BrihadisvaraTemple 350சங்க காலத்திலேயே வெளிநாடுகளுடன் தமிழகத்திற்கு வணிகத் தொடர்பு இருந்ததெனினும், தங்களின் போர் வெற்றி களால் உலகத்தையே தம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த தமிழ் மாமன்னர்கள் இராசஇராசசோழனும், இராசேந்திர சோழனும்தாம்! அவர்கள் இருவரும் அடுத்தடுத்து அறுபது ஆண்டுகளுக்கும் மேல் அரியணையில் இருந்தனர். பாரின் பல பகுதிகளில் புலிக்கொடி பறந்த காலம் அது!

களத்தில் பெற்ற வெற்றிகளால் மட்டுமின்றி, கட்டிடக் கலையின் தொழில் நுட்பத்தாலும் சோழர் ஆட்சி உலகப்புகழ் பெற்றது. 100 கி.மீ. சுற்றளவிற்கு மலைகளே இல்லாத இடங்களில் இரு பெரும் கற்கோயில் களை இருவரும் அமைத்தனர்.

கி.பி.1014 முதல் முப்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்திய மாமன்னன் முதலாம் இராசேந்திரன், மிக வலிமையான கடற்படையைக் கட்டி அமைத்தான். அதன் மூலமாகவே இலங்கை, சுமத்திரா உள்ளிட்ட கடல் கடந்த தென் கிழக்காசிய நாடுகள் பலவற்றை அவன் வெற்றி கொண்டான். கங்கை கொண்டான், கடாரம் வென்றான் போன்ற பல பட்டங்கள் அவனுக்குச் சூட்டப் பெற்றன. ‘கடாரம்’ என்பது சுமத்திராவில் உள்ள ஸ்ரீவிஜயம் நாடுதான் என்று வரலாற்றாசிரியர் கே.கே.பிள்ளை குறிக்கின்றார். கோலாலம்பூரிலிருந்து பினாங்கு செல்லும் வழியில் உள்ள ‘கடேர்’ என்னும் துறைமுக நகரம்தான் கடாரம் என்கின்றனர் மலேசியத் தமிழர்கள்.

கடாரம் குறித்துச் சங்க இலக்கியங்களிலே குறிப்புகள் உள்ளன. பட்டினப் பாலை கூறும் ‘காழகம்’ என்ற இடம் கடாரம்தான் என்கிறார் உரையாசிரியர் நச்சி னார்க்கினியர். பிங்கலந்தை நிகண்டும் அவ்வாறே கூறுகின்றது. பிற்கால இலக்கியமான கலிங்கத்துப் பரணி, “குளிறு தெண்திரை குரை கடாரம்” என்கிறது.

எல்லாக் குறிப்புகளும், கடல் கடந்த பகுதி கடாரம் என்பதை உணர்த்துகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கடல்தாண்டிச் சென்று பெற்ற வெற்றி பெரும் சாதனைதான்!

போரொழிந்த புது உலகச் சிந்தனைகள் அன்று இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவே களத்தில் பெறும் வெற்றிகளே, மன்னர்கள் கழுத்தில் விழுந்த மாலைக ளாக இருந்துள்ளன. அவ்வகையில், மாமன்னன் முதலாம் இராசேந்திரன்தான், தமிழ்நாட்டு மன்னர்களின் வரிசையில் முதல் இடம் பெறுகின்றார். அவர் அரியணையில் ஏறிய ஆயிரமாவது ஆண்டு இப்போது கொண்டாடப் படுகிறது. அதனையட்டி, அம்மன்னர் பெருங்கோயில் எழுப்பிய கங்கை கொண்ட சோழ புரத்தில் விழாக்கள் நடைபெற்று உள்ளன. தமிழக அரசே அவ்விழாவை நடத்தியிருக்க வேண்டும். அரசு செய்யாத காரணத்தால், தனிப் பட்ட தமிழ் ஆர்வலர்கள் அவ்விழாவைச் சிறப்புறச் செய்துள்ளனர். முன்னாள் துணைவேந்தர் பொற்கோ, எழுத்தாளர் பாலகுமாரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, இராசேந்திர சோழனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர்.

மேற்காணும் அனைத்தும் ஏற்கத்தக்க, நியாயமான செய்திகளே. எனினும் சோழப் பேரரசின் மறுபக்கங்கள் சிலவற்றையும் நாம் பதிவு- செய்வதே சரியானது.

