தர்மபுரி நாயக்கன் கொட்டாய், நத்தம் காலனி சாதிக்கலவரத்தைத் தொடர்ந்து சூத்திரன் இராமதாசு; அவரது கூட்டணியில் இணைந்துள்ள மற்ற சாதிச் சங்கத் தலைவர்களும் தொடர்ந்து ஊடகவெளியிலும், ஊர் ஊருக்கு மேடைபோட்டும் சாதி வெறியை கக்கிக் கொண்டிருக்கின்றனர். காதல் நாடகத் திருமணங்களைத் தடுப்போம், சாதிமறுப்புத் திருமணங்களை சட்டப்படி தடைசெய், வன்கொடுமை தடுப்பச் சட்டத்தினை நீக்கு போன்ற அரிய பல கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாட்டில் உள்ள சாக்கடைப் புழுக்கள் எல்லாம் ஓரணியில் திரண்டு கொண்டிருக்கின்றனர்.

ramadoss_224          இப்படி சட்டத்திற்குப் புறம்பாக மக்கள் விரோதக் கருத்துக்களை வண்டி வண்டியாய் வாந்தியெடுத்துக் கொண்டிருக்கும் பிற்போக்கு பக்கிரிகளை பார்ப்பன ஜெயா அரசு கண்டுகொள்ளாமல் இருக்கின்றது.

          நிலைமை இப்படியென்றால் திருமா தொடர்ந்து ‘சூத்திரன் இராமதாசுக்கு யாரோ தவறான தகவல்களை தருகிறார்கள்; அதனால் தான் இப்படி பேசுகிறார். அடிப்படையில் சூத்திரன் இராமதாசு நல்லவர்’ என்று மக்களுக்கு தவறான தகவல்களைத் தந்து கொண்டிருக்கிறார். அம்பேத்கர் சிலையை அதிக இடங்களில் திறந்ததற்காக சூத்திரன் இராமதாசுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ பட்டம் கொடுத்தார். இப்போது ஏறக்குறைய 300 தலித் குடிசைகளை கொளுத்தி இருக்கிறார்கள். திருமா இப்போது சூத்திரன் இராமதாசுக்கு மனுநீதி காத்த மாமணி என்று பட்டம் கொடுக்கத் தயாரா?

          திருமா தொடர்ந்து ஒன்றும் தெரியாதவர் போல் நடித்து, தலித் மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். சூத்திரன் இராமதாசு ஒரு சாதிவெறியன் என்று முன்பே இவருக்குத் தெரியாதா? தெரியாது என்று சொன்னால் நாம் அல்ல சூத்திரன் இராமதாசே வேறு ஒன்றால் சிரிப்பார்.

          அடங்கமறு, அத்துமீறு என்று கட்சி ஆரம்பித்த திருமா இதுவரை எங்கெல்லாம் அடங்க மறுத்தார், எதற்காகவெல்லாம் அத்துமீறினார் என்று மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் பேசத் தயாரா? கட்சி ஆரம்பித்த இத்தனை ஆண்டுகளில் தலித் மக்களின் வாழ்க்கையில் என்ன மாதிரியான முன்னேற்றத்தை கொண்டு வந்துள்ளார் என்று சொல்ல முடியுமா? ஒரு வெங்காயமும் கிடையாது, சில இடங்களில் கோயில் நுழைவுப் போராட்டங்கள் நடத்தியது, தலித் இளைஞர்களை சாதியின் பெயரால் ஒன்று திரட்டியது என்பதைத் தவிர வேறு எதையும் சாதிக்கவில்லை. இவர்களை வைத்துக் கொண்டு எந்த சாதிக் கலவரத்தையும் திருமாவால் தடுக்க முடியாது என்பதே உண்மை.

          திருமாவின் கட்சியில் உள்ள இரவிக்குமார் போன்ற போர்ட் பவுண்டேஷனின் பின்நவீனத்துவ கைக் கூலிகள் தலித் விடுதலைக்கும் சாதியற்ற சமூகம் உருவாவதற்கும் என்ன மாதிரியான தீர்வுகளை முன்வைக்கிறார்கள் என்பது கேள்வி கேட்கப்பட வேண்டிய ஒன்று.

