இந்தியா என்பது ஒரு கண்டம். எனவே, அது பல நாடுகளாகப் பிரிக்கப்பட வேண்டும். ஐரோப்பா கண்டத்தில் 32 தனித்தனி நாடுகள் உள்ளன. ஐரோப்பா முழுமையும் ஒரு குடையின் கீழ் இருக்க வேண்டுமென யாரும் கூறவில்லை. இந்தியாவும் ஒரே குடையின் கீழ் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.

இந்தியா பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பு தனித் தனி ஆட்சி கொண்ட 56 தேசங்கள் உள்ள கண்டமாகத்தான் இருந்து வந்தது. பிரிட்டிஷார் தமது ஆதிக்கம் சரியாக நடக்கச் சவுகரியம் தேடிக் கொள்ளவே இந்தியாவை ஒரே நாடு என்று கருதினர்; மற்றவரையும் கருதும்படிச் செய்தனர்.

மதம், மொழி, கலை, மனோநிலை, ஒரு குடிமக்கள் என்ற உணர்ச்சி, வரலாற்று பந்தத்துவம் – ஆகியவைதான் இன இயல்புகள். இந்த முறையில் பார்த்தால் இந்தியாவில் தனித்தனி இனங்கள் பல உண்டு. இவற்றை மூன்று பெரும் பிரிவுகளாகக் கொள்வோம்: திராவிடர், முஸ்லீம், ஆரியர் என்று இந்த மூன்று இனங்களில் திராவிடரும் முஸ்லிம் இனமும் இயல்புகளில் அதிகமாக வித்தியாசம் இல்லாதவர்கள். ஆரிய இன இயல்புகளுக்கும் மற்ற இரு இன இயல்புகளுக்கும் துளியும் பொருத்தம் கிடையாது; பகைமை பெரிதும் உண்டு. இந்தத் தனித்தனி இன இயல்புகள் இருப்பதால், இனவாரியாக இந்தியா பிரிக்கப்பட்டால்தான் அந்தந்த இனத்துக்கென இடமும் ஆட்சியும் கிடைக்கும். இல்லையேல், எந்த இனம், தந்திரத்தாலும், சூதுசூழ்ச்சியாலும் தன்னலத்துக்காகப் பிறரை நசுக்கும் சுபாவத்திலும் கைதேர்ந்து இருக்கிறதோ அந்த இனத்திற்கு மற்ற இனங்கள் அடிமைப்பட்டு வாழ வேண்டி நேரிடும்.

இந்தியா ஒரு நாடு என்று கூறிவருவதால் ஆரிய ஆதிக்கம் வளருகிறது. ஆரிய ஆட்சியின் காரணமாக மற்ற இன நலன்கள் தவிடு பொடியாகின்றன.

முரண்பாடுள்ள இயல்புகளைக் கொண்ட இனங்களை ஒன்றாக சூழ்ச்சியால் இணைத்துக் கட்டுவதால், கலவரமும் மனக்கிலேசமும் தொல்லையுமே வளர்கின்றன. எனவே எதிர்காலத்தில் தொல்லைகள் வளர்ந்து இந்தியா இரத்தக் காடாகாதிருக்க வேண்டுமானால், இப்போதே சமரசமாக, இன வாரியாக இந்தியாவைப் பிரிக்க வேண்டும்.

இனவாரியாக நாடு பிரிக்கப்படுவது என்பது புதியதும் அல்ல; கேட்டறியாததும் அல்ல. ஏற்கெனவே இந்தியாவில் பிரிட்டிஷ் இந்தியா, சுதேச இந்தியா, பிரஞ்சு இந்தியா, டச்சு இந்தியா எனப் பல இந்தியாக்கள் உள்ளன. இதுபோல் முஸ்லிம் இந்தியா, ஆரிய இந்தியா, திராவிட இந்தியா என மூன்று தனித்தனி வட்டாரங்கள் தேவை எனக் கேட்பது தவறல்ல.

