கீழடியில் அகழாய்வை 2014ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை பொறுப்பேற்று நடத்திய அலுவலர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தனது அறிக்கையை 30.01.2023 அன்று இந்திய தொல்லியல் துறைக்கு அனுப்பினார். அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது இந்திய தொல்லியல் துறை அறிக்கையில் திருத்தம் செய்யுமாறு கூறியுள்ளது. அண்மையில் சென்னை வந்த ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் "கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை ஏற்று இசைவளிக்க இன்னும் அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் நிறைய தேவை" என்று கூறியுள்ளார்.
கீழடியின் நாகரிகம் (கி.மு 600 - 300) 2600 ஆண்டு பழமையானது என பல்வேறு மட்டத்தில் எடுக்கப்பட்ட ஆறு பொருட்களின் கார்பன் ஆய்வு மூலம் கண்டறிந்து அமெரிக்காவைச் சேர்ந்த பீட்டா ஆய்வகம் சான்றிதழ் அளித்துள்ளது. Carbon Dating, AMS - Accelerator Mass Spectrometry) போன்ற தொல்லியல் துறையின் உயரிய தொழில்நுட்ப முறைகளில் கீழடியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வறிக்கையில் "முதல் காலகட்டத்தை கி.மு. 8 - 5 ஆம் நூற்றாண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளதை கி.மு என்று மாற்றியமைக்குமாறு இந்திய தொல்லியல் துறை கேட்டுக் கொண்டதன் மூலம் அவர்கள் சிந்து சமவெளி நாகரீகத்திற்கு பிந்தையது தான் கீழடி நாகரீகம் என்று நிறுவ முயற்சிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
ஒன்றிய அரசு 2017 ஆம் ஆண்டு கீழடி அகழாய்வு பணிகளை நிறுத்தியதுடன் அலுவலர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மற்றும் அவரது குழுவில் பணியாற்றிய 25 பேரையும் கூண்டோடு பணியிட மாற்றம் செய்தது. அதைக் கண்டித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் பேரா.சுப.வீ அவர்களின் தலைமையில் கீழடியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை மைசூர் கொண்டு செல்ல முயன்ற போது சங்கம் 4 அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி மதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதை தடுத்தி நிறுத்தினார். அகழாய்வுக்கான நிதியையும் ஒன்றிய அரசு நிறுத்தியதால் தற்போது அகழாய்வு தமிழ்நாடு அரசின் நிதியின் மூலம் மட்டுமே நடைபெற்று வருகிறது.
அறிவியல்பூர்வமாக நவீன தொழில்நுட்ப முறையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளை ஏற்க மறுக்கும் இவர்கள் எந்த அடிப்படையில் இராமர் பாலம் இருப்பதாகக் கூறி சேது சமுத்திரத் திட்டத்தை தடுத்து நிறுத்தினார்கள். கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களுடன் இந்து மத அடையாளச் சின்னம் ஏதேனும் ஒன்று கிடைத்து இருந்தால் உடனடியாக இவர்கள் இந்த ஆய்வறிக்கையை ஏற்றுக்கொண்டு இசைவளித்திருப்பார்கள். இந்த ஆய்வறிக்கையை இப்படியே வெளியிட்டால் "தமிழர்கள் மதமற்றவர்கள், கீழடி காலக்கட்டத்தில் இந்து மதம் என்ற ஒன்று இல்லை, கீழடி நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகத்திற்கு மூத்த நாகரீகம்" போன்ற உண்மைகள் உறுதியாகி விடும் என்பதால் கீழடி ஆய்வறிக்கையை வெளியிடாமல் முட்டுக்கட்டை போடுகின்றனர்.
"சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டவை வெறும் கற்பனை அல்ல. அவை உண்மை நிகழ்வுகளின் தொகுப்பு" என்பதை கீழடி அகழாய்வு ஆதாரங்களோடு எடுத்துக் காட்டியிருக்கிறது. கீழடி ஆய்வறிக்கையின் அம்சங்களையும், அதை ஏற்க மறுக்கும் ஒன்றிய அரசின் சூழ்ச்சியையும் மக்கள் மத்தியில் விளக்கிட விரிவான பரப்புரை மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழர்களின் தொன்மையை காத்திட போர்க்கொடி உயர்த்துவோம்.
- வழக்கறிஞர் இராம.வைரமுத்து