1
கதிர்உச்சியில் வீழும்
வன்பசிப் பொழு தொன்றில் நிகழ்ந்தது
நம் முதற்காணல்.
அகாலத்தில் நுழைந்த காயசண்டிகையாய்
நூற்றாண்டின் பட்டினிக் கரமேந்தியபடி
என்முன் நீ.
எனதுணவை நினக்களித் தோம்பினேன்
என் காற்றும் நீரும் நீயே கொண்டாய்.
எனது டைமைகள் யாவும்
வழங்கியபின்னும் பசியாறாது
2
என் விந்தின் அடர்சுவையில்
(ஒருவேளை) உனது நாவின் பசியடங்கு மெனும்
நின் மாறா வேண்டலின் பொருட்டு
நான் தன்னின்பத்தில் திளைத்துக் களைத்தேன்.
ஒருப்போதில் பசியின் உக்கிரத்தினூடாக
என் கறியுங்குருதியும் கலந்துண்டாய்
பின்னரென் குருத்தெலும்புகளின் மென்மையை
கலவாய் சுரக்க
விரும்பிச் சுவைக்கலானாய்.
இங்கணமாய்............ இவ்விதமாய்...........
என் ஊனுண்டு உயிர் சுவைத்தாய்.
என்னை யெரியூட்டிய
மூன்றாம் கரிநாளில்
என் சுடலையின் சாம்பலை
வாரிக் கோரித் தின்றபின்னும்
தீராமல் தொடருமுன் பெரும்பசி.
பசிப்பிணியின் ஆயிரமாயிரம் உருக்கொண்டு
நீளுமுன் கைகளில் இட்டுநிரப்ப (ஏதுமின்றி)
இன்னுமின்னும் எனத் தேடியவாறு
சூன்யத்தில் அலைவுறு மென் உயிர்த்துகள்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...