பாஜக தனது கட்சியின் பிரதம வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவித்திருக்கிறது. அத்வானிக்கும் மோடிக்கும் இடையே பதவிச்சண்டை இருந்தபோதிலும் கிழட்டுக்காட்டேரி அத்வானி ஒரங்கட்டப்பட்டு, மோடி முன்நிலைப்படுத்தப்பட்டுள்ளார். மோடியால் மட்டுமே இந்தியாவைக் காப்பாற்ற முடியும் என்றும், படுகுழியில் இருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை அவரால் மட்டுமே மீட்டெடுக்க முடியும் என்றும் காவிப்பரிவாரங்கள் கூறி வருகின்றன. மோடியும் “நாட்டில் சாமானிய மக்களின் ஒரே நம்பிக்கை கீற்றாக பாரதீய ஜனதா கட்சி ஆகி உள்ளதாகவும் தேசத்தை பாரதீய ஜனதாவால் மட்டுமே காப்பாற்ற முடியும்” என்றும் கூறுகிறார்.
எந்த கருமத்தையோ இவர்கள் கூறிவிட்டுப் போகட்டும் என்று நாம் சும்மா இருந்துவிட முடியாது. ஏனெனில் பெரும்பாலான ஊடகங்களை தம் கைவசம் வைத்திருக்கும் பார்ப்பன பாசிச கும்பல் தொடர்ச்சியாக மோடியைப் பற்றி பல பொய்யான தகவல்களையும் வதந்திகளையும் பரப்பி வருகின்றன. இதன்மூலம் மோடிக்கு புனிதத்தன்மையை கட்டியமைக்கும் முயற்சியை இவை சிறப்பாக செய்துவருகின்றன.
மோடியின் வளர்ச்சியைப் பற்றி வானளவாகப் புகழும் பார்ப்பன ஊடகங்கள் அவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது கடின உழைப்பின் மூலம் இன்று பாஜகவின் பிரதம வேட்பாளராக அறிவிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளதாக கூறுகின்றன. ஆனால் சிறிய திருட்டில் ஆரம்பித்து அடிதடி, கொலை, கற்பழிப்பு, ஆள்கடத்தல் என்று வளந்து வட்டம், மாவட்டம் என மாறி, எம்எல்ஏ, எம்பி, மத்திய அமைச்சரென உருவாகும் நம்ம ஊர் அரசியல்வாதிக்கும் மோடிக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை.
எம்.ஏ. அரசியல் அறிவியல் படித்த மோடி சிறு வயதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ்சில் தீவிரமாக செயல்பட்டவர். அத்வானியின் ர(த்)தயாத்திரையில் பங்கெடுத்துக்கொண்டு தம்மை முழுமையான இந்துமத வெறியனாக அடையாளப்படுத்திக் கொண்டவர். 2001-ம் ஆண்டு குஜராத்தின் முதல் அமைச்சராகப் பதவியேற்றார். 2002-யில் கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் பல அப்பாவி முஸ்ஸிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். குல்பர்கா சமூகக்கூடத்தில் மட்டும் 69 முஸ்ஸிம்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். காங்கிரசின் முன்னாள் எம்பி ஹஸன் ஜாஃரி துண்டு துண்டாக வெட்டிக்கொல்லப்பட்டார். அப்போது நடந்த கலவரத்தை மோடி அரசு கண்டுகொல்லாமல் இருக்கும்படி உத்தரவு இட்டதாக 2002-ம் ஆண்டு குஜராத்தின் காவல்துறை உளவுப் பிரிவின் கமிஷனராக இருந்த சஞ்சீவ் ராஜேந்திரபட் அம்பலப்படுத்தி இருக்கின்றார். இதற்காக இவரை மோடி அரசு சிறையில் அடைத்தது.
மேலும் ஜீன் 15, 2004 அன்று இஷ்ரத் ஜாகன், அம்ஜத் அலி, ஜிஷன் ஜோஹர், அப்துல்கனி என்ற நான்கு பேர் மோடி அரசால் திட்டமிட்டு போலி மோதல் கொலை செய்யப்பட்டனர். இதை மோடியுடன் கூட்டுசேர்ந்து அரங்கேற்றிய அகமதாபாத் நகரின் துணை ஆணையராகவும் பயங்கரவாத எதிர்ப்புப் படையின் துணை தலைமை ஆய்வாளராகவும் இருந்து தற்போது மோடி அரசால் கைவிடப்பட்டு சிறையில் இருக்கும் டிஜி வான்சாரா அம்பலப்படுத்தியிருக்கிறார்.
