கதிர்பாரதி, ராமலக்ஷ்மி, நிலாரசிகன் ஆகிய மூவரும் நவீன காலத்துக்குரிய கவிஞர்கள். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எழுதத் தொடங்கி தம் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள். கதிர்பாரதியும் ராமலக்ஷ்மியும் இப்போதுதான் தம் முதல் தொகுதியை வெளியிட்டுள்ளார்கள். நிலாரசிகன் தன் மூன்றாவது தொகுதியை வெளியிட்டுள்ளார். இவர்களுடைய கவிதைகள் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் ஈர்ப்பு நிறைந்தவையாக உள்ளன.

kathirbharathiசொற்கள் எளிமையும் கூர்மையும் கொண்டிருக்கின்றன. கண்ணுக்குத் தெரிகிற காட்சிகளுக்குள் உள்ள இன்னொரு உலகத்தை ஆர்வத்துடன் கட்டியெழுப்பியுள்ளன. வாசகனுக்குப் புத்துணர்ச்சியூட்டும் கற்பனைகளை நுட்பத்துடன் முன்வைக்கின்றன. மூன்று கவிஞர்களையும் ஒரே தளத்தில் வைத்து மதிப்பிடுவதற்கான ஒரே காரணம், இந்தக் கற்பனையின் ஒற்றுமைதான். அதே சமயத்தில் மூன்று கவிஞர்களும் தனித்தன்மை மிகுந்த வெளிப் பாட்டு முறையையும் சுதந்திரத்தையும் கொண்டிருக் கிறார்கள் என்பதையும் குறிப்பிடவேண்டும்.

மூன்று கவிஞர்களின் பல முக்கியமான கவிதைகள் கற்பனைநுட்பங்களால் நிறைந்தவை. அந்த நுட்பம் வாழ்வின் எண்ணற்ற கோலங்களையும் விசித்திரமான போக்குகளையும் விட்டு விலகிச் செல்லவில்லை என்பது ஆறுதலாக இருக்கிறது. வாழ்வின் வேதனைகளையும் துயரங்களையும் கனவுகளையும் ஆனந்தங்களையும் ஏதோ ஒரு புத்தம்புதிய கோணத்தில் வாசகர்களிடம் பகிர்ந்துகொள்வதாகவே இவர்கள் கவிதைகள் உள்ளன.

கலைவடிவத்தின் மகத்தான உருவம் கவிதை என்னும் நம்பிக்கைக்கு வலிமைசேர்க்கும் விதத்தில் இவர்களுடைய கவிதைகள் அமைந்திருக்கின்றன.

காலம்தோறும் கவிதையின் மொழிதல்முறை மாறிக்கொண்டே வருகிறது. அதே தருணத்தில் எளிமை, இறுக்கம், கச்சிதம் எனக் கவிதையின் புறவடிவங்களிலும் மாற்றம் நிகழ்ந்தபடி இருக்கிறது.

ஒரு மொழிதல்முறை பல கவிஞர்களால் மெல்லமெல்ல வளர்த்தெடுக்கப் பட்டு, அது அந்தக் காலத்துக்குரிய முறையாக உச்சம் பெற்று, கால ஓட்டத்தில் அது தேய்வழக்காக மாறிவிடும் தருணத்தில் மீண்டும் ஒரு புதிய மொழிதல்முறையோடு ஒரு புதிய தலைமுறை தோன்றுகிறது. தமிழ்க்கவிதையின் மொழிதல்முறையில் மாற்றங்கள் உருவான சமயங்களில் மிகச்சிறந்த ஆளுமைகளாக மலர்ந்தவர்கள் பாரதியார், ந.பிச்சமூர்த்தி, சி.மணி, பிருமிள், நகுலன், ஞானக் கூத்தன், தேவதேவன், தேவதச்சன், கல்யாண்ஜி, மனுஷ்யபுத்திரன் போன்ற கவிஞர்கள்.

சமயவேல், யூமா வாசுகி ஆகியோர் தொடர்ந்து எழுதாவிட்டாலும் முக்கிய மான ஒரு கட்டத்தில் மொழிதல்முறையில் ஓர் இன்றியமையாத திருப்பத்தை ஏற்படுத்திய கவிஞர்கள். முகுந்த் நாகராஜ், அய்யப்ப மாதவன் என இன்று எழுதிக்கொண்டிருக்கும் பலருடைய மொழிதல் முறைகளுக்கான முன்னோடி அவர்கள். அவ்வரிசையில் எழுதிக்கொண்டிருக்கும் இளம் ஆளுமையாக கதிர் பாரதியை அடையாளப்படுத்தலாம்.

‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’ என்னும் தொகுப்பு அதற்கான சாட்சியாக உள்ளது.

மொழிதல்முறையில் புதுமை உருவாகலாமே தவிர, அதுமட்டுமே ஒருபோதும் கவிதையாக மலர்ந்து விடாது. கவிதைக்கே உரிய அவதானிப்பு மிக முக்கியம். அவதானிப்பும் புதுமொழிதல் முறையும் இணையும் போது மட்டுமே வசீகரமான ஆக்கங்கள் உருவாகும். கதிர்பாரதியின் பல படைப்புகளில் இந்த இணைப்பு பொருத்தமாக இடம்பெற்றிருக்கிறது. இதையே கதிர்பாரதியின் வலிமை என்று சொல்லலாம்.

‘சோழக்கடற்கரைப் பிச்சி’ என்றொரு கவிதை. கடலோரமாக மார்பில் ஓயாது அறைந்தபடியும் கண்ணீர் சிந்தியபடியும் அலைகிற ஒரு பிச்சியாகச் சுற்றிவரும் கடல்தேவதையின் சித்திரம் இக்கவிதையில் இடம் பெற்றிருக்கிறது. கண்களிலிருந்து துளித்துளிக் கடல்கள் சிந்த, அவள் விரிந்து கொந்தளித்தபடி உள்ள கடலின் முன்னால் நின்றிருக்கிறாள்.

