முருகக் கடவுளை பாஜக தலைவராக மாற்றிவிட்டது மதுரை அரசியல் மாநாடு. இவர்களைவிட முருகனை அவமதிப்பவர்கள் வேறு யாருமே இருக்க முடியாது.
கர்ப்பக்கிரகத்தில் வேத மந்திரத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டு சக்தி உடையவனாக அறிவிக்கப்பட்ட முருகனை இவர்கள் நம்பவில்லை.அதனால் தான் மதுரை மாநாட்டு திடலுக்கு இழுத்து வந்து அங்கே செட்டுகளைப் போட்டு கர்ப்பக்கிரக முருகனை விட ‘செட்டுமுருகன்' தான் எங்களுக்கான தலைவன் என்று மதுரை மாநாடு அறிவித்திருக்கிறது.
உண்மையிலேயே இவர்களுக்கு முருக பக்தி இருந்திருக்கும் என்று சொன்னால் என்ன செய்திருக்க வேண்டும்? முருகன் கோவிலுக்குப் போய் இந்து விரோதிகளை சூரசம்காரம் செய்; திராவிடத்தை அழித்து ஒழிக்க வெளியே வா என்று டிக்கெட் வாங்கி அர்ச்சனை செய்திருக்க வேண்டும். ஆனால் முருகன் இதை எல்லாம் ஏற்றுக்கொண்டு செயல்படுத்த மாட்டான் என்று நம்பிக்கை இழந்து தான் அரசியல் மேடைக்கு கடத்தி வந்து கடவுளை குறியீடாக்கி விட்டனர்.
குறிஞ்சி நிலத் தலைவனாகக் கருதப்படும் முருகன் காலத்தில் இந்து மதம் என்ற ஒரு மதமே கிடையாது! அவனை எப்படி இந்து மதத்தில் இவர்கள் சேர்த்தார்கள்? இப்போது பாஜகவில் சேர்த்தது போல் தான் இந்த கதையும் நடந்து இருக்கிறது!
இந்துக்கள் ஒன்று சேர வேண்டும் என்று இவர்கள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். இந்து சமூகத்தில் ஒற்றுமை இல்லை என்பதை இந்த நாட்டின் சட்டங்களே உறுதிப்படுத்துகின்றன.
அப்படி ஒற்றுமை இருந்திருக்கும் என்று சொன்னால் வன்கொடுமை தடுப்பு சட்டமும் இட ஒதுக்கீடு சட்டமும் தேவையே இல்லை, இந்து மதம் சமூகத்தை ஒற்றுமைப்படுத்தவில்லை என்பதற்கு இந்த சட்டங்களே சாட்சி கூறுகின்றன.
இந்து எதிர்ப்பாளர்களுக்கு ஓட்டு போடக்கூடாது என்று மற்றொரு தீர்மானம் கூறுகிறது. அப்படியானால் அவர்களிடம் ஒரு கேள்வி இருக்கிறது, பாஜக பரிவார இந்துக்களாகிய நாங்கள் இந்து எதிர்ப்பாளர்களுக்கு வணிகம் செய்ய மாட்டோம்; மருத்துவம் பார்க்க மாட்டோம்; தொழில் செய்ய மாட்டோம்; கட்டுமானம் செய்ய மாட்டோம்; வட்டிக்கு கடன் தர மாட்டோம்; வேலைக்கு ஆட்களை நியமிக்க மாட்டோம் என்று தீர்மானம் போடுவார்களா?
இந்த அரசியல் காமெடியில் மாஜி அதிமுக அமைச்சர்களும் பங்கேற்று பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள் அவமதிக்கப்பட்ட திரைக் காட்சிகளைப் பார்த்து ரசித்திருக்கிறார்கள். சந்தி சிரிக்கிறது கூட்டணி தர்மம்!
- விடுதலை இராசேந்திரன்