ஒப்பில்லா வீரனே!

உலகத் தமிழர்களின்

உண்மைத் தலைவனே!

தனித்துறை கேட்டு

மண்டியிட்டு மந்திரியாவது

அரசியல்வாதிகளின் அசிங்கம்.

தனி ஈழம் வேண்டுமென்று - நீ

போராடி நீற்பதெல்லாம்

உனக்கல்ல! உன் மகனுக்கல்ல!

உரிமைகள் மறுக்கப்பட்டு - கருவின்

உதிரம் தெரித்து ஓட

தாயோடு தளிரையும்

சேர்த்து மாய்த்து - தமிழ்

இனத்தையே அழித்திடும்

நிலை இனி வேண்டாம் - என்இனம்

நிலைத்திட வேண்டும்

என்பதற்குக் கேட்கிறாய்

தனி தமிழ் ஈழம்

எட்டுத்திக்கும் புகழ்பரப்பி

எல்லோர்க்கும் வாரித்தந்து

வீரனாக! வெற்றி வேந்தனாக!

வள்ளலாக! வாழ்ந்த தமிழினம்

அதுபோன்று மீண்டும்

வரலாற்று தமிழ்மண்ணில்

வலம் வர வேண்டும்.

உரிமைகள் யாவும் கொண்டு

நலம் பெற வேண்டும்

என்பதற்குத்தானே - உன்

ஆயுதப்போராட்டம்.

ஆனால் இங்கே

யாருக்குப் பதவி?

மகனுக்காக? மகளுக்காக? பேரனுக்கா?

எனும் காகிதப் போராட்டம்

ஆமாம்

பணம் குவியும்

துறை கேட்கும்

காகிதப் போராட்டம்.

காட்டிக் கொடுத்தவன் கருணா!

வரலாற்று கரும் பள்ளி

இங்கும் காட்டிக் கொடுக்கிறான் - ஆனால்

அவன் பெயரோ அரசியல் பெரும்புள்ளி

அழிக்கப்படும் கற்பிற்கும்!

நசுக்கப்படும் சிசுவிற்கும்!

கதறி ஓடும் கர்ப்பிணிக்கும்!

அலறிச் சாகும் முதியோர்க்கும்!

விடியல் வேண்டும் என்று கேட்டு,

சட்டசபையில் தீர்மானம்!

நாளேட்டில் கவிதை!

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜினாமா!

நாள்தோறும் பிரதமருக்கு கடிதம்!

என்றெல்லாம் செய்திருக்க - நீ என்ன

இந்திய அரசியல்வாதியா?

மாற்றிப் பேசத் தெரியாத

மறவன் அல்லவா நீ!

ஈழத்தமிழன் ஏந்திய ஆயுதம்

வன்முறைக்கல்ல!

வதைபடும் தமிழன் நிமிர்ந்து நின்று

உரிமைகள் எல்லாம் பெற்று

உயர்ந்து நிற்கத்தான்

உலகமகாவீரனே! - உதிரம்முழுவதும்

தமிழுணர்வு கொண்ட மறவனே!

விடலை பருவமுதல் - தமிழர்

விடுதலைக்கு போராடும் புலியே!

மரணமேதடா உனக்கு? - எவன் சொன்னான்

நீ இறந்துவிட்டாய் என்று?

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.