திட்டமிட்டே
கட்டப்பட்ட அணையில்
தேங்கி ததும்பும்
எனக்கான பாசன நீர் நீ

குறுவைக்கான விதை நெல்லோடு
காத்திருக்கும்
குறுங்காணிக்காரன் நான்

பாறையாய் பிளவுண்டு கிடக்கும்
என் மருதத்தின் பசுமை
பெருக்கெடுத்து
தடுப்புடைத்து
நுரைபொங்க வரும்
உன் வரவால் மட்டுமே

சுரண்டிய மணலற்று
வறண்ட காவிரியாகி விடுகிறதுன் வீதி
நீ வெளியூருக்குப் போகும்
நாட்களில்

நீர் வேட்கையால்
கடைசி வேர்நாக்கும்
இற்றுப்போகும் வரை தவமிருக்கும்
என் நதிக்கரை
மரங்களைபோல்
நான் காத்திருப்பதை
அறியாதவளில்லை நீ

Pin It