“பிராமணர்கள் தலித்துகள் மீது வன்முறையை பிரயோகித்தது இல்லை. ஆனால் தலித்துகள் மீது வன்முறையை பிரயோகிப்பவர்கள், தேவர், கவுண்டர், வன்னியர் போன்ற இடைநிலை சாதியினர்தான். தமிழகத்தின் மூலை முடுக்குகளெங்கும் நிறைந்திருக்கும் தேவர் ஹோட்டல்களுக்கு எதிராக ஏன் இராமகிருஷ்ணன்கள் போராடவில்லை..?

பிராமணாள் கேப் என்பது பெயர்தானே ஒழிய அதில் தலித்துகளோ மற்றவர்களோ நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று யாராவது தடுத்தார்களா?

தேவர் ஹோட்டல், நாடார் அன்ட் சன்ஸ் என்று தமிழகமெங்கும் சாதிப்பெயர்களில் உணவகங்களும், இருக்கையில் பிராமணாள் கேப் என்று பெயர் வைப்பதில் என்ன தவறு...

இதற்காக இந்தப் போராட்டம்... மற்ற இடைநிலைச் சாதியினர், தலித்துகளை அடக்கி ஒடுக்கி, சாதிப்பெயரை பெருமையோடு சொல்லிக் கொண்டு திரிகையில், பிராமணர்கள் தங்கள் சாதிப்பெயரைச் சொல்லிக் கொள்வதில் என்ன தவறு?”

மேலே உள்ள கேள்விகளைக் கேட்டிருப்பவர் சவுக்கு இணையதளத்தின் சங்கர். இப்படி பலராலும் இதுபோன்ற பார்ப்பனர்களுக்கு ஆதரவான கருத்துக்களும், கேள்விகளும் இணைய தளங்களிலும், முகநூல்களிலும் பரபரப்பான விவாதங்களாகியுள்ளன.

கடந்த 2011 ஆம் ஆண்டே இந்தச் சிக்கல் திருச்சியில் உருவானது. அப்போது ஒருங்கிணைந்த பெரியார் திராவிடர் கழகம் சார்பிலும், திராவிடர் கழகம், பெரியார் தத்துவ மய்யம், பெரியார் பாசறை ஆகிய அமைப்புகள் சார்பிலும் ஸ்ரீரங்கம் பிராமணாள் கஃபே-க்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, இருதரப்பு விசாரணைகளும் நடந்து முடிந்தது. இந்நிலையில் கோவை இராமகிருட்டிணன் தலைமையிலான தந்தை பெரியார் திராவிடர் கழகம் இன இழிவு ஒழிப்புக்காக போராட்டத்தில் இறங்கியது. அதற்காக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தையும், போராட்டத்தில் ஈடுபட்டு சிறைப்படுத்தப்பட்ட தோழர்களையும் நாம் பாராட்ட வேண்டும்.

brahmin_270ஸ்ரீரங்கத்தில் மட்டுமல்ல திருச்சி மாவட்டம் குளித்தலையிலும், திண்டுக்கல் மாவட்டம் நத்தம்சாலையில் மேட்டுக்கடையிலும், பெங்களூரில் பல இடங்களிலும் பிராமணாள் கஃபேக்கள் இருக்கின்றன. கோவையில் ஸ்ரீகிருஸ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் பார்ப்பனர்களுக்கு தனி சுடுகாடு இருக்கிறது. சென்னையில் 2012 ஏப்ரல் மாதத்தில் 12 ஆம் நாளிட்ட இந்து ஆங்கில ஏட்டில் வெளியான அடுக்குமாடி ஃப்ளாட் விற்பனை விளம்பரத்தில்கூட ‘பிராமணர்களுக்கு மட்டும்’ என்று குறிப்பு வெளியானது. கும்பகோணம் அருகிலுள்ள திருவிடைமருதூரில் இப்போதும் போய் பார்க்கலாம். ஆண்டாள் ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் பிராமணர்களுக்கு மட்டும் என்று குறிப்பு உள்ளது.

நம்மைப் பொறுத்தவரை பிராமணாள் கஃபே என்று இருந்தாலும் குற்றம்தான். தேவர் டீக்கடை, கவுண்டர் அன் கோ, கோனார் மெஸ், படையாட்சி டீஸ்டால் என எந்த ஜாதியின் பெயரில் வணிக நிறுவனங்கள் இருந்தாலும் தவறுதான். குற்றம்தான். இழிவுதான்.

