ஒரு கவிதைப் புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து விடலாம். ஒரு கதைப் புத்தகத்தைக் கூட கை மாற்றாமல் படித்து முடித்து விடலாம். ஒரு கட்டுரைத் தொகுப்பை படிக்கத் தொடங்கியதி லிருந்து கீழே வைக்க மனமின்றி படித்துவிட்டு, பின்னும் அதன் தாக்கத்திலிருந்து விடுபட முடி யாமல் ஒரு வாரமாக அவதிப்பட முடியுமா? முடியும் என்கிறது கவிஞர் நா. முத்துநிலவனின் கட்டுரைத் தொகுப்பான ‘முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!’ என்னும் நூல்.

muthunilavan 258கல்வி சம்பந்தமான கட்டுரைகளை இவ்வளவு சுவாரஸ்யப்படுத்தி எழுதமுடியுமா என்று வியக்க வைக்கிறது அதன் எள்ளல் நடை. இனிய நடை, எளிய பதம், அறிவார்ந்த வாதங்கள், செறிவான கருத்துகள், புதுமையான முயற்சிகள் என செழுமை யான கருத்துப் பெட்டகம். உள்வாங்கி வினையாற்றத் தூண்டும் அறிவார்ந்த ஆயுதம். அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் படித்த இக்கட்டுரைகளை

ஒரு சேர கோவையாக வாசிக்கும்போது பிரச்சினை களின் ஆழ அகலம் நமக்குத் தெளிவாக விளங்கு கிறது.

மாற்றுக் கல்விச் சிந்தனைகள் நமக்குப் புதிதில்லை. வசந்திதேவி, எஸ்.எஸ்.ராஜகோபாலன், ச. மாடசாமி, பிரின்ஸ் கஜேந்திரபாபு, இரா. நடராஜன் போன்ற கல்வியாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தும், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தங்கள் கருத்துகளை காத்திரமாகப் பதிவு செய்தும் வருகிறார்கள். ஆனால் பிரச்சினைகளின் பிரம் மாண்டத்திற்கு முன்னால் இதெல்லாம் போதாது. ஆசிரிய சமுதாயமே வீறுகொண்டு எழவேண்டும். அவர்களுக்குப் பின்புலமாய் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் நிற்க வேண்டும். கல்வியின் சரியான புரிதலை அரசுக்கு ஏற்படுத்துவதை முதல் இலக்காகக் கொள்ள வேண்டும். இன்றைய கல்வி முறையின் குழப்பங்களுக்கும், குளறுபடிக்கும் காரணமானவை என்று கல்வியாளர்கள் சுட்டிக் காட்டும் குற்றவாளிகளில் பிரதான குற்றவாளியாக நிற்பது அரசுதானே?

நோபல் பரிசுபெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்யா சென் சொன்னார். ‘அரசுப் பள்ளிகளில் எவ்வளவு குறைகள் இருப்பினும் அரசுப்பள்ளி களுக்கு மாற்றாக வேறு பள்ளிகளைப் பொருத்திப் பார்க்க முடியாது.’ அவர் சொல்வதில் யாருக் கேனும் மாற்றுக்கருத்து இருக்க முடியுமா?

ஆனால் மத்திய மாநில அரசுகள் என்ன செய்கிறது?

நாடு சுதந்திரமடைந்து 63 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டமே வந்தது. அதை முறையாக அமல்படுத்த முதல் ஐந்தாண்டுகளுக்கு 1,71,00,000 கோடி தேவை யென வல்லுனர் குழுவால் மதிப்பிடப்பட்டது. அந்த சொற்பத் தொகையில் சரிபாதித் தொகை கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை. குழந்தைகளுக் கான கல்வி உரிமை சட்டமாக்கப்பட்ட பிறகு அந்த கட்டாய இலவசக்கல்வி அனைவருக்கும் போய்ச் சேர வேண்டும் என்பது நமது கல்விக்குப் பெரிய அளவில் பண உதவி கடனுதவி செய்யும் யுனெஸ்கோ, யுனிசெஃப் அமைப்புகளின் நிர்ப்பந்தம். கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமலான பிறகும் புதிதாக தனியார் பள்ளிகள் தொடங்க அனுமதி வழங்க யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது?

தனியார் பள்ளிகள் புற்றீசலாய் பல்கிப் பெருகி தாய்மொழியைப் புறக்கணித்து ஆங்கிலக் கல்வியை முன்னிறுத்துகின்றன.

எல்லோருக்கும் கல்வி என்பதும் தாய்

மொழிக் கல்வி என்பதும் ஒன்றுதானே? இயல் பான கற்றல் தாய்மொழியில்தானே இருக்க முடியும்? தாய்மொழியில் கற்பதுதானே சுயசிந்தனையை உருவாக்கும்? சுய சிந்தனைதானே சுயசார்பிற்கு வழிவகுக்கும்?

இத்தனை கேள்விகளையும் தன் புத்தகத்தின் வாயிலாக எழுப்புகிறார் நா.முத்துநிலவன். அரசின் கல்வி விரோதப் போக்கு என்றால் பாடத் திட்டங்களின் மாணவ விரோதப் போக்கு எப்படி இருக்கிறது?

இரண்டே வரிகளில் இப்புத்தகத்தில் விடை இருக்கிறது.

வாழ்க்கையைக் கொடுக்கும் பாடங்களை

மருந்து போலத் தருகிறோம்.

கல்வி சுமையாகிறது.

