உண்மை அறியும் குழு அறிக்கை

பேரா. அ. மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழு வெளியிட்ட இந்த அறிக்கை யின் முதல் பகுதி கடந்த வார இதழில் வெளியாகி இருந்தது. அதன் தொடர்ச்சி இந்த இதழில்.

மக்கள் கூடுவதற்கு முன்னதாகவே சுமார் 2000 காவல்துறையினர் அதிகாலையிலேயே கொண்டுவந்து குவிக்கப்பட்டனர்.. பொய்கைகரை ரவுண்டானாவுக்கு 100 மீட்டர் தொலைவிலேயே தடுப்புகள் வைத்து மக்கள் நிறுத்தப்பட்டனர். கூடியிருந்த மக்களைப் பார்த்து அனுமதி இல்லை எனவும் கலைந்து செல்லுமாறும் கூறியுள்ளனர். மக்கள் அமைதியாக முன்னோக்கி நகர்ந்த போதுக். காஞ்சிபுரம் காவல் கண்கானிப்பாளர் சேவவியர் தனராஜ் உத்தரவின் பேரில் திடீரென எவ்வித அறிவிப்பும் இல்லாமல் காவல்துறை தடியடியில் இறங்கியது. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என வித்தியாசமின்றி எல்லோரும் தாக்கப்பட்டுள்ளனர். அஞ்சி ஓடி அருகிலுள்ள தலித் குடியிருப்பில் ஒதுங்கிய மக்களை வீடு புகுந்து தாக்கினர். பெண்களையும் ஆண் போலீசாரே தாக்கியுள்ளனர்.

இதற்கிடையில் பேச்சுவார்த்தை எனச் சொல்லிக் கூடியிருந்த மக்களில் முக்கிய தலைவர்களாகச் சுமார் 30 பேரைத் தேர்வு செய்து செங்கல்பட்டுப் பொறுப்புக் கோட்டாட்சியர் அழைத்துச் சென்றுள்ளார். இந்தப் பேச்சு வார்த்தையிலும் புதிய முன்னேற்றம் எதுவுமில்லை. மின்சாரம் வழங்குவது குறித்துத் தமிழக அரசுடன் பேசி ஒரு வாரத்தில் முடிவு அறிவிக்கப்படும் என்பது மட்டுமே புதிதாகச் சேர்க்கப்பட்டது. இந்தப் பேச்சு வார்த்தை முடிவுகளும் மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை. இந்நிலையில் பேச்சு வார்த்தைக்கு வந்தவர்களில் முக்கியமான 18 பேரைத் தேர்வு செய்து தடுத்த காவல்துறையினர் அவர்கள் மீது கொலை முயற்சி, பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் முதலான கடும் குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். (குற்ற எண்:114/13, சட்ராஸ் காவல் நிலையம். குற்றப் பிரிவுகள்: இ.த.ச 147,148,361,204b, 353, 332, 506 (ii), 307 r w 223 of PPDL Act.). மேலும் சிலரும் தடுத்து வைக்கப்பட்டபோதும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

தடியடியில் காயமடைந்த 32 பேர்களில் 11 பேருக்கு டவுன்ஷிப் மருத்துவ மனையிலும் பிறருக்கு சட்ராஸ் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் முதலுதவி அளிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட உள்ளூர்த் தலைவர்கள் 18 பேரையும் விடுதலை செய்யக் கோரி பொய்கைக்கரை வாசலிலும் புதுப்பட்டினத்திலும் பெருந்திரளாக மக்கள் அமர்ந்தனர். இரவாகியும் மக்கள் யாரும் வீட்டுக்குச் செல்லவில்லை. இந்த 18 பேர் மட்டும் ரிமான்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், தடுத்துவைக்கப்பட்ட மற்றவர்களை விட்டு விடுவதாகவும் ரிமான்ட் செய்யப்பட்டவர்களையும் கூட அடுத்த நாள் பிணையில் விட்டு விடுவதாகவ்வும் சொல்லி மக்களைக் கலைந்து செல்லுமாறு ம,ம,க தலைவரிடம் காவல்துறையும் அதிகாரிகளும் கேட்டுக் கொண்டுள்ளனர். அதை ஏற்ற அப்துல் சமது அடுத்த நாள் கூடி முடிவெடுக்கலாம் எனக் கூறி எல்லோரையும் கலைந்து செல்லச் சொல்லியுள்ளார். இரவு 11 மணி வாக்கில் மக்கள் வீடு திரும்பியுள்ளனர்,

