அன்பின் அடைக்கலமே
தூய ஆற்றலின் பிறப்பிடமே
மாதர் போற்றும் மங்கையரான
மாசில்லாத மணியம்மையே
மங்கையர் உலகமே
நூற்றாண்டின் திலகமே
மதித்திடும் பெண்மையே
மணியான அம்மையே
- அன்பின்
சிறுவயதிலே தொண்டுகள் செய்யும்
தொண்டராகவே நீயானாய்
சிறுபிள்ளையாக ஈவேராவை
கண்போல் காத்துத் தாயானாய்
ஏச்சையும் பேச்சையும் ஏற்றுக் கொண்டு
எல்லோர் நலனும் நீ காத்தாய்
எளிய உடையில் பவனி வந்துநீ
பகுத்தறிவினிலே நீ பூத்தாய்
- மங்கையர் உலகமே
ஈவேராவின் ஆயுட்காலத்தை
நீட்டித்தவளும் நீயம்மா
நீடில்லாத தியாகச் சுடராய்
ஈகை அளித்த தாயம்மா
இராவணலீலா நிகழ்விலேயே
இராமனை எரித்தத் தீயம்மா
இராவும் பகலும் இயக்கப் பணியை
இணைந்து செய்த மணியம்மா
- மங்கையர் உலகமே
சுயமரியாதைப் பிரச்சாரத்தை
சுற்றிச் சுற்றி செய்தவளே
அனைவரும் அர்ச்சக ராகஎண்ணியே
மறியல் கிளர்ச்சி செய்தவளே
இயக்க நூல்களை சுமந்து சென்று
பல இதயத்தில் சேர்த்தவளே
இந்த சமூகம் ஏற்றம்பெறவே
எறும்பாய் உழைத்துக் காத்தவளே
- மங்கையர் உலகமே
‘விரட்டு’ கலைக்குழுவைச் சார்ந்த பாடகர் சித்திரைச் சேனன் எழுதி இசையமைத்துப் பாடிய பாடல்