‘பிராமணாள்’ என்றால் பார்ப்பனர் அல்லாத மற்ற மக்களை ‘தேவடியாள் மக்கள்’ என்றுதான் பொருள் குறிக்கும். இந்திய அரசியல் சட்டத்தில் இடம்பெற்றுள்ள பாதுகாக்கப் பட்டுள்ள‘இந்துலா’வின் படி பிராமணன், சூத்திரன் என்று இரு பிரிவுகள்தான் தற்போது உள்ளன. சூத்திரன் என்றால் பிராமணர்களின் வைப்பாட்டி மகன் என்றுதான் இந்துலாவில் விளக்கம் சொல்லப்பட்டுள்ளது. அதனால்தான் தோழர் பெரியார் “ஒரு தெருவில் ஒரு வீட்டில் மட்டும் இது பத்தினியின் வீடு என எழுதினால் மற்ற வீடுகள் என்ன வகையான வீடுகள்?” எனக் கேட்டார்.

அதே சமயம், பிராமணன் என்றால்தான் பார்ப்பனரல்லாத மக்களுக்கு இழிவு; பிராமணன் அல்லாமல் அய்யங்கார் பேக்கரி, தேவர் மெஸ், கவுண்டர் அன் கோ என்று ஜாதிப் பெயர்களில் வணிக நிறுவனங்களுக்குப் பெயர் வைத்தால் யாருக்கும் இழிவு இல்லை என்று சொல்வது மிகப் பெரும் தவறு. இந்து மதத்தில் உள்ள எந்த ஜாதிப் பெயரில் கடை இருந்தாலும் அந்த ஜாதிப் பெயரானது அந்தக் கடையை வைத்திருக்கும் ஜாதி மக்களை முதலில் இழிவுபடுத்துகிறது. அதோடு மட்டுமல்லாமல் இந்தமத அடுக்குவரிசைப்படி தனக்கு அடுத்துள்ள ஜாதிகளையும் இழிவுபடுத்துகிறது என்பதே உண்மை.

பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ், கோனார் மெஸ் என்று வைத்திருக்கிறார்கள் என்றால் முதலில் இந்து மதத்தை ஏற்றுக்கொள்கிறார்கள் என்று பொருள். அடுத்து, இந்து மதத்தில் நாயுடுவுக்கும், கோனாருக்கும் உரிய இடத்தை ஏற்றுக்கொள்கிறார்கள் என்று பொருள். இந்து மத சாஸ்திரங்களும், மனுஸ்மிருதிகளும் நாயுடு ஜாதிக்கும், கோனார் ஜாதிக்கும் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளையும் விதிகளையும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றுதான் பொருள். மனுதர்மப்படி, இந்து சாஸ்திரங்களின்படி தனது ஜாதி மக்களை தாமே தேவடியாள் மகன் என்று ஏற்றுக் கொள்கிறார்கள், தமக்கு அடுத்தபடியாக உள்ள ஜாதிகளையும் பார்ப்பனர்களின் வைப்பட்டி மக்கள் என்று இழிவுபடுத்துகிறார்கள் என்றுதான் பொருள். பார்ப்பனர்களின் இந்துமத அடையாளங்களில் எந்த ஒன்றை ஏற்றுக்கொண்டாலும் நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்கிறோம் என்பதே சட்டப்படி, சாஸ்திரப்படி உண்மை. எனவேதான் தோழர் அம்பேத்கார் அவர்களும் "நான் இந்துவாகச் சாகமாட்டேன்" என் பிரகடனம் செய்தார்.

அந்த அடிப்படையில்தான், எந்த ஜாதிப் பெயரில் வணிக நிறுவனங்கள், தெருக்களின் பெயர்கள், ஊர்களின் பெயர்கள் எவை இருந்தாலும் அவை ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரையும் இழிவுபடுத்துகின்றன என்பதை உணர்ந்து தான், கொளத்தூர் மணி தலைமையிலான பெரியார் திராவிடர் கழகம் 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் நாள் திருப்பூரில் ஜாதீய வாழ்வியல் எதிர்ப்புப் பயண நிறைவு விழாவில் பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியது. அதில் ஒன்று,

“இடஒதுக்கீட்டைத் தவிர வேறு எந்த வடிவிலும் ஜாதியை அடையாளப்படுத்தும் ஊர்களின் பெயர்கள், தெருக்களின் பெயர்கள், வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், தனியார் பேருந்துகள், கடைவீதியில் உள்ள கடைகள் அனைத்தின் பெயர்களையும் திருத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவற்றைத் திருத்தாத நிறுவனங்களின் மீது தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வழி செய்யவேண்டும்.”