அவளைக் கண்டு பயந்து உள்வாங்குகிறது அந்த நீலக்கடல். கடலில் காணப்படும் ஒரு கப்பலின் காட்சி அவளை மேலும்மேலும் சீற்றமுற வைக்கிறது. மருண்ட கடல்மீது வாய்குதப்பி வசவுகளை உமிழ்கிறாள் அவள். அலைந்து அலைந்து களைப்புற்றவளாக, கடைசியில் மணலை முந்தானையில் பொதிந்து மார்புக்கு நடுவே வைத்துப் பிடித்தபடி கரையிலேயே கண்ணயர்ந்து விடுகிறாள். தொடுவானுக்கும் அவளுக்குமிடையே தத்தளித்த கடல், அவள் உறங்கியபிறகு, அவள் கால் களைத் தொட்டுத் தழுவித் திரும்புகிறது. அச்சமுறும் கடல் ஒருபுறம், கடலுக்கு அச்சமூட்டும் பிச்சி ஒரு புறம். பல மௌனங்களோடும் பல இடைவெளி களோடும் கவிதை அழகான ஓர் ஓவிய அனுபவமாக மாறுகிறது.

‘கூச்சத்தைப் பூசிக்கொள்ளும் பிள்ளையார்’ என்னும் கவிதை குளக்கரை ஓரமாக வழக்கமாக உள்ள ஒரு பிள்ளையாரைப் பற்றிய சித்திரிப்புகளை முன் வைக்கிறது. முதலில் அவர் தோற்றம் பற்றிய குறிப்புகள். பிறகு அவருக்கு நிகழும் வழிபாட்டின் பெருமைபற்றிய குறிப்புகள். அங்கு வந்து செல்பவர்கள் பற்றிய குறிப்புகள். அப்புறம், அவருடைய தனிமை மற்றும் துயரம் பற்றிய குறிப்புகள். இறுதியாக, ஒரு தெருநாய், அந்த இறையுருவத்தை ஒரு சாதாரண கல்லாக நினைத்து ஓரமாக ஒண்டி சிறுநீர் கழித்துவிட்டுச் செல்லும் குறிப்பு.

பிள்ளையாரின் சித்திரத்தை முன் வைப்பதாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் கவிதை, இறுதிவரிக்குப் பிறகு, நம் ஒவ்வொருவரின் சித்திரத் தையும் காட்டும் ஆடியாக மாற்றமடைந்துவிடுகிறது. பெருமையும் சிறுமையும் பிள்ளையாருக்கு மட்டுமன்றி, நம் ஒவ்வொருவருக்கும் உரியதுதான் என்பது புரிய ஒரு கணம் போதும். தினந்தோறும் நம் மீதும், நம் கனவுகள் மீதும், நம் திறமைகள்மீதும், நம் பெருமைகள் மீதும் சிறுநீர் கழித்துவிட்டுச் செல்லும் ஏராளமான சிறுமதியாளர்களைச் சந்தித்தபடியே செல்லும் நமக்கு இந்தக் கவிதை மிகவும் நெருக்கமாக இருக்கிறது.

சிறுமையையும் வலியையும் ஏமாற்றத்தையும் எதிர்கொள்ள உதவும் ஆயுதங்கள் பகல்கனவும் கற்பனையும் மட்டுமே. அத்தகு பகல்கனவின் காட்சி ‘ஆனந்தியின் பொருட்டுத் தாழப்பறக்கும் தட்டான்கள்’ கவிதையில் உள்ளது. அது ஓர் எளிய நிலம். அந்த நிலத்துக்கு அவன் சூட்டிய பெயர் ஆனந்தி. ஆனந்தி என்று பெயர்சூட்டிய கணத்திலிருந்து, அந்த நிலத்தில் ஆனந்தம் கரைபுரண்டோடுகிறது.

இந்த மண்ணில் நிகழ்கிற எல்லாமே அந்த ஆனந்திக்காகவே நிகழ்கிறது. அந்த நிலத்தில் வீசுகிற காற்று ஆனந்திக்காக. அந்த நிலத்தில் படர்கிற வெயில் ஆனந்திக்காக. அந்த நிலத்தில் விளையும் விளைச்சல் ஆனந்திக்காக. மழை கொண்டுவரும் தட்டான்கள் அந்த நிலத்தில் தாழ்வாகப் பறப்பதுகூட ஆனந்திக்காக. கவிதை எவ்வளவு உயர்வான வரம்! ஒரு கனவின் வழியாகக் காற்றென அனைத்தையும் கடந்து மிதந்து வந்துவிட முடிகிறது.

‘மகன்களும் மகன்களின் நிமித்தமும்’ என்னும் நீள் கவிதையின் பகுதிகள் முன்வைத்திருக்கும் அவதானிப்புகள் கவித்துவத்தின் உச்சமாக உள்ளன. ஒரு பகுதியில் ஐந்து விரல்களை ஐந்து ஊர்களின் அடையாளமாக மாற்றிச் சொல்லும் குழந்தைமையின் மொழி மனத்துக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. ஐந்து விரல்கள் வழியாக நகரின் சித்திரத்தையே குழந்தையின் உள்ளங்கை தாங்கு கிறது. இப்படி எண்ணத் தொடங்கிய கணத்திலேயே வேறொரு காட்சியை நம் அகம் விரித்துக்கொள்கிறது.

