கொஞ்சம் பாலுடன் உப்பைக் கலந்து
இரு கண்ணீர்த் துளிகளையும் சேர்த்து
நிர்வாணமாய் தேநீர் தயாரிக்கிறாள்
தேநீர் தயாரிக்கவே ஆசீர்வதிக்கப்பட்டவள் மாதிரி
தேநீர் தயாரிப்பதில் முழுமையாக மூழ்கி இருக்கிறாள்
தேநீர் தயாரிக்கும் கூடமெங்கும்
பூந்தொட்டிகளை நிரப்பியிருக்கும் யா
பூக்களின் வண்ணங்களில் தனது நிர்வாணத்தை மறைத்துக் கொள்வதாகவும்
பூக்களிலிருந்து மகரந்தத் துகள்களை தேநீரில் தூவிக் கொள்கிறேன்
மேலும் தேநீர் தயாரிக்கும் போதும் பருகும்போதும்
நாம் நிர்வாணத்தை உணர்ந்திருப்போமெனில்...
தேநீரின் சுவையை உணரக்கூடும் என்கிறாள்
யா தேநீர் தயாரிக்க ஆயத்தமாகிவிட்டாலெனில்
அந்த அறை பூக்களின் பாடலால் நிரம்பியிருக்கும்
தேநீர் பருகக் காத்திருக்கும் யாவரும் தத்தமது பணிகளைத் துறந்து
தியானிக்கத் தொடங்கிவிடுவார்கள்
தனது உறவினர்களுக்காகவும்
உடன் பிறந்தவர்களுக்காகவும்
விருந்தினர்களுக்காகவும்
கனவிலும் தனக்குப் பிடிக்காது போனவர்களுக்காகவும்
தேநீர் தயாரிக்கும் யா
அழும் குழந்தையின் கைகளில் மலர்க்கொத்தைத் திணிப்பது மாதிரி
அவரவர் கைகளில் தேநீர்க் கோப்பையை வழங்குவாள்
யாவின் தேநீர் பருகுவது என்பது
நிர்வாணத்தைக் கடந்து
புணர்ச்சியைப் பருகிய மயக்கத்தில்
நீட்சி கொண்டெழும் ஒரு பறவையின் பறத்தல் நிலைக்கு ஒப்பானதொரு பேரானந்தம்
யாவின் நிர்வாணம்
புத்தரின் அகத்தில் விழிப்பு கொண்டெழும் விழிகளின் ஒளியை
அதன் புன்னகையை அறிந்து கொண்டதற்கான எழுச்சியின் குறியீடு
உன்னதம் - ஜனவரி 2005
யா தேநீர் தயாரிக்கிறாள்
- விவரங்கள்
- கே.சி.செந்தில் குமார்
- பிரிவு: உன்னதம் - ஜனவரி 2005
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.