மற்றொன்று,

ஜாதி அடிப்படையில் இயங்கும் திருமணத் துணைதேடும் மய்யங்களைத் தடைசெய்ய வேண்டும். திருமணத்திற்குத் துணைதேடும் விளம்பரங்களில் ‘ப்ராமின்ஸ் ஒன்லி’, ‘எஸ்.சி, எஸ்.டி’ தவிர என்று வரும் விளம்பரங்களைதயும், கவுண்டர், செட்டியார், வன்னியர், தேவர், நாடார் என்று குறிப்பிட்ட ஜாதிகளை அடையாளப்படுத்தி வரும் விளம்பரங்களையும் தடை செய்ய வேண்டும்.

என்பவைகளாகும்.

இது மட்டுமல்ல இரட்டைக் குவளைகள், இரட்டைச் சுடுகாடுகள், இரட்டை வாழ்விடங்கள் என தீண்டாமையின் அனைத்து வடிவங்களையும் ஆய்வுசெய்து, பட்டியலிட்டு அவைகளுக்கு எதிராக இரட்டைக் குவளை உடைப்பு, தீண்டாமைச்சுவர் உடைப்பு, இரட்டை இருக்கை உடைப்பு என பலவகைப் போராட்டங்களைக் கடந்த காலங்களில் முன்னெடுத்தது. அந்தப் போராட்டங்களின் தொடர்ச்சியாகத்தான் மேற்கண்ட அனைத்துவகைத் தீண்டாமை வடிவங்களையும் பட்டியலிட்டு அரசுக்கு பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. வணிக நிறுவன ஜாதிப் பெயர்கள் உள்ளிட்ட எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றா விட்டால் வரும் 2013 பிப்ரவரி 28 ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் மனுசாஸ்திர எரிப்புப் போராட்டம் நடத்துவது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட பெரியார் திராவிடர் கழகம் அறிவித்த அந்தப் போராட்டத்தை தற்போது கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலைக் கழகம் நடத்த உள்ளது.

சவுக்கு சங்கரின் முக்கியமான வாதம் இது. “தலித்துகள் மீது பிராமணர்கள் வன்முறையை பிரயோகித்தது இல்லை.”

இது மிகப்பெரும் கற்பனைவாதமாகும். இந்துமதத்தையும், தற்போதுள்ள சமுதாய அமைப்பையும் சரியாகப் புரிந்துகொள்ளாமல் சொல்லப்படும் கருத்தாகும். இந்திய அரசியல் சட்டப்படியும், இந்து சாஸ்திரங்களின் படியும் இந்துமதத்திலுள்ள தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் அனைவரையும் ‘தேவடியாள் மகன்கள்’ என குறிப்பதுதான் பிராமணன் என்று பார்ப்பனர்கள் சொல்வதன் பொருள். இதைவிட வேறு வன்முறை வேறு இருக்கமுடியுமா? இன்றுவரையும் தாழ்த்தப்பட்டோர் என்ற ஒரு பிரிவு இருப்பதற்கே காரணம் இந்து மதமும் அதன் ஆதிக்கவாதிகளான பார்ப்பனர்களும்தானே? 

மனுசாஸ்திரத்தின் முதல் அத்தியாயத்தில் 31 வது ஸ்லோகம் சொல்கிறது.

உலகவிருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், துடை, கால் இவைகளினின்று பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் இவர்களைக் கிரமமாகவுண்டு பண்ணினார்.

