திராவிட எதிர்ப்பு என்பதே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ‘ஒற்றைத் தீர்வு’ என்று நிழல் யுத்தம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார்கள், தோழர்கள் மணியரசனும் (தமிழ் தேச பேரியக்கம்), சீமானும் (நாம் தமிழர் கட்சி). இதற்கு தமிழர் ‘மெய்யியல்’, ‘அறம்’ என்றெல்லாம் உள்ளடக்க விளக்கம் ஏதுமற்ற ‘சொல்லா டல்களை’ போர்த்திக் கொண்டு தத்துவமளிக்கும் முயற்சிகள் வேறு நடக்கின்றன.

19.9.2021 அன்று கருத்தரங்கில் ‘திராவிட எதிர்ப்பு’ கூச்சலுக்கு ஆழமான எதிர்வினைகள் வரலாற்று தரவுகளோடு முன் வைத்து பல சிந்தனையாளர்கள் உரையாற்றினார்கள். அதன் மய்யமான கருத்துத் தொகுப்புகளை சுருக்கமாக இளைய தலைமுறையின் சிந்தனைக்கு ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சிறு சிறு பகுதிகளாகத் தொடர்ந்து வெளியிட இருக்கிறது.

மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சியின் தோழரும் பெரியாரிய ஆய்வாளருமான வாலாஜா வல்லவன் நிகழ்த்திய உரையிலிருந்து சில வரலாற்றுச் செய்திகளை தேர்வு செய்து இங்கே தொகுத்து தருகிறோம்.

திராவிட இயக்கம் கேட்டது கேரளம் - ஆந்திரா - கருநாடகா - தமிழ் நாட்டை ஒரே பிரதேசமாக்கும் திராவிட நாடா?

valasa vallavan 2371. அப்படிக் கூறுவது அபத்தம், வரலாற்றுப் புரட்டு. நீதிக் கட்சி முன்னோடிகளில் ஒருவரான டி.எம். நாயர், தென்னிந்திய நான்கு மாநிலங்களையும் தனித் தனி நாடுகளாக அங்கீகரிக்கும் கூட்டாட்சி ஒன்றை உருவாக்க வேண்டும் என்றே வற்புறுத்தினார். ‘ஜஸ்டிஸ்’, ‘திராவிடன்’ ஏடுகளில் இது குறித்து விரிவாக எழுதியிருக்கிறார்.

2. தி.மு.க. கேட்ட ‘திராவிட நாடு’ என்பதும், நான்கு மாநிலங்களையும் உள்ளடக்கிய ‘திராவிடக் கூட்டாட்சி’யைத்தான். 1944இல் தி.மு.க.வுக்கு சூட்டப்பட்ட பெயரே (திராவிட முற்போக்குக் கூட்டமைப்பு கழகம்’ (Dravidian Progressive Federation) என்பதாகும். அப்படித் தான் தி.மு.க. சட்டப் புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டது. பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் என்று மாற்றப்பட்டது. அதில் ‘முன்னேற்றம்’ என்பது ‘மேம்பாடு’ என்ற பொருளில் அல்ல; ‘முற்போக்கு’ என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது.

நீதிக்கட்சி, தமிழரை - தமிழைப் புறக்கணித்து தெலுங்கர்களுக்கு - தெலுங்குக்கு ஆதரவாகவே செயல்பட்டதா?

1. புரட்டுவாதம் 1928இல் நீதிக்கட்சி தான் தமிழ் அகராதியை (லெக்சிகன்) வெளியிட்டது.

2. 1925ஆம் ஆண்டு வரை சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் புலவர் பட்டம் பெற வேண்டுமானால் கட்டாயம் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கினார்கள். நீதிக்கட்சியின் முதல்வரான பனகல் அரசர் தான், புலவர் படிப்புக்கு சமஸ்கிருதம் தேவை இல்லை என்ற உத்தரவைப் பிறப்பித்தார். மறைமலையடிகள் பேரன் சாரதா நம்பியூரான் முனைவர் பட்ட ஆய்வு நூலில் இதை விரிவாகப் பதிவு செய்துள்ளார். தனது முனைவர் பட்ட ஆய்வை அவர் இலண்டன் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தார். அந்த ஆய்வு, திருநாவுக்கரசு, ‘நம்நாடு’ முத்துகிருட்டிணன் ஆகியோரின் மொழி பெயர்ப்பில் தமிழில் வெளி வந்திருக்கிறது.