ஒற்றை விரலால் மலையைத் தூக்கி பிரளயத்திலிருந்து இந்த உலகத்தைக் காத்தருளும் தெய்வக்குழந்தையின் புராணப்படிமத்தைச் சட்டென ஒரு பிஞ்சுவிரல் தீண்டி இந்தத் தரைக்கு இழுத்து வந்துவிடுகிறது. கவிதையின் மற்றுமொரு பகுதியில் சிறுவன் உருவாக்கும் கொலு பொம்மைகளின் காட்சி இடம்பெறுகிறது. மானை முதுகில் சுமக்கும் புலி. பசுவின் நிழலில் இளைப்பாறும் சிங்கம், முகத்தோடு முகம் உரசி விளையாடும் கரடியும் குரங்கும், துப்பாக்கியை கையில் ஏந்தியபடி நிற்கும் காந்திஜி. புல்லாங்குழல் வாசிக்கும் வேட்டைக்காரன்.

ஓநாய்க்குட்டியை நாக்கால் தடவிக்கொடுக்கும் காட்டெருமை. இந்த உலகத்தின் வாழ்க்கைச்சூத்திரங்கள் எதையும் அறியாத குழந்தைமையின் கபடமற்ற விளை யாட்டை வாசிக்கும்போது புன்னகைக்கத் தோன்றும் கணத்திலேயே, இக்காட்சியைக் கட்டமைத்திருக்கும் மனத்தில் படிந்துள்ள ஆழ்ந்த ஏக்கத்தையும் புரிந்து கொள்ளமுடிகிறது.

இப்படித்தானே இந்த உலகம் இருந்திருக்கவேண்டும், ஏன் இப்படி இல்லாமல் போனது என்றொரு கேள்வி எழுவதைத் தடுக்க முடியவில்லை. அந்தக் கேள்விக்கான பதில்களை ஆயிரமாயிரம் ஆண்டுகளைப் புரட்டி நாம் தேடிக் கண்டடைய வேண்டும்.

தண்ணீரைத் துளைத்துத் தொங்கும் தூண்டிலில்

துடிக்கும் புழுவை

முள்ளில் மாட்டிக்கொள்ளாமல்

கவ்வி இழுப்பதுபோன்ற கனவிலிருந்த சினைமீன்

கொத்தித் தூக்கிய கொக்கின் தொண்டையில்

இடவலமென அசைகிறது முள்ளாக மாறி-அடிமேல் அடிவைத்து 

வெள்ளையாகச் சலனிக்கிறது

உறைந்திருந்த காலம்

என்ற கவிதையில் இருக்கும் மீனின் சித்திரம் நம் மனத்தை அசைத்துவிடுகிறது. எச்சரிக்கையாக இருப் பதற்கும் மரணத்தின் எதார்த்தத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் மரணம் நம்மைக் கடந்துபோய் விடுகிறது. மரணம் கண்ணற்றது. இரக்கமும் இல்லாதது. அதன் முன் சாதாரண மீனும் ஒன்றுதான். சினைமீனும் ஒன்றுதான்.

அமைதியான தண்ணீர்ப்பரப்புக்குக் கீழே ஆழ்ந்த துயரளிக்கும் மரணம். அமைதிக்கும் சாட்சியாக, மரணத்துக்கும் சாட்சியாக நகர்ந்தபடியே இருக்கிறது தண்ணீர். மீனுக்குமட்டும் நேர்வதல்ல இந்த நிலைமை, மானுடன் உட்பட இந்த உலகின் எல்லா உயிர்களுக்கும் பொதுவானதொரு கோலம் அது.

ரயில்பயணக்காட்சியன்றை கதிர்பாரதி கவிதை யாக்கியிருக்கும் விதம் எளிதில் மறக்கமுடியாதபடி உள்ளது.

முன்மாலைக்கும்

பின்மாலைக்கும் இடையே

மிதவேகத்தில் ஓடுகிற ரயில்

ஒரு புள்ளியாகி மறைகிறது அந்திக்குளத்தில்

பிள்ளைக்குப் பாலூட்டும் ஏக்கத்தில்

பயணிக்கிற

அவளின் முலைகளை

தாலாட்டி தாலாட்டி

பயணக்காட்சியைத் தாய்மையின் சித்திரமாக மாற்றிவிடுகிறது கதிர்பாரதியின் கவித்துவம். பாலூட்டும் ஏக்கத்தோடு குழந்தையை மனத்துக்குள் தாலாட்டியபடி பயணம் செய்யும் தாய் ஒருபுறம். ஏக்கமும் சிந்தனையும் கொண்ட அவளுடைய கனத்த மார்புகளைத் தாய்மை யுணர்வோடு தாலாட்டி நகரும் ரயில் இன்னொரு புறம்.

தொகுப்பில் இடம்பெற்றுள்ள இன்னொரு ரயில்பயணக்காட்சியை முன்வைத்துள்ள கவிதை தரும் வாசிப்பு அனுபவமும் முக்கியமானது.

கண் அவிந்த

ரயில் பிச்சைக்காரன் பாடலில்

வேர்க்கடலை உமிகளை

ஊதிவிடுகிறான்

கூடப் பயணிக்கும் பிரயாணி ஒருவன்

அவை

அந்தப் பாடலுக்கு ஏற்ப

அசைந்த சுழன்று ஆடி 

ஏந்தியிருக்கும் பிச்சைப்பாத்திரத்தில்

விழுகின்றன.

அவனது பாடல்கூட

பிரயாணியின் காதில்

அப்படித்தான் விழுகிறது.

கண்ணற்ற ஒருவனின் பாடல் ஒருபுறம். கண் பார்வையுள்ள ஒருவனால் ஊதிவிடப்படும் வேர்க் கடலைத் தோல் மறுபுறம். காற்றில் இரண்டுமே மிதந்தலைந்து பரவுகின்றன. வேர்க்கடலைத்தோலின் பயண அசைவுகள் கண்ணுக்குப் புலப்படுவதுபோல, பாட்டின் பயண அசைவுகள் புலப்படுவதில்லை. தோல் அசைந்து அசைந்து சென்று, பிச்சைக்காரனின் தட்டில் நாணயங்களாக விழுகின்றன.