மார்ச் 27 அன்று 22 கிராம மக்கள் கூடி “கல்பாக்கம் சுற்றுப்புற கிராம மக்கள் ஒருங்கிணைப்புக் குழு” என்றொரு அமைப்பை உருவாக்கினர், அப்துல் சமது தலைவராகவும், மருத்துவர் புகழேந்தி மற்றும் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் மோகன் ஆகியோர் ஆலோசகர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 18 பேர்கள் மீதான வழக்குகளைத் திரும்பபெற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து அடுத்த நாள் போலீஸ் அனுமதி பெற்று அமைதியாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

ஆனால் காவல் துறை அவர்கள் கோரிக்கையை ஏற்கவில்லை. சாலை மறியல் அல்லது வேறு எந்த விதமான இடையூறுகளையும் செய்யாமல் உண்ணாவிரதம் இருப்பது என உறுதி மொழி அளித்த பின்னும் காவல் துறை அனுமதி மறுத்தது.

எனினும் மார்ச் 28 அன்று காலை சட்ராஸ் கோட்டைத் திடலில் கூடிய மக்களில் சுமார் 600 பேர் வான்களில் ஏற்றிச் செல்லப்பட்டு செங்கல்பட்டில் பல திருமண மண்டபங்களில் வைக்கப்பட்டனர். பின் அவர்களில் 420 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதில் 129 பேரை ரிமான்ட் செய்தனர். சிறையிலடைக்கப்பட்டவர்களில் ம.ம.க வின் அப்துல் சமது, ம.தி.மு.க வின் மல்லை சத்யா, வி.சி. கட்சியின் வேலு பிரபாகரன், புரட்ச்சி பாரத்த்தின் ஓ.வி.சங்கர் ஆகியோர் அடக்கம். (Crime no. 126/2013 under 123,188,353,7 and 8 CLA Act against 27 persons,Crime no. 124- filed against 101 people, Crime no. 122- filed against a single person, Mr. Duraisamy who is a ward member of Sadras Village Panchayat )

கோரிக்கைகளின் நியாயங்களும் பின்னணியும்

1.1970களின் தொடக்கத்தில் அணு உலைக்கான நிலம் கைப்பற்றப்ப்ட்டபோது (பழைய) கல்பாக்கம் மற்றும் (பழைய) இடையூர் முதலான பகுதிகளிலிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 ஏக்கர் நிலம் வேலை வாய்ப்பு முதலியன அளிப்பதாக அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டது. வெளியேற்றப்பட்ட மக்களில் தலித்கள் குழிப்பான் தண்டலம் பஞ்சாயத்தைச் சேர்ந்த தலித் குடியிருப்புக்கு அருகில் குடியேறினர், அவர்களின் புதுக் குடியிருப்பு இடையூர் காலனி என அழைக்கப்பட்டது.

வெளியேற்றப்பட்ட மீனவர்கள் மகாபலிபுரத்தை அடுத்த கடற்கரைக்கு அருகாக உள்ள பகுதிகளில் குடியேறினர். புது இடையூர், புதுக் கல்பாக்கம் முதலான பெயர்களில் அவை இன்று அழைக்கப்படுகின்றன. வன்னியர்கள் குச்சிக்காட்டில் குடியேறினர். இது தவிர உதிரியாக அருகிலுள்ள பல கிராமங்களில் குடியேறியவர்களும் உளர். இவர்கள் எல்லோருக்கும் மூன்றரை சென்ட் நிலம் மட்டுமே கொடுக்கப்பட்டது, வாக்களித்தபடி இரண்டு ஏக்கர் நிலம், வெலை வாய்ப்பு ஏதுவும் இன்றுவரை அளிக்கப்பட்டவில்லை.

புதிய இடங்களில் அவர்கள் தங்களின் பாரம்பரியமான வாழ்க்கையை இழந்தனர். பழைய மனித உறவுகள், தொழில் உறவுகள் ஆகியனவும் மாறின. எடுத்துக்காட்டாக இடப்பெயர்வுக்கு முன் மீனவர்கள் விவசாயிகளுக்கு மீன் கொடுப்படும், ஈடாக விவசாயிகள் மீனவர்களுக்கு அறுவடை நேரத்தில் நெல் கொடுப்பதும் இருந்து வந்துள்ளது. இவை அனைத்தும் இப்போது சிதைந்தன.

