தற்போது உலகெங்கிலும் பரபரப்பாக பேசப்படும் செய்தி அயர்லாந்து பெயில் அவுட். வெளிப்படையாக செய்தியை பார்ப்போர் எல்லாம் அனுமானிப்பது 'அயர்லாந்து அரசு பொறுப்பில்லாமல் வரவுக்கு மீறி செலவு செய்து நாட்டை படுபாதாளத்தில் தள்ளி இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியால் மீட்கப்படுகிறது' என்பதாகும். ஆனால் உண்மையான செய்தி அதுவல்ல. தற்போது உண்மையில் பெயில் அவுட் நடப்பது அயர்லாந்துக்கு அல்ல. இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய தனியார் வங்கிகளுக்குத் தான். இதன் பயனை அனுபவிக்கப் போவது அயர்லாந்து மக்கள் அல்ல. ஐரோப்பிய தனியார் வங்கிகளும், இங்கிலாந்து மற்றும் யூரோ அரசாங்கமும் தான். ஆனால் இதனால் ஏற்படப் போகும் இழப்புகள் விழப்போவது அயர்லாந்து மக்களின் தலை மீது தான். ஆச்சரியமாக இருக்கிறதா? அது தான் உண்மை. முன் பதிவில் அமெரிக்காவில் உள்ள வங்கிகளைக் காக்க நடந்த நூதன பெயில் அவுட் பற்றி எழுதி இருந்தேன். இது ஐரோப்பிய வங்கிகளைக் காக்க நடக்கும் நூதன பெயில் அவுட்.

ஒவ்வொரு நாடும் தனது வரவுக்கு மீறி செலவு செய்யும் போது மிகப் பெரிய பட்ஜெட் பற்றாக்குறை ஏற்படுகிறது. பொதுவாக அரசுகள் போரில் ஈடுபடும் போது இந்த நிலை ஏற்படும். மக்கள் நலப் பணிகளை வரவுக்கு மீறி அதிக அளவு செய்தாலும் இதுபோல் பற்றாக்குறை ஏற்படும். பற்றாக்குறையின் அளவு நாட்டின் உற்பத்தியை விட மிக அதிகமாக சென்றால் அந்த நாட்டினால் கடனைத் திருப்பித் தர முடியுமா என்ற சந்தேகம் வருவதால், ரிஸ்க் அதிகமாக இருப்பதைக் காரணம் காட்டி கடனுக்கான வட்டி வீதம் மிக அதிகமாகும். இதன் விளைவாக புதிய கடனை வாங்கும்போதும், பழைய கடனை புதுப்பிக்கும் போதும் நிதி பிரச்சனை ஏற்பட்டு பெயில் அவுட் தேடி நாடுகள் செல்லக்கூடும். ஆனால் அயர்லாந்தின் உண்மை நிலை அதுவல்ல. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்நாட்டு அரசின் பட்ஜெட் பற்றாக்குறை விகிதம் GDP இல் 12% தான் இருந்தது. இது பிற ஐரோப்பிய நாடுகளை (ஜெர்மனி - 40% , பிரான்ஸ் - 60% ) விட குறைவு.. அப்படி என்றால் அரசு மிகவும் பொறுப்பாக அரசாங்கம் நடத்தி வந்து இருக்கிறது.

அயர்லாந்துக்கு வில்லன் ஐரோப்பிய வங்கிகள் மற்றும் அந்நாட்டு நிதித் துறையில் இருந்த  கட்டுப்பாடற்ற சுதந்திரத்தால் வந்தது. அமெரிக்க வங்கிகள் அமெரிக்க அரசு நடத்திய போர்களாலும், SubPrime கடன்களாலும் மிகப் பெரிய லாபத்தை குறுகிய காலத்தில் காட்டத் தொடங்கியபோது, ஐரோப்பிய வங்கிகளும் அவர்களோடு போட்டி போட்டு லாபம் காட்ட எதாவது செய்ய முயன்றன. (அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பிய வங்கிகள் பெருமளவு லாபம் காட்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது). ஜெர்மனி பிரான்சு நாட்டு வங்கிகள் தங்கள் நாடுகளில் நிதித்துறையில் கட்டுப்பாடு அதிகம் இருந்ததால் அங்கு கண்ட படி கடன் கொடுத்து லாபம் காட்ட முடியவில்லை. இந்த ஐரோப்பிய வங்கிகளோடு இங்கிலாந்து மற்றும் அமெரிக்க வங்கிகளும் புதிய சந்தை தேடி ஐரோப்பாவில் வேட்டையைத் தொடங்கின. அப்போது ஐரோப்பாவில் அதிக அளவு செலவு செய்து கொண்டு இருந்த நாடுகளின் பட்ஜெட் பற்றாக்குறையைத் தீர்க்க கடன் கொடுத்தும், அங்கு வங்கித் துறை கட்டுப்பாடு குறைவாக இருந்த நாடுகளில் கடனை அள்ளிக் கொடுத்தும் தங்களது பேலென்ஸ் ஷீட்டை பெருக்கிக் காட்டினர்.