பாடல் வரிகளும் அதுபோலவே அசைந்து அசைந்து சென்று, அந்தக் குறும்புக்காரனின் காதில் விழுகின்றன. பிச்சைக்காரனின் பாட்டுவரி எந்தப் பேதத்தையும் உணர்வதில்லை. நாணயம் போடுகின்றவன், நாணயம் போடாதவன், கிண்டல் செய்பவன், முறைத்துப் பார்ப்பவன், பாவம் பார்ப்பவன், அருவருத்து முகத்தைச் சுளிப்பவன், உமிகளை அவனைநோக்கி ஊதுபவன் என எல்லாருக்கும் பொதுவாகவே அவன் வரி ஒலிக்கிறது.

எல்லோரையும் ஒரே விதமாகவே சென்றடைகிறது. ஒரு பாடலின் ஓசைக்கு இருக்கிற சீரான உணர்வு, ஒரு மனிதனுக்கு ஏன் இருப்பதில்லை என்னும் கேள்வி, நெஞ்சைக் கனக்கவைக்கிறது.

வீட்டை எட்டிப் பார்த்தல், கடக்க இயலாத தெரு இரண்டும் ஒரே உண்மையை வெவ்வேறு கோணங்களில் உணர்த்தும் கவிதைகள். ‘தெரு ஒன்றைக் கடப்பதென்பது உண்மையில் வாழ்வு ஒன்றைக் கடப்பதாகும்போல’ என்று மிகச்சாதாரணமாகத் தொடங்குகிறது கவிதை. நேர்க்கோட்டில் சாலையில் மட்டுமே கண்களைப் பதித்துச் செல்பவர்களுக்கு, ஒரு பிரச்சினையுமில்லை.

அவர்கள் வில்லிலிருந்து இலக்குநோக்கிச் செல்லும் அம்புகளைப் போன்றவர்கள். பார்வையை அக்கம்பக்கம் வீசியபடியும் ஒவ்வொன்றையும் நின்றுநின்று பார்த்த படியும் செல்வதுதான் உண்மையான பயணம். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு காட்சி பார்க்கக் கிடைக்கிறது. ஒரு வாசலில் புன்னகை, இன்னொரு வாசலில் கண்ணீர்த்துளி. ஒரு வாசலில் மலர்.

மற்றொரு வாசலில் வெறுமை. எல்லாம் கலந்த கலவையாக உள்ளது. இடமிருந்து வலமாக, குறுக்கிருந்து நெடுக்காக, வடகிழக்கிலிருந்து தென்மேற்காக, மேலிருந்து கிழக்காக என எந்தக் கோணத்தில் கடந்தாலும் தெருமுழுக்க எண்ணற்ற காட்சிகள் நிறைந்திருக்கின்றன. மகிழ்ச்சி யையும் துயரத்தையும் மாறிமாறி அளிக்கும் காட்சிகள்.

விட்டத்தில் தொங்கி ஊசலாடும் உடலைக்கூட ஏதோ ஒரு கட்டத்தில் பார்க்கநேர்கிறது. அக்காட்சியின் அதிர்ச்சி, அந்தத் தெருவையே கடக்கமுடியாதபடி செய்துவிடுகிறது. தெருக்காட்சிகள் வழியாக வாழ்க்கைக் காட்சிகளை உய்த்துணரவைத்து, ‘ஒரு வீட்டில் மணவிழாக்காட்சி. இன்னொரு வீட்டில் பிணம் கிடக்கும் காட்சி’ என முன்வைத்து இந்த உலகம் இயங்கும் சூத்திரத்தை அடையாளம் காட்டிய பழைய புறநானூற்றுக் கவிதையின் புள்ளிவரைக்கும் பயணம் செய்யவைக்கிறது இக்கவிதை.

துப்பாக்கிக்குள் நிரம்புகிறது சிரிப்பு, தெய்வமாக உறங்குகிறாய், அறு, அறு ஆகா அப்படித்தான் அறு அறு போன்ற இன்னும் சில கவிதைகள் குறிப்பிடத் தக்கவை. வசீகரமான வாசிப்பனுபவத்தை வழங்கும் கதிர்பாரதியின் தொகுப்பு ஒரு வாசகனின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதத்தில் உள்ளது.

‘இலைகள் பழுக்காத உலகம்’ என்பது ராம லக்ஷ்மியின் கவிதைத்தொகுதியின் பெயர். பெரும் பாலான கவிதைகளின் மையப்பொருளாக வெளிப்படும் குழந்தைமையின் கவித்துவமே இவருடைய ஆளுமைக்குச் சாட்சியாக உள்ளன. மண்ணுலக வாழ்வை நீத்தவர்கள் வாழும் உலகத்தை இலைகள் பழுக்காத உலகம் என மதிப்பிடுகிறது ராமலக்ஷ்மியின் கவிமனம்.

Ramalakshmi இன்னொரு வகையில் கலைஞனின் அக உலகத்தையும் இலைகள் பழுக்காத உலகம் என்றே சொல்லலாம். எல்லாத் தருணங்களிலும் எண்ணங்களோடு வாழ அந்த உலகத்தில் மட்டுமே சாத்தியப்படுகிறது. குழந்தை மையின் துடிப்போடு அவற்றை அடுக்கி அடுக்கிக் கலைத்து எல்லையற்ற ஊக்கத்தையும் உவகையையும் அடைவதுகூட சாத்தியமாகிறது. தன் எண்ணங்களாலும் கற்பனைகளாலும் தான் கண்டடைந்த அனுபவங் களாலும் தன் அக உலகத்தை அடர்த்திமிக்கதாகக் கட்டமைத்துக்கொண்டிருக்கிறார் ராமலக்ஷ்மி.