தவிர மீன்பிடித் தொழிலும் நசிந்தது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் மீனவ இளைஞர்களில் 70 சதம் மீன்பிடித் தொழிலில் இருந்தனர் என்றால் இப்போது 20 முதல் 30 சதம் பேரே மீன்பிடித் தொழிலில் உள்ளனர்.. மீன் வளக் குறைவு ஏற்பட்டுள்ளது ஒரு காரணம். இடம்பெயர்க்கப்பட்டு வாழும் இடையூர் காலனியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் (‘The Impact of the Development Induced Displacemrnt on the Income of the Poor’ – A B.A (Hons) dissertation submitted by Pradeep, Christ University, Bangalore, March 2012.) இங்கு வாழும் தலித் மக்களின் வருமானம் குறைந்துள்ளதும், அதன் விளைவாகச் சத்துணவுப் பயன்பாடு, வாழ்நிலை முதலியன பாதிக்கப்பட்டுள்ளதும் தெரிய வருகிறது.

அதே நேரத்தில் கல்பாக்கத்தில் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் கட்டப்பட்ட டவுன்ஷிப் எல்லா வசதிகளுடன் அமைந்தது. அணுசக்தித் துறை நடத்துகிற தரமான பள்ளிகள், மத்திய அரசின் கேந்த்ரிய வித்யாலயாக்கள் ஆகியவற்றில் அவர்களின் பிள்ளைகளுக்குத் உயர்தரக் கல்வி கிடைக்கிறது. நாள் முழுவதும் தடையற்ற மின்சாரம் அளிக்கப்படுகிறது. உலைக்கு அருகில் சென்று பணி செய்ய நேர்கிற நிரந்தர ஊழியர்களுக்கு கதிர்வீச்சுத் தாக்கம் குறித்த சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் வெட்டினால் டவுன்ஷிப்புக்கு அருகாமையில் உள்ள கிராமங்கள் எல்லாவற்றிலும் தினம் 18 மணி நேர மின்வெட்டு உள்ளது, சமீபத்திய ‘நிலாம்’ புயலின் போது நான்கு நாட்கள் வரை அப்பகுதி முழுமையாக மின்சாரம் இல்லாமல் இருந்துள்ளது.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை ஒட்டி சுற்று வட்டார கிராமங்களின் அகக்கட்டுமானங்கள் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றிற்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதைக் கண்டபோது கல்பாக்கத்தைச் சுற்றி வாழ்கிற மக்கள் மத்தியில் தங்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும், டவுன்ஷிப்பிற்கு அளிக்கப்படுவது போலத் தங்களுக்கும் தடையற்ற மின்சாரம் அளிக்கப்பட வேண்டும். தங்கள் பிள்ளைகளுக்குத் தரமான கல்வியும் வேலை வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் இயல்பாக எழுந்தன.

கல்பாக்கம் ஆலைக்குள் தற்போது ஒப்பந்த ஊழியர்கள் அதிக அளவில் பணியமர்த்தப் படுகின்றனர். இந்த ஒப்பந்த ஊழியர்களில் 50 சதத்திற்கும் மேற்பட்டோர் வட மாநிலங்களைச் சேர்ந்தோர். இவ்வாறு புலம் பெயர் தொழிலாளிகளைப் பெரிய அளவில் பயன்படுத்துவதன்மூலம் நிர்வாகங்கள் பல பயன்களைப் பெறுகின்றன. குறைந்த ஊதியம், தொழிற்சங்கம் அமைத்தல் முதலான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுதல், தொழிலகங்களில் பாதுகாப்பு, மருத்துவம் முதலிய பொறுப்புகளிலிருந்து நழுவுதல் முதலியன இதன் மூலம் நிர்வாகத்திற்குச் சாத்தியமாகின்றன. வெளி மாநிலங்களைச் சேந்தவர்களுக்கு உள்ளூர் அரசியல் கட்சிகளின் தொடர்பு இல்லாததால் அவர்களும் இவர்களின் நியாயங்களைப் பேசுவதில்லை. கல்பாக்கத்தைப் பொருத்த மட்டில் அதிக ஆபத்தான பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளிகளே ஈடுபடுத்தப்படுகின்றனர்,

ஒப்பந்தப்பணியாளர்களின் நிலை இவ்வாறு இருந்தபோதும் பெரிய அளவில் இவ்வாறு வெளி மாநிலத்தவரின் இருப்பது, தங்களின் வேலைவாய்ப்பைப் பாதிப்பதாகவும் உள்ளூர் மக்கள் கருதுகின்றனர்.