அயர்லாந்து நாடு இதில் இரண்டாவது ரகம். வங்கிகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த மீடியா மூலம் அயர்லாந்தில் மிகப் பெரிய வளர்ச்சி - தொடர்ச்சியாக பல ஆண்டுகளுக்கு வரப் போவதாகவும், நாட்டின் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறை வரலாறு காணாத வளர்ச்சி காணப் போவதாகவும் செய்திகளைப் பரப்பின. அயர்லாந்தில் நிதித் துறையில் கட்டுப்பாடு சிறிதளவே இருந்ததால் கட்டுமானத் துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறைக்கு அளவில்லாக் கடன் வழங்கப்பட்டது. இந்த கடனுக்கான பணம் எல்லாம் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க வங்கிகள் மூலம் வந்தது. இந்த கடனின் அளவு எவ்வளவு அதிகம் என்று அறிய கீழ்க்காணும் படத்தைப் பார்த்தால் புரியும்.

ireland_banks

இந்தப் படத்தில் ஐரோப்பிய அரசுகளின் பட்ஜெட் பற்றாக்குறையும், அந்த நாடுகளின் தனியார் வங்கிகள் அயர்லாந்துக்கு அளித்த கடனும் ஒப்பிட ப்பட்டுள்ளது. ஜெர்மனி நாட்டின் பட்ஜெட் பற்றாக்குறையை விட அந்நாட்டு வங்கிகள் அயர்லாந்துக்குக் கொடுத்துள்ள கடன் தொகை அதிகம்!

வழக்கம் போல் ஒரு வீக்கம் வந்தால் ஒரு வாட்டம் வரத்தானே வேண்டும். அந்த வாட்டம் வரத் தொடங்கியபோது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடந்ததைப் போலே ரியல் எஸ்டேட் வீழ்ச்சி அடைந்தது. உண்மையில் சந்தை பொருளாதார கூற்றுப்படி பார்த்தால் தவறான கணிப்பின் மூலம் கடன் கொடுத்த ஐரோப்பிய வங்கிகள் தங்கள் முதலீட்டில் நட்டத்தை சந்திக்க வேண்டும். தாங்க முடியாத நட்டத்தை அடையும் அயர்லாந்து வங்கிகள் திவாலாக வேண்டும். ஆனால் தங்களது தவறான முடிவால் ஏற்பட்ட நட்டத்தை ஏற்றுக்கொள்ள ஐரோப்பிய வங்கிகள் தயாராக இல்லை. அயர்லாந்து நாட்டுக்கு ஐரோப்பிய யூனியன் மற்றும் IMF மூலம் அழுத்தம் தரப்பட்டது. அரசு வேறு வழியின்றி திவாலை சந்திக்க இருந்த வங்கிகளை அரசுடமையாக்கியது. அதாவது வங்கிகள் சுமக்க வேண்டிய சிலுவையை அரசு சுமக்கத் தொடங்கியது. இதுவே அமெரிக்காவாக இருந்தால் பணத்தை வேண்டிய அளவு பிரிண்ட் செய்து Quantitative Easing என க் கூறி நிலைமையை சமாளித்து விடலாம். அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாவிட்டாலாவது நாணய மதிப்பைக் குறைத்தல் அல்லது வேறு எதாவது யுக்தியைப் பின்பற்றி இருக்கலாம். பாவம் அதற்கும் வழி இல்லாமல் போய் விட்டது.