அந்த உலகத்தின் ஈர மண்ணைக் குழைத்தெடுத்து அவர் வடித்துவைத்திருக்கும் சிற்பங்களை ’இலைகள் பழுக்காத உலகம்’ தொகுதி வழியாகப் பார்க்கவைத்திருக்கிறார். சிற்பங்களை வடிப்பதில் அவருக்குள்ள முனைப்பும் ஆர்வமும் பாராட்டுக்குரியவை. செய்நேர்த்தியோடு காணப்படும் பல சிற்பங்கள் அவருடைய சொல் லாற்றலுக்குச் சாட்சியாக உள்ளன.

‘அனுதாபம்’ என்றொரு கவிதை. தொலைக் காட்சியைப் பார்த்துக்கொண்டே உணவுண்ணும் ஒரு குடும்பத்தலைவனைச் சித்திரிக்கும் காட்சி இக் கவிதையில் உள்ளது. மனைவி பரிமாறுகிறாள். கணவன் உண்ணத் தொடங்குகிறான். தொலைக்காட்சியில் செய்திகள் வாசிக்கப்படுகின்றன. ஏதோ ஒரு நதியில் எதிர்பாராமல் உருவான வெள்ளப்பெருக்கில் ஒரு படகு கவிழ்ந்துவிட்டது.

ஏராளமான பேர்கள் மரணமடைந்து போய் விட்டார்கள். வெள்ளத்தில் அகப்பட்டு இறந்த வர்கள் ஆயிரம் பேர்களுக்கும் மேல் இருக்கலாம். வேறொரு ஊரில் பூகம்பம். ஒரு நகரமே அழிந்து விட்டது. இன்னொரு நகரத்தில் ரயில் விபத்து. இருபது பேர்களுக்கும் மேல் உயிரிழந்துபோய்விட்டார்கள். இப்படி, அடுக்கடுக்காக மரணச்செய்திகளாகவே வாசிக்கப்படுகிறது.

சோறுண்ணும் கணவன் அவற்றை ஆயாசத்தோடு கேட்டபடி உண்ணுகிறான். அந்த மரணங்கள் அனைத்தும் ஒரு தகவலாகவே அவனைக் கடந்துபோகின்றன. ஏதோ ஒரு கணத்தில் தன் சின்ன மகளின் நினைவு வருகிறது. அவளைப்பற்றித் தன் மனைவியிடம் விசாரிக்கிறான். தொட்டியில் வளர்ந்த மீன் இறந்துபோய் மிதந்ததைக் கண்ட துயரத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அழுது அழுது சோர்ந்து தூங்கிவிட்டதாகச் சொல்கிறாள் அவள். ஒரு கண நேர உறுத்தலுக்குப் பிறகு உணவைத் தொடர்ந்து உண்ணத் தொடங்குகிறான் கணவன்.

கவிதையின் வரிகள் இத்துடன் முடிந்தாலும் குழந்தைமையைப் பறிகொடுத்து வாழும் அவலத்தின்மீது ஒரு கணம் வெளிச்சத்தைப் பாய்ச்சிவிட்டு முடிகிறது. மரணம் என்பது கொடுந்துயர். நம்மைச் சார்ந்த உயிர்களானாலும் சரி, எவ்விதமான தொடர்புமில்லாத உயிர்களானாலும் சரி, மரணத்தின் துயரம் கொடுமை யானது. அது நம் அமைதியைக் குலைக்கிறது.

மரணம் உருவாக்கும் மனபாரம் ஒருகணம் நம் பாதையை நம்மை மீண்டும் திருப்பிப் பார்க்கவைக்கத் தூண்டுகிறது. முதன் முதலாக மரணத்தை நேருறப் பார்க்கும்போது ஒருவர் உணரும் அதிர்ச்சியும் துயரமும் எல்லையற்றவை. அடுத்தடுத்த மரணக்காட்சிகள் மரணத்தை வாழ்வின் இன்னொரு பக்கமாகக் கருதக்கூடிய பக்குவத்தை வழங்குகின்றன. அந்தப் பக்குவத்தில் பிறப்பதுதான் அனுதாபம். நம்மில் பெருகும் அனுதாப உணர்வு நாம் இன்னும் குழந்தைமையுணர்வோடு இருக்கிறோம் என்பதன் அடையாளம்.அந்த உணர்வும் அற்றுப் போனவர்களாக வறண்டிருப்பது மாபெரும் அவலம். 

‘கூழாங்கற்கள்’ கவிதை நேரிடையாக மரணக் காட்சியைச் சித்திரிக்காவிட்டாலும் மரணத்துக்குப் பிறகு எஞ்சப்போவது பற்றிய ஒரு கேள்வியை முன் வைக்கிறது. ஒரு குழந்தைவிளையாட்டு வழியாகவே கவிதை தொடங்குகிறது. குழந்தை மணல்வீட்டைக் கட்டி விளையாடுகிறது. கூட விளையாடவந்த குழந்தைகள் எங்கிருந்தோ கூழாங்கற்களைக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.

வீடுகட்டும் குழந்தை அவற்றை வாங்கி, வீட்டைச் சுற்றி அகழியாக அடுக்கிவைத்து அழகு பார்க்கிறது. குழந்தைகள் அவ்வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து விளையாடுகிறார்கள். மகிழ்ச்சி கொள் கிறார்கள். ஆடி முடித்த களைப்பில், ஆற்றங்கரை மணலில் அந்த வீட்டை அப்படியே விட்டுவிட்டு வீடு திரும்புகிறார்கள். குழந்தைமை எதையுமே சேகரிப்பதில்லை.

அதனால், அவர்களுக்குத் துயரமும் இல்லை. வளர்ந்த மனிதர்கள் தம் குழந்தைமையைத் தொலைத்து விடுவதால் சேகரிப்பதில் ஈடுபடுகிறார்கள். செல்வத்துக்காக அலைகிறார்கள். பாடுபட்டுச் சேர்த்து வைக்கும் எதுவும், தன் ஆவி கூடுவிட்டுச் சென்ற பிறகு, கூட வரப்போவதில்லை என்னும் பக்குவம் இல்லாதவர்களாக மாறிவிடுகிறார்கள்.

