விகடன் மேடையில் அண்ணன் சீமான் அளித்த பேட்டிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டனாக அல்லது திருமாவின் தம்பியாக பதில் சொல்ல வேண்டிய கடமை எனக்கிருக்கிறது. அதனால் எனக்குத் தெரிந்த நடையில் ஆடை அலங்காரம் இன்றி, எதுகை மோனையின்றி பதில் சொல்கிறேன்....

thirumavalavan_237சீமான் : சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் அண்ணன் திருமாவளவன் தனித்து நின்றிருந்தாலே ஈழத்துயரத்தின் எதிரொலியும், எங்களோடு இயைந்தவர்களின் குரலும் அவரை அமோகமாக வெற்றி பெற செய்திருக்கும்.

தமிழன் வேலு : முதலில் அண்ணனுக்கு ஒன்றை சொல்கிறேன். தலைவர் திருமாவும் சரி, அவரது தம்பிகளாகிய நாங்களும் சரி, 'ஈழத்திற்கு நாங்கள் போராடுகிறோம், அதனால் எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்' என்று ஓட்டுப் பிச்சை எடுக்கும் பழக்கம் இல்லை என்பதையும், எழவு வீட்டில் களவு பார்க்கும் புத்தியும் எங்களுக்கு இல்லை என்பதையும் சொல்லிக் கொள்ளகிறேன்.

தி.மு.க. வேண்டாம், அ.தி.மு.க. வேண்டாம், காங்கிரஸ் வேண்டாம், பி.ஜே.பி வேண்டாம் என்று 1999லிருந்து அழைத்து கொண்டிருக்கிறார் திருமா. ஆனால் அதற்கு மற்ற அரசியல் கட்சிகள் அசைந்து கொடுத்தபாடில்லை. 1999லும் 2004லும் சிதம்பரம் தொகுதியில் தனித்து தான் களம் கண்டார். ஆனால் அங்கேயும் வந்து சாதியவாதிகள் தோற்கடித்தார்கள். 1999யில் 2.25 லட்சம் வாக்குகள், 2004யில் 2.5லட்சம் வாக்குகள் பெற்றார். 2004யில் 2.5 லட்சம் வாக்குகள் பெற்று தேசியக் கட்சியான பா.ஜ.க.வையும், தமிழகத்தின் பிரதான கட்சியான அ.தி.மு.க.வையும் டெபாசிட் இழக்க வைத்தார்.

ஊரெல்லாம் சுற்றிவந்து பா.ம.க. பொன்னுசாமிக்கு ஓட்டு கேட்டார்களே தவிர திருமாவளவனுக்கு ஓட்டு கேட்கவில்லை. பொன்னுசாமி வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்குச் சென்று ஈழத்திற்காகப் பேசுவார் என்று நம்பினார்களே தவிர '25 ஆண்டுகாலமாக திருமாவளவன் ஈழத்தைப் பற்றியே பேசிக்கொன்டிருக்கிறாரே; இந்தத் தொகுதியில் திருமாவளவனை ஆதரிப்போம்' என்று யாரும் முன்வரவில்லை. 2009யில் தனித்து களம் கண்டிருந்தால் கூடுதலாக பத்தாயிரம் ஓட்டுக்கள் வாங்கியிருக்கலாமே தவிர வெற்றி பெற்று இருக்க முடியாது. அப்படி ஒரு நிலையில் கூட 2009யில் திமுக, அதிமுக கூட்டணியைத் தவிர்த்து மூன்றாவது கூட்டணி அமைக்க முயற்சித்தார். இதர அரசியல் கட்சிகள் யாரும் ஒத்துழைக்கவில்லை.

தனித்து களம் காண வேண்டுமானால், அவரைத் தாண்டி கட்சி உள்ளது. அவரது தலைமுறையைத் தாண்டியும் இந்த இயக்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் இருக்கிறது. தொடர் தோல்விகளால் தலைமை வேண்டுமானால் சோர்வடையாமல் இருக்கலாம் ஆனால் கடைநிலைத் தொண்டர்கள் சோர்ந்து போவார்கள்; இயக்கம் உடைந்து போகும். எனவே ஏதாவது ஒரு அணியில் இணைந்து களம் காண வேண்டியதன் அவசியம் ஏற்ப்பட்டது. அ.தி.மு.க.வுடன் கொள்கை ரீதியாகவோ, தொகுதி உடன்பாட்டின்படியோ கூட்டணி சேர வாய்ப்பில்லாத நிலையில் தனித்து களம் காணுவது இயக்கத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதால் தி.மு.க. கூட்டணியில் இணைந்து களம் காண வேண்டிய நிலை ஏற்பட்டது.

சீமான்: திராவிட தலைமைகளை வீழ்த்த வேண்டும் என்று சொல்லிக் கொடுத்ததே அண்ணன் திருமா தான்.. அண்ணன் திருமா அவர்களே நான் பேசும் அனைத்தும் நீங்கள் சொல்லிக் கொடுத்த பாடங்களே; நான் வேறு எங்கும் கற்றுவரவில்லை.