வங்கிகளின் கடன் அரசின் தலையில் விழுந்ததால் அதன் கடன் சுமை அதிகமாகியது. கடனைத் திருப்பி செலுத்துமா என்ற நம்பகத்தன்மையும் குறைய ஆரம்பித்தது. அது மட்டுமல்ல, சந்தையில் அனுமானிப்பவர்கள் (Speculators) வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்ச ஆரம்பித்து விட்டனர். சந்தையில் அயர்லாந்து கடன் பெற 8%க்கும் மேலாக வட்டி செலுத்த வேண்டிய கட்டயத்திற்குத் தள்ளப்பட்டது. தனது அதிகமான கடனை 8% மேல் கொடுத்து வாங்கினால், அந்நாடு மீண்டும் கடனுக்கான Vicious Circleல் வீழ வாய்ப்புள்ளது. அயர்லாந்து அரசு வட்டிக்கு கடன் வாங்க ஐரோப்பிய யூனியன் மற்றும் IMF நோக்கி செல்ல ஆரம்பித்தது. IMF இடம் சென்றால்தான் என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமே!. அது ஐரோப்பிய தனியார் வங்கிகளுக்கு விழுந்திருக்க வேண்டிய பாரத்தை அயர்லாந்து மக்களிடம் இறக்கி வைக்கச் சொல்லி விட்டது. இந்த பிரச்சனைக்கு முன் நியாயமான பட்ஜெட் போட்டு அளவோடு மக்கள் நலனுக்காக செலவு செய்த அரசை மக்கள் நலனுக்கு எதிரான முடிவுகளை எடுக்கச் சொல்லி அழுத்தம் கொடுத்து வெற்றியும் பெற்று விட்டது. அரசு எடுத்துள்ள ஒரு சில முடிவுளை நீங்கள் பார்த்தால் என்ன நடக்கிறது என்று நீங்களே யூகித்துக் கொள்வீர்கள்.

  1. hercules_360குறைந்த பட்ச தொழிலாளர் ஊதியம் 10 சதத்துக்கும் மேலாக குறைக்கப்பட்டுள்ளது.
    2. ஏற்கனவே வீட்டுக் கடனை கட்ட முடியாதவர்கள் இருக்கையில் 530 மில்லியன் யூரோவுக்கான புதிய வீட்டு வரி
    3. மக்கள் நலவாழ்வுக்கான பட்ஜெட் 3 பில்லியனுக்கும் மேல் கட்.
    4. வருமான வரி உயர்வு.
    5. பொதுத் துறை தொழிலாளர்கள் ஆட் குறைப்பு மற்றும் சம்பளக் குறைப்பு.

இது போன்ற முடிவுகளை எடுத்துள்ளதால் அயர்லாந்து அரசுக்கு சிறிது குறைந்த வட்டியில் ஐரோப்பிய மத்திய வங்கியிலிருந்தும் இங்கிலாந்திடமிருந்தும் IMFஇடமிருந்தும் கடன் கிடைக்கும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்தக் கடன் அயர்லாந்து மக்களின் நன்மைக்காக செலவிடப்போவது இல்லை. இவை ஐரோப்பிய வங்கிகளின் கடனை வட்டியோடு திருப்பி செலுத்தத்தான் உதவும். அதாவது ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் இங்கிலாந்து மத்திய வங்கியிடம் கடன் வாங்கி ஐரோப்பிய மற்றும் இங்கிலாந்து தனியார் வங்கிகளுக்குப் பணத்தைக் கொடுப்பார்கள். இரண்டு கடனுக்கான வட்டியையும் முதலையும் அயர்லாந்து மக்களின் உழைப்பின் மூலம் திருப்பிக் கொடுக்க வேண்டும். இதைப் பார்த்தால் நம்மூர் கந்து வட்டிக்காரர்களின் கதை போல் உள்ளதள்ளவா?

இங்கிலாந்தில் பலர் அயர்லாந்துக்கு பெயில் அவுட் பணம் கொடுப்பதை எதிர்க்கிறார்கள். இங்கிலாந்து மத்திய வங்கி அயர்லாந்துக்குப் பணம் கொடுக்கவில்லை என்றால் இங்கிலாந்தின் பல தனியார் வங்கிகளின் கதியும் அதோ கதி தான்!. உண்மையில் என்ன நடக்கிறது என்றால் இதன் மூலம் இங்கிலாந்து நாட்டிற்குத்தான் மிகப் பெரிய லாபம். அயர்லாந்து வெளிச்சந்தையிலிருந்து கடன் வாங்க வேண்டும் என்றால் 8% வட்டி கொடுக்க வேண்டும். ஆனால் இங்கிலாந்து 3.3% வட்டிக்கு பணம் வாங்க முடியும் (Quantitative easing முறையிலும் பணத்தை 0% வட்டியிலும் உற்பத்தி செய்யலாம்). எனவே இங்கிலாந்து அரசு 3.3%க்கு கடன் வாங்கி 5%க்கு அயர்லாந்துக்கு கொடுக்கப் போகிறது. ஆக மொத்தம் அனைத்து வகையிலும் இங்கிலாந்துக்கு லாபம் தான்.

தனியார் வங்கிகளை கட்டற்ற சுதந்திரத்துடன் அனுமதிக்கும் நாடுகள் போண்டியாக வேண்டி வரும் என்பற்கு உதாரணமாக அயர்லாந்து இன்று உள்ளது. இந்தியாவும் நாளை அயர்லாந்தின் நிலைக்கு வராது என்பதில் என்ன நிச்சயம்?

 - சதுக்கபூதம்

Pin It