கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை இரண்டு ஆண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டு பிறகு அந்த அறிக்கையை திருத்தி எழுதித் தருமாறு ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியது.

 அதில் திருத்துவதற்கு எதுவும் இல்லை என்று ஆய்வாளர் மறுத்து விட்டார். ஆய்வாளர் அமர்நாத் மீண்டும் நொய்டாவுக்கு இடமாற்றம் செய்து பழி வாங்கப்பட்டுளளார்.

இப்போது அந்த அறிக்கை போதுமானது அல்ல, மேலும் தகவல்கள் தேவைப்படுகிறது என்று ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் சேக்வாத் சென்னையில் பேட்டியளித்து இருக்கிறார்.

ஆய்வாளர் அமர்நாத் பாஜக விரும்புகிறபடி அறிக்கையை திருத்தி அனுப்பி இருந்தால் அதை வெளியிட்டு இருப்பார்கள். இப்போது ஆர்எஸ்எஸ் ரசாயன பரிசோதனை ஆலைக்கு அனுப்பி சோதனை செய்த பிறகு அதை அங்கீகரிப்பார்கள் போலும்.

வேதத்தில் கூறப்படும் சரஸ்வதி என்ற ஆறு எங்கே இருக்கிறது, என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவே இல்லை. இதைக் கண்டுபிடிப்பதற்காகவே பல கோடி ரூபாய் பணத்தை ஒதுக்கி இன்னமும் ஆண்டுகணக்கில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

தேடிக் கொண்டிருக்கின்ற ஒரு ஆற்றின் நாகரீகத்தை ஏற்கனவே நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இதுதான் எங்கள் நாகரீகம்: சரஸ்வதி நாகரீகம் என்று கூறிவிட்டார். திருத்துவதற்கு அது பிஹெச்டி ஆய்வு அல்ல தொல்லியல் ஆய்வு.

இடிக்கப்பட்ட பாபர் மசூதியில் தான் ராமர் கோயில் இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக் கூறி நம்பிக்கையின் அடிப்படையில் தான் கோயிலை கட்டுவதற்கு அனுமதி அளித்தது. இதற்கெல்லாம் அவர்களுக்கு ஆதாரம் தேவையில்லை.

ஆனால் 5 ஆயிரத்து 350 ஆண்டுகளுக்கு முன்பு மதம் இல்லாத ஒரு வாழ்க்கையை தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள், என்ற ஆய்வை உலக அறிவியல் ஆய்வுகள் ஏற்றுக் கொண்டாலும் வெளியிட மாட்டார்கள்.அவர்களுக்கு அகழ்வாராய்ச்சி அறிக்கையை விட மேலும் ஆதாரங்கள் தேவைப்படுகிறது. பாஜக அணிக்குள் பதுங்கி நிற்கின்றவர்கள் இது பற்றி எல்லாம் வாய் திறக்க மாட்டார்கள்.

எடப்பாடியைக் கேட்டால் இவையெல்லாம் அறிஞர்களுடைய பிரச்சனை என்று ஒதுங்கி விடுவார். தமிழ்நாடு பாஜகவோ நாங்கள் எல்லாம் "பாரதியர்கள்" ஆகிவிட்டோம்; தமிழர்கள் என்பது பிரிவினை மனப்பான்மை என்று தேசபக்தியுடன் பதில் சொல்லுவார்கள்.

- விடுதலை இராசேந்திரன்