          ரவிக்குமார், அ.மார்க்ஸ், ஸ்டாலின் ராஜலிங்கம், எஸ்.வி.இராஜதுரை போன்ற பின் நவீனத்துவவாதிகள், தலித்துகளின் விடுதலை என்பது பாட்டாளி வர்க்க விடுதலையுடன் தொடர்புடையதா அல்லது தலித்துகளை மட்டும் இந்திய அளவில் விடுதலை பெற்றவர்களாக ஆக்கிவிட முடியும் என்று எண்ணுகிறார்களா? பொதுவாக இவர்கள் அனைவரும் கம்யூனிச விரோதிகள், பாட்டாளி வர்க்க விடுதலையை விரும்பாதவர்கள். கருத்தியல் தளத்தில் சீரழிவு கலாச்சாரத்தைப் புகுத்தி வர்க்க உணவர்வற்ற மொக்கை சமூகத்தை உருவாக்க பாடுபடுபவர்கள். எனவே திருமா இது போன்றவர்களுடன் அணி சேர்வது அவரின் தலித் விடுதலையே கேள்விக்குட்படுத்துவதாகவே உள்ளது.

          தமிழ்நாட்டில் திமுக, சிபிஐ(எம்) போன்ற கட்சிகள் பெயரளவிற்கு அரங்குக் கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ செய்து விட்டு அமைதியாகிவிட்டன. சாதி ஒழிப்புக்கான எந்த உருப்படியான யோசனையையும் இவை முன்வைக்கவில்லை. இந்தக் கட்சிகள் அவ்வப்போது ராமதாசுடன் கூட்டணி அமைத்தவை என்பதை நாம் மறக்க முடியாது. எனவே இவர்கள் ஒருபோதும் சாதி ஒழிப்பிற்காக ஒரு நீண்ட நெடிய போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது.

          மது ஒழிப்பு, தமிழீழ விடுதலை போன்ற முகமூடிகள் அணிந்து முற்போக்கு வேடம் போட்ட இராமதாசு அப்பட்டமான சாதிவெறியை கையில் எடுத்துள்ளார், முன்னதைக் காட்டிலும் பின்னது அதிக ஓட்டு வங்கியை பெற்றுத்தரும் என்பதால்.

          தான் சார்ந்த வன்னிய சாதிமக்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்கும் இராமதாசு தன் தைலாபுரத் தோட்டத்தில் பாதியை ஏதும் இல்லாத ஏழை வன்னிய மக்களுக்கு தரத் தயாரா?

          உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் தன் சாதிக்காரன் ஒருவன் கூட இல்லை என்று ஆதங்கப்படும் இராமதாசு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகராட்சி, மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களில் ஒருவன் கூட ஆண்ட பரம்பரையைச் சேர்ந்த வன்னியன் இல்லையே என்று ஆதங்கப்பட்டதுண்டா?

          தனது ஆசான்களாக அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் போன்றவர்களை ஏற்றுக் கொண்டதாகக் கூறும் இராமதாசு, எப்போதாவது இவர்கள் யார். இவர்களது கருத்தியல் எதுவென்று படித்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டதுண்டா? ஒருவேளை மனுநீதி, அர்த்த சாஸ்திரம், பகவத் கீதை போன்றவற்றை எழுதியவர்கள்தான் மேற்கூறிய மூன்று பேரும் என்று இந்த கபடதாரி சூத்திரன் இராமதாசு நினைத்துக் கொண்டிருக்கிறாரா என்று நமக்குத் தெரியவில்லை.

          தலித்துக்களுக்கு எதிராக ஒட்டுமொத்த ஜாதி இந்துக்களையும் திரட்ட நினைக்கும் இராமதாசு ஏறக்குறைய 60 சாதிக்கட்சித் தலைவர்களை கூட்டி மாநாடு போட்டுள்ளார். அதில் பல காலாவதி ஆகிப்போன, படு பிற்போக்குத்தனமான, சட்டத்திற்குப் புறம்பான தீர்மானங்களைப் போட்டுள்ளார்கள். சாதிமறுப்புத் திருமணங்களை ஒழிப்பது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை திருத்துவது போன்றவையே அவை. இதன் மூலம் தங்களை தமிழ்ச்சமூகத்தின் சாதிய தர்மத்தை காக்கவந்த கண்ணன்களாக மலவாடை வீசும் உபதேசம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

