Moon2009ம் ஆண்டில் உண்டாக இருக்கும் பெளர்ணமி நாட்களில் ஜனவரி 10ஆம் தேதி தோன்றும் சந்திரன் மட்டுமே மிகவும் பிரகாசமாகவும், பெரியதாகவும் தோன்றும். சந்திரன் பூமிக்கு வெகு அருகில் வரும் நாள்தான் அந்த ஜனவரி 10ஆம் தேதி.

பூமியைச் சுற்றிவரும் சந்திரனின் பாதை முழுமையான வட்டம் இல்லை. அது ஒரு நீள்வட்டப்பாதை. 2009 ஜனவரி 10ல் மட்டும் சந்திரன் 50,000 கிலோமீட்டர் பூமியை நெருங்கிவிடுகிறது.

2009 ஜனவரி 10ஆம் தேதி சனிக்கிழமை அன்று பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் 357,000 கிலோமீட்டர்களாக இருக்கும். வழக்கத்தைவிட சந்திரன் 14% பெரியதாகவும், 30% கூடுதல் பிரகாசத்துடனும் இருக்கும் என்பது வியப்பான செய்தி இல்லையா?

- மு.குருமூர்த்தி

Pin It

நாம் இருக்கும் அண்டவெளி மிகவும் பரந்தது என்று முன்பே நாம் பார்த்தோம். பால் வீதிகளும், விண்மீன்களும், கோள்களும், சூரியன்களும் கொண்ட இந்த அண்ட வெளியின் அளவை நம்மால் கற்பனை செய்தே பார்க்க முடியாது. நாம் காணும் அண்டத்தின் ஒரு பகுதியே சுமார் 25,000 கோடி ஒளியாண்டுகள் தூரம் உடையது.

இந்த அண்டவெளி தோன்றிய விதத்தை முன்பே நாம் பேசியிருக்கிறோம். பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த அபே லெமைட்ரோ என்பவர், தனது பெரு வெடிப்புக் கொள்கையால் அதை விளக்கியிருக்கிறார். (Big Bang Theory). பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு அழுந்தி சுருங்கிய நிலையில் இருந்த இந்த அண்டம் வெடித்துச் சிதறியதால் விரிவடையத் தொடங்கியது என்பதுதான் இக்கொள்கை கூறும் கருத்து. 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் அப்படி நடந்தது. அண்ட வெளியில் உள்ள விண்மீன்கள் எரிகற்கள் போன்றவற்றையெல்லாம் நாம் முன்னரே பார்த்தோம்.

சூரியக் குடும்பம் : இந்த அண்டவெளியில் நம் பூமிக்கு அருகில் இருக்கும் சூரியனையும் அதை சுற்றிவரும் கோள்களையும் சேர்த்து நாம் சூரியக் குடும்பம் என்கிறோம். இதில் 1500 வகையான சிறு கோள்களும் (Asteroids), எரிகற்களும், வால் விண்மீன்களும் கூட அடங்கும். இந்த சூரியக்குடும்பம் எப்படி தோன்றியது என்பதைப் பற்றி பல கருத்துக்கள் நிலவுகின்றன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சூரியனை நோக்கி ஒரு விண்மீன் நெருங்கி வந்தது. இரண்டுக்கும் இடையில் ஏற்பட்ட ஈர்ப்பு விசையின் விளைவாக கதிர் அலைகள் எழுந்தன. பின்னர் சூரியனிலிருந்து பிரிந்த சில துண்டுகள் தனித்தனியே துகள்களாக, குளிர்ந்து, உருண்டு கோள்களாயின, துணைக் கோள்கள் தாம் பிரிந்த கோள்களையும், கோள்கள் சூரியனையும் சுற்றிவரத் தொடங்கின என்று ஒரு கருத்து இருக்கிறது.

ரஷ்ய அறிவியலாளர் ஆட்டோ ஷ்மிட், வேறு ஒரு கருத்தைச் சொன்னார். சூரிய மண்டலத்திலுள்ள திடப் பொருட்களும், துகள்களும், தூசுகளும் திரண்டு கோள்கள் உருவாயின என்றார். இந்த கோள்கள் சூரியனை நடுநாயகமாகக் கொண்டு சுமார் எட்டு பில்லியன் மைல் அகலத்துக்கு பரந்து விரிந்து இருக்கின்றன. சில கோள்களுக்கு இடையிலே ஒரு பில்லியன் இடைவெளி கூட உண்டு.

சூரியக் குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன் ஆகிய எட்டு கோள்கள் உள்ளன. முன்னர் இந்த வரிசையில் புளுட்டோ என்ற ஒன்றும் ஒன்பதாவது கோளாக இருந்தது. அது ஒரு கோள் அல்ல என்று அண்மையில் அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்து நீக்கி விட்டனர். இந்தக் கோள்கள் எல்லாமே ஓர் ஒழுங்கான இடைவெளிகளில் தள்ளித் தள்ளி சூரியனைச் சுற்றி வருகின்றன. இக்கோள்களை சூரியனுக்கு அருகில் இருப்பவை, சூரியனுக்கு தொலைவில் இருப்பவை என்று இரு வகையாகப் பிரிக்கலாம். உள்கோள்கள், வெளிகோள்கள் என்றும் கூட சொல்லலாம்.

புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகியவை உள்கோள்கள். இவற்றில் பூமிதான் பெரியது. இக்கோள்கள் அனைத்துமே அடர்த்தியானவை; பாறைகளால் ஆனவை. அதனால் இவைகளை புவிக் கோள்கள் என்றும்கூட அழைப்பதுண்டு. வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை வெளிக் கோள்கள். இவை அனைத்தும் உருவத்தில் பெரியவையாகும். பல துணைக்கோள்களும் கூட இவைகளுக்கு உண்டு. இந்தக் கோள்களின் பெரும்பகுதி ஹைட்ரஜன் (நீர்வளி), ஹீலியம் ஆகிய வாயுக்களால் ஆனவை. இவைகளின் சுழற்சி வேகமும் மிக அதிகம்.

இந்த கோள்கள் அனைத்துமே ஒரே சீரான இடைவெளியில் சுழல்கின்றன. சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தொலைவை ஓர் அலகாகக் கொண்டால் புதன் 1/3 தூரத்திலும், வெள்ளி 2/3 பங்கு தூரத்திலும், செவ்வாய் 1.5 மடங்கு தூரத்திலும்,வியாழன் 5 மடங்கு தூரத்திலும், சனி 10 மடங்கு தூரத்திலும், யுரேனஸ் 20 மடங்கு தூரத்திலும், நெப்டியூன் 30 மடங்கு தூரத்திலும் உள்ளன. இந்தக் கோள்கள் அனைத்தும் சூரியனை நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.

(நன்றி : தலித் முரசு அக்டோபர் 2008)

Pin It

சென்ற இதழில் நாம் விண்மீன்களில் உள்ள பல வகைகளைப் பற்றிப் பேசினோம். அதில் துடிக்கும் விண்மீன் (பல்சர்), குவாசர்களைப் பற்றி மேலும் சில தகவல்களை சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். துடிக்கும் விண்மீன்கள் தமது ஆயுட்காலம் முடிந்த சூப்பர் நோவாக்களின் எச்சங்களாகும். இவைகளில் அணுவில் இருக்கும் நியூட்ரான் துகள்கள் மட்டுமே இருப்பதால், இவைகளுக்கு நியூட்ரான் விண்மீன்கள் என்று இன்னொரு பெயரும் உண்டு. 1968இல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு துடிக்கும் விண்மீன், நொடிக்கு 30 முறை தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் விண்மீனாகும். நொடிக்கு பல ஆயிரம் முறை சுழலும் விண்மீன்களும் இவ்வகையில் உண்டு!

நமது பூமிக்கு மிகமிகத் தொலைவில் உள்ள பொருள்தான் இன்னொரு வகை விண்மீனான குவாசர். 1982இல் கண்டுபிடிக்கப்பட்ட குவாசார் விண்மீன், நமது பால்வீதியிலிருந்து நொடிக்கு 27,3000 கி.மீ. வேகத்தில் விலகிச் சென்று கொண்டிருப்பதாக அறியப்பட்டது. அப்படியெனில் அது நம்மிடத்திலிருந்து சுமார் 1300 கோடி ஒளியாண்டு தொலைவில் இருக்கும். எனவே அதன் ஒளி பூமியை வந்து அடைய 1300 கோடி ஆண்டுகள் ஆகும். ஆனால் பூமியின் வயதே என்ன தெரியுமா? 1500 கோடி ஆண்டுகள். ஒரு விண்மீனின் ஒளி பயணம் செய்யும் ஆண்டே நமது பூமியின் வயது என்பதை கற்பனை செய்தால் அண்டவெளியின் பிரம்மாண்டமும், புதிரும் விளங்கும்.

குறும்புத் தனம் செய்யும் சிறுவர்களை, ‘வால் முளைத்த குழந்தைகள்' என்று ஆசிரியர்களும், பெற்றோர்களும் சொல்வதை கேட்டிருப்பீர்களே! ஆனால், உண்மையிலேயே வால் முளைத்த விண்மீன்களும் உள்ளன தெரியுமா? ஏசு பிறந்தபோது இதுபோன்ற ஒரு விண்மீன் வானத்தில் தெரிந்ததாக கதைகளில் நீங்கள் படித்திருப்பீர்கள். இவைகளை ‘காமட்ஸ்' என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். இந்த வகை விண்மீன்கள் வானத்தில் தெரியும் போது உலக மக்களுக்கு பேராபத்துகளோ, மகிழ்ச்சியோ ஏற்படும் என்றும் மூடநம்பிக்கைகள் இருக்கின்றன. இது உண்மை அல்ல.

