் சக்தி அற்ற – தேவையற்ற – மக்கள் அனைவருக்கும் விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை.

அமெரிக்காவின் பார்வையில் மனிதர்கள் என்றால் அவர்கள் வாங்கும் சக்தி படைத்தவர்கள் மட்டுமே. அப்படிப்பட்ட வர்க்கத்தைச் சேர்ந்த தேவயானிகளுக்கே அமெரிக்கா தரும் மரியாதை இதுதான் என்றால் தேவையற்ற மனிதர்களான 100 கோடி இந்தியர்களைப் பற்றிய அமெரிக்காவின் கண்ணோட்டத்தை சொல்லித்தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன?

இரண்டாம் உலகப் போர் காலத்தில் இருந்து இன்று வரை உலகில் பல கோடிக்கணக்கான மனித உயிர்களை காவுகொண்டு உலகின் கொடிய வில்லனாக வலம் வரும் அமெரிக்கா, சாதாரண பணிப்பெண் சங்கீதாவின் உரிமைக்காக போராடுவதாக நம்புவது, நம்பச் சொல்வது போன்ற மூடத்தனம் வேறெதுவும் இருக்க முடியாது.

மொத்தத்தில் நமக்கு தோண்டப்படும் சவக்குழியை நமது கண்களில் இருந்து மறைப்பதற்கும், அதன் ஓசை நமது காதுகளில் விழாமல் தடுப்பதற்கும்தான் தேவயானி, சங்கீதா விவகாரத்தை அமெரிக்கா பயன்படுத்திக்கொண்டுள்ளது.

இப்போது நம் முன் இரண்டு நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

1.                    பணிப்பெண் சங்கீதா மீதான துணைத்தூதர் தேவயானி ஒடுக்குமுறை.....

2.                    உலகமயமாக்கல் நடவடிக்கையை தீவிரப்படுத்த இந்திய ஆட்சியாளர்களுக்கு அமெரிக்கா தரும் நெருக்கடி......

 

மேலே கண்ட இரண்டில் மிகத்தீவிரமான இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் நலனை பாதிக்கும் தன்மையுடையது எது என்பதிலிருந்துதான் நாம் சரியான முடிவுக்கு வரமுடியும்.

பணிப்பெண் சங்கீதாவை துணைத்தூதர் தேவயானி அநீதியாக நடத்தினார் என்பது சட்டத்தின் கண்களுக்கு வேண்டுமானால் நிரூபிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கலாம். அது உண்மை என்பதை நாம் அறிவோம். ஏனென்றால் இந்திய சமூக நடவடிக்கையில் சங்கீதா நடத்தப்பட்ட முறைதான் மிக இயல்பான ஒன்றாகும்.

ஒரு சங்கீதா மட்டுமல்ல, இந்தியாவின் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்வு அதைவிட கோரமானதாகும். இந்திய உழைக்கும் மக்கள் மீதான சுரண்டலும், ஒடுக்குமுறையும் உலகமயமாக்கல் நடவடிக்கைக்குப் பிறகே மிகவும் கோரமாக ஆக்கப்பட்டுள்ளது. இதை இன்னமும் குறிப்பாக சொல்வதென்றால் இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்கள் தேவையற்றவர்களாக ஆக்கப்பட்டுவிட்டோம்.

நாட்டின் பெரும்பான்மை மக்களை தேவையற்றவர்களாக மாற்றிய உலகமயமாக்கலை இன்னமும் முழுமையாக செயல்படுத்தக் கோருவதுதான் தேவயானி மீதான அமெரிக்க நடவடிக்கையின் உள்ளடக்கம்.

எனவே,

•                     சங்கீதா மீதான தேவயானியின் ஒடுக்குமுறையை வன்மையாகக் கண்டிப்போம்!

•                     தேவயானி கைதின் உள்ளே மறைந்துள்ள அமெரிக்க நோக்கத்தை முறியடிப்போம்!

•                     இந்தியா நாடு அந்நியர்களுக்கு காட்டிக் கொடுப்பவர்களுக்கு உரியதல்ல; இது நூறு கோடி உழைக்கும் மக்களின் நாடென்பதை நிலை நாட்டுவோம்!

- சூறாவளி (தொடர்பு எண்: 9842529188, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., http://suraavali.blogspot.in/)

Pin It