தமிழ்நாட்டின் சமூக அரசியல் அடையாளங்களாக மூன்றை குறிப்பிடலாம். மாநில உரிமை, சமூக நீதி, மதச் சார்பின்மை என்ற மூன்று கோட்பாடுகள் தான் அவை.
காமராசர் ஆட்சிக் காலத்தில் இருந்து திமுக, அதிமுக ஆட்சி வரை இதுதான் தமிழ்நாட்டு அரசியலின் அடிப்படைக் கொள்கை. இதற்கு மாறாக ஆட்சி நடத்த முயன்ற இராஜகோபாலாச்சாரி ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டார். ஜெயலலிதா ஒரு பார்ப்பனராக இருந்தாலும் கூட இந்துமத கொள்கையில் அவருக்கு ஈடுபாடு இருந்தாலும் மாநில உரிமை, சமூக நீதியைக் கொள்கையை பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.
இந்திய தேசிய கட்சியான காங்கிரஸ் ஒரு காலத்தில் இட ஒதுக்கீடு கொள்கையை ஏற்க மறுத்தது; மதச்சார்பின்மை கொள்கையையும் ஏற்க மறுத்தது; பார்ப்பனியக் கட்சியாகவே அது திகழ்ந்தது. சோனியா காந்தி தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி வந்ததற்குப் பிறகு அதில் பண்பு மாற்றங்கள் ஏற்பட்டன. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் தான் திமுகவின் வற்புறுத்தல் காரணமாக மண்டல் பரிந்துரையில் கல்விக்கான இட ஒதுக்கீட்டு உரிமைக்கான சட்டம் கொண்டு வரப்பட்டது.
பாஜகவின் தலைவரான வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அந்தக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த திமுகவின் நிர்ப்பந்தம் காரணமாக பாஜக ஆட்சியின் செயல் திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு உரிமை காப்பாற்றப்பட்டது; அயோத்தியில் ராமன் கோயில் கட்டும் முயற்சி முறியடிக்கப்பட்டது; பிற மதத்தினர் மீது இந்துமத கொள்கைகளைத் திணிக்கும் பொது சிவில் சட்டம் கொண்டுவரும் முறை தடுத்து நிறுத்தப்பட்டது. திமுக ஆட்சி வலியுறுத்திய குறைந்தபட்ச செயல்திட்டம்தான் இதற்குக் காரணம்.
ஒன்றியத்தில் 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. ஒற்றை ஆட்சியை நோக்கி இந்துராஷ்டிரத்தை அமைக்க அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களில் தனது ஆட்சியின் கீழ் பாஜக கொண்டு வந்துவிட்டது. அகில இந்திய கட்சியான காங்கிரஸ் கட்சியால் இதை முறியடிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த `திராவிட மாடல்’ ஆட்சி ஒன்று மட்டுமே இந்த ஆதிக்கத்தை எதிர்த்து துணிவுடன் களத்தில் நின்று போராடியது. தேர்தல் களத்திலும் இதே விளக்கத்தை முன்வைத்தது.
இப்போது தமிழ்நாட்டில் திமுக, அதிமுக இல்லாமல் முதல் முறையாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் தீர்ப்பளித்து இருக்கிறார்கள். வெகுமக்கள் ஆதரவோடு தனித்து போட்டியிட்ட ஜோசப் விஜய் முதலமைச்சராகி இருக்கிறார். ஆனால் ஆட்சி அமைப்பதற்குரிய 118 எண்ணிக்கையை எட்ட முடியாமல் 10 இடங்கள் குறைவாகவே கிடைத்திருக்கின்றன. இந்த எண்ணிக்கை குறைவுதான் இப்போது மிகப்பெரும் அரசியல் மாற்றங்களை, நெருக்கடிகளை உருவாக்கி இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை ஒன்றிய பாஜக ஆட்சியை தனது வாய்ப்பாக மாற்றிக் கொள்ளும் முயற்சிகளைத் தடுக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் பொதுவான உணர்வாக இருந்தது.
குடியரசுத் தலைவர் ஆட்சி வராமல் தடுக்கவும் மீண்டும் ஒரு தேர்தல் திணிப்பை எதிர்கொள்ளக்கூடாது என்ற கருத்திலும் திமுகவும் மதச்சார்பற்ற கட்சிகளும் உறுதியாக இருந்தன. அந்த அடிப்படையில் தான் திமுக அணியில் இருந்த மதச்சார்பற்ற கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தரும் சரியான முடிவை எடுத்தன. திராவிடர் விடுதலைக் கழகம் இதே கருத்தை வலியுறுத்தியது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களும் இந்தப் பிரச்சனையில் பாஜகவின் ஊடுருவலுக்கு இடம் அளித்து விடக்கூடாது என்ற கொள்கைப் பார்வையோடு தோழமைக் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தரும் முயற்சிக்கு ஆதரவாகவே இருந்தார்.
இடையில் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் ஒரு திட்டத்தை அதிமுக முன்வைத்த போது திமுகவின் பரிசீலனைக்கு பிறகு அது கைவிடப்பட்டு கருவிலேயே சிதைக்கப்பட்டது. இதுகுறித்து செய்திகள் கசிந்தவுடன் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி இத்திட்டம் மக்கள் தீர்ப்புக்கு எதிரானது; தமிழ்நாடு முதலமைச்சரின் மாண்பை சீர்குலைத்து விடும் என்று தனது எதிர்ப்பை அறிக்கையின் வழியாக பதிவு செய்தார். மக்கள் ஆதரவோடு தேர்வு பெற்றுள்ள ஒரு கட்சிக்கு ஆட்சி அமைக்க ஆதரவு தர வேண்டும் என்ற நோக்கத்தோடு மு.க.ஸ்டாலின் தனது கருத்துக்களை நாகரிகமாக வெளிப்படுத்தினார். இதன் காரணமாகவே தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்த உணர்வுகளுக்கு மதிப்பளித்து மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழ்நாட்டின் பல்வேறு தலைவர்களையும் அவர் சந்தித்து உயர்ந்த நாகரிகத்தை வெளிப்படுத்தி வருகிறார். தமிழ் நாட்டு மக்கள் இதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். அமித் ஷாக்கள் தான் கலங்கிப் போய் அடுத்த சதி திட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள்.