குழந்தைமையின் தன்னிச்சையான செயலில் கணநேரம் வெளிப்பட்டுத் தெறிக்கும் கவித்துவத்தை அனுபவமாக முன்வைக்கும் கவிதை ‘மழலையின் எதிர்ப்பாட்டு’. கடலோரக் குடிசையின் வாசலில் உட்கார்ந்தபடி தன் குழந்தையை உறங்கவைக்கிறாள் ஒரு மீனவத்தாய். அக்குழந்தையின் தந்தை ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றிருக்கிறான்.

குழந்தையை மடியில் கிடத்தியபடி விண்மீன்களையும் நிலவையும் மேகங் களையும் காட்டித் தாலாட்டுகிறாள் தாய். எதிர்பாராமல் கடல் பொங்கக்கூடும் எனக் கிடைத்த தகவலால் மனம் பதைத்தாலும் காட்டிக்கொள்ளாமல் குழந்தையை உறங்கவைக்க கதையும் பாட்டும் சொல்கிறாள் அவள்.

கண்ணே கண்ணுறங்கு என அவள் பாடும் பாட்டின் குரல்கேட்டு, கடற்கரையோரத்துக் கூழாங்கற்களும் சிப்பிகளும் உறங்கத் தொடங்குகின்றன. கடலலைகள் கூட சுருண்டு பின்வாங்குகின்றன. தாய் சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும் ‘ம்’ கொட்டுகிறது குழந்தை.

தூங்கும்வரை அக்குழந்தை சொன்ன ‘ம்’ கள் எல்லா வற்றையும் சேகரித்துக்கொண்ட மேகங்கள் ஆழ் கடலுக்குச் சென்ற அதன் தந்தையைத் தேடி தூது செல்கின்றன. கள்ளங்கபடமற்ற ஒரு குழந்தையின் ‘ம்’ என்னும் சொல்லுக்குத்தான் எவ்வளவு சக்தி! கரையையும் ஆழ்கடலையும் அச்சக்தி ஒரே கணத்தில் இணைத்துவிடுகிறது.

குழந்தைப்பருவத்தில் தம்மைவிட்டும் இந்த உலகத்தைவிட்டும் மறைந்துபோன தந்தையை, நரை படர்ந்து தந்தையைவிட வயதுகூடிய கட்டத்தில் தன் கனவில் பார்க்கிறாள் ஒருத்தி. தந்தைக்குத் தன் மகளின் அடையாளம் தெரியவில்லை. தந்தையின் அடையாளம் மகளுக்குத் தெரிந்தாலும் தந்தையிடம் தன்னை அவளால் வெளிப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அவர் ஓர் உலகில்.

அவள் இன்னொரு உலகில். அவர்கள் பார்த்துக்கொள்வதோ இன்னொரு உலகில். இயலாமையின் அவலத்துடன் கனவுக்காட்சி முடிந்து விடுகிறது. ‘இலைகள் பழுக்காத உலகம்’ இத்தொகுதியின் நல்ல கவிதைகளில் ஒன்று. வயது கூடினாலும், சிறுவயதில் எப்போதோ பார்த்த ஒருவர் தன்னை அடையாளம் கண்டுபிடித்துப் பேசிய மகிழ்ச்சியை முன்வைக்கும் ‘யார் அந்தச் சிறுவன்?’ என்னும் கவிதையும் இத்தொகுதியில் உள்ளது. கண்டுபிடிப்பவரும் கண்டுபிடிக்கப்படுபவரும் ஒரே உலகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எந்தத் தவிப்பு மில்லாத மகிழ்ச்சி இருதரப்பிலும் படர்ந்துவிடுகிறது.

‘வண்ணக்குடைகள் விற்பனைக்கு’ கவிதை முன் வைக்கும் காட்சி கூர்மையானது. வசீகரமான பல நிறங்களில் பலவிதமான தோற்றங்களில் வடிவமைக்கப் பட்ட குடைகளைக் கூவிக்கூவி விற்கிறான் ஒருவன். கைக்கு இரண்டாகச் சுழற்றியபடி அவன் நடக்கும் நடை அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கிறது. எதிர் பாராமல் வந்துவிட்ட மழை, அவனையும் அவனுடைய வியாபாரத்தையும் நிலைகுலைய வைக்கிறது.

குடை களைப் பாதுகாக்கும் வேகத்தில் அவற்றை அவசரமாக மடித்துப் பாதுகாப்பாகப் பைக்குள் திணித்தபடி ஒதுங்கி நிற்க மறைவிடம் தேடி ஓடுகிறான் அவன். ‘அழகிய வீரர்கள்’ கவிதை சுழலும் பம்பரத்தையும் சுழற்றும் சாட்டையையும் கொண்ட ஒரு காட்சியை முன்வைத்து விரிவடைகிறது. தன்மீது படர்ந்து, தன்னை வசீகரமாகச் சுழற்றும் சாட்டையின் அன்பையும் உறவையும் நினைத்துநினைத்து மகிழ்ச்சியில் திளைக்கிறது பம்பரம். சாட்டையின் எதிர்பார்ப்பை ஒருகணமும் ஏமாற்றாமல், தன் சக்தியையெல்லாம் திரட்டி அழகாகச் சுழல்கிறது பம்பரம்.

சுழல்வதன் வழியாகவே தன் அழகும் ஆற்றலும் வெளிப்படுவதாக அது எண்ணிக்கொள்கிறது. அடிபட்ட காயங்களின் காரணமாக, சாட்டையால் அது கைவிடப்பட்ட கணத்தை அதனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. வெவ்வேறு பம்பரம் தேடிச் செல்லும் சாட்டையின் செயலை நம்பமுடியாமல் இயலாமையோடு பார்த்தபடி இருக்கிறது.