2. ஃபுகுஷிமா விபத்திற்குப்பின் அணு உலை விபத்து மற்றும் கதிர்வீச்சுப் பாதிப்பு ஆகியன குறித்து உலகெங்கும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொத்தாக இப்படி மேலும் பல அணு உலைகளைக் கல்பாக்கத்தில் கட்ட இருப்பது குறித்த அறிவிப்பு சுற்றுப்புற மக்கள் மத்தியில் நியாயமான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்பாக்க ஆலைகளில் ஏற்கனவே பல சிறிய அளவு விபத்துக்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 1987ல் எரிபொருளை நிரப்பும்போது உலையின் உள் மையத்தில் பாதிப்பு ஏற்பட்டு வேக ஈனுலை ஒன்று இரண்டாண்டுகள் மூடப்பட்டது.

1991ல் ஏற்பட்டக் கதிர்வீச்சுக் கசிவொன்றில் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். 2202ல் 100 கி.கி எடையுள்ள கதிர்வீச்சு சோடியம் கசிந்தது. 2003ல் அணு உலைக் கழிவிலிருந்து வந்த கசிவால் KARPல் பணி செய்த ஆறு ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். முதலில் இதை மறுத்த நிர்வாகம் பின்னர் ஒத்துக்கொண்டது. BARC இயக்குனர் பி.பட்டாசார்ஜி இந்த விபத்து பற்றிக் கூறுகையில் “இந்தியாவில் ஏற்பட்ட மிக மோசமான கதிர்வீச்சு ஆபத்து எனக் கூறியது குறிப்பிடத் தக்கது (Outlook, July 28, 2003).

அதோடு இன்று கல்பாக்கத்தில் செயல்படுகிற எரிபொருள் மறு தயாரிப்பு உலை (KARP1) தவிர மேலும் ஒன்று (KARP2) கட்டப்பட உள்ளது. அதேபோல ‘கழிவுகளைச் செயலறச் செய்யும் உலை’ (Waste Immobilization Plant) ஒன்றும் இங்கு உள்ளது. இதோடு புளுடோனியத்திற்காக இன்னொரு செயலறச் செய்யும் உலையும் அமைக்கப்படுகிறது.

இந்தியாவில் இத்தகைய வசதிகள் தாராபூர், மும்பை மற்றும் கல்பாக்கம் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே பிற இடங்களிலிருந்து அணுக் கழிவுகளை இங்கே கொணர்வதற்கான வாய்ப்புகள் குறித்த ஊர் மக்களின் அச்சம் முற்றிலும் நியாயமானது. கூடங்குளம் சென்றிருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் கூடங்குளக் கழிவுகள் கல்பாக்கத்திற்குக் கொண்டு செல்லப்படும் எனக் கூறியதும் நினைவு கூரத்தக்கது.

3. தவிரவும்  அக்டோபர் 30, 2011ல் சமர்ப்பிக்கப்பட்ட மஞ்சுளா தத்தா அறிக்கை (Cmpprehensive Health Survey of Villagees around Kalpakkam – provisional Report) கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள மக்கள் மத்தியில் ஒப்பீட்டளவில் கதிர்வீச்சு நோய்த் தாக்கம் கூடுதலாக உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

கல்பாக்கம் அணு உலைகளைச் சுற்றி 8 கி.மீ தொலைவுக்குள் உள்ள 22 கிராமங்களில் புற்று நோய்த் தாக்கம் 7 மடங்கு அதிகமாகவும், மூளை வளர்ச்சிக் குறைவு 11 மடங்கு அதிகமாகவும், தைராய்ட் நோய் 5 மடங்கு அதிகமாகவும், குழந்தையின்மை, மையோபியா, நீரிழிவு முதலான நோய்கள் குறிப்பிடத்தக்க அளவு அதிகமாகவும் (statistically significant) உள்ளதை நிறுவியுள்ளது.

