பொதுவுடமையாளர்கள், பொதுவுடமை ஆதரவாளர்கள், தங்களுக்குப் பணம் தர மறுப்பவர்கள் என்று 5 லட்சம் பேரை 1965ல் இந்தோனொசியாவில் கொன்று குவித்தார்கள். தொடர்ந்து மனிதகுலம் இன, துவேச அழிப்பால் துயரங்களைத் தந்து வருவதைக் காணமுடிகிறது. இரண்டு உலக் யுத்தங்கள் முதல் முள்ளிவாய்க்கால் நிகழ்வு வரை இவை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதிபர் சுகர்னோ தூக்கி எறியப்பட்டு சுகர்தோவின் ஆட்சி வந்தது. அந்த வகை கொலைச் செயலுக்கு பலர் பயன்படுத்தப்பட்டனர். அதில் அன்வர் காங்கோ என்ற சுமித்ராவைச் சார்ந்தவரைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட ஆவணப்படம் இது. அன்வர் காங்கோ மட்டும் தனிப்பட்ட முறையில் 1000 பேரைக் கொன்றிருக்கிறார். பொதுவுடமைக்காரர்கள் என்றில்லாமல் பொதுவுடமைக்காரர்கள் எனச் சந்தேகம் கொண்டவர்கள், தங்கள் மிரட்டலுக்கு அடிபணியாதவர்கள் என்று சகட்டு மேனிக்கு கொலை செய்யப்பட்டார்கள். திரைப்படக் கொட்டகையில் நுழைவுச்சீட்டு விற்பவராக இருந்த அன்வர் அங்கு திரையிடப்பட்ட அமெரிக்கப் படங்களால் பெரிதும் கவரப்பட்டவர். அமெரிக்க படங்களின் கதாநாயகர்களாகவும், கிளிண்ட் ஈஸ்ட்வுட்டாகவும் தன்னை பாவித்துக் கொண்டு அந்த கொடூரச் செயல்களைச் செய்திருக்கிறார். அவருக்குத் தேவை துப்பாக்கி கூட அல்ல . இரும்புக் கயிறு.

இந்தோனிசியாவில் 1965-67ல் நடந்த இந்தப் படுகொலையில் பாதிக்கப்பட்டக்குடும்பங்கள், உயிர் பிழைத்தவர்களை வைத்து இந்தப் படத்தைத் தயாரிக்க இயக்குனர் ஜோஸ்யு ஓபன்ஹெய்மர் திட்டமிட்டுருக்கிறார். ஆனால் 1000 கொலைகளைச் செய்த அன்வரின் செயல்களை மையமிட்டு அது மாறிப்போயிருக்கிறது. அன்வர் கொலை செய்தவற்றை நிகழ்த்திக் காட்டுகிறார். வெறும் இரும்புக் கயிறு. கழுத்தைச் சுற்றி இறுக்கி இரத்தமின்றி கொஞ்சம் அலறலுடன் கொலை செய்தலை மறு உருவாக்கம் செய்து காட்டுகிறார். அவர் கொலைகளன்களுக்கு கூட்டிச் சென்று காட்டுகிறார். முன்பு செய்ததை நிகழ்த்திக் காட்டுகிறார். முதலில் எவ்வித குற்ற உணர்வும் இல்லை. ஆனால் இப்படம் உருவாக்கப்பட்ட இறுதி கணங்களில் குற்றவுணர்வு அவரைப் பீடித்துச் சிரமப்படுத்துகிறது. சாகும்போது கண்கள் வெறித்த நிலையிலான ஒருவரின் பார்வை அவரை இம்சிக்க ஆரம்பிக்கிறது.

பான்காசியா இளைஞர் படையில் எப்போதும் சார்பும் ஆதரவும் கொண்டவர். அந்த அதிகார மிதப்பு அவரைக் குற்றம் குறித்த குற்றவுணர்வைக் குறைத்துக் கொண்டே இருக்கிறது. கொலைக்காலத்தில் அவர்கள் சுயேச்சையானவர்கள். சுதந்திரமானவர்கள். கொலைகளை சுலபமாகச் செய்கிறார்கள். தொழுகை நேரத்து அழைப்புகள் மட்டும் சில சம்யம் அதை ஒத்தி வைக்கிறது. நடத்திக் காட்டப்படும் போது அதை வேடிக்கைப் பார்க்கிற பெண்களும் குழந்தைகளும் கதறுகிறார்கள். மயங்கி விழுகிறார்கள். கொலைகள சூழல் மட்டுமில்லாமல் கொலையுண்டவர்களின் முகங்களின் தோற்ற மாதிரிகள், கொலை செய்தவர்களின் முகத் தோற்றங்கள் முக வடிவமைப்பில், ஒப்பனையில் கொண்டு வரப்படுவது நிகழ்த்திக் காட்டப்படுகிறது. ஒப்பனையில் அவர்களின் குரூர முகங்கள் வெளிப்படுகின்றன. கொல்லப்பட்டு மூட்டைகளால், சிறு உருளைகளில் போட்டு மூடி தூக்கி எறியப்பட்டவர்களின் கதைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அவ்வகைகொலை செய்த இன்னொருவர் இப்போதைய பத்திரிக்கை அதிபராக இருக்கிறார். பத்திரிக்கை மூலம் மனித உரிமை பற்றிப் பேசுகிறார்.

