பெரியார் முன் வைத்த ‘திராவிடர்’ கோட்பாட்டுக்கு தவறான வரலாற்று உண்மைகளுக்கு மாறான திரிபுகளும் திருத்தல்களும் சில முகாம்களில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அந்த பொய்மைகள் ஒவ்வொன்றாக அம்பலப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், ‘திராவிடம், பெரியாரியம் இன்றும் தேவையே’ எனும் தலைப்பில், கவிஞர் தமிழேந்தியை பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிட்டிருக்கும் இந்த நூல் மிகச் சிறந்த கருத்தாய்வாக வெளிவந்திருக்கிறது. பெரியார் தமிழுக்கு எதிரி; திராவிடர் கழகம் பெயர் மாற்றத்தை திடீர் என்று மேற்கொண்டார்; 1938 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தியவர்கள் தமிழ்ப் பண்டிதர்களே தவிர பெரியார் அல்ல; பெரியார் முன் வைத்த திராவிடம், ஆந்திர, கர்நாடக, கேரளத்தவருக்கு துணை செய்தது; பெரியார் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரி போன்ற உண்மைக் கலப்பற்ற வாதங்களை சுக்குநூறாக தகர்த்தெறியும் - பல்வேறு சிந்தனையாளர்களின் ஆழமான கட்டுரைகள் இடம் பெற்றிருப்பதோடு, தோழர் வே. ஆனைமுத்து, பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோரின் பேட்டிகளும் பெரியாருக்கு எதிரான வரலாற்றுப் புரட்டுகளை அம்பலப்படுத்துகிறது. பெரியாரியலாளர்களுக்கு வெளிச்சமும், திரிபுவாதிகளின் குழப்பங்களுக்கு ஆணித்தர மறுப்பாகவும் வெளி வந்துள்ள இந்த நூல் படிக்கவும் பரப்புவதற்கும் தகுதியான சிறந்த ஆவணமாகும்.

வெளியீடு: புரட்சிக் கவிஞர் கலை இலக்கிய மன்றம், வள்ளுவர் இல்லம், 44, இராசாசி வீதி, அரக்கோணம்-631001. பேசி:9443432069 152 பக்கங்கள். விலை: ரூ.70.

Pin It