கோடைக் காலத்தில் அனலைக் கக்கும் வெப்பக் காற்று, குளிர்காலத்தில் கடிக்கும் குளிர் ( biting cold as described by Delhi people) ஆகியன புதுதில்லியின் நிரந்தர அடையாளங்கள். சில ஆண்டுகளாகச் சுற்றுச்சூழல் பாதிப்பால் காற்றின் மாசு உச்ச நிலையைத் தொட்டுள்ளது.

பெருகி வரும் காற்றின் நச்சுத் தன்மையால் ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் நிலை உள்ளது. யமுனை நதி உலகின் 10 மாசு நிறைந்த நதிகளில் ஒன்றாக உள்ளது .

மனிதர்கள் வாழத் தகுதியற்ற இடமாக உள்ள புது தில்லியில் இருக்கின்ற நாடாளுமன்ற இடமே போதுமானது.

இந்திய ஒருமைப்பாடு என்பது உரத்த குரலில் ஒலிப்பதல்ல. பன்முக மக்களின் இணைவில் உயர்வதுதான் நாட்டின் ஒருமைப்பாடு.இந்த உயர்நெறிகள் பாசிச உணர்வுகளுக்குத் தெரியாது. அதனால் தான் எல்லா அரசியல் உயர் மரபுகளும் புதைகுழிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

தில்லியில் ஏழைகள் இஸ்லாமியர்கள் குடியிருப்புகள் இடிக்கப்படுகின்றன. புதிய நாடாளுமன்ற வளாகம் திறக்கப்படுகிறது.நல்ல வேளை நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற 18 எதிர்க் கட்சிகள் விழித்துக் கொண்டன. விழாவைப் புறக்கணிப்பு செய்துள்ளன.

 சனாதன சங் பரிவாரங்களின் செருக்கு நிறைந்த, பேராதிக்க, அறிவற்ற, வெற்று முழக்கமிடுகிற அதிகாரக் குவியலின் அடையாளம் தான் இன்றைய ஒன்றிய அரசின் ஆட்சி முறை. ஜனநாயகத்தின் அனைத்துக் கூறுகளும் சரிந்து சாய்ந்து வருகின்றன.

புதிய நாடாளுமன்ற வளாகம் எழுகிறது! ஜனநாயகம் வீழ்த்தப்படுகிறது. எந்த ஜனநாயக நாட்டிலும் இது வரை காணாத அடாத செயல். சென்ற மாதத்தில் புதுதில்லியில் சனாதன ஆட்சி பீடத்தில் ஜனநாயகமும், கூட்டாட்சி இயலும் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளன. புதுதில்லி ஆம் ஆத்மி ஆட்சியின் சார்பில் முதல்வர் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளின் அமர்வு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை மாற்றும் அதிகாரம் உள்ளது என்று சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு அளித்தது. உடனடியாக புதிய அவசரச் சட்டம் ஒன்றிய அரசால் பிறப்பிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாய்க்கப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறுவதில்லை என்பதைப் பல புள்ளிவிவர ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன.

1952 முதல் 1970 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டிலும் சராசரியாக நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்று விவாதம் செய்த நாட்கள் 121 ஆகும். 2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆண்டு சராசரி நாட்கள் 68 ஆக விழுந்துவிட்டது. 1990ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதங்கள், துறை சார்ந்த விவாதங்கள் குறைந்து வருகின்றன. இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் 43 விழுக்காட்டினர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. அவற்றில் 119 பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன.

1993ஆம் ஆண்டிற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகிற சட்டங்களை அதற்கு முன்பாகவே உரிய முறையில் பல கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆய்வு செய்து உரிய பரிந்துரைகளை வழங்குவதற்கு நிலைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. இது நாடாளுமன்ற நடவடிக்கைகள் விரைந்து நடைபெறப் பல நிலைகளில் உதவியது.

ஆனால் 2004 ஆம் ஆண்டிற்குப் பிறகு 45 விழுக்காடு சட்ட வரையறைகள் தான் நிலைக்குழுக்களின் ஆய்விற்கு அனுப்பப்பட்டன.

அதானி மோசடிகளை விசாரணை மேற்கொள்வதற்கு நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சிகள் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. பாஜக ஆட்சியால் இக்கோரிக்கை புறந்தள்ளப்பட்டது.

நீதித்துறை, சட்டம் இயற்றும் துறை ஆகிய தளங்களில் நிருவாகத்துறை, ஆக்கப்பூர்வமான அணுகுமுறையோடு செயல்பட்டால் தான் ஆட்சியியல் சீர் பெறும்.

நீதித்துறையுடன் மோதுதல், எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குதல், செய்தி தொலைக்காட்சி ஊடகங்களை அச்சுறுத்தல், நேர்மையாகச் செயல்படும் அரசின் உயர் நிலை அலுவலர்களைத் தவறான செயல்களுக்கு உறுதுணையாக இருக்க வலியுறுத்தல், ஒத்துப் போகாதவர்களைப் பழிவாங்குதல் ஆகியன மக்கள் விரோத, நாட்டு விரோத செயல்களாகும்.

இவை தான் இன்றைய பாஜக ஆட்சியின் இலட்சியம். நான் வைத்தது தான் சட்டம், ஆட்சி, நீதி என்பது பாசிசத்தின் உச்ச வடிவம். குடியரசுத் தலைவரைப் புதிய நாடாளுமன்ற வளாகத் திறப்பு விழாவிற்கு அழைத்துச் சிறப்பு செய்யாமல் புறக்கணிப்பது அரசமைப்புச் சட்டத்திற்கும் குடியரசு முறைக்கும் முற்றிலும் எதிரானதாகும்.

பழங்குடி இனத்தைச் சார்ந்த ஒரு பெண் தலைவரை அழைக்காதது தீண்டாமையாகும். அதுவும் காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சே வழக்கில் குற்றவாளி பட்டியலில் இடம் பெற்ற, விடுதலைப் போரில் பல மன்னிப்பு மடல்களைப் பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் அளித்து கெஞ்சி விடுதலை கோரிப் பெற்ற ஒரு மாபெரும் கோழை சாவர்க்கர் பிறந்தநாளில், அதுவும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் புதிய நாடாளுமன்ற வளாகத்தைத் திறப்பது சனாதனத் திமிரின் உச்சமாகும்.

பாசிசம் வீழட்டும். கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழியட்டும். தனியுடைமை கொடுங்கோன்மை சாயட்டும். பொதுவுடைமை மலரட்டும்.!

(இணையத்தில் இருந்து......)

- பேராசிரியர்.மு.நாகநாதன்

Pin It