உலக நிலப்பரப்பில் இந்தியா 2.4 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. அதேநேரம் உலக மக்கள்தொகையில் 16 சதவிகிதத்தினர் இந்தியாவில் வாழ்கின்றனர். இந்தியாவின் நிலப்பரப்பு 32.90 கோடி ஹெக்டேர்.

இந்தியாவில் உள்ள காடுகளின் பரப்பு 7.65 கோடி ஹெக்டேர் மட்டுமே. அதாவது மொத்த நிலப்பரப்பில் 23.4 சதவிகிதம். சூழலியல் செழிப்பாக இருக்க 33 சதவிகித காடுகள் அவசியம்.

இந்தியாவில் உள்ள தரிசு நிலங்களின் பரப்பு 75 லட்சம் ஹெக்டேர். இதை காடுகளாக்க எந்த முயற்சியும் இல்லை.
இமய மலைத்தொடர் ஆசியாவின் நீர்த்தொட்டி என்று அழைக்கப்படுகிறது. உலகிலேயே துருவப் பகுதிகளுக்குப் பிறகு உலகிலேயே பனிப்பாறைகள் அதிக அடர்த்தியுடன் இங்குதான் உள்ளன. ஆனால் புவி வெப்பமடைதலால் பனி உருகி, வடஇந்தியாவில் நன்னீர் கிடைக்கும்தன்மை 30 சதவிகிதம் வரை குறைய வாய்ப்பு இருக்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் மழைப்பொழிவில் ஏற்படும் மாற்றங்களால் தென்னிந்தியாவும் பாதிக்கப்படும்.

உலகிலேயே மிகப் பெரிய கழிமுகப் பகுதி அலையாத்திக் காடுகள் மேற்கு வங்கம்-வங்கதேசத்தில் அமைந்துள்ள சுந்தரவனக் காடுகள்தான். கங்கையும், பிரம்மபுத்திராவும் இணைந்து இங்கு மிகப் பெரிய பாசனப்பகுதியையும் உருவாக்கியுள்ளன. ஆனால் புவி வெப்பமடைதலின் பாதிப்புகளில் ஒன்றான கடல்மட்ட உயர்வால், சுந்தரவனப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக கடலுக்குள் மூழ்கி அழிந்து வருகிறது.

இந்தியாவில் சுமார் 8000 கி.மீ. கடற்கரைப் பகுதி உள்ளது. இதிலிருந்து ஆண்டுக்கு 22.5 லட்சம் டன் புரத உணவு கிடைத்து வருகிறது. ரூ. 6,300 கோடி ரூபாய் அந்நியச் செலாவணியும் கிடைக்கிறது. ஆனால் கடற்கரை வளத்தை அரசு கண்மூடித்தனமாக சுரண்ட அனுமதித்து இருப்பதால், இந்த வளம் விரைவில் அழியலாம்.

உலகில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நாடுகள் வரிசையில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. இதில் கார்பன் டை ஆக்சைடு மாசை உமிழும் நிலக்கரியை எரிப்பதால் பெருமளவு கிடைக்கிறது. உலகில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 4 சதவிகிதத்தை இந்தியா பயன்படுத்துகிறது.

இந்தியாவின் தேசிய விலங்கு புலி, ஆனால் இதன் எண்ணிக்கை 1,500க்கும் குறைவு. 100 ஆண்டுகளுக்கு முன் இவற்றின் தொகை 1 லட்சமாக இருந்திருக்கிறது. பாரம்பரியமாக இந்தியாவின் அடையாளமாக யானை கருதப்படுகிறது. தமிழகத்தின் மாநில விலங்கு வரையாடு.

இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம். தமிழகத்தின் மாநில மரம் பனை. ஆனால் பனைபடு பொருட்களின் பயன்பட்டை அரசு எந்த அளவு ஊக்குவிக்கிறது என்பது நாமெல்லாம் அறிந்ததே.

Pin It