ஒவ்வொரு பொருளுக்கும் அல்லது ஒவ்வொரு மனிதருக்கும் வகுத்திருக்கும் எல்லையின் மர்மம் தீராத புதிர்களாகவே நீடிக்கின்றன. ராமலக்ஷ்மியின் கவிதைகள் அப்புதிர்களின் புள்ளிகளை ஒருகணம் தொட்டு மீள்கின்றன.

கடந்த ஐந்தாண்டுகளாக கவிதைத்துறையில் தொடர்ந்து உற்சாகத்தோடு இயங்கிவரும் கவிஞர் நிலாரசிகன். ஏற்கனவே அவர் எழுதி வெளிவந்த வெயில் தின்ற மழை, மீன்கள் துள்ளும் நிசி ஆகிய தொகுதி களைத் தொடர்ந்து இப்போது ‘கடலில் வசிக்கும் பறவை’ வெளிவந்திருக்கிறது.

எதார்த்தக் காட்சி யன்றை மிகுபுனைவின் வழியாக கனவுக்காட்சியாக விரித்தெடுத்து, அக்காட்சியின் சில கோணங்களை மட்டும் சொற்சித்திரமாக முன்வைப்பவை நிலாரசிகனின் கவிதைகள். இந்த இயங்குமுறை, அவருடைய எல்லாத் தொகுப்புகளிலும் திகட்டாதபடி சீரான அளவில் தொடர்ந்து வெளிப்பட்டபடி இருக்கிறது.

அந்த சுவருக்கு அப்பால்

மிகப்பெரிய மலை இருக்கிறதாம்

அதில் மலையாடுகளும்

வெளிமான்களும் துள்ளி ஓடுமாம்

NilaRasiganஎன்று தொடங்குகிறது ஒரு கவிதை. கவிதையில் இடம் பெறும் சுவர் அழகான கற்பனை. மனத்துக்குள் நாமே எழுப்பிக்கொள்ளும் சுவர். உறவுகளிடையே நாம் எழுப்பிக்கொள்ளும் சுவர். வாழ்க்கையில் நாமே எல்லை பிரித்துக் கட்டிவைத்திருக்கும் சுவர். எண்ணங்களின் சுவர். இப்படி எந்தத் திசையிலும் இக்கற்பனையை விரிவாக்கிக்கொள்ளலாம்.

சுவரின் ஒரு பக்கம் நாம் வாழும் உலகம். அதன் மறுபக்கம் நம்மால் காண முடியாத, அடையமுடியாத, இனிமையான ஓர் உலகம். இந்த உலகத்திலிருந்து அதை நம்மால் கற்பனை மட்டுமே செய்யமுடிகிறது. அதற்குள் அடியெடுத்து வைக்கவோ, கண்ணாரப் பார்க்கவோ முடிவதில்லை. ஆடுகள், மான்கள் என்றெல்லாம் குறிப்பிடுவது ஒரு பேச்சுக்குத்தான்.

இன்னும் குறிப்பிடப்படாத பல இனிய அம்சங்கள் எல்லாமே அந்த மறுபக்கத்தில் உள்ளன. சோலைகள், சுனைகள், மரங்கள், கனிகள், பறவைகள், அருவிகள் என ஆனந்தத்துக்கு வழிகாட்டும் ஏராளமான அம்சங்கள் அங்கே நிறைந்துள்ளன.

தெரிந்தோ அல்லது தெரியாமலோ, நல்லூழின் காரணமாகவோ அல்லது தீயூழின் காரணமாகவோ, இனிய அம்சங்கள் எதுவுமே இல்லாத வறட்சியான சுவரின் பக்கத்தில் நாம் அகப்பட்டுவிட்டோம். இதில் நம் தேர்வு என எதுவும் இல்லை.

உடைக்கமுடியாத சுவரின் இந்தப் பக்கத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். கவிதையின் அனுபவத்தை இப்படிச் சொற்களால் விவரித்துச் செல்வதுகூட, அக்கவிதையை ஏதோ ஒரு சட்டகத்துக்குள் அடைத்துவிடுவது போல மாறிவிடவும் கூடும். ஒரு சட்டகத்துக்குள் கவிதையின் அனுபவத்தைப் பொருத்தாமல் உணர்ந்துகொள்வதும் சற்றே சிரமமாகும்.

தராத முத்தமொன்று

மிகப்பெரிய அலையாகி

ஓங்கி அடிக்கிறது கரையை

கரையில் அமைதியாய் முட்டையிட்டு

கடல் திரும்புகின்றன

கடலாமைகள்

கனத்த ஓடுகளைச் சுமந்தபடி

அடுத்தடுத்து நிகழும் இரண்டு காட்சிகளை இக்கவிதை கச்சிதமாக இணைத்து முன்வைக்கிறது. ஒன்று அலையின் தவிப்பு, விரகம், இயலாமை, தன்னிரக்கம், இன்னொன்று ஆமையின் அமைதி, எளிமை, நிறைவு, பொறுமை, தவிப்பு வெளியேறி அமைதி உள்ளே திரும்புகிறது. தவிப்பும் அமைதியும் நிகழ்த்தும் இந்தச் சுழலாட்டம் இயற்கையின் இயங்குவிதியையே சித்திரமாக்குகிறது.

கூடு திரும்பிய தாய்ப்பறவை

தவித்துப் போனது

குஞ்சுகள் இருந்த இடத்தில்

வெறும் இறகுகள்

அழமுடியாமல்

அசைந்துகொண்டிருந்தது

கரங்கள் வெட்டப்பட்ட காட்டுமரம்

ஒருபுறம் குஞ்சுகளைப் பறிகொடுத்த தாய்ப் பறவையின் வேதனை. இன்னொருபுறம், அதன் கூட்டுக்குத் தன் மடியில் இடம்கொடுத்த காட்டுமரம் தன்னால் அக்குஞ்சுகளைக் காப்பாற்றமுடியவில்லையே என்னும் வருத்தத்தைப் புலப்படுத்தும் வேதனை.

