காவிரி, தென்பெண்ணை, பாலாறு, முல்லைப் பெரியாறு மற்றும் தாமிரபரணி ஆறுகள் தமிழகத்தின் வேளாண்மை, குடிநீர் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர்த்தேவையை பூர்த்தி செய்யும் உயிர்நாடிகளாக உள்ளன. தமிழகத்தின் உயிர்த்தொழிலான வேளாண்மை இந்த ஆறுகளை நம்பியே உள்ளன. காவிரிஆற்று நீர் உரிமை தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே கருநாடகத்தால் மறுக்கப்பட்டு வருகின்றது. பாலாற்றின் குறுக்கே ஆந்திரம் புதிய அணையைக் கட்டி மிச்சம் மீதி வரும் தண்ணீரையும் தடுக்கிறது. தென் தமிழகத்தின் நீர் ஆதாரமான முல்லைப்பெரியாறு உரிமையை மறுக்கிறது கேரளம். நடுவண் அரசின் துணையுடன் முல்லைப்பெரியாறு அணையை உடைக்கத் துடிக்கிறது.

krishnagiri_damவந்தாரை எல்லாம் வாழவைக்கும் தமிழகம் முப்புறமும் அண்டை மாநிலங்களால் வஞ்சிக்கப்படுகிறது. இதற்கு உறுதுணையாக நடுவண் அரசு நிற்கிறது. கடந்த சில மாதங்களாக முல்லைப் பெரியாறு உரிமையை மீட்க ஒட்டுமொத்த தமிழகமே போர்க்களமாகி சற்று அமைதி திரும்பிய நேரதிதில், கடந்த பிப்ரவரி 20ஆம் நாள் தினமணி நாளேட்டில் ஒரு செய்தி கிருட்டிணகிரி மாவட்ட மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே காவிரியை மறுக்கும் கருநாடகம் தற்போது தென் பெண்ணை ஆற்று நீரை தமிழகத்திற்கு வராமல் தண்ணீரை திருப்பத் திட்டம் தீட்டி, உடனடியாக ஆரம்ப கட்டப் பணிகளை தொடங்க 36 கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கியுள்ளது. இதை கர்நாடக மாநில அறநிலையத் துறை முன்னாள் அமைச்சரும், மாலூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணய்ய ரெட்டி 18-02-2012 அன்று மாலூரில் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

தென்பெண்ணை ஆறு (கன்னடத்தில் தட்சிண பிணாகினி என்றழைக்கப்படுகிறது) கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டம், நந்தி மலையில் (நந்தி துர்க்கம்) பிறந்து, பெங்களூர் மாவட்டம் ஒசகோட்டை, ஒரத்தூர் வழியே. கிருட்டிணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கேளவாரப்பள்ளி அணையை வந்தடைகிறது. பின் கிருஷ்ணகிரி அணைக்கட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் அணைக்கட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோயிலூர் அணை, சொர்ணவாரி அணை வழியே சுமார் 400 கிமீ தூரதிற்குப்பின், இறுதியில் தமி்ழ்நாட்டின் கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

மழைப்பொழிவு குறைவாக உள்ள கிருட்டிணகிரி, தருமபுரி மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கிணற்றுப்பாசனமும் பொய்த்து போனதால், ஆழ்குழாய்க்கிணறுகள் மூலம் வேளாண்மை செய்துவந்தனர். 1000 அடிக்குமேல் நிலத்தடி நீர் சென்றுவிட்டதால், ஆழ்குழாய்க் கிணறுகளிலும் நிரில்லை என்ற நிலை தொடர்கிறது.

கிருட்டிணகிரி மாவட்டம் ஓசூர்-இராயக்கோட்டை பகுதிக்குட்பட்ட விவசாயிகள், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காலங்களில் வீணாகும் உபரி நீரை, கிளை வாய்க்கால் மூலம் ஆண்டிற்கொருமுறை ஏரி, குளம், குட்டைகளில் நிரப்பினால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்; இதனால் வேளாண்மை பெருகும் என்று பல ஆண்டுகளாக தமிழக அரசை வலியுருத்தி போராடிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மா, புளி, மலர் மற்றும் காய்கறி உற்பத்தியில் முன்னோடியாக விளங்குவது கிருட்டிணகிரி மாவட்டம் எனலாம். அதிகக் குளிரிலும், கடும் வெப்பத்திலும் விளையும் அனைத்து காய்கறிகளும் மற்றும் மலர்களும் இப்பகுதியில் விளைவிக்கப்படுகின்றன. ஓசூர்- ரோசா மற்றும் அலங்கார மலர்கள் ஏற்றுமதியிலும், காவேரிப்பட்டிணம் -மல்லைகை ஏற்றுமதியிலும் முன்னோடியாக விளங்குகின்றன. இராயக்கோட்டை தக்காளி சந்தையிலிருந்துதான் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் தக்காளி மற்றும் இதர காய்கறிகள் செல்கிறது. இது தவிர இப்பகுதியில் கரும்பு, நெல், கேழ்வரகு, வெற்றிலை, வாழை, பாக்கு, தென்னை உள்ளிட்ட பணப்பயிர்களும், சமந்திப்பூ செண்டுமல்லி, கண்காம்பரம் உள்ளிட்ட பிற மலர் வகைகளும் சாகுபடி செய்யப்படுகின்றன. ஒசூர், கிருட்டிணகிரி, காவேரிப்பட்டிணம், பகுதியில் உள்ள தொழிற்சாலை மற்றும் வீடுகளின் குடிநீர் தேவையையும், விவசாயத் தேவையையும், தென்பெண்ணையாறுதான் நிறைவுசெய்து வருகிறது.

கருநாடக அரசு இத்திட்டத்தை நிறைவேற்றுமானால், கிருட்டிணகிரி மாவட்டத்தின் ஒரே நீர் ஆதாரமான தென் பெண்ணை ஆற்றின் மூலம் நேரடியாகவும், நிலத்தடி நீர் மூலமும் பாசன வசதிபெரும் பல்லாயிரக்கணக்கான வேளாண்நிலங்கள் பாலைவனங்களாகும் என்பது உண்மை. ஏற்கனவே பலர், தண்ணீரில்லாமல் வேளாண்தொழிலை கைவிட்டு தங்கள் நிலங்களை அண்டை மாநிலத்தவர்களுக்கு விற்று, வயிறு பிழைக்க கூலிகளாக ஆந்திரம், கருநாடக மாநிலங்களுக்கு குடும்பங்களாக இடம் பெயர்ந்துவிட்டனர். எனவே எஞ்சியிருக்கும் மிச்சம் மீதி உழவர்கள் உயிர்வாழவும். தமிழ்நாட்டின் ஆற்று நீர் உரிமையைக் காக்கவும், தமிழக அரசு மற்றும் தமிழக அரசின் பொதுப்பணித்துறையும் உடனடியாக இப்பிரச்சனைக்கு தீர்வுகான வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் குராக உள்ளது.

இந்த ஆற்று நீர் உரிமையாவது நமக்கு பெற்றுத்தருமா தமிழக அரசு?

- மு.வேலாயுதம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It