வாழ்க்கையைக் கெடுக்கும் படங்களை

விருந்து போலத் தருகிறோம்

வாழ்க்கையே சுமையாகிறது.

கட்டுரைகளின் ஆரம்பத்தில் உள்ள என்னுரை யிலேயே கல்வித் துறை குறித்த விமர்சனப் பார்வை யையும், புற உலகின் யதார்த்தப் போக்கையும், மொழியியலில் தன் ஆழ்ந்த புலமையையும் தெளி வாக்கி விடுகிறார். அது ஒரு வித்தியாசமான புத்தகத்தை கையில் வைத்திருக்கிறோம் என்ற கவனத்தைப் பெற்றுவிடுகிறது. அதில் மகா வித்வானுக்கும், தமிழ்த் தாத்தாவுக்கும் உள்ள ஒப்பீடு அருமை. ஒரு புத்தகத்திற்கு ஒரு கட்டுரை பதம்.

புத்தகத்தின் தலைப்பே எல்லோர் மனதிலும் ஒரு அதிர்வை ஏற்படுத்துகிறது. கொஞ்ச பேரை பதட்டப்படுத்தி விடுகிறது. (“எவ்வளவு முயன்றும் ‘பதட்டப்படாதீங்க’ என்ற சொல்லில் தவறு கண்டுபிடிக்க முடியவில்லை. என்ன தவறு சார்?”)

புத்தகத்தை வாங்கிப் படிக்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். உடனடியாகப் புத்தகத்தைப் பிரித்து தலைப்புக் கட்டுரையை முதலில் படிக்க வேண்டாம். முதல் இரண்டாம் மூன்றாம் என்று படிப்படியாய் ஏறி... மன்னிக்கவும்... படிப்படியாய் படித்துவிட்டு ஏழாவது கட்டுரையாய் அதைப் படிக்கும் போதுதான் அந்தத் தலைப்பின் நியாயம் நமக்கு முழுமையாய் புரிபடும்.

அது மட்டுமல்ல. ஒவ்வொரு கட்டுரையுமே வித்தியாசமான தலைப்புகளோடு கல்வியின் பல பரிமாணங்களை குறுக்குவெட்டுத் தோற்றத்தில் அலசி ஆராய்கிறது. கல்வித்துறைக்கு யார் ஒரு துரும்பை நல்லவிதமாகக் கிள்ளிப் போட்டிருந் தாலும் அதைக் கவனமாகப் பதிவு செய்து பாராட்டு கிறது. மொழி வெறியை, மொழி அலட்சியத்தை துலாக்கோலாய் நின்று விவாதிக்கிறது. பொருந்தாத பாடத்திட்டத்தையும் போலி ஆசிரியர்களையும் தன் இயல்பான எள்ளலோடு கிண்டலடிக்கிறது.

பாடமே இது பொய்யடா- வெறும்

மார்க் அடைத்த பையடா

விண்ணப்பித்து வாங்குவதா விருது? சுய மரியாதை உள்ள எவரும் லைக் போடும் கட்டுரை. இதை இவர் எழுதாவிட்டால்தான் ஆச்சர்யம்.

பெற்றோர்களே... உங்கள் குழந்தைகளை படித்த ஆசிரியரிடம் ஒப்படைக்காதீர்கள். படித்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்களிடம் ஒப்படை யுங்கள் என்றார் கலீல் ஜிப்ரான். இவரிடம் கல்வி கற்ற மாணவர்களை நினைத்து ஒரு சின்ன பொறாமை ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஒரு சிறு மனக்குறையையும் இங்கு பதிவு செய்யவேண்டும். அறிவொளி இயக்கத்தின் ஆளுமை களில் ஒன்றாக கவிஞர் நா.மு. அவர்கள் வயது வந்தோர் கல்விபற்றி ஒரு கட்டுரை எழுதியிருக் கலாம்.

எஸ்.எஸ். ராஜகோபாலன் அவர்கள் திறமை யாக மதிப்பீடு செய்திருக்கிறார். தங்கம் மூர்த்தியின் அணிந்துரை புத்தகத்தை மீறிவிடாமல் அடக்க மாக அணி செய்கிறது. பொருத்தமான அட்டைப் படத்தோடு அகரம் பதிப்பகம் வெளியிட்டிருக் கிறது.

ஒரு நல்ல கல்வியாளரின் அல்லது சமூக ஆர்வலரின் மதிப்புமிக்க தொண்டு இப்புத்தகத்தை பல்வேறு மட்டங்களில் வாசிக்கவும் யோசிக்கவும் வைப்பதுதான். ஒவ்வொரு கட்டுரையிலும் சாராம்ச மாய் இருப்பது ஒரேயொரு ஒற்றை வரிதான். பூக்க வைப்பது கல்வி. ஆம்! சமூகத்தின் மீது எதிர்காலச் சந்ததியின் மீதும் அக்கறை கொண்ட ஒவ்வொரு வரும் சொல்வது அதுதான். இப்புத்தகத்தில் நா.மு. சொல்வது போல் தமிழ்த் தாயை நாம் செயல் மறந்து வாழ்த்தவேண்டாம். செயல் புரிந்து வாழ்த்துவோம்.

முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!

ஆசிரியர்: நா.முத்துநிலவன்

வெளியீடு: அகரம்

மனை எண்: 1, நிர்மலா நகர் ஞ்சாவூர் - 613 007

விலை-120/-

Pin It