இப்படி முதன் முதலில் நான்கு வர்ணங்களை நான்கு வகையான ஜாதிப்பிரிவுகளை உண்டாக்கியது மனுசாஸ்திரம். உண்டாக்கியது மட்டுமல்ல. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு தொழிலையும் விதித்தது. மனுவின் 1 ஆம் அத்தியாயத்தில் 87 முதல் 91 வரையான ஸ்லோகங்கள் பிராமணனுக்கு ஓதுதலும் ஓதுவித்தலும், சத்திரியனுக்கு பிரஜைகளைக் காத்தல், வைசியனுக்கும் பசுவைக்காத்தல், வணிகஞ்செய்தல் ஆகிய தொழில்களைச் சொல்கிறது. சூத்திரனுக்கு மேற்கண்ட முன்று வர்ணத்து மக்களுக்கும் பொறாமை இன்றி அடிமை வேலைகளைச் செய்தல் எனத் தொழில்களைப் பிரித்திருக்கிறது.

இப்படி பிரிக்கப்பட்ட வர்ணங்கள் - ஜாதிகள் ஒன்றுக்கொன்று கலந்துவிடக்கூடாது என்றும் கடுமையான விதிகளை வைத்திருக்கிறது.

உயர்ந்த ஜாதிக் கன்னிகையைப் புணர்ந்த தாழ்ந்த ஜாதியானுக்கு மரண வரையில் தண்டனை விதிக்க வேண்டியது. தன் ஜாதிக் கன்னிகையைப் புணர்ந்தவன் அவள் தந்தை கேட்கும் பொருளைக் கொடுத்து அக்கன்னிகையைக் கலியாணஞ்செய்து கொள்க.         

                                - 8 வது அத்தியாயம் 366 வது ஸ்லோகம்

இந்த ஸ்லோகத்தைத் தான் பிராமணர் சங்கமும், காடுவெட்டி குருவும், பழ.கருப்பையாவும் வழிமொழிந்து வருகின்றனர் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

ஒரு மனிதன் பிறந்தவுடன் பெயர் வைப்பதில் தொடங்கி, இறந்த பின் சுடுகாடு சேரும் வரை ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு விதியை உருவாக்கி அவற்றை இன்றுவரை நடைமுறைப்படுத்தியும் வைத்திருப்பது பார்ப்பனர்கள்தான்.

தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை சண்டாள ஜாதிகள், சங்கர ஜாதிகள் என்ற பெயரில் இந்து மதத்திலிருந்து தனியாகப் பிரித்து வைத்து அவர்கள் வாழும் இடத்தையும் தனியாகப் பிரித்து வைத்தது மனுதர்மம்தான். இன்று வரை தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் கிராமங்கள் ஊர் என்றும் சேரி என்றும் இரு பிரிவாகப் பிரிந்து கிடப்பதை நாம் அனைவரும் பார்க்கிறோம். அதன் ஊர் - சேரி என்ற தீண்டாமையின், பிரிவினையின் தோற்றம் என்ன தெரியுமா?

“இவர்கள் அனைவரும் பட்டணத்திற்கும் ஊருக்கும் வெளியில், மரத்தடி, தோப்பு, மயானத்திற்கு அருகே, மலைப்பூந்தோட்டம் இவைகளில் அனைவருக்கும் இவர்கள் இன்ன தொழிலாளிகள் என்று தெரியும்படி தன்தன் தொழிலைச் செய்துகொண்டு வாசஞ்செய்ய வேண்டியது”                                                       (அத்தியாயம் 10; ஸ்லோகம் 49)

“இவர்கள் பிணத்தின் துணியை உடுத்தவேண்டும். இரும்பு, பித்தளை இவைகளால் செய்யப்பட்ட நகைகளையே அணியவேண்டும். அவர்கள் எப்போதும் தொழிலுக்காக அலைந்து கொண்டிருக்க வேண்டும்.” “நற்கருமங்கள் நடைபெறுகையில், இவர்களைக் காண்பதோ, பேசுவதோ கூடாது. இவர்கள் தங்கள் வகுப்பிலேயே பெண் எடுக்கவும் கொடுக்கவும், கடன் கோடலும் வேண்டும்” (10 : 53).