2002-யில் நடந்த குஜராத் இனப்படுகொலையில் மோடியின் பங்கு பற்றி பல்வேறு ஆதாரங்கள் குறிப்பாக தெகல்காவின் வீடியோ முன் இந்துமத வெறியர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலங்கள் இருந்தும் இந்தக் கொலை வெறியனை கைதுசெய்யாமல் விட்டதில் இருந்தே இந்திய அரசின் இந்துத்துவப் போக்கையும் அதன் மதச்சார்பற்ற யோக்கியதையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.
இப்படிப்பட்ட கொலை வரலாறுகளை கொண்ட கொடிய மிருகத்தை இந்தியாவின் பிரதமராக வரவேண்டும் என்று விரும்பும் ஒவ்வொருவரும் மோடியின் கொலைத்திட்டத்திற்கு உடந்தையாக இருந்தவர்களாகவும் அதை விரும்பியவர்களாகவுமே கருதப்படுவார்கள்.
மேலும் குஜராத் இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலமாக மாறிவிட்டதாகவும் அதைப் போலவே இந்தியாவை மோடி முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லப்போவதாகவும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக கும்பல்கள் கூறிவருகின்றன. ஆனால் உண்மை வேறு ஒன்றாக உள்ளது.
2001-2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி குஜராத்தின் எழுத்தறிவு சதவீதம் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது 17வது இடத்திலேயே உள்ளது. தனிநபர் மாநில உற்பத்தியில் 7வது இடத்தில் உள்ளது. தேசிய மாதிரி கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின் படி குஜராத்தில் 44.6 சதவீதம் மக்கள் ஊட்டச்சத்து குறைவினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 5 வயதுக்குட்பட்ட 66 சதவீத குழந்தைகள் ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பதிமூன்று ஆண்டுகளில் மோடி குஜராத்தில் எதையும் கிழிக்கவில்லை என்பதையே மேற்கூறிய புள்ளி விவரங்கள் நமக்குக் காட்டுகின்றன. தம்மைப் பற்றி பொய்யான தகவல்களை பரப்புவதற்காகவே ஆப்கோ வேர்ல்ட்வைட் என்னும் அமெரிக்க விளம்பர நிறுவனத்தை வேலைக்கு அமர்த்தியுள்ளார். இவர்களின் வேலை என்னவென்றால் சீனாவின் பேருந்துநிலையத்தை அகமதாபாத் பேருந்துநிலையமாக காட்டுவது, இன்னும் கொஞ்சம் மேலே சென்று மோடி, குஜராத்தின் கடனை அடைத்துவிட்டதாகவும் உலக வங்கியில் உபரிபணத்தை போட்டு வைத்திருப்பதாகவும் ஊருக்குள் வதந்தியைப் பரப்புவது, இதன் முலம் மோடியை இந்தியாவின் தன்னிகரில்லாத தலைவர் என்று மக்களை நம்ப வைப்பதாகும்.
மோடி மட்டுமல்ல ஒட்டு மொத்த ஆர்.எஸ்.எஸ்., பாஜக கும்பலுமே தம்மை காப்பாற்றிக் கொள்வதற்காக எதை வேண்டுமாலும் செய்யத் தயங்காதவர்கள். தமக்கு ஏற்றவாறு வரலாறுகளை கட்டியமைத்து அதையே உண்மையென மக்களை நம்பச் சொல்பவர்கள். நம்பாதவர்களை மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் உயிரிழக்கச் செய்பவர்கள்.