இரண்டு வேதனைகளையும் ஒன்றையடுத்து ஒன்றாக முன்வைக்கிறது கவிதை. அக்குஞ்சுகளின் மரணத்துக்குக் காரணம் ஏதேனும் ஒரு விலங்கா அல்லது யாராவது ஒரு மனிதனா என்னும் குறிப்பு கவிதையில் இல்லை. தன் கட்டுப்பாட்டை மீறி நிகழ்ந்துவிட்ட மரணத்தை, நிராதரவோடு பார்க்கிற வேதனைமட்டுமே இருக்கிறது. இயற்கை மரணங்கள், இயற்கையின் சீற்றத்தால் நிகழும் மரணங்கள், விபத்து மரணங்கள், கொலை மரணங்கள் என இந்த மண்ணில்தான் எத்தனை எத்தனை மரணங்கள்.

அனைத்தையும் காலமெல்லாம் மனிதகுலம் கையறுநிலையில் நிராதரவோடு வேதனை ததும்ப பார்த்தபடியே இருக்கிறது. மரணங்களுக்கும் முடிவில்லை. வேதனைக்கும் முடிவில்லை. இரண்டுமே இரண்டு இணைகோடுகளாக நீண்டுகொண்டே செல்கின்றன.

வெளிமான்கள் மேய்கின்ற

மலையடிவாரத்தில்

ஒரு வீடு.

அந்த வீட்டில்

ஒரே ஒரு அறை

அந்த அறையின்

சன்னல்வழியே உள்நுழைந்து

பகலெல்லாம் வாழ்ந்து

இரவில் மரிக்கிறது

கடைசி சூரியன்

சூரியனின் இருப்பை ஒரு மானுட இருப்பாக மாற்றி, அவனையும் மரணத்தைத் தழுவும் மானுடனாக உருமாற்றிக் காட்டும் ஒரு கனவுக்காட்சியை நிலாரசிகன் முன்வைக்கும் விதம் அவருடைய கவித்துவத்துக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

சூரியனின் மரணம் உண்மை யானதல்ல. அது ஒரு நாடக மரணம். அடுத்த நாள் காலையில் அது மீண்டும் பிறந்து மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்து வாழத் தொடங்கிவிடும்.

சாவு வீட்டின் முற்றத்தில்

விளையாடுகின்றன

இரு அணிற்பிள்ளைகள்

அழுதுகொண்டிருந்த சிறுமி

அணில்களைப் பார்த்துக்கொண்டே

அழுகிறாள்

சற்று நேரம் கழித்து

எதற்காக அழுகிறோம் என்றே

தெரியவில்லை அவளுக்கு

முற்றத்தில் இப்போது

மூன்று அணில்கள்

குழந்தைமையின் களங்கமின்மையைச் சின்னஞ்சிறிய ஒரு காட்சிவழியாக மிகச்சிறந்த அனுபவமாக மாற்றுகிறது இக்கவிதை. அணில்களின் விளையாட்டு சிறுமியின் துயரை மறக்கவைத்துவிடுகிறது. அணில் களோடு அணிலாகச் சேர்ந்துவிளையாடக்கூட அதற்கு எந்தத் தடையும் இல்லை. இயற்கையின் ஆசிகள் குழந்தைமைக்கு எப்போதும் துணையாகவே இருக் கின்றன. குழந்தைமையின் களங்கமின்மையை நாம் தொலைக்கும் கணத்தில்

அந்த ஆசிகள் நம்மைக் கைவிட்டுவிடுகின்றன. மீட்சியே இல்லாத துயரத்தில் நாம் மூழ்கிவிடுகிறோம். காகத்தின் மொழி என்ன என்று கேட்டுவிட்டு, விடை தெரியாத தந்தையிடம் புன்னகை ததும்ப ‘காகத்தின் மொழி பறவையின் மொழி’ என்று சொல்லிச் சிரிக்கும் மழலையின் குழந்தைமையை நிலாரசிகன் இன்னொரு கவிதையில் பதிவு செய்கிறார்.

சிதறிக் கிடக்கும் ஸ்டிக்கர் பொட்டுகளில் ஒன்றை மெல்ல இழுத்துச் செல்லும் எறும்பின் பயணத்தைக் காட்சிப்படுத்தும் ஒரு கவிதை மிகச்சிறப்பான வெளிப் பாட்டுத்தன்மையைக் கொண்டிருக்கிறது.

ஒரு கோணத்தில், நம் கலைமுயற்சிகள் அனைத்தும் ஸ்டிக்கர் பொட்டோடு செல்லும் எறும்பின் பயணம் தானோ என்று எண்ணத் தோன்றுகிறது. நம் முயற்சிகள் நம்மை அடையாளப்படுத்திக்கொள்ளவா அல்லது நமக்கு விருப்பமானவர்களுக்கு வழங்கவா என்பது ஒவ்வொரு கணமும் புதிர் நிறைந்ததாகவே இருக்கிறது.

எல்லாப் புலன்களையும் கண்களாக மாற்றி, இந்த வாழ்க்கையையும் உலகத்தையும் ஒவ்வொரு கணமும் பார்த்துக்கொண்டே இருக்கிறார் நிலாரசிகன். “எதிரில் இருப்பதைப் பார்ப்பதற்கு வெறும் கண்கள் மட்டும் போதாது, கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும்” என்னும் ஏ.கே.ராமானுஜத்தின் கவிதைவரியன்றை இந்த இடத்தில் நினைத்துக்கொள்ளத் தோன்றுகிறது.

கதிர் பாரதி, ராமலக்ஷ்மி, நிலாரசிகன் ஆகிய மூவருக்குமே அந்த அதிர்ஷ்டம் வாய்த்திருப்பதை அறிய மகிழ்ச்சியாக உள்ளது.

Pin It