“இவர்களுக்கு நேரே உணவு பரிமாறல், ஏவலாளரைக் கொண்டு, உடைந்த சட்டியில், அன்னமிட்டு வைக்க வேண்டும்.இவர்கள் ஊரிலும், நகரிலும் இரவில் திரியக்கூடாது” (அத்தியாயம் 10; ஸ்லோகம் 49 முதல் 54)

இவ்வாறு தலித்துகளைப் பிரித்து வைத்து அவர்களின் வாழ்விடங்களையும் தனியே வைத்தது மனுதர்மம். அந்த இந்து தர்மத்தை உருவாக்கி இன்றுவரை நடைமுறைப்படுத்துபவர்கள் பார்ப்பனர்கள். மேம்போக்காக பிராமணர்கள் தலித்துகளைத் தாக்குதில்லை எனச் சொல்லிவிட்டுப்போவது தவறு. தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள் என்று உழைக்கும் மக்களுக்குள் பிரிவினையை உண்டாக்கி ஒருவரை ஒருவர் மோதிக்கொள்ள வைத்ததே பார்ப்பனர்கள்தானே?என்றோ எழுதப்பட்ட மனுஸ்மிருதி இன்றும் நடை முறையில் உள்ளதா? என்று கேட்பவர்களுக்கு நேரடி சாட்சியாக இருப்பவைகளே சேரிகள்.

இது போன்ற தீண்டாமை வடிவங்களை, ஜாதிகளை உருவாக்கிய மனுசாஸ்திரம் உருவான காலம் கி.பி 100 - 150 ஆம் ஆண்டுகாலமாகும். மெளரியப் பேரரசை அழித்து உருவான பார்ப்பன அரசான புஷ்யமித்ர சுங்கனின் காலத்தில்தான் இது அரசின் கிரிமினல், சிவில் சட்டப் புத்தகமாக உருவெடுத்தது. 

புஷ்யமித்ர சுங்க பார்ப்பானின் ஆட்சிகாலம் மட்டுமல்ல, தமிழ், தெலுங்கு, கன்னட, இந்தி மன்னர்கள் பேரரசர்கள், இராஜராஜ சோழன்கள் ஆகிய அனைத்து மன்னர்களும் மனுநீதிச் சோழர்களாகவே அரசாண்டனர்.

திருமலை நாயக்கன் ஆட்சி காலத்திலும் மனுசாஸ்திரப்படியே தீர்ப்புகள் வழங்கப்பட்டன.

ஆங்கிலேயர் காலம் வரை சாதர் திவானி அதாலத், சாதர் திவானி நிஜாமத் போன்ற நீதிமன்றங்களிலும் மனுசாஸ்திரமே நீதி வழங்கும் நூலாக இருந்தது.

“சுயராஜ்யம் வந்தால் மனுநீதியை அரசமைப்புச் சட்டமாகவே ஆக்கவேண்டும். ஆக்குவோம்” என 1917 லேயே பார்ப்பன வெறியோடு பேசியவர் பாலகங்காதர திலகர்.

அதன்படி 1951 க்குப் பிறகு இந்தியா குடிஅரசான பிறகும் இந்திய அரசியல் சட்டத்தின் 372 பிரிவின் பாதுகாப்பில் இந்து தரும சட்டங்கள் இன்றுவரை நம்மை ஆண்டுவருகின்றன.

1980 வரை கூட இந்திய உச்சநீதி மன்றத்தில் தத்தெடுத்தல், குத்தகைச்சட்டம், வழிபாட்டு உரிமை வழக்குகளில் இந்து, மனு சாஸ்திரங்களின் அடிப்படையிலேயே தீர்ப்புகள் வழங்கப்பட்டன.

1992 ஏப்ரல் 18, 19 தேதிகளில் மதுராவில் உத்தரப்பிரதேச மாநில இந்து வழக்கறிஞர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் மாநில பா.ஜ.க. அரசின் அட்வகேட் ஜெனரல் வி.கே.என்.சவுதாரி பேசுகையில் எல்லாக் காலங்களுக்கும் ஏற்ற சட்ட நூல் மனுஸ்மிருதிதான் என்று குறிப்பிட்டார். இதனை ஆர்.எஸ்.எஸ்.சின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையான ‘ஆர்கனைசர்’(மே 10, 1992) வெளியிட்டுள்ளது”.

