periyar 355இப்போதெல்லாம்

குப்பனையும் சுப்பனையும்

கோவில்களுக்குள்

காண முடிகிறது!

பொட்டுக்கட்டி விடப்பட்டிருந்த

பொன்னுத்தாயின் பேத்தி

லண்டனில்

பிஸியோதெரபி படிக்கிறாள்

வியாதி என்றதும்

மந்திரித்து

தாயத்து கட்டிய கைகளில்

மருந்துச் சீட்டுகள்!

மாவட்ட ஆட்சியர்

மாடசாமியிடம்

கையெழுத்திட வேண்டிய

கோப்புகளை

பணிவோடு காட்டுகிறார்

கணேச அய்யர்

வெண்டைக்காயை ஒடித்துப்

பார்த்தும்

தேங்காயைத் தட்டிப்

பார்த்தும்

கொள்முதல் செய்யும்

கணவர்கள் காய்கறிச் சந்தைகளில்

மொட்டை போட்டிருந்த

நண்பன் ஒருவனிடம்

கோவிலுக்கா என்றேன்

சம்மருக்கென்றான் சாதாரணமாக

மேலத் தெருவில்

கீழ்த் தெருக்காரர்களின்

பாலிஷ் செய்யப்பட

பாதுகைகளின் தடங்கள்

வெண்ணிலாவின்

மதிப்பெண் அட்டையில்

அம்மா பெயரின் முன்னெழுத்தும்

மின்னிச் சிரிக்கிறது

கழுத்துக் கயிற்றின்

மதச் சின்னங்கள்

காலாவதி ஆகிப்போய்

சில்வர் செயினில்

love, cool வாசகங்கள்

சாலைகளில் முளைத்த

வழிபாட்டுத் தலங்கள்

அவ்வப்போது

நகராட்சியின் புல்டோசருக்கு

இரையாகின்றன

மதத்தை சாதியை

முன்னிறுத்தும்

அரசியல் அமைப்புகள்

யாவும்

பெரியாரின் மண்ணில்

மண்ணையே கவ்வுகின்றன

Pin It