சுதேச சமஸ்தானங்கள் மட்டும் 57 இருந்தன. அவை தனித்தனி ஆட்சி தனித்தனி முறையாகக் கையாளப்பட்டு வந்திருந்தன. அதுபோல, மூன்று பெரும் பகுதிகளுள் தனித்தனி ஆட்சி முறையுடன் தத்தமது இன இயல்புகளை வளர்த்துக் கொள்ள வழி தேடிக் கொள்வது தடுக்க முடியாத உண்மை.

ஒட்டமான் சாம்ராஜ்ஜியத்தின் பிணைப்பிலிருந்து விடுபட்ட துருக்கி, வல்லரசுகளில் தலைசிறந்ததாக ஆனது போல, இன வாரியாக இந்தியா பிரிக்கப்பட்டால் ஒவ்வொரு வட்டாரமும் தனிக்கீர்த்தியுடன் விளங்கும்.

தனித்தனி வட்டாரமானால்; ராணுவ பலத்தை அவரவர் இயல்புகளுக்கு ஏற்றபடி வளர்க்க ஏது உண்டாகும்.

அசோகர், கனிஷ்கர், ஹர்ஷர், சமுத்திர குப்தர், அக்பர் முதலிய மன்னாதிமன்னர்கள் காலத்திலும் இந்தியா ஒரே நாடாக இருந்ததில்லை. அப்போதும் திராவிட நாடு எனத்தகும் தனி நாடு இருந்தது.

தனித்தனி வட்டாரம் பிரிந்தால் அங்குள்ள வசதிகளுக்கேற்ற படி பொருளாதார விருத்தி செய்து கொள்ளவும், ஒரு வட்டாரம் மற்ற இடங்களைச் சுரண்டும் கொடுமையை ஒழிக்கவும் முடியும்.

அந்தந்த இனத்திற்கெனத் தனித்தனி இடமும் ஆட்சியும் இருந்தால்தான் அந்தந்த இனமும் மற்றவற்றினிடம் சமவுரிமை, சம அந்தஸ்து பெற முடியும்.

இந்தியா ஒரே நாடாக இருக்கிறது என்று கூறித்தான் ஆரியர்கள், இமயம் முதல் குமரிவரையுள்ள இடத்தை தமது வேட்டைக் காடாக்கிக் கொண்டு, அரசியலில் அதிகாரிகளாய், கல்வியில் ஆசான்களாய், மதத்தில் குருமார்களாய், சமுதாயத்தில் பூசேவர்களாய், பொருளாதாரத்தில் பாடுபடாது உல்லாசவாழ்வு வாழக்கூடியவராய் இருக்கவும், மற்ற இனத்தவர் தாசர்களாய், பாட்டாளிகளாய் உழைத்து உருவின்றிச் சிதைப்பவர்களாய் வாடும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இந்தக் கொடுமை நீங்க வர்க்கத்திற்கொரு வட்டாரத்தைப் பிரிப்பதுதான் சிறந்த வழி.

ஓர் இனத்திடம் மற்றோர் இனத்திற்கு நம்பிக்கை இல்லை. ஓர் இனத்து ஆட்சியின் கீழ் மற்றோர் இனம் இருப்பது என்று சொன்னாலே அச்சம் உண்டாகிவிடுகிறது. அச்சமும், அவநம்பிக்கையும் பெற்றெடுக்கும் குழந்தை பயங்கரப் புரட்சி. இந்த பயங்கரப் புரட்சியைத் தடுக்கவே, பிரிவினை அவசியமாகிறது.

இந்தியா பிரியாது இருந்ததால் இதுவரை இராணுவ பொருளாதார அறிவு பலம் வாய்ந்ததாகவோ, இந்திய இனம் என்ற புது சமுதாயம் அமைந்ததாகவோ கூற எந்த ஆதாரமும் இல்லை. ஓர் இனத்தின் குரல் வளையை மற்றோர் இனம் அழுத்தி நெரித்துக் கொல்லாது போனதற்குக் காரணம் எல்லா இனத்தையும் பிரிட்டிஷ் துப்பாக்கி ஏககாலத்தில் அடக்கி வைத்திருந்ததால்தான். எனவே, பிரிட்டிஷ் பிடி போய்விட்டால் இந்தியா இரணகளமாகும்.