ஹாலி என்ற வால் விண்மீன் கி.மு.240 முதல் கி.பி. 1910 வரை 28 முறை தோன்றியுள்ளது. வால் விண்மீன்களுக்கு தலைப்பகுதி ஒளிவட்டம் கொண்டிருக்கும். இது 30,000 முதல் 10,00,000 மைல்கள் வரை அளவு இருக்கும். வால் பகுதியோ 50 லட்சம் மைல்கள் நீளம் கொண்டதாக இருக்கும். இந்த வால் விண்மீன்கள் நீள் வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. இந்த சுற்றுதலில் சுமார் 40,000 கோடி மைல்களுக்கு அப்பால் சென்று வருகின்றன. அதனால் தான் எப்போதாவது ஒரு முறை தோன்றுகின்றன. எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை இவை தோன்றும் என்பதை வைத்து, இவைகளை அறிவியல் அறிஞர்கள் வகை பிரிக்கிறார்கள்.

‘எங்கி' என்ற வால் விண்மீன் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும். ஹாலி வால் விண்மீன் 75 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும். இப்படி 100, 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் வால் விண்மீன்களும் கூட உண்டு! 1864ஆம் ஆண்டு தெரிந்த ஒரு வால் விண்மீன் 20 லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு தான் இனி தோன்றும் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள். நம் நாட்டைச் சேர்ந்த ஓர் அறிவியலாளரின் பெயர் ஒரு வால் விண்மீனுக்கு வைக்கப்பட்டுள்ளது தெரியுமா? அவர் பெயர் எம்.கே.வி. பாப்பு. இவர் ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் ஆய்வு நடத்தியபோது ஒரு வால் விண்மீனை கண்டுபிடித்தார். அதனால் அவ்வால் விண்மீனுக்கு The Bappu Box Kint Comet என்று பெயர் வைக்கப்பட்டது. எதிர்காலத்தில் நீங்கள் இப்படி ஒரு வால் விண்மீனை கண்டுபிடித்தால், உங்கள் பெயரும் அவ்விண்மீனுக்கு வைக்கப்படலாம்! இவரின் முயற்சியால் தான் நமது மாநிலத்தில் உள்ள வேலூர் மாவட்டத்தில், காவலூர் தொலைநோக்கி ஆய்வு நிலையம் அமைக்கப்பட்டது. ஆசியாவிலேயே மிகப்பெரிய வானவியல் தொலைநோக்கி ஆய்வு நிலையம் இதுதான்.

(நன்றி : தலித் முரசு ஆகஸ்ட் 2008)

Pin It

அண்டம்

ஓர் உயிர் உருவாகும் மூலத்தை தான் நாம் ‘அண்டம்’ என அழைக்கிறோம். எனவே தான் உயிரை உருவாக்கும் கரு முட்டைக்குக்கூட அறிவியலில் அண்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பல கோடி உயிர்களைக் கொண்ட புவியையும், விண்மீன்களையும், கோள்களையும், விண்மீன் கூட்டங்களையும், வெற்றிடங்களையும் தனக்குள்ளே வைத்திருக்கும் பிரபஞ்சத்தை கூட நாம் அண்டம் என்றே அழைக்கிறோம். அண்டம் என்ற பெயருக்கு ஏற்ப அது அகண்டும் இருக்கிறது!

ஒளி ஆண்டு

உலகிலேயே மிகவும் வேகமாக பயணம் செய்யும் ஆற்றல் பெற்றவை ஒளிக்கதிர்கள் மட்டும்தான். ஓர் ஒளிக்கற்றை ஓர் ஆண்டில் பயணம் செய்து கடக்கின்ற தூரம் தான் ஓர் ஒளியாண்டு என அழைக்கப்படுகிறது. அப்படியானால் ஒளி ஒரு வினாடி நேரத்தில் பயணம் செய்யும் தொலைவு என்ன? ஒளி ஒரு வினாடி நேரத்தில் 3,00,000 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்கிறது (1,86,000 மைல்கள்). வினாடி கணக்கை நாம் அப்படியே ஓர் ஆண்டுக்கு மாற்றலாம்.

ஒரு வினாடிக்கு ஒளி பயணம் செய்யும் வேகம் 3 x 108 என்ற அளவீட்டால் குறிக்கப்படுகிறது. இந்த அளவீட்டுடன் நாம் ஓர் ஆண்டின் மொத்த நாட்களையும், ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரத்தையும், ஒரு மணி நேரத்தின் அறுபது நிமிடங்களையும், ஒரு நிமிடத்தின் அறுபது வினாடிகளையும் சேர்த்து பெருக்கிக் கொள்ளலாம்.

ஓர் ஒளி ஆண்டு 3 x 108 x 365 x 24 x 60 x 60 விடை என்ன தெரியுமா? 7.46 மில்லியன் (ஒரு மில்லியன் = 10 லட்சம்) கிலோ மீட்டர் (5.88 மில்லியன் மைல்கள்). இவ்வளவு வேகமாகப் பயணம் செய்யும் ஒளியே, நாம் வாழும் புவியும் சூரியனும் இடம் பெற்றுள்ள பால்வெளி என்கிற விண்மீன் திரளை கடக்க பல ஆயிரம் ஆண்டுகள் பயணம் செய்யவேண்டும். பால் வெளியின் தூரம் சுமார் 1,00,000 ஒளி ஆண்டுகள் ஆகும்.

-(நன்றி : தலித் முரசு ஏப்ரல் 2008)

Pin It