பொதுவில் நோய்த்   தாக்கம் இரண்டு மூன்று மடங்கு அதிகமாக உள்ளது எனக் கூறிய இவ்வறிக்கை கல்பாக்கத்தைச் சுற்றி இன்று நிலவும் சூழல், 1994ல் ராஜஸ்தான் அணு உலைகளைச் (RAPS) சுற்றி சுரேந்திர கடேகர், சங்கமித்ர கடேகர் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வுகளில் (International Perspective on rural Health) சுட்டிக் காட்டப்பட்ட சூழலை ஒட்டி உள்ளதைச் சுட்டிக்காட்டியது. சுட்டிக்காட்டப்பட்ட இந்த அறிக்கை பெரிய அளவில் ‘ராப்ஸை’ ஒட்டிப் புற்று நோய் முதலானவை உள்ளதை நிறுவியது குறிப்பிடத்தக்கது..

மேலும் டிசம்பர் 3, 20113ல் மருத்துவர் புகழேந்தி, பி.டி.ஐ யின் முதன்மை அறிவியல் செய்தியாளரான டாக்டர் கே.எஸ். ஜெயராமன் ஆகியோர் வெளியிட்ட ஆய்வறிக்கையில் ஒன்றரை ஆண்டுகளில் கல்பாக்கம் டவுன்ஷிப்பில் எலும்பு மக்ஞைப் புற்று நோயால் மூவர் இறந்துள்ளது நிறுவப்பட்டது. இவர்களில் இருவர் கல்பாக்க அணு உலை ஊழியர்கள்.  இது அடையார் உட்பட இந்தியாவிலுள்ள ஏழு புற்று நோய் ஆய்வகங்களிலும் குறிப்பிடப்படும் அளவைக் காட்டிலும் அதிகம் (statistically significant). இந்த முடிவை நிர்வாகத்தால் மறுக்க இயலவில்லை, ஊழியர்கள் உடலில் ஏற்படும் கதிர்வீச்சுத் தாக்கம் அணு ஆற்றல் ஒழுங்காற்று வாரியம் (AERB) விதித்துள்ள எல்லையைத் தாண்டவில்லை என்று மட்டுமே நிர்வாகத்தால் பதிலளிக்க முடிந்தது.

அமெரிக்காவில் பில்க்ளின்டனின் ஆட்சிக் காலத்தில் இவ்வாறு அணு உலையச் சுற்றியுள்ள மக்களுக்குப் புற்று நோய்த் தாக்கம் வந்தால் உரிய இழப்பீடு வழங்குவதற்காகச் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறையிலுள்ளது குறிப்பிடத்தக்கது. அணு உலையைச் சுற்றி வாழும் மக்கள் மத்தியில் எத்தகைய கதிர்வீச்சு சார்ந்த நோய்களெல்லாம் வரும் என்பதும் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஆனால் அத்தகைய சட்டங்கள் ஏதும் இங்கில்லை. குறைந்த பட்சம் கதிர்வீச்சுத் தாக்கத்தால் வரும்நோய்களுக்கான ஒரு மருத்துவமனையும் கூட இங்குக் கிடையாது. இங்கு இப்படியான கதிர்வீச்சு ஆபத்துக்கள், மரணங்கள் உள்ளதைச் சுட்டிக்காட்டி இப்பகுதியில் ஒரு ஸ்பெஷாலிடி மருத்துவமனை ஒன்றைக் கட்டுவது தொடர்பாகக் காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் விசுவநாதன் சென்ற மார்ச் 16 அன்று பாராளுமன்றத்தில் பேசியது குறிப்பிடத்தக்கது. இது குறித்து நாங்கள் பாவினி சி.எம்.டி ப்ரபோத் குமாரிடம் கேட்டபோது விசுவநாதனின் கூற்றை அவர் நிராகரித்துப் பேசினார்.

அணு உலை நிர்வாகத் தரப்பின் கருத்துக்கள்

பாவினி சி.எம்.டி திரு ப்ரொபோத் குமாரும் அவரது துறை சார்ந்த மூத்த விஞ்ஞானிகளும் எங்களுக்காக நேரம் ஒதுக்கிப் பொறுமையாகப் பேசியபோதும் அடிப்படையான கேள்விகள் எதற்கும் அவர்களால் திருப்தியான பதில் அளிக்க இயலவில்லை. எழுத்து மூலமாக எதையும் தருவதற்கும் அவர்கள் தயாராக இல்லை. தாங்கள் இப்படியாக வருவோருக்கு வழக்கமாகப் போட்டுக் காட்டும் விளக்கப் படங்களைப் பார்த்துவிட்டுச் செல்லுமாறு அறிவுறுத்தியதோடு நிறுத்திக் கொண்டனர்.