3. சைவ நெறியைப் போற்றியவரும் தனித் தமிழ் இயக்கத்தை நடத்தியவருமான மறைமலையடிகள் எழுதிய ‘அறிவுரைக் கொத்து’ நூல் சென்னை பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டிருந்தது. அதற்கு பார்ப்பனர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தபோது நூல் தடை செய்யப்பட்டது. பெரியார் மறைமலையடி களாருக்கு இடையே ‘சைவம்’ குறித்து முரண்பாடுகள் இருந்த நிலையில், பெரியார், மறைமலை அடிகளார் பக்கம் நின்று நூல் தடை செய்ததை எதிர்த்து, அதை இயக்கமாக்கினார். நாடு முழுதும் உள்ள சுயமரியாதை இயக்கங்கள் ‘அறிவுரைக் கொத்து’த் தடைக்கு எதிராகக் கண்டனத் தீர்மானங்களைப் போட வேண்டுகோள் விடுத்தார். கண்டனங்கள் குவிந்தன (1935 ‘குடிஅரசு’, இந்த செய்திகளை பதிவு செய்திருக்கிறது).

4. மறைமலை அடிகள், 1902இல் இதழ் தொடங்கி, 1916இல் தனித் தமிழ் இயக்கத்தைத் தொடங்கினாலும் 1920க்குப் பிறகு தான் அந்த இயக்கம் வளரத் தொடங்கியது. அதற்குக் காரணம், 1916இல் தொடங்கிய பார்ப்பனரல்லாதார் இயக்கம் உருவாக்கிய தாக்கம் தான் என்று சாரதா நம்பியூரான், தனது முனைவர் பட்ட ஆய்வில் விளக்குகிறார். பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஊட்டிய உணர்வே வடமொழி எதிர்ப்பு இயக்கத்துக்கு உரமூட்டியது.

இந்தி எதிர்ப்பு - மக்கள் இயக்கமாக்கியது யார்?

இந்தி எதிர்ப்பு இயக்கத்தை மறைமலை அடிகள், சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழறிஞர்கள்தான் தொடங்கினார்கள். பெரியார் இடையில் வந்து புகுந்து கொண்டார் என்று பெ. மணியரசன் பேசுவது சரியா?

1. இது, கலப்படமற்ற பொய். 1926ஆம் ஆண்டிலேயே இந்தியை எதிர்த்து பெரியார், ‘குடிஅரசு’ ஏட்டில் எழுதினார். 1931இல் நன்னிலம் என்ற தஞ்சை மாவட்டத்திலுள்ள ஊரில் இந்தியை எதிர்த்துப் பேசினார். 1930இல் வன்னியர் சங்க மாநாட்டில் பேசிய பெரியார், “இந்தியா ஒரு நேஷனா? (நாடா?)” என்ற கேள்வியை எழுப்பி இந்தியை எதிர்த்தார். (1.6.1931 ‘குடிஅரசு’ இதழில் இந்தப் பேச்சு வெளி வந்திருக்கிறது)

2. 1938இல் இராஜகோபாலாச்சாரி பள்ளிகளில் கட்டாய இந்தித் திணிப்பைக் கொண்டு வந்தபோது தமிழ்நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்தது. ஓராண்டு காலம் பெரியார் போராடினார். 1938 ஆகஸ்ட் மாதம் திருச்சியி லிருந்து பெரியார் இயக்க சார்பில், பட்டுக்கோட்டை அழகிரியைத் தளபதி யாகக் கொண்டு மூவலூர் இராமாமிர்தத்தம்மையார் உள்ளிட்ட 102 பேர் பங்கேற்ற இந்தி எதிர்ப்புப் படை சென்னை நோக்கி புறப்பட்டது. 42 நாட்கள் நடந்தே சென்னை வந்தனர். அது கடுமையான மழைக் காலம். இரண்டு இடங்களில் கழுத்தளவு வெள்ளத்தில் நீந்தி ஆற்றைக் கடந்து படை நகர்ந்தது. பகல் முழுதும் கிராமங்களில் பிரச்சாரம் மாலையில் பொதுக் கூட்டம் படையை திருச்சியிலிருந்து வழியனுப்பி வைக்கும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர் கி.ஆ.பெ. விசுவநாதம் மற்றும் பெரியார் தொண்டர் தி.பொ. வேதாசலம்.

3. சென்னை கடற்கரையில் ஒன்றரை இலட்சம் மக்கள் கூடிய இந்தி எதிர்ப்புக் கூட்டத்துக்கு படை வந்து சேர்ந்தது. 11.9.1938இல் நடந்த அந்தக் கூட்டத்தின் தலைவர் மறைமலை அடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார் - வரவேற்புரை. நிறைவுரையாற்றியவர் பெரியார். அடுத்தக்கட்டத்தில் மறைமலை அடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார், பெரியார் - தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை முன் வைத்தனர்.

