ரஸ்யாவில் நடைபெற்ற உலகப் புத்தகக் கண்காட்சியில் சாகித்திய அகாதமி குழுவில் சாகித்திய அகாதமியின் தமிழ் குழு ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பங்கு பெற்றார். “2009 : இந்தியா நட்பு நாடுஎன்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் இவ்வாண்டு இந்திய எழுத்தாளர்களும், கலைஞர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். சிற்பி குழந்தைகளுக்கான கதை சொல்லல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்திய கதை மரபைப் பற்றிப் பேசியிருக்கிறார். இந்தியாவில் இருந்து கலந்து கொண்டவர்களில் சிலர் : சச்சிதானந்தன் (மலையாளம்), அசோக் வாஜ்பாய் (இந்தி), அபர்ணா (மராத்தி), பாமா (தமிழ்). சிற்பி ரஸ்யா செல்வது இது இரண்டாம் முறை. அவரின் அனுபவங்களை பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் இரு நகரங்களின் கதைஎன்ற தலைப்பில் பகிர்ந்து கொண்டார்.

உலக இலக்கியத்தின் ஆதர்சமாக இருந்த ரஸ்ய இலக்கியம் இன்று குறிப்பிடும்படியாக இல்லை. எழுத்துச் சுதந்திரம் இருந்தாலும் எழுச்சி மிக்க இலக்கியம் இல்லை. அதுவும் குழந்தை இலக்கியப் படைப்புகள், புத்தகங்கள் வெகு சாதாரணமான தரத்தில் இருந்தன. இந்தியாவில் இருந்து கொண்டு சென்ற குழந்தை இலக்கிய நூல்கள் அங்கு காட்டப்பட்டன. பல மடங்கு உயர்ந்த தரத்தில் இருந்தன. பழைய செய்திகளே மீண்டும் நினைவு கூறப்பட்டன. கவிதை வாசிப்புகள், எழுத்தாளர்களுடனான சந்திப்புகளில் புதிய உத்வேகம் இல்லை.

புத்தக கண்காட்சியில் ஏகதேசம் ஆங்கில நூல்கள் இல்லை என்னும்படி வெகு குறைவாக இருந்தன. இந்தியாவில் இருந்து வந்திருந்த நடன நிகழ்ச்சிகள் உரத்த சப்தத்துடன், நேர்த்தியில்லாமல் இருந்தன. ஆனால் ரஸ்ய நடனங்களின் நளினமும், நேர்த்தியும் கவர்ந்தன.

பயணத்தில் இரு நகரங்களைத் தரிசித்தோம்.

கிரம்ப்ளின் : ஊசியிலைக் காட்டுக் கோட்டை என்பது அர்த்தம். இரு நதிகளின் சந்திப்பில் இந்த நகரம் இருக்கிறது. இங்குள்ள மியூசியங்களைக் காண ஒரு மாதமாகும்.

சிவப்புக் கற்களால் கட்டப்பட்டதால் ரெட் ஸ்கொயர் என்று பெயர் வந்திருக்கிறது. இங்கு லெனின் உடல் இன்னும் இருக்கிறது. இது 1935ல் அடக்கம் செய்யப்பட்டது. 1953ல் ஸ்டாலின் உடல் அங்கு அடக்கம் செய்யப் பட்டது. ஆனால் பின்னர் அது இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. கிரம்ளின் கோட்டைக்குள் நிறைய தேவாலயங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு அரசரும் ஒவ்வொரு தேவாலயத்தில் வழிபாடு செய்ய தனித்தனியாக அக்கறை காட்டியதால் அவ்வளவு தேவாலயங்கள். 1918 தேவாலய வழிபாடுகள் நிறுத்தப்பட்டு 1991ல் மீண்டும் துவங்கியிருக்கின்றன. ஜார் மன்னனின் ஆட்சியின் ஆடம்பரம், ஜாரினா அரசியின் ஊதாரித்தனம் ஒவ்வொரு இடத்திலும் தெரிகிறது. ஜார் மணி 130 டன் எடை கொண்டது சிறப்பானது. பாஸ்டர் நாக்கின் கிராமத்திற்கு சென்றிருந்தோம். நோபல் பரிசு வாங்காதே என அரசால் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார். வாங்கவில்லை. நாடு கடத்தப்பட்டார். நேருவின் படம் அவரின் அறையில் இருக்கிறது. அவரை இந்தியாவிற்கு வாருங்கள் என வரவேற்ற ஆவணங்கள் இருந்தன.

மாஸ்கோ நகரத்தில் விலைவாசி தாறுமாறாய் இருக்கிறது. நாணயமில்லாத மனிதர்களால் நிரம்பி வழிகிறது. நுகர்வுக் கலாச்சாரம் கோலோச்சுகிறது. மெட்ரோக்களில் விலைமாதர்கள் நிரம்பத் தென்படுகிறார்கள். முதலாளித்துவ ஆட்சியின் கூறுகளைக் காண முடிகிறது. பணத்தேவை அதிகரித்துவிட்டது. கார்ப் பரேட் கம்பெனிகள் நிறைய செயல்படுகின்றன. மாஸ்கோவில் தனியார் கட்டி டங்கள் இல்லை என்றாலும், வெளிப்பகுதியில் புதிதாய் தனியார் கட்டிடங்கள் ஏராளமாய் வந்துவிட்டன என்பதே அரசு பிடியில் இருந்து தனியார் மயம் கோலோச்சுவதை காண முடிகிறது. ஸ்டாலின் காலக் கொடுமைகளைப் பற்றி ஒருவரிடம் கேட்டதற்கு We are pigs. We need stalinஎன்றார். அது அவரின் தனிப்பட்டக் கருத்தாக இருக்கலாம் என்றார்கள் நண்பர்கள்.

துருக்கியின் இஸ்தான்புல் ஒவ்வொருவரும் காண வேண்டிய மிகச் சிறந்த ஒழுங்கமைப்பும் அழகும் கொண்ட நகரம்.

இரு நகர எழுத்தாளர்களும் இந்தியாவுடனான இலக்கிய பரிவர்த்தனை மிக அவசியம்என்றனர்.

Pin It