எ.கா:

அ) ஃபுகுஷிமாவுக்குப் பிறகு கல்பாக்க அணு உலைகளின் விபத்துகளைத் தாங்கும் நிலை குறித்து ஆய்வு (stress test) மேர்கொள்ளப்பட்டதை நிர்வாகம் ஒத்துக் கொண்டது. அந்த ஆய்வறிக்கைப் பிரதியை ஏன் வெளியிடவில்லை என்கிற கேள்விக்கு அவர்களிடம் பதிலில்லை. அதன் பிரதியைக் கேட்டபோது முதலில் தருவதாகச் சொன்னவர்கள் இறுதியில் அணு சக்தி ஒழுங்காற்று வாரியத்திடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள் எனக் கைவிரித்தனர்.

ஆ) கல்பாக்கம் அணு உலை நிர்வாகத்தின் வேண்டுகோளின் அடிப்படையில்தான்,  ‘ஆஸ்பைர்’ எனும் தொண்டு நிறுவனத்தின் மூலம் மஞ்சுளா தத்தா அறிக்கை தயாரிக்கப்பட்டது. இவ்வறிக்கை கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள 22 கிராமங்களில் கதிர்வீச்சு நோய்கள் அதிகமாக உள்ளதை நிறுவியதைப் பார்த்தோம். இது குறித்த எங்கலின் கேள்விக்கு நிர்வாகத்திடம் பதிலில்லை. அவ்வறிக்கையை நிர்வாகம் நிராகரித்துவிட்டதா என்கிற கேள்விக்கும் பதிலில்லை. அவர்கள் சொன்னதெல்லாம் வேறு சில அறிக்கைகள் அப்படிச் சொல்லவில்லை என்பதும் கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள கதிர்வீச்சு அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டவில்லை என்பதுந்தான்.

இ) வெளியிலுள்ள அணு உலைகளிலிருந்து அணுக்கழிவுகள் இங்கு கொண்டு வரப்படுகிறதா எனக் கேட்டதற்கு இதுவரை அப்படிக் கொண்டுவந்து புதைக்கப்படவில்லை என்றுதான் அவர்களால் பதிலளிக்க முடிந்தது, எதிர்காலத்தில் எத்தகைய முடிவுகள் எடுக்கப்படும் எனச் சொல்ல இயலாது என்றனர். புதைப்பதற்கு இங்கு ஏற்பாடு இல்லை என்றபோதிலும், இங்கு வெளியிலிருந்து வரும் கழிவுகள் மறு சுழற்சி செய்யப்படும் என்பதை ஏற்றுக்கொண்டார் ப்ரொபோத் குமார்.  மறு சுழற்சியில் முழுமையாகக் கழிவுகள் மீள் தயாரிப்பு செய்யப்படுவதால் புதைப்பது என்கிற பேச்சுக்கே இடமில்லை என்றனர் மூத்த விஞ்ஞானிகள்.

ஆனால் மறு சுழற்சியிலும் சிறிய அளவு அதிக ஆபத்துமிக்க கழிவுகள் தங்கும் என்பதே உண்மை. இந்தக் கழிவுகளை எங்கே புதைப்பது என்கிற கொள்கை முடிவை இந்தியா இதுவரை எடுக்கவில்லை என இறுதியாகப் பதிலுரைத்தனர். மூன்று இடங்களில் மட்டுமே இந்த வசதிகள் இருப்பதால் கூடங்குளம் உள்ளிட்ட ஆலைகளின் கழிவுகள் இங்கு கொண்டுவருவதற்கு எல்லாவிதமான சாத்தியங்களும் உண்டு. அப்படிக் கிடையாது என உறுதியான பதிலைச் சொல்வதற்கு நிர்வாகம் தயாராக இல்லை.