காங்கிரசு ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாகவும் நிர்வாகம் சீர்கெடு அடைந்துவிட்டதாகவும் கூறும் பாஜக, தன் ஆட்சிக் காலத்தில் என்ன செய்தது? பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்காகவே அருண்சோரி என்னும் அமைச்சர் நியமிக்கப்பட்டார். ஏறக்குறைய 31 பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டன. இலாபத்தில் இயங்கிக் கொண்டிருந்த மாடர்ன் புட்ஸ், விதேஷ் சஞ்சார் நிறுவனம் போன்றவை தனியாருக்கு அதன் மதிப்பைக் காட்டிலும் பல மடங்கு குறைவான விலைக்கு கொடுக்கப்பட்டன. இதன் முலம் பல ஆயிரங்கோடி ரூபாய் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
பாஜக ஆட்சிக் காலத்தில் தான் கர்நாடகத்தில் 11000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு மடிந்தனர். அனைத்துத் துறைகளிலும் அந்நிய மூலதனம் எந்த வரம்பும் இன்றி அனுமதிக்கப்பட்டது. இந்தியாவின் வளங்களை பன்னாட்டு நிதியாதிக்க கும்பல்கள் தங்கள் விருப்பம் போல சுரண்டிக்கொள்ள ஏதுவாக இந்தியாவின் சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டன.
தங்களை உண்மையான தேசபக்தர்கள் என்று கூறிக்கொள்ளும் இந்த அயோக்கியர்களின் ஆட்சியில்தான் கார்கிலில் போரிட்டு மாண்டுபோன வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்கியதில் ஊழல் நடந்தது. மேலும் போலி இராணுவபேர ஊழல், மருத்துவ சாதனங்களை கொள்முதல் செய்ததில் ஊழல் என உலகமே பார்த்து காரித்துப்பும் அளவிற்கு ஊழல் செய்த ஊழல்பெருச்சாளிகள் தான் இவர்கள்.
உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் போன்ற மக்கள் விரோத கொள்கைகளை கடைபிடிப்பதிலும் அதை தீவிரமாக நடைமுறைப்படுத்துவதிலும் காங்கிரசு மற்றும் பாஜக இடையே பெரிய வேறுபாடு ஒன்றும் கிடையாது. பாஜக ஆட்சியில் அது கொண்டிருந்த பல மக்கள் விரோதத் திட்டங்களுக்கு காங்கிரசும், காங்கிரசு ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல மக்கள் விரோதத் திட்டங்களுக்கு பாஜகவும் ஆதரவு தெரிவித்து அந்தத் திட்டங்கள் நிறைவேற உடந்தையாக இருந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
எனவே மோடி வந்தால் அனைத்தும் தலைகீழாக மாறி விடும் என்று சொல்வது அப்பட்டமான பொய்யாகும். மேலும் இந்தியாவில் உள்ள சிறுபான்மையின மற்றும் தலித் மக்கள் நிம்மதியாக வாழவும் அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றாவும் மோடி போன்ற பார்ப்பன, பாசிச இந்து மதவெறிக் கும்பலைப் புறக்கணிப்பதும் அதற்கு எதிராக தீவிரமான எதிர்ப்புப் பிரச்சாரங்களை கட்டியமைப்பதும் முக்கியமாகும்.
குஜராத்தை இந்து மதவெறியின் சோதனைச்சாலையாக மாற்றியதைப் போல ஒட்டுமொத்த இந்தியாவையும் மாற்ற நினைக்கும் காவிக்கும்பல்களின் கனவை உடைத்தெறியவும், உலக நிதிமூலதன கும்பல்களிடம் இந்தியாவை அடகுவைக்கும் ஆளும் வர்க்க அயோக்கியர்களுக்கு எதிராகவும் ஜனநாயக சத்திகளாகிய நாம் ஒரணியில் திரள்வோம்.
இன்று ஒட்டுமொத்த ஊடகங்களும் அவர்கள் வசமே. மிகச் சிறிய அளவில் உள்ள இந்த வசதியை எப்படி பயன் படுத்துவது என்பதை கண்டுகொள்ளாவிட் டால் இந்த எதிர்புகள் எதிர்புகளாக மாறாமல் புலம்பலாகப் போய்விடும்.
கீற்றில் வாசகர்களைவிட கட்டுரை எழுதுபவர்கள்தான ் அதிகமாக இருப்பார்களோ என எண்ணத்தோன்றுகிற து.
RSS feed for comments to this post