          ராமதாசு மற்றும் அவர் கூட்டணியில் இணைந்துள்ள சாதி இந்துக்களின் நிலைப்பாடு என்னவென்றால் ஒரு தாழ்த்தப்பட்ட பையன் ஜீன்ஸ் பேன்ட், கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டு மற்ற சாதிப் பெண்களைக் குறிப்பாக சாதி இந்துக்களின் பெண்களை ஏமாற்றி, காதல் நாடகங்கள் நடத்திப் பணம் பறிக்கிறார்கள் என்பதுதான். ஒரு கவுண்டர் பையன், ஒரு வன்னியப் பெண்ணையோ அல்லது ஒரு தேவர் சாதிப் பெண்ணையோ ஏமாற்றி காதல் நாடகம் ஆடி பணம் பறிக்கிறார்கள் என்பதல்ல பிரச்சனை. ஏனென்றால் அவர்கள் எல்லாம் உயர் சாதியில் பிறந்தவர்கள்; அதனால் அதுபோன்று நடந்து கொள்ள மாட்டார்கள்; தலித்துகளிடம் மட்டுமே இது போன்ற கீழ்த்தரமான சிந்தனைகள் இருக்கும் என்பதே. இதை வன்மையாகக் கண்டித்து முற்போக்கு சக்திகள் பேசும்போது “பேசுகிறவன் தன் பெண்ணை பறையனுக்கும் சக்கிலிக்கும் கொடுப்பானா?” என்ற குரல் வெட்கமில்லாமல் வெளிப்படுகின்றது. இதற்கான பதிலை நாம் சொல்வதை விட பெரியார் சொல்கிறார் கேட்போம்.

          “ஜாதியை நாங்கள் ஒன்றாக்குகின்றோமாம். ஆம் ஆக்க முயற்சிக்கின்றோம். அதில் சந்தேகமில்லை. ஆனால் சீக்கிரத்தில் முடியுமா என்பது சந்தேகம். மனித ஜாதி ஒன்றாகித்தான் தீரவேண்டும். அதற்கு தடை செய்கின்றவர்கள் அயோக்கியர்கள், மடையர்கள். என்று தைரியமாய்ச் சொல்லுகின்றோம். எங்கள் பெண்களை பறையனுக்கு கொடுப்போமா? என்று கேட்கப்படுகின்றது.

          இது ஒரு அறிவீனமான கேள்வி அல்லது அயோக்கித்தனமான கேள்வி என்றே சொல்லுவேன். ஏனெனில் எங்கள் பெண்களை நாங்கள் அவர்களுக்கு இஷ்டப்பட்டவர்களுடன் கூடிவாழச் செய்யப் போகின்றோமோயொழிய, எங்களுக்கு இஷ்டமானவர்களுக்குக் கொடுக்கும் உரிமையைக் கொண்டாடுகின்றவர்கள் அல்ல. பெண்களை ஒரு சாமானாய்க் கருதி ஒருவருக்குக் கொடுப்பது என்கின்ற முறையை ஒழிக்க முயற்சிக்கின்றோம்.” (பெரியார் களஞ்சியம் சாதி –தீண்டாமை பாகம்-2. ப.எண்.230) சூத்திரன் இராமதாசு மற்றும் அவர்தம் அடிவருடிகளுக்கும் பெரியாரின் சாட்டை அடியே போதும் என்று நினைக்கின்றேன்.

          கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் தனது வன்னிய ஓட்டு வாங்கியின் பெரும் பகுதியை இழந்து, மீசையில் மண் ஒட்டிய இராமதாசு, இழந்து போன தனது ஓட்டு வங்கியை மீட்டெடுக்கவும், வன்னிய மக்களிடம் தன்னை ஒரு கதாநாயகன் நிலைக்கு உயர்த்திக் கொள்ளவும் இன்று காலாவதி ஆகிக் கொண்டிருக்கும் சாதிய மீட்சியை கையில் எடுத்துள்ளார். இது என்ன மாதிரியான விளைவுகளை தமிழ்நாட்டில் தோற்றுவிக்கும் என்று இராமதாசுக்கு நன்றாகவேத் தெரியும். அதனால் தான் இப்படியொரு கீழ்த்தரமான நிலையை எடுத்துள்ளார். (2014 பாராளுமன்றத் தேர்தலில் வன்னிய மக்களின் மானம் காப்பாளர் இராமதாசனின் வேட்டி உருவப்படாமல் இருக்க வாழ்த்துக்கள்)

thirumavalavan_300          இது ஒருபுறம் இருக்க தமிழ்த் தேசியவாதிகள் என்று கூறிக் கொண்டிருக்கும் ஒரு கும்பலின் நிலைப்பாடு இந்தப் பிரச்சனையில் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். எந்த வர்க்க உணர்வும் இல்லாத இந்தப் பேர்வழிகள் அடிப்படையில் சாதிகளுக்கு வக்காலத்து வாங்குபவர்களே. “பிரபாகரன் உயிர்த்தெழுவார் புகழ்” பழ.நெடுமாறன், வைகோ, சீமான் போன்றவர்கள் இந்தப் பிரச்சனையில் காட்டிய அக்கறை, தலித்துகள் மற்றும் முற்போக்கு சக்திகளால் காறி உமிழப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளது.

இராமதாசு சில புள்ளி விவரங்களைக் கொடுத்துள்ளார்.

