Mullaperiyar_dam_370அண்ணனும் தம்பியுமாய்

அக்காளும் தங்கையுமாய்

அண்டையிலே என்ன சண்டை?

யாரங்கே? நிறுத்துங்கள்!

 ஒருகையின் இரண்டுவிரல்

உதைபட்டு மூன்றுவிரல்

திரும்பிவிட்ட கதை உண்டா?

செவிகேட்ட நிகழ்வுண்டா?

 எல்லையிலாக் காலமுதல்

ஏற்பட்ட நம்முறவை

முல்லைப் பெரியாறா

முடித்துவைக்கப் போகிறது?

 ஆரத் தழுவுகிற

சேரன் மடியினிலே

சோழன் மகளிருந்தாள்!

சொல்லாமல் விடுவேனா?

 சேரனும் சோழனும்

செத்துத் தொலைந்ததனால்

ஓரணியில் நிற்காமல்

உறவு கெடலாமா?

 இளங்கோ எழுதிவைத்த

இலக்கியத்தில் தமிழ்நாட்டின்

வளங்கள் புனைந்தாரே!

வரலாறு படித்தாயா?

 தென்பொதிகை இளந்தென்றல்

தெரிவிக்கும் வாயிருந்தால்!

என்னருமை நண்பனுக்கே

ஏன்இன்னும் தெரியவில்லை?

 நில்லுங்கள் தோழர்களே!

நீள் உறவை இடிக்காதீர்!

கல்லல்ல நாமெல்லாம்

கனிவுடனே உறவுகொள்வோம்!

Pin It