ஈரோடு புத்தக கண்காட்சியில் விடியல் பதிப்பகத்தின் 'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்' என்ற ஜான் பெர்கின் எழுதிய 'Confession of an Economic hit man' தமிழ் மொழிபெயர்ப்பு பார்த்தேன். கடந்த சில ஆண்டுகளாக அந்த பதிப்பகத்தில் அதிகம் விற்பனையான திரு.இரா.முருகவேளின் மொழிபெயர்ப்புக்கு பதிலாக எழுத்தாளர் திரு.போப்பு மொழிபெயர்த்த புத்தகமாக அது இருந்தது. இரா.முருகவேள் தனது மொழிபெயர்ப்பை தற்சமயம் பாரதி புத்தகாலயத்திற்கு கொடுத்துவிட்ட காரணத்தால் மறு மொழிபெயர்ப்பாக திரு. போப்பு மொழியாக்கத்தில் அதே பெயரில், வெளிப்பார்வைக்கு எந்த வேறுபாடும் இன்றி புத்தகம் கொண்டுவரப்பட்டுள்ளது.

விடியல் பதிப்பகம் இதுவரை ஏழு பதிப்புகளை செய்து விற்ற புத்தகத்திற்கு, எட்டாவதாக ஒரு புதிய மொழிபெயர்ப்பு என்பதே பதிப்பக நெறிக்கு ஏதுவானதல்ல. இந் நிலையில் அந்த புத்தகத்தின் பதிப்புரை மற்றும் பின் அட்டையில் அலங்கரிக்கும் பதிப்புரை வாசகங்கள் நாம் விவாதிக்கவேண்டிய ஒன்று. பதிப்புரையில் விடியல் பதிப்பகத்தார் "இந் நூலின் முந்தைய பதிப்புகளில் மொழிபெயர்ப்பின் ஒப்பனையில் காலஞ்சென்ற விடியல் சிவா குறையைக் கண்டு கவலை கொண்டதாகவும் அந்த குறையை இந்த மொழிபெயர்ப்பு சரி செய்துள்ளது என்றும் விடியல் சிவாவின் உள்ளக் குறையை போக்கியதாகவும் போன்ற தொனியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பதிப்புரை முந்தைய மொழிபெயர்ப்பாளரான இரா.முருகவேளை வம்புக்கு இழுக்கும் ஒரு செயல் என்றே கருதுகின்றேன். இரா.முருகவேளின் மொழிபெயர்ப்பில் ஏழு பதிப்புகளை தாண்டிய புத்தகம் குறையுடையது என்றால் குறையுடைய புத்தகத்தை விற்பனை செய்த பதிப்பகத்தை குறையுடைய சேவையை வழங்கிய குற்றவாளியாக கருதமுடியும். ஏற்கனவே இந்த நூலை வாங்கிய வாசகர்கள் விடியல் பதிப்பகத்தை நுகர்வோர் நீதிமன்றத்திற்கு இழுக்கலாம். மேலும் ஏழு பதிப்பு வரை குறையுடைய புத்தகத்தை விற்பனை செய்த மறைந்த விடியல் சிவாவின் நேர்மை அதன் தற்போதைய பதிப்பகத்தாரால் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

விடியல் சிவாவுக்கு பதிப்புரை எழுதும் வாய்ப்பிருந்தும், குறை என அவர் கருதியதாகக் கூறப்படும் சங்கதிகளை கடந்த ஏழு பதிப்பிலும் எழுதாமல் போனதன் மர்மம் புரியவில்லை. பதிப்பகத்தார்கள் தங்களை பண்ணையார்கள் என்று நினைத்துக்கொண்டு படைப்பாளர்களை, மொழிபெயர்ப்பாளர்காளை வேலையாட்களாக நடத்தும் ஆதிக்க பண்பின் வெளிப்பாடாய் உள்ளது தற்போது வந்துள்ள இந்த பதிப்புரை. போகின்ற போக்கில் ஒரு பிரதி குறையுடையது என சேறுவாரி இறைக்கும் செயல்களை அறிவுசார் உலகு ஏற்காது. குற்றம் எனச் சொல்லும் போது என்ன குற்றம் என உரக்கப் பேசுவது, விரிவாக விவாதிப்பது மட்டுமே படைப்பு நேர்மை. அத்தகைய விவாதமே பல விவாதங்களுக்கும் மற்றும் மறைந்த விடியல் சிவா குறித்த விமர்சனங்களுக்கும், ஆய்வுக்கும் இட்டுச் செல்லும். தனது பதிப்பகத்தில் ஏழு பதிப்பு பதிப்பிக்கும்போது அது சிறந்த பிரதி, அதனையே மாற்று பதிப்பகத்திற்கு கொடுத்தால் அது குறையுடையது என்பது அவதூறு, காழ்புணர்வு சார்ந்த கருத்தாகவே கருத வேண்டியுள்ளது.

- ச.பாலமுருகன்

Pin It