அடுத்த நாடுகளின் மீது படை யெடுப்பது பற்றிய நம் பார்வை ஒரு புறமிருக்க, வேறு இரு செய்திகளில் நமக்குக் கடுமையான விமர்சனம் உள்ளது. ஒன்று, வருண வேறுபாட்டை ஏற்று, பார்ப்பன மேம்பாட்டிற்குப் பல வழிகளிலும் உதவியது. இன்னொன்று, தேவரடியார் என்னும் பிரிவினை ஏற்று, கலைகளின் பெயரால் பெண்களை அடிமைப்படுத்தியது.

தமிழ்நாட்டில் சோழர் காலம் குறித்து விரிவான ஆய்வுகளை வெளிப்படுத்தி யுள்ள வரலாற்றாசிரியர்கள் கே.ஏ.நீல கண்ட சாஸ்திரியும், சதாசிவப் பண்டாரத் தாரும், சோழர் ஆட்சியில் பொன்னும், பொருளும், நிலங்களும் பார்ப்பனர் களுக்கு வாரி வழங்கப்பட்டதை விவரிக் கின்றனர். பேராசிரியர் கே.கே.பிள்ளை யின் நூலிலிருந்து (“தமிழக வரலாறும் பண்பாடும்”) சில வரிகளைக் காணலாம்.

“வடவரின் இலக்கியமும், சமயக் கருத்துகளும், பண்பாடுகளும் தமிழ் நாட்டில் பெருக்கெடுத்துப் பாயவே, அவற்றை வளர்ப்பதற்கும், மேற்கொண்டு பல புதுமைகளைப் பெருக்கிக் கொள்வ தற்கும், மன்னர்கள் ஆயிரக்கணக்கில் அயல்நாட்டுப் பிராமணரை இறக்குமதி செய்து, கோயில்களிலும், மடங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் அவர்களை அர்ச்சகர்களாகவும், புரோகிதர்களாகவும், வேத பாராயனம் செய்வோராகவும் ஆங்காங்கு அமர்த்தினர். வேதநெறி தழைத்தோங்கு வதற்காக மன்னரும், மக்களும், புதிதாகக் குடிபுகுந்த பிராமணருக்குப் பொன் னையும், பொருளையும், குடியுரிமை களையும் வாரி வழங்கினர். பிராமணருக்குத் தனி நிலங் களும், முழு முழுக் கிராமங்களும் தானமாக வழங்கப்பட்டன. அக் கிராமங் கள் அக்கிரஹாரம், அகரம், சதுர்வேதி மங்கலம், பிரம்மதேயம் எனப் பல பெயரில் வழங்கின. இக்குடியிருப்புகள் அனைத்தும் பிராமணரின் நிருவாகத் துக்கே விடப்பட்டன. அரசனுடைய ஆணைகள் அவற்றினுள் செயல் படா. அக் கிராமங்களுக்கு எல்லாவித மான வரிகள், கட்டணங்கள், கடமைகள், ஆயங்கள் முதலியனவற் றினின்றும் முழு விலக்கு அளிக்கப்பட்டன”

இதனைக் காட்டிலும் பார்ப்பன ஆதரவு வேறு என்ன இருக்க முடியும். அதனால்தான் பேராசிரியர் அருணன், தன் நூலொன்றில்( “மண் ணுக்கேற்ற மார்க்சியம்”), “வருணா சிரமம் வளர்த்த வனே ராஜராஜன்” என்று கடுமையாகக் குறிப்பிடுகின்றார். சோழர்கள் காலத்தில் சமற்கிருத மொழியும், சமற்கிருதக் கல்வி யுமே வளர்க்கப்பட்டன என்பதற்கும், அவர் கல்வெட்டுச் சான்றுகளை மேற் கோள் காட்டுகின்றார்.

இவ்வாறே, பெண்களை அடிமைப் படுத்தும், இழிவான வாழ்க்கை முறைக்குத் தள்ளும் ‘தேவரடியார்’ முறையும், சோழர் காலத்தில் காணப்படுகிறது. ‘தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருத்தொண்டுக் காக, மன்னன் இராசராசன் 400 தேவரடியார்களை அமர்த்தியதாக’த் தஞ்சாவூர்க் கோயில் கல்வெட்டு ஒன்று கூறுகின்றது. இராசேந்திரன் காலத்திலும் இந்நிலை தொடர்ந்தது.

இந்தத் தேவரடியார் இழி வாழ்க்கை முறையை ஆங்கிலேய அரசும், தமிழ் நாட்டில் நீதிக்கட்சி அரசும்தாம் ஒழித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, மாமன்னர் இராசேந் திரன் ஆட்சிக்காலத்தின் ஆயிரமா வது ஆண்டைக் கொண்டாடும் அதே வேளையில், அன்று இழைக்கப் பட்ட சமூக அநீதிகளையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.