பொதுவாக, தேர்தல்களில் கள்ள ஓட்டுப் போடுவது என்பது பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இப்போது, தேர்தலே கள்ளத் தேர்தலாக நடக்கப் போகிறதோ என்னும் அச்சத்தை, தக்க சான்றுகளுடன் ராகுல் காந்தி விளக்கி இருக்கிறார்!
அவர் கூறியிருக்கும் செய்திகள், அச்சத்தையும் அதிர்ச்சியையும் தருகின்றன என்பதைத் தாண்டி, தேர்தல் மீதும், ஜனநாயகத்தின் மீதுமே மிகப் பெரும் நம்பிக்கையின்மையைத் தோற்றுவிக்கின்றன. இப்படித்தான் தேர்தல்கள் நடைபெறுகின்றனவோ என்னும் எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது.
ஒன்றிய அரசில் இன்று ஆளுங் கட்சியாக இருக்கும் பாஜகவும், தேர்தல் ஆணையமும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான் என்பது போன்ற நிலை நாட்டில் ஏற்பட்டிருப்பது எத்தனை பெரிய அவலம் என்பதை மக்கள் உணர வேண்டும்! இப்படித் தேர்தல்கள் நடக்குமானால், இன்னும் ஒரு நூற்றாண்டிற்கும் இங்கு பாஜகதான் ஆளுங் கட்சியாக இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை!
பீகாரில் நாற்பது லட்சம் வாக்காளர்கள் திடீரென்று காணாமல் போகிறார்கள். கர்நாடகத்தில் ஒரே தொகுதியில், ஒரு லட்சம் வாக்காளர்கள் புதிதாய் வந்து குதிக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட வாக்காளர், இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்களில் வாக்காளராக இருக்கிறார். இது போன்று ஏராளமான குளறுபடிகள்!
ஒரே ஒரு முகவரியில் 80 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருக்கின்றனர். ஆனால் அந்த வீட்டில் ஒரே ஒரு படுக்கை அறைதான் இருக்கிறது!
இங்கே தரப்பட்டிருக்கும் ஒரு கட்டம் கட்டிய செய்தியில், அந்த விவரங்கள் முழுமையாக உள்ளன.
இவ்வளவு குளறுபடிகளோடு ஒரு தேர்தல் நடக்குமானால், அதனை விட ஜனநாயகத்திற்கு வேறு என்ன அவமானம் இருக்க முடியும்?
நாடே கொந்தளித்து எழ வேண்டிய தருணம் இப்போது வந்திருக்கிறது! எந்த ஒரு விவரத்தையும் தேர்தல் ஆணையம் தர மறுத்த சூழலில், 40-50 பேர் ஏறத்தாழ ஆறு மாத காலம், இரவு பகலாகப் பணியாற்றிப் பலவற்றை ஒப்பிட்டுப் பார்த்து, இந்த உண்மைகளை வெளிக் கொண்டு வந்துள்ளனர்.
இப்படி ஒரு கள்ளத் தேர்தல் நடந்தால் என்ன, நடக்காவிட்டால் என்ன என்று விரக்தி அடையத் தக்க நிலையில் இன்றைய இந்தியா இருக்கிறது!
- சுப. வீரபாண்டியன்