4. பெரியார் இந்தி எதிர்ப்பை முன்னெடுக்கவில்லை என்றும் தமிழ் அறிஞர்கள் தான் முன்னெடுத்தனர் என்றும் மணியரசன் பேசுகிறார். அவரிடம் கேட்கிறேன், அந்த ஒரு கூட்டத்துக்குப் பிறகு அடுத்த 40 ஆண்டுகள் வரை மறைமலையடிகள் ஒரு முறைகூட தமிழ்நாடு தமிழருக்கே எனும் முழக்கத்தை முன் வைத்ததே இல்லை. அப்படிப் பேசினார் என்பதற்கு உங்களால் ஆதாரம் காட்ட முடியுமா?

• அந்தப் போராட்டத்தில் மறைமலை அடிகளையோ நாவலரையோ அன்றைய இராஜகோபாலாச்சாரி கைது செய்யவில்லை. பெரியாரைத் தான் கைது செய்தது. பெண்கள் மாநாடு நடத்தி இந்தி எதிர்ப்புக்காகப் பெண்களை தூண்டி விட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் 3 ஆண்டுகள் தண்டிக்கப்பட்டார். தமிழ் நாட்டு சிறையில் வைத்தால் தமிழர்கள் சந்திப்பார்கள் என்பதற்காக பெல்லாரி சிறையில் பெரியாரை அடைக்க இராஜகோபாலாச்சாரி உத்தரவிட்டார்.

• இந்தி எதிர்ப்புக்காக அன்றைய இராஜகோபாலாச்சாரி ஆட்சி, பெரியாரை பழி வாங்கத் துடித்தது. அப்போது நீதிக்கட்சித் தலைவராக இருந்த பொப்பிலி அரசர், தென்னாப்பிரிக்க நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து விட்டு சென்னை திரும்பிய நிலையில் ஆச்சாரியார் அவரை அழைத்து நீதிக்கட்சித் தலைவர் பதவியிலிருந்து ‘இராஜினாமா செய்; இல்லாவிட்டால் ஜமீன்தார் ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்து, சொத்துகளைப் பறி முதல் செய்வேன்’ என்று மிரட்டி னார். ஜமீன்தார்கள் அனைவரும் பொப்பிலி அரசனிடம் சென்று பதவி விலகி விடுங்கள் என்று மன்றாடினர். பொப்பிலி அரசர், நீதிக்கட்சித் தலைவர் பதவியி லிருந்து விலகினார். நீதிக்கட்சி தலைவர் இல்லாத கட்சியாகவே இருந்தது.

• அந்த நெருக்கடியான காலகட்டத்தில் பெரியார் தான் கட்சித் தலைவராக இருக்க வேண்டும். அதற்கு அவரை வலியுறுத்தி ஏற்கச் செய்ய வேண்டும் என்று இரண்டு தலைவர்கள் பெல்லாரி சிறைக்குப் போய் பெரியாரைச் சந்திக் கிறார்கள். ஒருவர் சர். ஏ.டி. பன்னீர் செல்வம் (பார்-அட்-லா படித்த வழக்கறிஞர், சுயமரியாதை இயக்க ஆதரவாளர், மாவட்ட நிர்வாகத் தலைவர் என்ற பதவிகளில் இருந்தவர். இந்தியாவுக்கு பொறுப்பு வகிக்கும் பிரிட்டிஷ் அமைச்சரின் ஆலோசகர் பொறுப்புக்குத் தேர்வாகி, விமானத்தில் இலண்டன் செல்லும்போது விமான விபத்தில் பலியானவர்). மற்றொருவர், கி.ஆ.பெ. விசுவநாதம். பெரியாரை தலைவர் பதவியேற்க சம்மதிக்க வைத்து நீதிக்கட்சி மாநாட்டுக்கு தலைமை உரையையும் பெரியாரிடம் எழுதி வாங்கினார்கள். அந்த உரையின் இறுதி வரியே ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்றுதான் முடியும். இத்தகவல்களை கி.ஆ.பெ. விசுவநாதமே எழுதியுள்ள ‘எனது நண்பர்கள்’ என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார்.

• 1938 டிசம்பர் 29இல் சென்னையில் கூடிய நீதிக்கட்சியின் 14ஆவது மாநாட்டில் பெரியார் பெல்லாரி சிறையிலிருந்தபடியே தலைவராக்கப்படுகிறார். பெரியார் சிறையிலிருந்து எழுதித் தந்த உரையே சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் பாதி உரையையும், கி.ஆ.பெ. விசுவநாதம் பாதி உரையையும் மாநாட்டில் படித்தனர்.

(தொடரும்)

- வாலாசா வல்லவன்

Pin It