ஈழத்தில் முள்ளிவாய்க்காலில் முள்வேலி முகாம்கள் இருப்பதை மனிதன் என்ற உணர்வுள்ள அனைவரும் கண்டிக்கிறோம். ஆனால் எந்த முள்வேலியோ, மின்சார வேலியோ, கான்க்ரீட் சுவரோ எதுவும் இல்லாமல், கண்ணுக்குத் தெரியாமல் மூளைக்குள் வேலியைப் போட்டு குடியான தெரு - சேரித் தெரு, ஊர் - சேரி என பிரித்து வைத்திருக்கும் மனுசாஸ்திரத்தை நோக்கியோ, அதை இன்றும் நடைமுறைப்படுத்தும் பார்ப்பனர்களை நோக்கியோ, இன்று வரை சவுக்குகள் சுழலாதது ஏன்?

 ஊர் - சேரி என்ற பிரிவினை மட்டுமல்ல, இந்தக் கணினி யுகத்திலும் நாம் அன்றாடம் கண்டும் காணாமலும் சென்றுகொண்டிருக்கும் தீண்டாமை வடிவங்கள் அனைத்திற்கும் மூலகாரணம், மூலவிதை மனு சாஸ்திரத்தில்தான் உள்ளன. இவை கி.பி. 100 ஆண்டிலிருந்து இன்று வரை இது அழிக்க முடியாத சக்தியாக, ஒவ்வொரு இந்துவின் மூளையிலும் நஞ்சாக ஏறியுள்ளது.

அதனால்தான் பெரியாரும் அம்பேத்கரும் 1927லேயே மனுதர்மத்தைக் கொளுத்தினார்கள். தோழர் அம்பேத்கர் மகத் மாநாட்டின் போது மனுசாஸ்திரத்தைக் கொளுத்தும்போது,

“இந்துச் சட்டங்களின் பிதா எனக் கருதப்படும் மனுவின் பெயரால் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பவையும், மனு ஸ்மிருதியில் அடங்கியிருப்பவையும், இந்துக்களின் சட்டத் தொகுப்பான அங்கீகரிக்கப்பட்டிருப்பவையுமான இந்துச் சட்டங்கள், கீழ்ச்சாதியினரை அவமதிப்பவையாக இருக்கின்றன. மனித உரிமைகளை அவர்களுக்கு மறுப்பவையாக உள்ளன. அவர்களது ஆளுமையை நசுக்குபவையாக இருக்கின்றன. நாகரிக உலகம் முழுவதிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள மனித உரிமைகளுடன் இவற்றை ஒப்பிடும்போது இந்த மனுஸ்மிருதி எத்தகைய நன்மதிப்பையும் பெற அருகதையற்றது. ஒரு புனிதமான நூல் எனப் போற்றப்படுவதற்குத் தகுதியற்றது என இந்த மாநாடு கருதுகிறது. இதன்பால் தனக்குள்ள ஆழமான அளவிட முடியாத வெறுப்பை வெளிப்படுத்தும் பொருட்டும், மதம் என்ற போர்வையில் அது சமூக ஏற்றத் தாழ்வைப் போதித்து வருவதைக் கண்டித்தும் மாநாட்டு நடவடிக்கைகளின் முடிவில் இதன் பிரதி ஒன்றை எரிப்பதென இம் மாநாடு தீர்மானிக்கிறது”. என்று அறிவித்தார்.

தாழ்த்தப்பட்டோரும்- பிற்படுத்தப்பட்டோரும் மோதிக்கொள்வதற்குக் காரணமே பார்ப்பனர்களும், இந்து மதமும், இந்து சாஸ்திரங்களும்தான். தலித் மீதான வன்முறையின் மூலவித்தே பார்ப்பனர்கள் தான். எனவே பார்ப்பனர்கள் நேரடியாக தலித்துகளைத் தாக்குவதில்லை என்ற வாதம் உண்மையான எதிரியான பார்ப்பானையும் இந்து மதத்தையும் காப்பாற்றும் வாதமாகும். இதற்கெல்லாம் எந்த புலனாய்வுத்திறனும் தேவையில்லை. அம்பேத்கரின் தொகுதிகளைப் படித்தாலே போதும். அல்லது பெரியாரின் குடி அரசு, திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள அசல் மனுதர்ம சாஸ்திரம் நூல்களைப் படித்தாலே போதும். நோய்க்கிருமியையும் நோயால் பாதிக்கப்பட்டவனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது. நோய்க்கிருமியை அழிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நோயாளிக்கு மருத்துவம் செய்யவேண்டும். பாதிப்புக்கு ஏற்றவாறு மருத்துவம் பார்க்கவேண்டும்.

- அதிஅசுரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It