 நாமக்கல் மாவட்டத்தில் சென்ற ஓராண்டில் மட்டும் 955 காதல் திருமணங்கள் நடந்துள்ளதாகவும், அதில் 712 திருமணங்கள் தோல்வியில் முடிந்துள்ளதாகவும், திருமணத்திற்குப் பிறகு எதிர்கொள்ளும் கொடுமைகளைத் தாங்க முடியாமல் 32 இளம் பெண்களும், 37 பெற்றோர்களும் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறுகிறார். இந்தப் புள்ளி விவரத்தை இராமதாசு அவர்கள் எந்த அதிகாரப்பூர்வ பதவியில் இருந்து பெற்றார் என்பதோ அல்லது அவர் கழிவறையில் அமர்ந்திருக்கும் போது கனநேரத்தில் சிந்தனையில் உதயமானதா என்பதோ நமக்குத் தெரியாது.

          இன்று தமிழ்நாட்டில் உள்ள குடும்பநல நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் ஆயிரக்கணக்கான விவகாரத்து வழக்குகளில் தொண்ணூறு சதவீத வழக்குகளுக்கு மேல் பெற்றோர்களால் பார்த்து (இராமதாசு சொல்லும் இரு வீட்டு பெற்றோரின் சம்மதத்துடன்) நடத்தப்பட்ட திருமணங்கள்தான் என்பதை அறிவாரா?

          இதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் மொக்கையாக “காதல் நாடகத் திருமணம், காதல் நாடகத் திருமணம்” என்று ஊர் ஊருக்கு மேடை போட்டு சாதிய வன்மத்தை கக்கிக் கொண்டிருக்கிறார் இராமதாசு. இவரிடம் ஒன்று கேட்க வேண்டும். ஆணும் பெண்ணும் காதலித்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செய்யும் திருமணங்கள் காதல் நாடகத் திருமணங்கள் என்றால், யோனிப் பொருத்தம் பார்த்து தான் பெற்ற பெண்ணை ஓர் ஆணுக்கு செய்து வைக்கும் திருமணத்தை நாம் ஏன் கூட்டிக் கொடுக்கும் திருமணம் என்று சொல்லக் கூடாது? (இப்படி நாம் படுகேவலமாக சொல்வது சாதி இந்துக்களின் இழி செயலை சுட்டிக்காட்டவே)

          கொஞ்சம் கூட வெட்கம், மானம் இல்லாத மாறிவரும் காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள முடியாத அல்லது விருப்பம் இல்லாத இந்த பிற்போக்கு சாதிய கழிசடைகளை மக்கள் இனம் கண்டு வேரறுக்க வேண்டும். இல்லையேல் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊரும் திண்ணியமாகவோ, உத்தபுரமாகவோ, நாயக்கன் கொட்டாயாகவோ மாறலாம்.

          நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான். உலகம் இரண்டு முகாம்களாக பிரிந்துள்ளது. ஒன்று சிறுபான்மையாக உள்ள முதலாளித்துவ வர்க்கம். மற்றொன்று பெரும்பான்மையாக உள்ள பாட்டாளி வர்க்கம். அதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. இந்திய சமூகத்தில் உள்ள எல்லா சாதிகளிலும் இந்த இரண்டு வர்க்கங்கள் உள்ளது. பணக்கார கவுண்டன் - ஏழைக் கவுண்டன், பணக்கார வன்னியன் - ஏழை வன்னியன், பணக்கார தேவன் -  ஏழை தேவன். எந்த ஒரு பணக்கார கவுண்டனும் தன்னிடம் உள்ள நிலத்தை ஏழை கவுண்டனுக்குக் கொடுக்க மாட்டான். முடிந்தால் அவனிடம் உள்ளதையும் பிடுங்கிக் கொள்வான். இந்த அடிப்படையான பிரச்சனையை எல்லா சாதி உழைக்கும் மக்களும் பார்க்க வேண்டும். தங்களுடைய பொருளாதார முன்னேற்றத்திற்கும், வாழ்வாதாரத்துக்கும் எந்த வகையிலும் பயன்படாத இந்த வெற்று சாதிய கௌரவத்தை மக்கள் புறம் தள்ள வேண்டும். சாதிக் கட்சித் தலைவர்களை வேரறுக்க வேண்டும்.

          பாட்டாளி வர்க்க சிந்தனை மட்டுமே அனைத்து வகையான சாதியச் சிந்தனைகளுக்கும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கும், பண்பாட்டுச் சீரழிவுகளுக்கும் மாற்றாக அமையும் என்பதை மக்கள் உணர வேண்டும். இந்த மாற்றத்தைக் கொண்டுவருவதே புரட்சிகர சக்திகளின் முன் உள்ள கடமையாக உள்ளது.

- செ.கார்கி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It