சூரிய மண்டலத்தில் சிறு துண்டுகளாக சுற்றி திரியும் விண்கற்கள் பல உள்ளன. அவை பெரும்பாலும் சூரியனை மையமாகக் கொண்டு தான் சுற்றி வருகின்றன. அவ்வாறு சுற்றி வரும் விண்கற்கள் சில வேளைகளில் கிரகங்களில் மோதுவதும் உண்டு.

அவ்வாறான ஒரு மோதலின் போது தான் பூமியில் காணப்பட்ட டைனோசரஸ் போன்ற பழங்கால உயிரினங்கள் அழிந்து போனதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

2005-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி ராபர்ட் மெக்மில்லன் என்பவர் ஒரு விண்கல்லை கண்டுபிடித்தார். இந்த விண்கல்லுக்கு 2005 YU55 என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது ஏறக்குறைய கோள வடிவில் உள்ளதாகவும் இதனுடைய விட்டம் 400 மீட்டர்கள் (1,300 அடிகள்) இருக்கும் எனவும் கணக்கிட்டுள்ளனர். இது மெதுவாக சுழல்கிறது எனவும் ஒரு முழு சுழற்சிக்கு 18 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இதனுடைய மேற்பரப்பு மிகக்கருமையாக காணப்படுகிறது.

வரும் நவம்பர் 8-ம் தேதி 23:28 மணிக்கு (இந்திய நேரப்படி நவ.9 அதிகாலை 04:58 மணி) இந்த விண்கல் பூமிக்கு அருகில் வரவிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமிக்கு அருகில் வருகிறது என்பதால் பயப்பட வேண்டிய தேவையில்லை. அது பூமியின் மீது மோதுவதற்கோ அல்லது வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்துவதற்கோ வாய்ப்பில்லை. குறிப்பாக அதனுடைய ஈர்ப்புவிசை காரணமாக பூமியின் மீது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை.

இந்த விண்கல் தனது சுற்றுப்பாதையில் வரும்போது 3,24,600 கிலோ மீட்டர்கள் (2,01,700 மைல்கள்) வரை பூமியை நெருங்கி வரும் எனக் கணித்துள்ளனர். இது பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரத்தில் 0.85 மடங்கு மட்டுமே. எனவேதான் பூமியை நெருங்குகிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். புவியின் வட, தென் பாகங்களிலிருந்து இதனை நன்றாக கவனிக்க முடியும்.

நவம்பர் 4-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதி வரை இந்த விண்கல்லை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணிக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாஸாவின் விஞ்ஞானிகள் கோல்ஸ்டன்(Goldstone) என்னுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள டெலஸ்கோப் மூலமும் பியர்டோ ரிகா(Puerto Rico)வில் உள்ள ரேடார் அமைப்புகள் மூலம் தீவிரமாக கண்காணிக்கவுள்ளனர். இதனை ஒளியியல், அகச்சிகப்பு, ரேடார் தொழில்நுட்பங்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1976-ம் ஆண்டு 2010 XC15 என்ற ஒரு விண்கல் சந்திரனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரத்தைப்போல் 0.5 மடங்குக்கு நெருங்கி வந்தது. அப்போது விஞ்ஞானிகள் அதை கவனிக்க தவறி விட்டனர். எனவே, இம்முறை நெருங்கி வரும் 2005 YU55ஐ மிகத் தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

அடுத்து 2028-ம் ஆண்டு 2001 WN5 என்ற விண்கல் பூமியை நெருங்க உள்ளது. அது சந்திரனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரத்தைப்போல் 0.6 மடங்குக்கு நெருங்கி வரவுள்ளது. எனவேதான் விஞ்ஞானிகள் இம்முறை விண்கல்லை கண்காணிப்பதில் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Pin It