தனது கட்டுப்பாட்டில் உள்ள அஇஅதிமுகவை இரண்டாக உடைத்து ஒரு அணியை ஆட்சிக்கு ஆதரவாக மாற்றி ஆட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் இறங்கி இருக்கிறார்கள். திரு.வேலுமணி தலைமையில் ஒரு அணி ஆட்சிக்கு ஆதரவை தெரிவித்துள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜய் கேட்காமலே அவர்களாகவே முன்வந்து இந்த ஆதரவை தந்திருக்கிறார்கள். மற்ற தலைவர்களை சந்தித்தது போல் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் நேரில் சென்று சந்திக்கவில்லை. ஆனால் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது அதிருப்தி கொண்டு தனி அணியாக செயல்பட தொடங்கிய சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பை நேரில் சென்று சந்திருக்கிறார் விஜய். மறுநாள் சட்டமன்றத்தில் அந்த அதிருப்தி தவெகவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவு தருகிறது.
இந்தியாவில் பல மாநிலங்களில் பாஜக செய்த இந்த கட்சி உடைப்பு அரசியல் தமிழ்நாட்டில் தவெகவால் நடந்திருக்கிறது. இதன் மூலம் இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் ஆதரவை மட்டுமே நம்பி விஜய் ஆட்சி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. பாஜகவின் பக்கம் முதலமைச்சர் ஜோசப் விஜய் சாய விரும்பவில்லை என்பதற்கான அறிகுறிகள் இப்போது தென்பட்டாலும், எதிர்காலத்தில் இவர் உறுதியாக `திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகர் மு.க ஸ்டாலின் போல் உறுதியாக எதிர்த்து நிற்பாரா? என்ற கேள்வியும் எழுகிறது!
பேரவைத் தலைவர் தேர்வு ஒருமனதாக நடந்திருக்கிறது. போட்டியை உருவாக்க திமுக விரும்பவில்லை. சட்டமன்றத்தில் பேசிய அனைத்துக்கட்சி தலைவர்களும் `தமிழ், தமிழ்நாடு’ என்ற கருத்தோட்டத்தை மய்யமாக வைத்தே பேசியுள்ளனர். குறிப்பாக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாட்டின் உரிமைக்கு இந்த அவை ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதோடு, `ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக திமுக செயல்படும், எதிரி கட்சியாக செயல்படாது’ என்று அறிவித்தார். அதுமட்டுமின்றி பதவியேற்பு விழாவில் `வந்தே மாதரம்’ பாடப்பட்டதுபோல் ஆளுநர் உரையில் அதை அனுமதிக்க கூடாது என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார். `சனாதனத்தை வீழ்த்துவோம்’ என்ற முழக்கத்தோடு தனது உரையை நிறைவு செய்தார். உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு உணர்வுபூர்வாக அனைவரையும் ஈர்த்தது.
இந்த அமைச்சரவையில் ஒரு பார்ப்பனர் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அவர் இனி பார்ப்பனர்- பார்ப்பனரல்லாதார் பிரச்சனைகள் எடுபடாது என்று கூறியிருக்கிறார். அருண்ராஜ், நிர்மல்குமார் ஆகிய தீவிர மோடி ஆதரவாளர்கள் இருவரும் அமைச்சரகளாகி இருக்கிறார்கள். முதலமைச்சர் விஜயின் சோதிடர் நாதன் பண்டிட் என்பவர் முதலமைச்சரின் சிறப்புப் பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஒரு சோதிடருக்கு அரசுப் பதவி வழங்கியிருப்பது சரிதானா? சட்டமன்றத்தில் விசிகவின் வன்னிஅரசு, தேமுதிகவின் பிரேமலதா ஆகியோர் சுட்டிக்காட்டியதால் அந்த முடிவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆஸ்தான சோதிடராக இருந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த சோதிடரின் ஆலோசனைப்படிதான் முதலமைச்சர் பொட்டு வைத்து வருகிறார் போலும்!
மும்மொழி திட்டத்தின் ஒரு பகுதியான "பி.எம்.ஸ்ரீ "திட்டத்தை ஒன்றிய ஆட்சி ஏற்றுக் கொள்ள கட்டாயப்படுத்துகிறது. நீட் தேர்வின் மோசடிகள் அம்பலமாகி வருகின்றன. இந்தப் பிரச்சனைகளுக்கு புதிய ஆட்சி எப்படி முகம் கொடுக்கப் போகிறது? என்பதையும் நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப திமுக கொள்கை இளமையோடு தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய அவசியமும் தேவையும் இருக்கிறது என்பதையும் நாம் சுட்டிக் காட்டி ஆக வேண்டும். பெரியார் கருத்தியலுக்கு எப்போதும் மிக நெருக்கமாகவும் அருகிலும் இருப்பது திமுகவின் தலைமைதான் என்பதில் நாம் உறுதியாகவே இருப்போம்!
- விடுதலை இராசேந்திரன்