தொலைக்காட்ட்சிகளோ, பத்திரிக்கைகளோ தரும் செய்திகளின் தன்மையின் பின் பெரும் அரசியல் இருக்கிறது. சமூகச் சூழலில் முதலாளித்துவத்தின் பார்வை ஒளிந்து கொண்டே இருக்கிறது. எந்தச் செய்தியை எப்படி வெளியிடுவது, எந்தப் பக்கத்தில், சிறிய செய்தியாகவா, பெரிய செய்தியாகவா என்பதை அவை தீர்மானிக்கும். முக்கியதுவமற்றதாக செய்திகளை மாற்றும் திறன் கொண்டதும் கூட நடைபெறுகிறது. முதலாளித்துவத்தின் லாப வேட்டை, எதிர்ப்பாளர்களைக் கொச்சைப்படுத்தும் தன்மை தொடர்ந்து கொண்டே இருக்கும் இதில் பெரும் தனியார் நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமாக எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், சமூக ஆர்வலர்களைப் பயன்படுத்திக் கொள்வதும் சுலபமாக நடக்கிறது. இதை அந்தப் பழைய கொலைகாரரும் செய்கிறார் பெருமிதத்தோடு என்பதை அவரும் அவரைச் சார்ந்தவர்களும் சொல்லிக் கொள்கிறார்கள்.

ஆனால் அவர் நிகழ்த்திய கொலைகள் பற்றி அவருக்கு கொஞ்சமும் உறுத்தல் இல்லை. ஆதிக்கம் செலுத்தும் ஊடக நிறுவனங்களின் கைக்கூலியாக அவர் செயல்படுவது என அவர் வாழ்க்கையை அடக்கிக் கொண்டிருக்கிறார்.

சரித்திரத்தைத் திரும்பிப் பார்க்கும் விதமாய் இந்த நிகழ்வுகளின் மறு உருவாக்கமும் வீதிகளில் அலைந்து கொண்டும், வாகனங்களில் சுற்றிக்கொண்டும் கொலையாளிகள் பேட்டிகள் கொடுக்கிறார்கள். கொலைக்களன்கள் நகரம் முழுக்க நிறைந்திருக்கின்றன். அன்வர் இப்படி எடுக்கப்பட்ட படத்தின் சில பகுதிகளைத் தன் பேரப்பிள்ளைகளுக்கு போட்டுக் காட்டிப் பெருமை கொள்கிறார். அவர்கள் கேள்வி கேட்கும் வயதில் இல்லை. கேள்வி கேட்கும் அறிவில் இல்லை. அதுவே அன்வருக்குச் சாதகமாக இருக்கிறது. ஆனால் படத்தின் இறுதியில் அவர் மனம் கொள்ளும் குற்றவுணர்வு இப்படம் பார்க்கிறவர்களையும் தொற்றிக் கொள்ளும்.

இன்று ஆட்சி நடத்துபவர்கள் இந்த வன்முறையை நியாயப்படுத்துகிறார்கள். இன்றும் ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்ள இவையெல்லாம் அவசியம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். தங்களின் முதிர்ந்த வயது, அனுபவம் - இவையெல்லாம் மீறி சாதாரணமாகவே எடுத்துக் கொள்கிறார்கள். இவ்வகை வன்முறைகளும் கொலைகளும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்படுவது துயரமாகவே இருக்கிறது.

ஆரம்பக்காட்சிகளில் இடம் பெறும் பெண்களின் இந்தோனிசிய நடனக்காட்சிகளும் அருவிகளின் பின்னணியும் அபத்தங்களை நகைக்க வைக்கிறது என்றே சொல்லலாம். நீளநீளமான காட்சி அமைப்புகள், படத்தின் மொத்த நீளம் இவையெல்லாம் உறுத்தவே செய்கின்றன. இப்படம் மனித உரிமைகள் குறித்த பல கேள்விக்ளை முன் வைப்பதால் பல உயரிய விருதுகளைப் பெற்றிருகிறது. இதன் தயாரிப்பாளர்களில் ஒருவர் பிரபல இயக்குனர் வெர்னர் ஹெர்ஜோக் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

திரைப்படம் மனித நடத்தையை விளக்க முயலும் காட்சிரூப மொழியாலானது. இலக்கியம் மனித உளவியலை விளக்க முயலும் குறியீடுகளான சொற்களால் ஆனது. திரைப்படத்தில் மனிதர்களின் உடல்மொழி அடிப்படையானது எனில், இயற்கை அதனது துணைப்பிரதி. மௌன இடைவெளி திரைப்படத்தில் பெரும் அர்த்தம் உளவியல் மொழியிலானது. இலக்கியத்தில் மௌன இடைவெளி கற்பனைக்கு உரிய இடம். ஸ்பரிச அனுபவம் என்பதனை திரைப்படம் பாவனைகளாலும் இலக்கியம் சொற்களாலும் பற்றிப் பிடிக்க முனைகிறது. இரண்டும் தத்தம் அளவில் வெகுதூரம்-காலம் பயணம் செய்து தமக்கென தனித்தனி தர்க்கங்களையும் கொண்டிருக்கிறது. ஓன்றைவிடப் பிறிதொன்று மேன்மையானது என இதன் இரண்டினதும் வரலாற்றினையும் சாதனைகளையும் கொடுமுடிகளையும் அறிந்த எவரும் சொல்ல மாட்டார்கள். இப்படிச் சொல்ல முனையும் இலக்கியவாதியை திரைப்படக் கலையை அறியாதவன் எனவும், திரைப்பட இயக்குனரை இலக்கியம் அறியாதவன் எனவுமே சொல்ல முடியும். என்கிறார் யமுனா ராஜேந்திரன்

இலக்கியப் பிரதியைத் தாண்டி சொல்லுக்கும் காட்சிக்குமான பதட்டத்தை இப்படப்பிரதி தந்து கொண்டே இருக்கிறது.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.