ஈ)அருகில் வாழும் மக்கள் மத்தியில் கதிர் வீச்சுத் தாக்கம் குறித்த சோதனைகள் ஏன் செய்யப்படுவதில்லை எனக் கேட்ட போது, பதிலாகத் தாங்கள் இப்பகுதியின் காற்று, நீர், உணவுப் பொருட்கள் ஆகியவற்றில் கதிர்வீச்சுத் தாக்கம் எந்த அளவில் உள்ளது எனத் தொடர்ந்து கண்காணிப்பதாகவும் அவை, அணு ஒழுங்காற்று வாரியம் (AERB) விதித்துள்ள எல்லைகளை மீறவில்லை என்றும் மட்டுமே பதில் கூறினர். ஆனால் பன்னாட்டு அணு ஆற்றல் முகமை (IAEA) சுற்றுப்புறம் மட்டுமின்றி மக்களுடைய பாதுகாப்புக்கும் அணு மின் நிலையமே பொறுப்பு எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எ)கொத்தாக ஒரே இடத்தில் அணு உலைளை அமைத்துக் கொண்டு போவது குறித்துக் கேட்டபோது, ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டால் ஓரிடத்திலுள்ள பாதுகாப்பு வசதிகள் மற்றவற்றிற்கும் பயன்படுத்த அதுவே நல்லது எனப் பதிலளித்தனர். அதாவது கொத்தாக ஒரே இடத்தில் ஆலைகள் இருந்தால் எல்லாத் தற்காப்பு வசதிகளையும் ஒரே இடத்தில் குவிப்பது சாத்தியமாக இருக்கும் என்பது அவர்களின் தர்க்கம். ஒரு உலையில் ஏற்படும் விபத்து உடனடியாக மற்ற உலைகளுக்குப் பரவும் ஆபத்து குறித்த மிக நியாயமான அச்சத்தை அவர்கள் அலட்சியப்படுத்தினர்.

ஏ) வேலை வாய்ப்பு, கதிர்வீச்சு நோய்களுக்கான மருத்துவ மனை, தடையற்ற மின்சாரம் முதலிய கோரிக்கைகளைத் தகுதி, திறமை, தற்போதுள்ள விதிமுறை ஆகியவற்றைக் காரணம் காட்டி மறுத்தனர். இது தொடர்பாகச் சில அதிகாரங்கள் நிர்வாகத்திற்கு இல்லை என்பதை ஏற்றுக் கொண்ட போதிலும் மக்களின் உணர்வுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு இது தொடர்பாக மேலே உள்ளவர்களுக்குப் பரிந்துரைக்கும் மனநிலை நிர்வாகத்திற்கு இல்லை.

மக்களின் போராட்ட வடிவத்தை “தேச விரோதம்” (anti national) என்றார் ப்ரொபோத் குமார். ஒப்பந்த ஊழியர்கள், பிற மாநில ஊழியர்கள் முதலான விவரங்களையும் கூட அவர்கள் தரத் தயங்கினர். ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஆலைக்குள் பஸ் வசதி செய்து தருதல், செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையை கதிர்வீச்சு நோய்களுக்கான சிறப்பு மருத்துவ மனையாக உயர்த்துதல் போன்ற எங்களின் ஆலோசனைகளை மடுமே அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டு ஆவன செய்வதாகக் கூறினர்.

ஐ)“சுனாமியில் கூடத் தப்பிப் பிழத்த அணு உலை எங்களுடையது, நாங்கள் எல்லாம் அணு உலைக்கருகிலேயே வாழவில்லையா?” என்பதை  அதிகாரிகள் அடிக்கடி கூறினர். 1980 களில் கல்பாக்கம் அணு உலை கட்டப்பட்டபோது சுனாமி ஆபத்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அப்படியும் சுனாமியால் ஆபத்து ஏற்படாதது தற்செயல்தானே ஒழிய உங்களின் பாதுகாப்பு நடவடிக்கையால் அல்ல.

மீண்டும் ஒரு சுனாமி அல்லது கல்பாக்கத்தில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான கடல் எரிமலைகளின் வெடிப்பு ஆகியனவற்றால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டால் இப்படிக் கல்பாக்க அணு உலை பாதிக்கப்படாமல் இருக்க வாய்ப்பு இல்லை என்பதைச் சுட்டிக் காட்டிய போது அவர்களால் பதில் ஏதும் சொல்ல இயலவில்லை. அதிகாரிகளிடம் பேசிக்கொண்டிருந்தபோது எங்களுக்கு மகாகவி பாரதியின் “படிச்சவன் சூதும் வாதும் பண்ணினால் போவான் போவான் அய்யோன்னு போவான்” என்கிற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வந்தன.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

Pin It