தமிழன் வேலு : இந்த கேள்விக்கும் அண்ணன் சீமானே பதில் சொல்லி இருக்கிறார். இந்துமயமாகிவிட்ட திராவிடக் கட்சிகள் என்ற போர்வையில் உள்ள ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளை வீழ்த்துங்கள் என்று சொல்லிக் கொடுத்தாரே ஒழிய எங்கள் பாட்டன் காட்டிய திராவிடக் கொள்கைகளை வீழ்த்துங்கள் என்று சொல்லித் தரவில்லை. அண்ணன் சீமான் அவர்களே! திராவிடம் என்பது பெரியாரின் புதிய கண்டுபிடிப்பு அல்ல. எங்கள் தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் சித்தாந்தம். திராவிடம் என்பது அண்ணாதுரை, கருணாநிதி, வைகோ போன்றவர்களின் வெற்று முழக்கம் அல்ல. எங்கள் பாட்டன் அயோத்திதாசரின் கொள்கை முழக்கம். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுடன் வட்டமேசை மாநாட்டில் பேசிய எங்கள் தாத்த இரட்டைமலை சீனிவாசன் கோலார் தங்கவயலில் பேசும்போது, நாங்கள் கலப்படமில்லாத திராவிடர்கள் என்று பொருள்பட பேசியிருக்கிறார்.

seeman_380புரட்சியாளர் அம்பேத்கர் திராவிடத்தைப் பற்றி சொல்லும்போது, இந்த மண்ணின் பூர்வீக குடிகள் நாகர்கள் தான். நாகர்கள் என்றால் யார்? இந்தியா முழுமைக்கும் சேரி என்ற சிறைச்சாலையில் வாழ்பவர்கள் தான் நாகர்கள். இவர்கள் தான் முற்காலத்தில் திராவிடர்களாக வாழ்ந்தார்கள், தமிழர்களாக வாழ்ந்தார்கள். தமிழர் என்பதுதான் திரமிளர், திராவிடர் என்று மாறியதாக சொல்கிறார். அதனால் தான் வடக்கே நாகலாந்த், மையத்தில் நாகபுரி, கடைசியிலே நாகர்கோவில். ஆக நாகர்கள் இந்தியா முழுமைக்கும் பரவியிருந்தார்கள் என்றால், தமிழர்கள் இந்தியா முழுமைக்கும் வாழ்ந்தார்கள் என்றுதான் பொருள். அவர்கள் திராவிடர்களாக இந்தியா முழுமைக்கும் வாழ்ந்தார்கள் என்றுதான் பொருள். அப்படி வரலாற்றுப் பின்னணி கொண்ட ஆரியத்தை எதிர்க்கும் கூரிய வாளான திராவிடம் இன்று முனை மழுங்கி இருக்கலாம். அதை கூர்மைப்படுத்துவதை விடுத்து திராவிடத்தை எதிர்ப்பது மடமை.

சாதி ஒழிப்புக்கான அல்லது ஆரியத்தை எதிர்ப்பதற்கான செயல்வடிவமான திராவிடத்தை எதிர்ப்பவர்களால் ஆரியத்தை எதிர்க்க முடியாது. ஆரியத்தை எதிர்க்க முடியாதவனால் இந்திய தேசியத்தை எதிர்க்க முடியாது. இந்திய தேசியத்தை எதிர்க்க முடியாதவனால் தமிழ்த் தேசியத்தை கட்டி எழுப்ப முடியாது....

அண்ணன் சீமான் அவர்களே! உங்கள் நெஞ்சத்தை தொட்டுச் சொல்லுங்கள். பேரறிவாளன் உட்பட மூன்று தமிழர்களின் உயிரைக் காத்தது எம் உடன்பிறவா சகோதரி செங்கொடியா? இல்லை தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இல்லை என்று சொன்ன ஜெயலலிதாவா? மூன்று தமிழர்களின் உயிரைக் காக்க டெல்லியில் இருந்து மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மெலானியை அழைத்து வந்து சட்டப்போராட்டம் நடத்திய அண்ணன் வைகோவா? இல்லை உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஓட்டு வாங்க வேண்டுமே என்ற ஒரே நோக்கத்தில் ஒற்றைக் கடிதத்தை எழுதிய ஜெயலலிதாவா?

தலைவர் திருமா, மருத்துவர் ராமதாஸ் போன்றவர்கள் எல்லோரும் இணைந்து தூக்கு தண்டனைக்கு எதிராக மாநாடு, மனிதச் சங்கிலி போராட்டங்களை அறிவித்து நடத்தினார்கள். மூன்று தமிழர்களைக் காக்க தமிழகமே ஒன்று திரண்டது; ஆர்ப்பரித்தது , அவர்களுக்கெல்லாம் ஒற்றை நன்றியைக் கூட சொல்ல மனமில்லாத நீங்கள் தான், ஜெயலலிதாவுக்கு நன்றி சொன்னீர்கள். ஜெயலலிதாவுக்கு ஈழத்தாய் பட்டம் கொடுத்த நீங்கள் தான் இன்று திராவிடத்தை வீழ்த்துவேன் என்று சொல்கிறீர்கள். எதற்கு இது என்பதை விளக்க வேண்டும்? இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றீரே, இங்கே இலை மலர்ந்து ஒண்ணரை ஆண்டுகாலம் ஆகிறது. ஈழம் என்னவாச்சு?

இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் திராவிடத்தை ஒழிப்பேன் என்றால் உங்கள் உள்நோக்கம் என்ன என்பதை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். திராவிட எதிர்ப்பு என்பது வெறும் கருணாநிதி எதிர்ப்பு, ஜெயலலிதா எதிர்ப்பு, வைகோ எதிர்ப்பு மட்டும் அல்ல என்பதை உங்களுக்கு சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்..

அண்ணன் சீமான் அவர்களே! ஏதோ ஒரு மாற்றத்தை எதிர்பார்த்துதான் இளைய தலைமுறை உங்களை நம்பி வருகிறது.. மாற்றத்தை கொடுக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, ஏமாற்றத்தைக் கொடுக்காதீர்கள். ஒருவன் சோற்றில் மண்ணை அள்ளிப் போடுவதை விட வரலாற்றைத் திரிப்பது கொடுமையானது...

வரலாற்றைத் திரிக்காதீர்கள்....

வருங்கால தலைமுறையை வஞ்சிக்காதீர்கள்....

Pin It