நேற்று கட்சி தொடங்கி, இன்று ஊர்வலம் போய், நாளை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்துவிட வேண்டும் என்று கிளம்பிய நடிகர் விஜய், கரூரில் 41 உயிர்கள் பலியான பின்னர் இன்றுவரை எதுவும் பேசவில்லை. நேரில் சென்று அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை அவர். அவரின் கட்சியில் சிறு சலனம் கூட இல்லை.
ஆனால் கரூர் சம்பவத்திற்குப் பிறகு பெண்களின் ஆதரவு விஜய்க்குப் பெருகிவிட்டது, சிறுபான்மையினர், இளைஞர்கள், பட்டியலினத்தவர்கள் ஆதரவு கூடிவிட்டது, அடுத்தத் தேர்தலை தீர்மாணிக்கப் போகிறவர் விஜய்தான் என்று சில தொலைக் காட்சி ஊடகங்கள் ஊதித்தள்ளுகின்றன.
விஜயைவிட்டால் வேறு வழியில்லை என்று அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் அவர் வீட்டு வாசலில் நிற்பது போல சொல்கின்றன அவை.
விஜய் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. அவரின் வீரமிக்க தளபதிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள் தலைமறைவு. மாவட்ட, வட்ட, பகுதி என்று அடிமட்டம் வரை இன்னும் கிளைகள் கூட இல்லாத தவெக என்ற ஒரு கட்சிதான், திமுகவை வீழ்த்தும் வலிமையுடன் இருப்பதுபோலப் பேசுவதற்குக் கூச்சப்பட வேண்டும்.
பாஜகவுடன் கைகோர்த்து தன்னை மதவாத ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறது, அதிமுக. தமாகவில் பாவம் இரண்டு பேர்தான் இருக்கிறார்கள். இவர்களுடன் விஜய் வந்து சேர்ந்தால் அவரையும் மதவாத ஆதரவாளர் என்று மக்கள் நினைக்க மாட்டார்களா?
சரியோ, தவறோ அதிமுகவுக்கும் குறிப்பிட்ட வாக்காளர் இருக்கிறார்கள்.
சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுக்காமல் இருந்தால் சரி, ஊடகங்கள்!
- கருஞ்சட்டைத் தமிழர்