இதற்கு ஐரோப்பாவில் அடிக்கடி நடக்கும் போர் ஓர் உதாரணம். எனவே இத்தகைய உதாரணம் உண்டாகாதிருக்க இனவாரியாக இடம் பிரித்துவிடுவதே, ஆபத்தைத் தடுக்கும் வழி. எனவே இன வழி இந்தியா பிரிந்தால், இன இயல்புகள் தனித் தனிச்சிறப்புடன் இயங்கவும், ஆரிய ஆதிக்கம் அடங்கவும், பொருளாதாரச் சுரண்டல் போகவும், அறிவை அடக்கும் அவதி நீங்கவும், எதிர்காலத்தில் பூசல் எழாதிருக்கவும் சாந்தம் சமாதானம் நிலவவும் மார்க்கமுண்டு. எனவே தான் இந்தியா இனவாரியாகப் பிரியவேண்டும் என்று இந்தியாவை இனப்போர்க்களமாகக் காணக்கூடாது என்ற நல்ல நோக்கம் கொண்டவர்கள் எண்ணுகின்றனர். இதை ஏற்க மறுப்பவர்கள் சரித்திரத்தை மறந்தவர்களாக இருக்க வேண்டும். இல்லையேல் சரித்திரத்தை மக்கள் தெரிந்து கொள்ளவில்லை என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

ஒரே இன இயல்பு, அதாவது ஆரிய ஆதிக்கம், மற்றவர்களை மதித்துத் துவைத்து அழிக்கவேண்டுமென்று கெட்ட எண்ணம் கொண்டவர்களும், வலுத்தவனுக்கு வாழ்க்கைப்படும் வனிதை போல் இந்தியாவைச் செய்து விட்டுத் தாங்கள் வாழ எப்படியேனும் வழி செய்து கொள்ள வேண்டும் என்ற கேடுகால யோசனையும் கொண்டவர்களே, இந்தப் பிரிவினைத் திட்டத்தை எதிர்ப்பர். இன்னோரன்ன காரணங்களையும் ஆரியத்தை அடக்கித் தீரவேண்டியதன் அவசியம் ஆகியவற்றையும் ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களைப் பொருட்படுத்தாது நம் கடனை நாம் செய்தல் வேண்டும். இஸ்லாமியர்கள் இந்த உண்மைகளை உணர்ந்து தங்கள் தலைவரின் திட்டத்தின்படி பணிபுரிந்து வெற்றி பெற்று விட்டனர். வடக்கே இன அரசு பாகிஸ்தான் ஏற்பட்டுவிட்டது. அவர்கள் எந்த இலட்சியத்திற்காகப் போராடி வெற்றி பெற்றார்களோ அந்த இலட்சியத்தை, அவர்கள் லாகூரில் பாகிஸ்தான் தீர்மானம் நிறைவேற்றாததற்கு முன்பு நாம் திராவிடநாடு திராவிடருக்கே, என்ற தீர்மானம் செய்தோம்.

பாகிஸ்தான் தேவை, என்பதற்குக் கூறப்பட்ட காரணங்களை விட அதிகம் திராவிடத்தனி அரசுதேவை என்பதற்குள்ளன. இது உலகமறிந்த உண்மை. ஜாதி பேதமற்ற – பொருளாதார பேதமற்ற – அறிவுத்தெளிவு பெற்ற – அந்நியன் சுரண்டலுக்கு ஆளாகாத ஓர் இனம்–அதன் உரிமையுள்ள ஆட்சியை அமைத்துக் கொண்டு, உலக மன்றத்திலே வீற்றிருக்க வேண்டும்.

(திருச்சி திராவிடர் கழக மாநில மாநாட்டில் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை)

Pin It