தாக்க வந்த எதிரிகளை கொலைசெய்ததால் அல்ல
அல்லது
தன்னினம் அழிக்கப்படும் வன்கொடுமைக்கு எதிராய்
குண்டு வெடித்ததற்காய் அல்ல
அதிபயங்கர ஆயுதங்களோடும்
ராக்கெட் ஏவுகணைகளோடும்
கதறக் கதற குழந்தைகளையும் பெண்களையும்
நிர்மூலமாக்கியதால்
உன் கொலைகார ஆயுதங்களின்மீது
தாக்குதலைத் தொடர்கிறேன்.
முள்கம்பிகளுக்குள் மரணமடைந்தவர்கள்
பதுங்குகுழிகளில் பாம்புதீண்டி இறந்தவர்கள்
நடுக்கடலில் படகுகளோடு சுட்டுவீழ்த்தப்பட்டவர்கள்
கோவில்திண்ணைகளிலும்
பள்ளிவாசல் தெருக்களிலும்
ரத்தத்தால் நனைக்கப்பட்டவர்கள்
கண்ணிவெடிகளை மிதித்து
சின்னாபின்னமாய் சிதறிப் போனவர்கள்
தாங்கள் உச்சரித்து காற்றில் மிதக்கவிட்ட
அந்த கடைசிச் சொல்லைத் தேடுகிறேன்.
இருளால் காலம்தன்னை மூடிக் கொள்கிறது
இப்போது ராசபட்சேயை
ஒரு போர்குற்றவாளியாக அறிவிக்கிறேன்.
ஒபாமாவும்கூட அப்படித்தான்.
ஏதுமறியா மக்கள் கூட்டத்தை குண்டுவீசி அழிப்பதற்கு
யாருக்கு உரிமை இருக்கிறது.
ஈழத்திலும் ஈராக்கிலும்
ஆப்கனிலும் பாலஸ்தீனத்திலும்
அழிந்துபோன மக்களின் ஒப்பாரி
பேரலையாய் உருவெடுத்து
ஐநாசபையை முட்டி மோதித் தள்ளுகிறது
அதன்பலம் போதாததாக இருக்கிறது
பொய்வழக்கு சோடித்து குற்றவாளியாக்கி
குலையுயிரும் குற்றுயிருமாய் துடிக்கும்
குரல்வளை நெருக்கப்பட்ட உண்மையைப் போலல்ல இது.
போர்குற்ற்வாளிகள்மீதான
குற்றப்பத்திரிகை வாசிக்கப்படுகிறது.
சைவப்பழமான திருஞானசம்பந்தனும்
வரிசையில் நின்றான்.
சாக்கியப் பெண்களை பாலியல்பலாத்காரம் செய்ய
சிவனிடம் வரம்கேட்ட குற்றம் அவன்மீது.
சிவனடியார் பூதொடுத்தபோது
தரையில்விழுந்தபூவைமுகர்ந்து பார்த்தவளின்
மூக்கை அறுத்தவன்
பூவை முகர்வதற்கு முன்னே
அந்த பூவை எடுத்தகை இதுதானேயென
மனைவியின் கையையே வெட்டி எறிந்தவன்
செருத்துணையாரும்
கழற்சிங்கநாயனாரும்கூட தப்பமுடியவில்லை.
முன்வரிசையில்நின்ற ஹிட்லர்
கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தான்.
சாவுவதைமுகாம்களில்
யூத இனத்தையே அழித்தொழித்த
வரலாற்றுத் துயரமும் அங்கு நிறைந்திருந்தது
யேசுவை காட்டிக் கொடுத்த யூதாஸின்கண்களில்
இரக்கம் கசிவதாய் சொன்னதும்
பொய்யுரையாய் போனது
பத்வா வெளியிட்ட உலமாக்கள் முன்நிற்க
சூபிமன்சூர்ஹல்லாஜை கண்டதுண்டமாய் வெட்டி எறிந்த
அப்பாஸிய கலிபா முக்ததிர் பில்லாஹ்விடம்
அந்த வாள் இன்னும் இருந்தது
மரணதண்டனை விதிக்கப்பட்ட
போர்குற்றவாளிகளின் கருணைமனுவை
நிராகரிக்கச் சொல்லி போராடும்
மக்கள் கூட்டத்தின் மீது மீண்டும் ஒரு தடவை
ராணுவம் துப்பாக்கியால் சுடுகிறது.
Pin It